7

     பச்சைவேலு முருகேசனை வளைந்த சாலையில் கூட்டிப் போகிறான்.

     மேலே, மேடு முழுவதும் தேயிலை நிரைகள். பள்ளத்தில் ஆங்காங்கு ஒவ்வொரு வீடு தெரிகிறது. தனியாரின் உருளைக்கிழங்கு - கோஸ் தோட்டங்கள் வரிசை வரிசையாக நடு நடுவே தெரிகின்றன. மனிதர் வாழும் வண்மையைக் காட்டும் இடங்களை எல்லாம் கடந்து, ஒரே காடாகத் தெரியும் இடத்தில், சறுக்கலாகச் செல்லும் ஒற்றைப் பாதையில் அவன் விடுவிடென்று போகிறான். அங்கே... திருத்தப்படாத காட்டின் நடுவே, ஒரு பள்ளச் சரிவில் ஆங்காங்கு தகரம், சாக்கு, ஓடு, என்று வீடுகள் அல்ல, குடிசைகள் தெரிகின்றன. ஓரிடத்துக்கு மற்ற இடம் காட்டுச் செடிகளையும் கொடிகளையும் கடந்து சரிவிலும் குண்டு குழியிலும் நடக்க வேண்டும். நடக்கும் பாதைகள் அழகாக வெட்டி அமைக்கப்படவில்லை. நடந்து நடந்து தடம் ஏற்பட்டிருக்கிறது.

     “இதெல்லாம் தோட்டக்காரங்க வந்து குடியேறின எடந்தா மாமு... அதா... அங்க இருக்கிற வூடு, இப்ப ஆளு இல்லாம இருக்கு. வந்து பாருங்க... நீங்க... இங்கே டான்டீல வேலை இருக்குன்னு வந்திருக்கீங்களா, எப்படி மாமு...?”

     “டான்டீன்னா என்னால...!”

     “அதா, தமிழக அரசு டீத்தோட்டம். அங்க கண்டிலியே எழுதிக் குடுத்துடறாங்க, இன்னாருக்கு இங்க வேலன்னு... அப்பிடிக் குடுத்தவளான்னு கேட்ட...”

     “அதெல்லாம் கரச்சலுக்கு முன்னா இருக்கும். நாந்தா அப்ப வரலன்னுல இருந்த. பொறவு ஒருநா உனுக்கு வயிசாயிப் போச்சி, வேலை இல்லன்னிட்டான் தொர. எப்படி எப்படியோ ஆச்சி. இந்தப் பிள்ளைகள அவங்க ஆளுவகிட்ட ஒப்புவிக்கணும். சடயம்மா, பரமு... இவங்க... தாய் பிள்ளையா சுகத்தில கஷ்டத்திலன்னு இருந்தவங்க. வேற உத்தாரு உடம்பிறப்புன்னு ஒட்டல... ஏம்பா, டீதோட்டத்துல இங்க வேலை கிடக்கிமில்ல?”

     “மாமா, அரசு தோட்டமுன்னாதா, வூடு, நல்ல கூலி சலுகை எல்லாம். அதும் கூட உங்களை அங்க வயிசாச்சின்னு தள்ளிட்ட பிறகு, இங்க வந்திருக்கிய. அதனால தனியா இருக்கிற எடங்கள்ளதா வேலை தேடணும். அது ரொம்ப சிரமம்...”

     “ஏம்பா, வேலை கெடய்க்காதா? நீலகிரியில் எம்புட்டுச் சனம் போயிருக்கா வேலை கெடய்க்கும்னாவ?”

     “ஆமாம் மாமா நாளொண்ணுக்கு நாலு குடும்பம்னாலும் வந்து வுழுதுங்க. எப்படி வேலை கெடய்க்கும்! ஏற்கெனவே வந்தவங்க, இங்கியே இருக்கிறவங்க தங்க வயித்தில மண்ணடிக்க இவங்க வந்திட்டாங்கன்னு காயறாங்க... நம்ம உறவு சனங்கல்லாம், மூணு குடும்பக்காரங்க இங்க வந்து வேலை இல்லாம, இப்ப கூடலூரு, பந்தலூரு, தேவாலான்னு காபித் தோட்டம் அங்க இங்கன்னு போயிப் பிழைக்கிறாங்க... நாங்க முன்னடியே வந்தோம். எங்கப்பா மட்றாசில, அம்பத்தூரு பக்கம் புதிசா கட்டுற ஃபக்டரில வேலை இருக்குன்னு, அங்க தா வந்தாரு. பெறவு, நாந்தா இந்த லாரி வேலை கிளீனரா இருந்து படிச்சிட்டே, இப்ப நெல்ல மாதிரியா இருக்கிற... பொட்டம்மா இருக்காங்களே, அவுங்க புருஷன் மிலிட்ரில இருந்தாரு... செத்திட்டாரு. அவங்க லொரிதா நா ஓட்டுற. கொஞ்சம் தோட்டம் எல்லா இருக்கு. ஒரு ஆபத்து சம்பத்துன்னா அவங்க கிட்டதா எதுவும் கேட்டுக்குவ. அதா தயிரியமா, கார்ஷெட்டத் தொறந்து வுட்ட. இப்ப காரொண்ணும் மில்ல. மகன் அமெரிக்கா போகுமுன்ன வச்சிருந்தா. வெறவுதா போட்டிருக்கா...”

     ஒற்றையடித்தடம் போல் நீண்ட வழியில் குண்டு குழி சரிவு தாண்டி அந்த வீடு இருந்த பக்கம் ஏறுகிறார்கள். ஏறக்குறைய ஒரு வட்டச்சரிவு போல் அமைந்த பள்ளத்தைச் சுற்றி, ஆங்காங்கே முளைத்த வீடுகள். கீழே கிடு கிடு பள்ளத்தில் பாறையும், மனிதர் புகமுடியாத மரம் செடி கொடிகளுமாக இருக்கும் இடத்தில், குட்டையாக நீர் போல் தெரிகிறது. காட்டருவி ஏதோ போகிறது.

     தட்டித்தடுப்பு உட்சுவர்கள். கதவு வாசலில் குட்டியாக மண் திண்ணை. மேலே சிமந்துத் தட்டிக் கூரை வாசலில் ஒரு கிழவி போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்...

     வரிசையாக ஐந்தாறு வீடுகள்... அதில் ஒன்றில்தான் பச்சைவேலு கூட்டி வந்திருக்கிறான்.

     “ஆத்தா, வூட்டுக்கு ஆரும் வர இல்லயே?”

     “பயங்க, ஆரும் வூட்ட இல்ல. அல்லாம் காலம வேலைக்குப் போயிட்டாவ?...”

     “பொம்பிளங்தா இருக்கா...”

     “இவங்க... நம்ம ஆளுவ. அங்கேந்து வந்திருக்கா, ரத்னபுரா தோட்டம். இப்ப வூடுவேணும்...”

     “எத்தினி பேரு...?”

     “இவரு, பின்ன தம்பி மக புருசன், ரெண்டு சின்னப் புள்ளக.”

     கிழவி அடுத்த வாயிலின் வெளியே நின்று குரல் கொடுக்க, ஒரு குமரிப் பெண் எட்டிப் பார்க்கிறாள். சாவி வருகிறது.

     திறந்து பார்க்கிறார்கள். வீட்டின் மொத்தப் பரப்பே பத்தடிக்குப் பத்தடி தான் இருக்கும். அதில் தட்டித் தடுப்பாகச் சமையல் - படுக்கறை என்று பிரித்திருக்கிறார்கள். படுக்கையறையில் ஒரு மூங்கிலிலான கட்டில் சுவரோடு ஒட்டிக் கிடக்கிறது.

     “தண்ணி தவசி...”

     “தண்ணி கீள இருக்கு. அங்கேந்து கொண்டாரணும்... விளக்கு சிம்னிதான் வச்சுக்கணும்...”

     “முப்பத்தஞ்சு ரூபா வாடகை...” என்று கிழவி கறாராகப் பேசுகிறாள்.

     “முப்பது வச்சுக்குங்க... பாட்டீ?”

     “அஞ்சு ரூபா கட்டிலுக்கு... அதுக்குக் குறச்ச இல்ல.”

     “கட்டில் வாணாம்னா குறச்சுப்பீங்களா?”

     “இல்ல...”

     “சரி, வுடு, இருக்கட்டும். இப்ப அல்லாம் வந்திட்டப் பிறகுதான பேச்சு?...”

     கிழவி, இரண்டு மாச வாடகை முன் பணம் வாங்கிக் கொள்கிறாள்.

     சற்றைக்கெல்லாம் எல்லாரும் அந்த இடத்துக்கு வருகிறார்கள்.

     தோட்டத்து லயங்களில், ஒழுங்கான பாதைகள் - பரப்புகள் என்று பழகிய பெண்கள், இந்தப் பாதையில் முகம் சுளித்துக் கொண்டு நடக்கிறார்கள். ஒரு கடை கண்ணிக்குப் போக வேண்டும் என்றால் மேலே சாலையில் ஏறுவதற்கே தொலை போக வேண்டும்...

     இங்கே குடியேறியிருப்பவர்கள் அனைவரும் எழுபதுக் கடைசி, எண்பது என்று வந்தவர்கள். இங்கே இவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி, அரசு மூவாயிரம் கடனும் வழங்கியது. அப்படி வீடு கட்டிக் கொண்டவர்களின் கிழவியின் இரண்டு பையன்கள், பெண் குடும்பமும் சேர்ந்து அமைத்த வரிசை இது. மகள் புருசன் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேறுபக்கம் வேலை என்று போய்விட்டான். அவர்களுடைய இந்த வீட்டை இப்படி வாடகைக்கு விடுகிறார்கள். மகள் தான் இப்போது அந்த வீட்டில் இருந்து வந்து சாவி கொடுத்தாள்.

     வீட்டில் வசவச என்று துணியும், தட்டுமுட்டுமாக மூட்டைக்குள் இருந்தவை வெளியே வர விரித்துவிட்டார்கள். சடயம்மாளின் குழந்தைகள் இருவரும் வெளியே ஓடி விளையாடுகிறார்கள். நடுப்பகல் நேரத்துக்குத்தான் சிறிது வெளிச்சம் காட்டக் கதிரவன் வானில் சிரிக்கிறான்.

     பரமு, திண்ணையில் குந்திக் கொள்கிறான். மாமுண்டியை அழைத்துக் கொண்டு முருகேசு, அரிசி மற்றும் அவசியமான சாமான்களை வாங்கி வரச் செல்கிறான்.

     சுகந்திக்கு, சடயம்மாவுடன் ஒட்டுதலான நெருக்கம் வரவில்லை. அவர்களை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற ஒரு எண்ணம் அவளுக்கு இருக்கிறது. தங்கள் துணி பாய் - சாமானெல்லாம் தனியாக வைத்துக் கொண்டு ஒதுங்கி இருக்கிறாள்.

     சடயம்மா தண்ணீருக்காக பிளாஸ்டிக் வாளி, பெரிய குண்டான் இரண்டையும் எடுத்து வைக்கிறாள். “தண்ணி எங்கிட்டிருக்கு? போயி தண்ணி கொண்டு வரனுமில்ல...”

     சடயம்மாவின் புன்னகை சரோவைத்தான் துள்ளி வரச் செய்கிறது.

     முருகேசுவும் மாமுண்டியுமாக வீட்டுக்குத் தேவையான சாமான்களும், அரிசியும் தேத்தூளும் சீனியும் வாங்கிக் கொண்டு வருகையில் நடுப்பகல் கடந்து விடுகிறது. கீழே பள்ளத்தில் இறங்கி, சிறிதே தண்ணீர் செல்லும் அருவியில் துணி கசக்கி, குளித்து, நீரும் கொண்டு வர வேண்டும். பொழுது போக இருட்டும் நேரத்தில் தான் அங்கே வீடுகளில் வேலைக்குச் சென்றவர் திரும்ப ‘நடமாட்டம் தெரிகிறது. சடயம்மாவின் குழந்தைகள் அக்கம் பக்கம் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு சிநேகமாகப் போகின்றன. ஆனால், அக்கம் பக்கம் இருக்கும் ஆண் பெண் அனைவரும் புதியவர்களை சுவர்களைப் போல் இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்ற மனமின்றி ஒட்டாமல் போவதைப் பார்த்து அவன் துணுக்குறுகிறான்.

     கிழவியின் பெரிய மகனுக்குக் குடும்பம் பெரியது. ஒரு பையன் அரசுத் தேயிலைத் தோட்டத்தில் குன்னூர் பக்கம் இருக்கிறான். அவனுக்கே நான்கு குழந்தைகள். இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறான். பெண்சாதி இறந்து போய்விட்டாள். இன்னும் ஒரு பையன் படகர் தோட்டத்தில் வேலை செய்கிறான். கல்யாணமாகவில்லை. இவனும் எங்கோ தனியார் தோட்டத்தில் தான் வேலைக்குப் போகிறான். நாட்கூலி ஆறும் ஏழும் தான். அரசுத் தோட்டமானால் பன்னிரண்டு ரூபாய் கூலி வரும். இங்கே வேலை செய்து பிழைப்பது மிகவும் கடினம். அரசுத் தோட்ட வேலை என்று கண்டியிலேயே பதிவு செய்து கொண்டு வந்தவர்களும் கூட, குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஏனெனில் இலங்கைத் தோட்டம் போல் இங்கே குடும்பத்தினர் அனைவரும் பிழைக்க முடியாது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது. ஒரு வீட்டில் ஏழெட்டுப் பிள்ளைகள் இருக்கையில், அவர்களெல்லாரும் என்ன செய்வார்கள்?

     “சனங்க, அங்கத்துத் தோட்டம் மாருதியே இருக்கு, அல்லாம் நீலகிரி போவம்னு வாராங்க. எங்க வேலை? இதா நாலு கிலோமீட்டர் போயி வாரம், நானும் பொஞ்சாதியும் ஆறு அஞ்சுதா கூலி. ஆம்புளப் புள்ளங்கள அங்க இங்க அனுப்பிச்சிரலாம். பொட்ட புள்ளங்கள எங்க அனுப்ப?...”

     முருகேசுவின் நம்பிக்கையில் இருள் நிழல் விழுகிறது.

     காலையில் அவரவர் சாலையில் சந்தித்தாலும், நீ யாரு, நீ யாரு என்று கேட்கும் சரளபாவம் கூட இல்லை. முருகேசுவாகச் சிலரிடம் விசாரிக்கிறான்... உடுசேலா... பதுளை... மோனஹன் க்ருப்...

     ஒரே பேச்சில மறுமொழி; ஒதுக்கம்.

     வேலை தேடுமுன் குன்னூர் சென்று, முத்துவேல் பிள்ளையின் தம்பி குடும்பம் பார்த்துப் பெண்களை ஒப்புவிக்க வேண்டும் என்று மறுநாட் காலையிலேயே புறப்பட்டு விடுகிறான்.

     குன்னூர் வந்ததும் பச்சை வேலு சொன்ன தடயம் வைத்துக் கொண்டு, பஸ் ஏறிச் செல்கிறான். குன்சோலை கைகாட்டி என்று இறங்கி நடக்கிறான்.

     ஒரே மாதிரியான சிறு வீடுகளைக் கொண்ட படகர் கிராமங்கள். தலையில் வட்டு மூடிய கோலத்தில் முதிய பெண்கள், பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு முற்றங்களில் காணப்படுகின்றனர்.

     யாரைப் பார்த்தாலும் நேசப்பார்வை இல்லை.

     ஒரு முதியவர் வருகிறார்.

     “...சலாமிங்க... இங்க... ஸ்லோன் ஆளுங்க பக்கத்தில இருக்காங்களா?...”

     அவர் பேசாமல் போகிறார். ஸ்லோன் ஆள் என்றாலே பிடிக்கவில்லையோ? முற்றத்திலிருக்கும் முதியவளிடம் கேட்கிறான்.

     அவள் பேசாமல், கையிலிருக்கும் குச்சியை நீட்டி அந்தப் பக்கம் சாலை கடந்து போனால் நிறைய இருக்கிறார்கள் என்று சாடை செய்கிறாள்.

     நடையான நடை நடந்து, முட்டு முட்டான பஞ்சக் குடில்களைக் கண்டு பிடிக்கிறான். கோழிகள்... நாய்கள்... வண்ணத்துணிகள்... புகை... அவன் வந்து சேரும் போது பிற்பகல் மூன்று மணி வேளை.

     காலையில் ஒரு பன்னும் தேநீரும் தான் உணவாகக் கொண்டிருந்தான். முற்றத்துப்பக்கம் செல்கையில் யார் வீட்டிலிருந்தோ குழம்பு மசாலை மணம் உட்புகுந்து பசியைக் கிண்டி விடுகிறது.

     “யம்மா, இங்க, கொழந்தவேலுன்னு... இருக்காவளா? அவரு அண்ணாச்சி முத்துவேலு...”

     “ஆ... இதா இந்தவூடுதா...”

     முற்றம் வழவழவென்று நன்றாக வழிக்கப்பட்டிருக்கிறது; கோலம் போட்டு மிக அழகாக இருக்கிறது. ஆனால், நாலைந்து வயசுக்குள் ஐந்தாறு பிள்ளைகள் அங்கே விளையாடுகின்றனர். கீழே அவர்கள் சட்டைகள், துணிகள் பூனைக் கண்ணாகப்படும் பனிவெயிலில் காயத்தவமிருக்கின்றன.

     “அம்மா, ஆரோ வந்திருக்கா, பாருங்க?”

     அகலக் குங்குமமும், மூக்குத்தியுமாக, லட்சுமீகரமாக ஒரு நடுத்தர வயசுப் பெண்பிள்ளை வருகிறாள்.

     “குழந்தை வேலு... ங்கறது...”

     “அவரு சம்சாரம்தா நா... அவங்க இங்க இல்லியே இப்ப? ராவிக்குதா வருவா... நீங்க யாரு?...”

     அவன் சுமையை இறக்குகிறான்; விவரம் பேசி முடிக்கக் கால் மணியாகிறது.

     “உக்காருங்க. அப்ப அந்தப் புள்ளியள இங்க கூட்டிட்டு வந்திருக்கியளா?”

     “ஆமா நா ஒண்டி ஆளு. நானே இன்னொரு குடும்பத்தோட கைய எதிர்பார்த்திட்டு இருக்கிற, பொம்பிளப் புள்ளய. அதும் பெரிசு சமஞ்சு அஞ்சாறு வருசம் ஆவுறாப்பில...”

     “ஏய்யா, வெவரமில்லாம, சமஞ்ச பொம்பிளப்பிள்ளையளக் கூட்டியாரே, வச்சுக்குங்கன்னு சொல்றியளே! நா விட்ட ரெண்டு ஆம்பிளப்பயங்க, பெறிசு, கலியாணங்கட்டி வச்சிட்டிருக்கிறம். ஒரு பய ரெண்டுங்கெட்டா. படிக்கப் போறா. இங்க கொண்டாந்து வுட்டா நாங்க என் செய்ய? அவ அவிய தாயோட புள்ளயோட இருக்கறத வுட்டுப் போட்டு, சீம கடந்து ஏங் கூட்டிட்டு வந்திய?... ந்தா, ஒங்களால வச்சிக்க முடியும் வச்சிக்கணும்... அவுரு, எங்க மூத்தாரு போயி வருசமாகப் போவு. அதுக்கு மின்னாடியே, சம்சாரம் - எங்க ஓப்படியா நெஞ்சுக்குத்து வந்து போயிட்டா. பிள்ளைக, ஒரு பய டான்டீயில இருக்கிறா. ஒரு பொண்ண மதரயில கட்டியிருக்கு. சின்னவன் பத்துப் படிச்சிட்டு, வொர்க்சாப்ல சேர்ந்திருக்கா. அதது அங்கங்க எப்படியோ சீவிக்கிறது பாடாயிருக்கு. நாங்களே, என்னமோ தெரியாத்தனமா வந்திட்டம்னு இருக்கிறம். தாயி செத்துப் போச்சின்னா, தகப்பன் இருக்கிறாரில்ல?... மனிசா இருக்கயில பொட்ட புள்ளியள கூட்டி வரலாமா? நீரு மட்டும்னா, எங்கக்கு என்னா? ஊருமனுசா இன்னமோ, வந்து குந்துனா ஒர் நேரம் சோறு போடுறது பாரமில்ல... இப்ப... இங்க கொண்டாந்து வுட்டா சரியில்லீங்க! அவங்க வந்து பேசவே ஒண்ணில்ல...”

     மேலே பேசவே வழியில்லை. தீர்த்து விட்டாள்.

     கிட்டி முட்டிப் போகும் போது மனிதநேயம் எப்படிச் சுருங்கிப் போகிறது?

     என்ன நேரத்தில் இந்தச் சுமையை இவன் ஏற்றுக் கொண்டான்? வயசு, உழைப்புக்கான வாய்ப்புக்கள், திறன், பொருள், எதுவுமே இல்லை. எங்குமே சரிய ஆதாரம் இல்லை...

     திரும்பிச் சென்றால் அந்தப் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்லுவான்?

     “முத்துவேலின் பிள்ளைகள் எல்லாருக்கும் கட்டியாயிற்றா?”

     “கடோசிப் பயதா சொன்னனே, பத்துப் படிச்சிட்டு வொர்க்சாப்பில இருக்கிறா...”

     “சுப்பிரமணியனுக்குக் கண்ணாலம் இங்கியே கட்டினாகளா?”

     “சொந்தத்திலியே மகளக் குடுத்த எடத்திலியே பொண்ணெடுத்திட்டா. ரெண்டு புள்ளிக. அதுகூட ரெட்டைப்புள்ள...”

     அந்த சுப்பிரமணியனுக்குத்தான் இவளை... சுகந்தியைக் கட்டிக் கொள்வார்கள் என்று ஆண்டாளு சொன்னாள்.

     எல்லாம் நடக்காத ஆசைக் கனவுகள்.

     எண்ணெயில் ஒட்டாத நீராக அங்கே சிறிது நேரம் முருகேசு தங்குகிறான். கோதுமை அரைத்துச் செய்த ரொட்டியும் குழம்பும் வைத்துக் கொடுக்கிறாள். பசிக்கு அது இதமாக இருக்கிறது. ஆனால், அவன் உள்ளம் நோகிறது. தேநீர் தருகிறாள்.

     குழந்தைகள் வந்து உற்று உற்றுப் பார்க்கின்றன. வீடு உள்ளே இரு அறைகள் கொண்டதாகப் பெரியதாகவே இருக்கிறது.

     இவள் புருஷன் அல்லது வேலைக்குச் சென்ற ஆடவர்கள் வரும் வரையிலும் தங்கியிருப்பது தேவையில்லாதது என்று படுகிறது. மென்மையான அவனுடைய உணர்வுகள் சுருங்கும்படி அவள் பேசிவிட்டாள்.

     “நா வரேம்மா, எதாச்சும் தப்பாச் சொல்லியிருந்தா மனசில வச்சுக்காதீங்க, வார...”

     அவன் கூனியவனாக, புதியதாக முதல்நாளே வாங்கியிருந்த செருப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தொடர்ந்து அவள் வெளியே வருகிறாள். அக்கம் பக்கம் பெண்களனைவரும் முற்றத்தில் அவனைப் பற்றி விசாரணை செய்கிறார்கள் போலும்!

     “இந்தாளு, அங்கேந்து வாராரு, சமஞ்ச பொண்ணுங்கள வச்சிக்குங்கன்னு, புள்ளகுட்டி இருக்கிற வூடாச்சேன்னு, ஒரு காரூவா மிட்டாயி வாங்கிட்டு வார மாட்டாரு!...”

     அவன் காதுகளில் இந்தச் சொற்கள் நேராக வந்து தாக்குகின்றன.

     எவ்வளவு கேவலமாகிவிட்டான்? மனித நேசம் பாராட்ட இந்தச் சின்னச் சின்ன வழமைகள் அவசியம் என்ற அறிவு கூட அவனுக்கு இல்லாமல் போயிவிட்டதே? இதெல்லாம் அவனுக்கு ஏன் தெரியவில்லை?

     தனது சொந்த உடன்பிறப்புக்கள், கொண்டார் கொடுத்தாரென்று, காதுகுத்து, கலியாணம் சடங்கு என்று போய்க் கொண்டாடினாலல்லவோ தெரியும்? அப்படிக் கொண்டாடாத தவறை ஈடு செய்வது போல், தானே வலிய இந்தப் பெண்களை ஏற்று வந்திருக்கிறான். எப்படியேனும் சுகந்திக்குக் கல்யாணம் செய்துவிட வேண்டும். இந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களை அவளிடம் சொல்லவே கூடாது... பச்சைவேலுப் பயலுக்குக் கல்யாணம் ஆயிருக்க நியாயமில்லை. அவனுக்கு, சுகந்தியை...

     விரைந்து நடை போடுகிறான்.