9

     “மாமா, ரேசன்ல வெறவு போடுறாவளாம். அரிசி மண்ணெண்ணெய் வாங்கிட்டு வாரணம். சிமிணிக்கு எண்ணெயில்லாம ரெண்டுநாளா இருட்டில புள்ள கத்துறப்ப, பூச்சி, பொட்டு கடிச்சிச்சான்னு ஒரெளவும் தெரியல... ஒரு இருவது தந்தீங்கன்னா, வாரக்கூலி வாங்கினதும் தந்திடறேன்...”

     அவர்களுக்கு இன்னமும் ரேசன் கார்டு கிடைக்கவில்லை. பச்சைவேலு அப்போது மங்களூர்ப்பக்கம் போவதாகப் போனவன் தலைகாட்டவில்லை. இவனுக்கு, ஏப்ரலுக்கு முன் வேலை ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இல்லை. ‘பொட்டம்மா’ என்று பச்சை அழைக்கும் வீட்டுக்கார எசமானி, ஏப்ரல் பத்துத் தேதிக்கு மேல் தான் பள்ளத்தில் கிழங்கு விதைப்பதாக யோசனை இருப்பதாகவும், முதல் தேதி வாக்கில் பார்க்கலாம் என்று சொன்னாள்.

     ரேசன் கார்டுக்காகப் போன இடத்தில், ஓராள், மேஸ்திரிக்கு ஐம்பது ரூபாய் போல் செலவழித்தால், மரம் அறுக்கும் இடத்தில் ஏழு ரூபாய் கூலிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னான். கப்பென்று கைப்பணம் கரந்து விட்டதை உணருகிறான். கையில் அறுபது ரூபாய் கூட இல்லை. முப்பதாந்தேதியே கிழவிக்கு வாடகை கொடுக்க வேண்டும். அதற்குள் வேலை தேடியாக வேண்டும்.

     இங்கு சுமை தூக்கும் வேலை கூடக் கிடைக்கவில்லை. உள்ளூர் ஆட்கள் எந்தத்திக்கிலும் இவர்களை இனம் கண்டு கொள்கிறார்கள்.

     “வார செவ்வாக்கிளம குடுத்திடறே மாமு...”

     “அதுக்கில்ல சடயம்மா, உனக்கில்லாமயா? தேதி இருபதுதா ஆவுது. இன்னும் பத்து நா போறது செரமமா இருக்கும் போல இருக்கு...”

     சொல்லிக் கொண்டே தட்ட முடியாமல் பிளாஸ்டிக் பையில் பொக்கிஷமாக வைத்து இருக்கும் நோட்டை எண்ணிப் பார்த்து விட்டு இரண்டு நோட்டை எடுத்துக் கொடுக்கிறான்.

     இவர்களுக்கும் அரிசி வாங்கியாக வேண்டும். கிலோ மூன்றே முக்கால், நான்கு, என்று வெளியே வாங்கும் உயர்ந்த அரிசி சாப்பிடுகிறார்கள்...

     விறகுக்கு அங்கே இங்கே சென்று கொண்டு வருவது கூட இலகுவாக இல்லை.

     பொட்டம்மாவின் வீட்டின் முன் சென்று நின்றான்.

     அம்மா வாயிலில் ஒரு கசாலையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து புத்தகம் படிக்கிறாள். புருஷன் இறந்து போன பிறகும் பெரிய பொட்டு வைத்திருப்பதால் ‘பொட்டம்மா’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருப்பதாகப் பச்சைவேலு சொன்னான். நல்ல உயரமான கம்பீர உருவம். ஒரு முடி கூட நரைக்கவில்லை. ராணி போல் இருக்கிறாள்.

     இவன் குழைந்து நிற்கிறான். “அம்மா!...”

     “யார்ப்பா...?”

     “...நாந்தாங்க முருகேசு. அன்னிக்குப் பச்சவேலு கூட வந்தேன். ஏப்ரல் மாசந்தா வேலைன்னு சொன்னீங்க. ரொம்பவும் சங்கடமாயிருக்கு, வேலை இல்லாம... வீட்டில மூணு புள்ளங்க, ரேசன்கார்டு இப்ப தாரே, அப்ப தாரேங்கறா, அரிசி நாலு நாலரைன்னு வாங்கித் திங்கிறம்...”

     “...நா என்னாப்பா வேலை குடுக்க...? அங்கங்க ஆளுங்க இருக்காங்க..., ஆமா, பிள்ளைங்க, எத்தினி வயசு?”

     “மூணு பேத்திங்க, ஒண்ணு பதினெட்டு, மத்தது ரெண்டுக்கும் பன்னண்டு வயிசும் பத்து வயிசும் இருக்கும்...”

     “ஒத்தையில எங்க மகளுக்கு சிநேகிதி டாக்டராக இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு குழந்தை பாத்துக்கிட வேணும்னு கேக்கறாங்க, சாப்பாடு துணி போட்டு, மாசம் முப்பத்தஞ்சு ரூபா பாங்கில போட்டுடுவாங்க. நல்ல எடம். அவங்க புருசன் சவூதில இருக்காரு. சின்னக் குழந்தை வீட்டில. அதப் பார்த்துக்கிடணும்...”

     முருகேசுவுக்குத் துணுக்கென்றிருக்கிறது. தோட்டத்தில் இப்படிப் பிள்ளைகளை வீட்டு வேலைக்குத் துரைமார் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், ‘என்னமும்’ நேர்ந்தாலும் கேள்வி முறையில்லை. தாய் தகப்பனில்லாத குழந்தையை இப்படி எங்கோ அனுப்பலாமா? அவனை நம்பி அனுப்பினாளே? முறையா?

     “என்னப்பா பேசல...? வீட்டில சமையலுக்கு ஒரு அம்மா இருக்காங்க. இதுக்கு வெறும் குழந்தை பாத்துக்கிற வேலைதான்...”

     முருகேசு தலையைச் சொறிந்து கொள்கிறான்.

     “இல்லீங்கம்மா, அங்கத்த கலவரத்துல, ஆத்தாள உயிரோட எரிச்சிப் போட்டாங்க. அப்பன் பித்துப் பிடிச்சாப்பல ஆயிட்டான். இங்க சொந்தக்காரங்க கிட்ட சேத்துடலாம்னு கூட்டி வந்தேன். என் கூடப் பிறந்தவ பேத்திக... வர்ற சித்திரயிலே, இங்க ஃபாக்டரில வேலைக்கு எடுத்துக்கறேன்னு சொல்லியிருக்கா. அப்படி எப்படீங்க அனுப்புறதுன்னுதா யோசிக்கிற...”

     “...எங்க ஃபக்டரில வேலை குடுக்கறாங்க?”

     “அதா மேல கண்ணாடி போட்டுட்டு உசரமா ஒருத்தரிருக்காரே, பச்சதா கூட்டிட்டுப் போனா, சிரிலங்கா சீட்டு ஃபண்டு, தொழில் பண்றதுன்னு... நானும் ஷேரு போட்டிருக்கேங்க...?”

     “...ஓ... அங்க போர்டு தொங்குது நாலஞ்சு மாசமா. அந்தாளு புதிசா வந்திருக்காரு... சீட்ஃபண்டா?”

     இவன் அவர்கள் சொன்னதை எல்லாம் விவரிக்கிறான்.

     “அப்படியா?... அவங்க எல்லாம் பொண்ணுகளுக்கும் வேலை கொடுப்பாங்களா? பத்து வயசுப் பொண்ணை, புள்ள வச்சிக்க அனுப்பிக்கறது தப்பில்ல. டாக்டரம்மா ரொம்ப நல்ல மாதிரி. நல்லா வேலை செஞ்சா, கூடவே பணம் போட்டுக் குடுப்பா. உனக்கும் பொம்பிளப் புள்ளய விட்டிருக்கிறமுன்னு பயமே இல்லை. இல்லாட்டி நா சிவாரிசு பண்ண மாட்டேன்..”

     “யோசிக்கிறேம்மா... வீட்டுக்குப் போயி அதுங்க கிட்டக் கேட்டுட்டு வாரேன்...”

     அம்மா சரேலென்று நினைபு வந்தாற்போல் பார்க்கிறாள்.

     “கொஞ்சம் இரு...!”

     எழுந்து அந்த வரிசையின் கடைசியில் உள்ள வீட்டுக்குச் சென்று யாரையோ கூப்பிடுகிறாள். அங்கிருந்து ஓர் இளம் பெண் குட்டை முடியும் கவுனுமாக வருகிறாள்.

     “ஒரு கட்டை தடிமனா இருக்கு. கொஞ்சம் வெட்டித் தாரியா?”

     “கோடாலி இல்லியேம்மா ஏங்கிட்ட?...”

     பொட்டம்மாவை அவள் பார்க்கிறாள். “நம்ம வீட்லேந்து எடுத்துக்க...”

     போனால் போகிறது என்ற மாதிரியில் தயவு காட்டும் குரல்.

     “போப்பா, வெட்டிக் குடுத்திட்டு, ஏதானும் குடுப்பா, வாங்கிட்டு போ!”

     அந்தப் பெண்ணே கோடரியை எடுத்துக் கொண்டு முன் செல்கிறாள். கர்ப்பூர மரத்துண்டுகள் - அறுவைத் துண்டுகள். கூலி என்ன கொடுப்பாள் என்று தெரியவில்லை. கூலி பேசவும் கூச்சமாக இருக்கிறது. கோடரியை அருகிலுள்ள கல்லில் வைத்துத் தேய்க்கிறான்.

     “சின்ன சின்னதாப் பொளந்து போடு...?”

     முண்டு முடிச்சில்லை. மணி இரண்டடிக்கும் பொழுதில் பிளந்து விட்டான்.

     “கொண்டு லம்பர் ரூமில அடுக்கிடு...”

     மூன்று ரூபாய் கூலியும் தேநீரும் தருகிறாள்.

     மூன்று ரூபாய், இப்போது முந்நூறு ரூபாயாக இருக்கிறது. மன்னார் கரையில் வந்து தங்கியிருந்த நாட்களில் கூட அவன் வேலைக்கும் கூலிக்கும் இத்துணை கஷ்டப்படவில்லை. சுமை தூக்கும் வேலையில் பத்துப் பதினைந்து சம்பாதிக்க முடிந்தது. உடலுழைப்பவனுக்கு இவ்வளவு போட்டி பொறாமைகள் இருந்ததாக அவனுக்கு உணரச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

     ஒரு கட்டு பீடி வாங்கிக் கொண்டு, சரோசாவை டாக்டர் வீட்டுக்கு அனுப்புவது பற்றி யோசித்தவாறே முருகேசு நடக்கிறான். பெரிய கடை, சந்தைப் பக்கம் பஸ் நிறுத்தத்தில் கூலிக்குக் கிராக்கி இருக்குமா என்று பொழுது சாயும் வரையில் நின்றதில், இரண்டு ரூபாய் கிடைக்கிறது. வீட்டுக்குத் திரும்பும் போது ஓய்ச்சலாக இருக்கிறது. மாமுண்டு நாள்தோறும் சாராயக் கடைக்குச் செல்வதுடன் பரமுவுக்கும் வாங்கிவந்து கொடுக்கிறான். கசகசவென்று புகைபடிந்த துணிகளைப் போல் கோட்டும், சராயும், மஃப்ளருமாக மக்கள்... முன்பு தாயகம் திரும்புவோர் அலுவலகம் என்று காட்டினானே, அந்த இடத்தில் கதவு திறந்திருக்கிறது. படி ஏறிப் போகிறான். ரேஷன் கார்டு வாங்கித் தர உதவி செய்வார்களா என்று கேட்க வேண்டும்.

     இவனைப் போல் தாயகம் திரும்பிப் பராரியாக நிற்கும் மக்கள். மூட்டை முடிச்சுக்களுடன் ஒரு குடும்பம் வெளியே உட்கார்ந்திருக்கிறது. இவனுக்கே இப்போது இவர்களைப் பார்த்தால் ஒருவகைப் பீதியும் கலக்கமும் நேரிடுகிறதே ஒழிய இரக்கம் வரவில்லை.

     ஒரு தட்டித் தடுப்பு அறையில் இரண்டு பெஞ்சுகள் தெரிகின்றன. சற்று எட்ட ஒரு மேசை - நாற்காலி! மங்கலாக ஒரு விளக்கு எரிகிறது.

     இவர்களுடைய வீட்டளவு பரப்பு தான் - ஏழெட்டு ஆண்கள், வாயிலை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே முருகேசு எட்டிப் பார்ப்பதற்குள்,

     “இதுதான் தாயகம் திரும்பியவங்க ஆபீசு?”

     “ஆமா...?”

     “ரேசன் கார்டுக்கு எழுதிக்குடுத்து மாசத்துக்கு மேலாச்சு. வர இல்ல...”

     “நெம்பரு, பாஸ்போட்டு, வந்தெறங்கின தேதி எல்லாம் இருக்கில்ல?”

     “அல்லாம் குடுத்தாச்சி...”

     “அது சரியாய், இன்னொருக்க, அந்த நெம்பரு வெவரம் வோணும்... கொண்டாந்து குடு...”

     இவனைப் போல் நின்றவன் தான் இதைச் சொல்கிறான்.

     “அவுரு இங்கிட்டில்ல. ஒரு கேசு. வெவரம் விசாரிக்கப் போயிருக்காரு.”

     “என்னா கேசு?”

     “...வயித்துக் கில்லாததுவ, கோளியத் திருடி வித்துப் போட்டா. தோட்டக்காரவுக புடிச்சி பொலீசில குடுத்திட்டா அதா...”

     “பெரிய ஆளா...?”

     “...ஆ ...ரெண்டு புள்ளிங்க இருக்கு...”

     முருகேசனுக்கும் எதுவும் பேச இயலாமல் நா ஒட்டிக் கொள்கிறது. எதுவும் கேட்காமல் வீடு வருகிறான்.

     தனமும் சுகந்தியும் எவருடனும் பேசுவதில்லை. சரோசா தான் சிரித்த முகத்துடன் வீட்டில் உயிர்த்துடிப்பாக இயங்குகிறது. இந்தக் குழந்தையை அனுப்புவதா? ...பெரிய வீட்டில், தப்புத்தண்டாவாகக் கருதி, பொலீசில் புடித்துக் கொடுத்து விடும்படி நேர்ந்தால்...?

     அவன் தனது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

     நாட்கள் மிகவும் சுமையாக நகருகின்றன.

     முருகேசு, சிறுசிறு வேலை, சுமைதூக்கல், என்று கூலி நாடி ஒவ்வொரு நாளும் பல மைல்கள் மேடும் பள்ளமுமாக ஏறி இறங்குகிறான். தொடர்ந்த கூலிக்கும், வேலைக்கும் எங்கு விசாரித்தாலும் மேஸ்திரிக்கு வாய்க்கரிசி கொடுக்க வேண்டி இருக்கிறது.

     பனி குறைய, ஒரு முன் மழை இடியும் காற்றும் ஆர்ப்பாட்டமுமாகப் பெய்கிறது. பொட்டம்மாவின் வீட்டுக்குச் செல்லுமுன் மேல்வீட்டுக்குப் போய் நிற்கிறான். இவனைப் போல் நாலைந்து பேர் அங்கே கூடி இருக்கின்றனர்.

     “...பாக்டரி திறந்துட்டாங்களா?”

     இவனைப் போன்ற முதியவன் தான் அவனும். உதட்டைப் பிதுக்குகிறான்.

     “போர்டு இருக்குது, ஆனா, வூடு பூட்டியிருக்கு. ஆளக் காங்கல, கேட்டா பாட்டரி தொறக்கதா மட்றாசு போயிருக்கான்னு சொல்றாவ...”

     “ஆரு அப்படிச் சொன்னது?”

     “பேப்பர்காரரு சொன்னாரு...”

     “கொழந்த சாமி அன்னைக்கே ரோசிச்சிட்டுப் பணத்தப் போடுங்கன்னா. அங்க, கூடலூறு, தேவாலா, கோழிப்பள்ளம், குன்னூரு எல்லா எடத்திலும் நம்ம ஆளுவ பணம் கட்டிருக்காங்க. எம்.எல்.ஏ. வந்திருந்தாராம்ல?... அட, நாம படியாதவங்க, படிச்சிருக்கிற, விக்னேசுவரா மாஷ்டர் கூட மூணாயிரம் போட்டிருக்காராம்...”

     முருகேசுவுக்குக் கபீலென்று குழிபறிக்கிறது திகிலுணர்வு.

     “ஏ, என்ன ஆச்சி, இப்ப?...”

     “அதா, இவரு சகலைபய ஒருத்தன், அதெல்லாம் மோசடி, பணத்த சுருட்டிட்டு ஓடிட்டானுவன்னு சொன்னானாம். போர்டு இருக்கில்ல?...”

     “அம்புட்டுப் பேருமா ஏமாந்திடுவம்?...”

     “கொளந்தசாமி சொன்னான்னா, அது வேற விசயம். இப்ப, குடும்பக்கார்டு வாங்கித்தாரே, லோன் வாங்கித்தாரேன்னு ஆபீசில சொல்றா. அல்லாருடைய பாஸ்போர்ட்டு வெவரம் எல்லாம் கட்டி வச்சிட்டு, தாசில்தார் ஆபீசுக்குப் போயிப் போயி பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதா. அங்கங்க துட்டு வெட்டாம ஒண்ணும் இங்க நடக்கிறதில்ல. அதில, நம்மள்ள, செல்வாக்கா, ஒண்ணு ரெண்டு பேரு, ஆளுகளத் தெரிஞ்சி வச்சிருக்கானுவ... அம்பது, நூறு குடுத்தா வேலையாவுது. ஒரு ரேசன் கார்டு இல்லாம எம்புட்டு நாளா நடக்குறது? நாம ஒவ்வொரு வாட்டியும், அங்க இங்க, ஒத்தைக் குன்னூருக்குன்னு ஆபீசருங்களப் பாக்க முடியுமா? அத்த அவன் செய்யிறான். அம்புட்டுதா வித்தியாசம்...”

     புதிய கிலி அவனைக் கவ்விக் கொள்கிறது.

     பொட்டம்மா வீட்டில் இல்லை. மகள் வீட்டுக்குப் போய் விட்டாள்.

     அன்று வீடு திரும்பவே முருகேசுவுக்கு மனமில்லை, சுமையாக இருக்கிறது. காலையிலேயே அரிசி இல்லை; தேத் தண்ணீருக்குப் போட வெல்லத்தூளோ சர்க்கரையோ இல்லை. தேங்கா யெண்ணெய் இல்லை என்று சுகந்தி முணமுணத்து முகத்தால் அடித்துக் கொண்டிருந்தாள். சடயம்மாவும் மாமுண்டியும் அந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வேலைக்குப் போகவில்லை. வேலை இல்லை. அதுவும் எங்கோ கட்ட பெட்டு தாண்டிப் போகிறார்கள். எனவே வாங்கிய கடனில் இன்னும் பத்து ரூபாய் கொடுபடாமல் நிற்கிறது.

     இந்தச் சுமைகளின் அழுத்தம், அவனையும் சாராயக் கடைப்பக்கம் கொண்டு செல்கிறது. ஒரு கிளாஸ் வாங்கி நின்று பருகுகிறான்.

     முகத்துக்கு முகம் தெரியாத கும்பல் - ஒருவரை மற்றவர் இனம் தெரிந்து கொள்ள முடியாத மொந்தையில் ஒரு புள்ளிதான் அவனும்.

     ...சற்றே கவலைகள், கனங்கள் இறங்கிப் பஞ்சாகப் போகின்றன.

     ஒரு ரூபாய்க்கு பகடா வாங்கி முடிந்து கொண்டு வீட்டுப் பக்கம் திரும்புகிறான். அங்கே, சுகந்திக்கும் சடயம்மாவுக்கும் இடையே பெரிய சண்டை போல் இருக்கிறது. வாயிலில் கிழவி, அடுத்த பக்கத்து ருக்குமணி, அவள் பிள்ளைகள், எல்லாரும் நிற்கும் கூட்டம்.

     “...பேசாதேடி, தேவுடியா? உனுக்குமட்டும் எங்கேந்து டீ எப்டீ வேல கிடச்சிச்சி?... தேயிலக் காட்டுக்குள்ளாற சீல அவுக்கிறவதான?...”

     ஐயோ ஐயோ... என்று முருகேசு துடிக்கிறான். சுகந்தி... பழம் அழுகிப் புழுத்தாற் போல் வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.

     “ஒ நாக்கு அழுவிடும்டீ! அப்படிக் கொத்த ஆளுவ பழக்கம் ஒங்கக்குதே.”

     சடயம்மா அழுகிறாள். “புள்ளயளுக்குன்னு வாங்கி வச்சிருந்த பிசுகோத்த, இவவ திருடித் தின்னு போட்டது மல்லாம, என்னிய மானம் கெட்டவன்னு பேசுறியே? கெளக்கால உதிச்சி மேக்கால போறானே அவன் சாட்சி, நீ அழுவிப் புழுப்ப?...”

     கைகளை நெறிக்கிறாள்; சாபமிடுகிறாள்.

     “ந்தா, என்ன இது?...”

     முருகேசு அதட்டுகிறான்.

     வாயில் கூட்டம் மெல்லக் கரைகிறது.

     சிம்ணி விளக்கின் ஒளியில், முன் அறையில் பரமு குந்தி இருமுகிறான். பிள்ளைகள் அடுத்த அறைக் கட்டிலில் முடங்கி உட்கார்ந்திருக்கின்றன. சரோசாவும் அவர்களுடன் ஏதோ கதைத்துக் கொண்டு, சூழலைப் பற்றிக் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள். மாமுண்டியைக் காணவில்லை.

     “மாமு... நீங்க, எங்களைக் கூப்பிட்டீங்க, வந்தோம். நெதம் நெதம் எச்சி பொறுக்கித் தின்னுறாப்பில எம்புள்ளியளும் நாங்களும் இங்க என்னாத்துக்கு இருக்கணும்? ஏழுகல்லு, எட்டுகல்லு நடந்து குளிரிலும் மழையிலும் தார்ச்சட்டி செமந்துகிட்டு நாலும் அஞ்சும் கூலி வாங்கிட்டு வாரம். மானம் மருவாதியாப் பொழச்சவங்க நாங்க...”

     அவள் அழுவது இவனுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

     “சடயம்மா, சே, என்ன இது? அது பச்சப்புள்ள. உன் செல்லியப் போலன்னு நெனச்சிக்க! நீங்க நெனச்சிப் பாருங்க, நமக்குள்ளயே சண்ட போட்டுகிட்டா, எப்பிடி? அடுத்த எடத்தில, ஊரு நாடுலேந்து, பராரியா நாம வந்திருக்கிறோம். மேடுபள்ளம் குண்டுகுழி எங்குந்தானிருக்கு. தா, அழுவாதீம்மா!”

     சுகந்தி உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

     அருகில் சென்று அவள் தோளில் கை வைக்கிறான். “ஏம்மா, சுகந்தி நீ படிச்ச பொண்ணில்ல...!”

     அவள் சரேலென்று முகம் சுளிக்கப் பார்க்கிறாள்.

     “...நீருமா குடிச்சுப்போட்டு வந்திருக்கிய? எல்லாம் வேசந்தானா? சீ...! எங்கள இங்க கூட்டி வந்திட்டு... குடும்பம்னு காட்டி சருக்களில பணம் வாங்கிட்டு ஒங்க இட்டம் போல கண்டவங்களையும் வூட்ட வச்சிட்ட்டு, குடிச்சிட்டும் வாரிய...”

     கூர்முனையாகக் கத்தி பாய்ந்தாற் போல் குலைந்து போகிறான். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் இறக்கம், அவனைக் கொல்லுகிறது.

     “தப்புத்தாம்மா, தப்பு என் சுமய நானே ஏத்திக்கிட்டேன். இப்ப செமக்க முடியாம தடுமாறிப் போறன்...”

     சட்டைப் பையோடு ஒட்டிய பிளாஸ்டிக் கவரில் எஞ்சியிருக்கும் ரூபாய் நோட்டுக்களை அவளிடம் நீட்டுகிறான்.

     “...தப்புப் பண்ணிட்டேன் இந்த தபா மன்னாப்பு கேட்டுக்கறேன். இனி நடக்காது...”

     அன்றிரவு யார் சோறெடுத்தார்கள், இல்லை என்று அவன் கண்டு கொள்ளவில்லை. அவன் உள்ளே வரவுமில்லை. வாயில் குட்டித் திண்ணையிலேயே சுருண்டு கிடக்கிறான். இருளும் குளிரும் இதுதான் நீ கடக்க வேண்டிய பள்ளம் என்று அவன் காதில் கிசுகிசுப்பது போல் உராய்கின்றன.

     வீட்டுக்குள் முணமுணப்புக்கள், குழந்தை அழுகை, எல்லாம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது. அந்த அமைதியினூடே, அக்கம்பக்கத்துப் பேச்சொலிகள், இடை இடையே மெல்லிய கீற்றாகக் குழந்தைகளை நினைவூட்டும் சிணுங்கள்களும் தேய்ந்து போகின்றன. குளிர் முகத்தில் வந்து கனத்த படுதாவைப் போல் படிகிறது. பார்க்கும் சக்தியே இல்லை என்ற சோர்வில் கண்கள் மூடிக் கொள்கின்றன.

     திடீரென்று படுதாவில் கத்தி செருகினாற் போல் பரமுவின் நீண்ட குலை இருமல் அமைதியைக் கிழிக்கிறது.

     சங்கடம் நெஞ்சை வாட்டுகிறது. பரமு... பரமு கட்டுவிடாத வாலிபனாக, தோட்டத்தில் ரப்பர் பாலெடுக்கும் கத்தியும் கையுமாக அவன் மனக்கண்ணில் தோன்றுகிறான். “யாண்டி கறிக்குளம்பு வய்க்கல...!” என்று கேட்டு பெண்சாதியை அடித்துக் கொல்வதும், “ஐயோ, ஐயோ” என்று அவள் அலறுவதும் இப்போது போல் தோன்றுகிறது... இவனுடைய உடலும் உள்ளமும் குன்றிச் சிலுத்து வெறும் அழுகல் சுமையாகக் குந்திக் கிடக்கிறான்...

     இருமல் நின்று போயிற்று. ஆனால், சடயம்மா, “அப்பூ...! அப்பூ...!” என்று கலவரத்துடன் அழைப்பது கேட்டுத் திடுக்கிடுகிறான்.

     தொடர்ந்து சிம்ணி விளக்குடன் அவள் வாயிலுக்கு ஓடி வருகிறாள்.

     “மாமா... மாமா?... அப்பச்சிய வந்து பாருங்க...? அப்பூ... அப்பூ!” முருகேசு வந்து பார்க்கிறான். உள் அறையில், அவன் குந்திய நிலையில் சாய்ந்திருக்கிறான். கீழே மக்கு நிறமாக இரத்தம்... கையகலத்துக்கு மேல் இரத்தம் அவன் கந்தல் கோணிக்கப்பால்...

     மாமுண்டி சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறான்.

     பரமுவின் தோளைப் பற்றி நினைவிருக்கிறதா என்பது போல் மெல்ல அழைக்கிறான் முருகேசு.

     “பரமு...! பரமு...!”

     நினைவுமட்டுமில்லை, உயிர்த்துடிப்பும் வெளியேறி விட்டது என்பதற் கடையாளமாகத் தலையும் தொய்ந்து விடுகிறது.