23

     “அம்மா, என்ன, இந்த நேரத்துல?... நடந்தா வந்தீங்க?”

     “ஆமாம், முக்கியமான சமாசாரம்...”

     பைக்குள் மறைத்துக் கொண்டு வந்ததொரு குறிப்புப் புத்தகத்தை அந்த அம்மையிடம் கொடுக்கிறாள்.

     நள்ளிரவை நெருங்கும் நேரம். தலைக்கு விலை வைக்கப்பட்டுத் தலைமறைவாக இருக்கும் ஒரு தோழரின் அன்னை அவர். இந்த இரவுப் பரிமாறல்கள் பழக்கம் என்றாலும், மணியை மிகுந்த கனிவுடனும், மரியாதையுடனும் நோக்குகிறார்.

     “நீங்க எப்படிப் பத்திரமாக் காப்பாத்துவீங்களோ, சேர்த்துட்டேன். இருட்டோடு கும்பகோணம் போகணும்மா?”

     மணிக்கு இந்த ஒரே நாளில் தொண்டை கட்டி ரணமாக வலிக்கிறது.

     அந்த அன்னை கொதிக்க வைத்த பாலை ஆற்றி, இவளிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்.

     அருந்திவிட்டு அங்கேயே சிறிது நேரம் உறங்குகிறாள். பிறகு இருளோடு கிளம்பி விடுகிறாள். பகல் முழுவதும், ஆங்காங்கு விவசாய சங்கக்காரர்களைச் சந்தித்த பின் மாலை மங்கி, இருள் பரவிய பிறகே இவளால் கும்பகோணம் செல்ல முடிகிறது. வண்டிப் பயணம்; பஸ்; நடை... ஓய்ச்சலில்லாத இயக்கம். பாணாதுறை வடக்கு வீதியில் சாமிநாதபிள்ளை வீடு...

     அந்தக் காலத்தில், போலீஸ்காரராக இருந்து தேசீயக் கைதியைத் தப்பவிட்டதற்காக வேலை நீக்கம் செய்யப் பெற்றவர். இவர் இல்லம் பல தலைமறைவுத் தோழர்களுக்கு நிழல் தரும் இல்லம்.

     இவளைக் கண்டதும் சாமிநாதன் மனைவி முகமலர்ந்து வரவேற்கிறாள்.

     “வாங்கம்மா! இப்பத்தா பேசிட்டிருந்தாங்க. மயிலாங்குடி சமாசாரம் பத்தி...”

     அடுப்பில் ஏதோ தீயும் வாசனை.

     உள்ளே ஓடுகிறாள்.

     “காந்தி, அம்மாளுக்குத் தண்ணி இறைச்சிக் குடு, கால் கழுவ...” என்று கூறும் குரல் கேட்கிறது.

     சிறுமி வருகிறாள். வந்து பார்த்துவிட்டு உள்ளே ஓடிச் செல்கிறாள்.

     “அம்மா, வாசல்ல யாருமில்லையே? நடையில் ஒரு தாத்தாதா நின்னிட்டிருக்காரு போல...”

     “மக்கு, அவங்கதாண்டி!” என்று அதட்டிக் கொண்டு அவளே வருகிறாள்.

     “ஏம்மா, உள்ளார வாங்க...”

     மணி நடை ஓரம் செருப்பைக் கழற்றி வைக்கிறாள். பையுடன் உள்ளே சென்று பையை ஓரமாகச் சாத்திவிட்டுக் கொல்லைப்புறம் செல்கையில் சிறுமி செம்பில் நீர் முகர்ந்து கொடுக்கிறாள். “தாத்தான்னு நினைச்சியாம்மா? நான் பாட்டி...” என்று சிரித்துக் கொள்கிறாள். முகம், கை, கால் கழுவிச் சுத்தம் செய்து கொள்கிறாள்.

     “வெந்நீர் வச்சித் தாரேனேம்மா? குளிக்கணுமா? ரொம்ப தூரம் நடந்து வந்தாப்பில இருக்கு...?”

     “வேணாம். குடிக்க மட்டும் வெந்நீர் குடுங்க போதும்...”

     உள்ளிருந்து தாளித மணம் வருகிறது.

     சிறிது தேங்காயெண்ணெய் வாங்கித் தலையில் புரட்டிக் கொள்கிறாள். குச்சிகுச்சியாக, கனமாக இருக்கிறது. ஓர் அரிப்பு, உழவர் குல மக்கள் வயற்காட்டுக் களியைத் தலைக்குத் தேய்த்து முழுகுவார்கள். ஏதேனும் தலையில் தேய்த்து முழுக வேண்டும். சளியில்லாமல் தலை கனமாகத் தெரிகிறது. தொண்டைக் கட்டு; கால் வலி; அசதி...

     இந்தச் சகோதரியின் பரிவில் எல்லா நோவும் கரைந்து போகின்றன. காலையில், மன்னார்குடியில் மூக்கன் வாங்கி வந்து தந்த இரண்டு இட்டிலிதான் அன்று அவள் கொண்ட உணவு. இலையில் சுடச்சுட அவல் உப்புமா தாளித்து வைத்துச் சர்க்கரையும் வைக்கிறாள்...

     இந்த அன்பில் நெஞ்சு கனிந்து உருகுகிறது.

     “... இதெல்லாம் பத்திரமாக இருக்கட்டும்...” என்று பையை அங்கு சேர்ப்பிக்கிறாள்.

     “உப்புமா ஆறிப் போகுது, சாப்பிடுங்கம்மா...”

     “நேத்து முந்தா நா... ராவு வந்திருந்தாப்பல. அதுக்கு நாலு நா முன்ன மணலிக்காரரு வந்தாருங்க. அடயாளம் தெரியல. இந்த அவுலுதா தாளிச்சி வச்சே... என்னமோ... சொல்லிக்கிறாங்க...”

     “அம்மா சுயராச்சியம் வந்திருக்கு, ஆனாலும் நீங்கதா தேசத்தை இப்ப காப்பாத்தறாப்பில இருக்கு...”

     நெஞ்சில் அவல் சிக்கிக் கொண்டாற் போல் புரையேறுகிறது. கண்களில் நீர் பெருகுகிறது.

     மணிக்கு இதுவரையிலும், போலீசு, சிறை என்ற அச்சம் தோன்றியதேயில்லை. இலையை மடக்கிக் கொண்டு சென்று கொல்லையில் எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு வருகிறாள்.

     உக்கிராண அறை காலியாக இருக்கிறது. உண்மையான தேசத் தியாகிகள்... படுத்தால் உறக்கம் பிடிக்கவில்லை.

     கூடத்தில் சாமிநாதன் வந்துவிட்ட குரல் கேட்கிறது. “மணி அம்மா... வந்திருக்காங்க... ஏதோ தஸ்தாவேஜி குடுத்து வச்சிருக்காங்க...”

     “அதா, வாசல்லே நாமக்காரன் நிக்கிறானேன்னு பார்த்தேன். ஏதானும் சாப்பிட்டாங்களா?”

     “அவுல்தா... தாளிச்சுக் குடுத்தேன்...”

     வெகுநேரம் உறக்கம் வரவில்லை. ஏதேதோ நினைப்புகள். இனம் புரியாததொரு பரபரப்பு. புரண்டு புரண்டு படுக்கிறாள். காந்தியின் தாய் வந்து எழுப்பும் போதுதான் தூங்கியிருக்கிறோம் என்ற உணர்வு வருகிறது. ஆனால் கண்கள் எரிகின்றன. தலை பாரம் குறையவில்லை.

     “மணி ஆயிட்டுது. போட் மெயிலுக்குப் போகணும்னீங்களே?...”

     விறுவிறென்று சுமை குறைந்த பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறாள். திருவாரூரில் இவள் அறைக்குத் திரும்புகையில் காக்கழனி மருகன் வந்து காத்திருக்கிறான்.

     “அத்தை? வரச் சொன்னீகளாமே?”

     “ஆமாம்பா, என்னமோ சந்தேகமா இருக்கு. ஏதானும் நடக்குமோ என்னமோ தெரியலே... ஒரு ஏற்பாடு பண்ணிக்கணும் இல்லையா? எனக்கும் வயசாகிறது. நான் திரும்பி வரப்ப எப்படி இருப்பேனோ? குஞ்சம்மாகிட்ட சில பத்திரங்கள் இருக்கு. எனக்குன்னு கடைசிக் காலத்தில் ஒரு நிழல் வேணும்னு இப்ப தோணுறது. ஓஞ்சு போயி கட்சிக்குப் பாரமா இருக்கக் கூடாது. நீ சிமிளில போய்ச் சொல்லு. அந்தப் பத்திரம் காலாவதியாறத்துக்கு முன்ன வாங்கி, வசூல் பண்ணினா ஒரு ரெண்டு ரெண்டரை தேறும்... எனக்கு ஒரு நிழல்... இருக்கட்டும்...”

     கும்மட்டியைப் பற்ற வைத்து, சோறு வடித்து, மிளகைத் தட்டிப் போட்டு ரசம் வைக்கிறாள். குளிக்கவில்லை.

     ரசத்தைக் கரைத்துப் பருகுகையில், நாலைந்து கிராமத் தோழர்கள் வருகிறார்கள்.

     “அம்மா...?”

     “என்னப்பா, எங்க வந்தீங்க?”

     “நேத்தே வந்தோம். காணமின்னவே, கதி கலங்கிப் போனோம்மா? மணலூர் ஒப்பந்தம் ஆச்சுன்னாங்க... பட்டாமணியம் கருவிட்டிருக்கிறானாம்!...”

     “அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது...”

     பேச முடியவில்லை. இவள் இதுநாள் வரை இப்படி உணர்ச்சிவசப் பட்டதில்லையே!

     “அம்மா சூடா காபி வாங்கியாரட்டுமா?”

     “வேண்டாம்பா, தொண்டைக்கட்டு, படுத்துத் தூங்கினா சரியாயிடும்...”

     “கவனமா இருங்கம்மா... இதா முனிசாமி இங்கதா இருக்கிறான்... ஒரு குரல் கூப்பிடுங்க போதும்... இப்பிடியே படுத்துக் கிடக்கட்டும் ராவுக்கு.”

     “... வேணாம்பா, அரசமரத்தப் புடிச்ச பேயி புள்ளையையும் பிடிச்சிதான்னு ஆவப்போகுது? நீங்க பத்திரமா இருந்துக்குங்க!...”

     புத்தகங்கள், பிரசுரங்களை அடுக்கி வைக்கிறாள். “இதெல்லாம் வாணா கொண்டிட்டுப் போயி... நம்ம... தொப்பாளாம் புலியூர் தோழர் வீட்டில வச்சிடுறீங்களா? படங்கள் நம்ம சங்க இயக்கம் சம்பந்தமானது.”

     அவற்றையும் கட்டி அனுப்பி விடுகிறாள்.

     ரசத்தைச் சூடு செய்து சூடாகக் கரைத்துப் பருகி விட்டுப் படுக்கிறாள்.

     கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கும் முன் விளக்கைப் போடுகிறாள். வெளிச்சம் மங்கி இருக்கிறது... நள்ளிரவு என்பதை ஓசை அடங்கிய தெருவே விள்ளுகிறது. ஒரு காக்கிச் சட்டை போலீசு... மற்ற இருவர் ‘மஃப்டி’.

     “அம்மா... உங்களை... இதோ வாரண்ட்!...”

     இவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இவ்வளவு விரைவிலா?

     பரபரப்பு அடங்கிப் போகிறது. நிதானமாகச் செயல்படுகிறாள். எப்போதும்போல் தன் பெரிய பையை எடுத்துக் கொள்கிறாள். அதில் தன் கதர் வேட்டி, சட்டை, உள்ளாடைகள், பற்பொடி, சோப்புக் கட்டி, தேங்காயெண்ணெய்க் குப்பி எல்லாவற்றையும் வைக்கிறாள். தனது போர்வை, ஜமுக்காளம் தலையணைகளைச் சுற்றிக் கொள்கிறாள். சிறைவாசம் பற்றித் தோழர்கள் கூறிய விவரங்கள் கேட்டிருக்கிறாள். மதுரை ஜானகி, சிறை வாசத்தில், சோறும் ஊட்டமும் இன்றியே ஆஸ்த்மா நோய்க்கு இரையாகி இளமையை அகாலத்தில் பறி கொடுத்திருக்கிறாள்.

     ஆனால்...

     இவளை, இந்த வாரண்ட், தடுப்புக் காவல் சட்டம் என்று தெரிவிக்கிறது.

     எப்படியானாலும் இது புதிய அனுபவம்.

     சிறைக்குச் சென்றவர்களை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்வதானால் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் - செய்தால் போதும், தேசியம் சனாதனம் - என்று சங்கராச்சாரியார் தீர்ப்பை ஒப்புக் கொண்ட காலம் நினைவில் வருகிறது. நாங்கள் சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை எளியாருக்குச் சொர்க்கம் காட்டுவோம். வீதியில் தேனும் பாலும் ஓடும் என்று சொன்ன காங்கிரஸ்காரர்களின் கைதியாகப் போகிறாள் மணி. மாட்சிமை தங்கிய மன்னர் பெருமானின் அடிச்சுவட்டில் நின்று முதலில் உரிமைக் குரலை நெருக்கும் சட்டமாகத் தடுப்புக் காவல் சட்டம் இவளை வளைத்திருக்கிறது.

     யாருக்கு, எதைத் தடுக்கும் காவல் இது?

     எண்ணங்கள் பொலபொலக்க, கைப்பையுடன் இவள் இறங்குகிறாள். ஒரு மஃப்டி இவள் படுக்கைச் சுருளை எடுத்து வருகிறான்.

     கடை வீதி, அச்சகம், சுதந்தரக் கொடியேந்திப் பல முறைகள் இவள் ஊர்வலம் சென்ற இடங்கள், எல்லாம் உறங்குகின்றன. தெரு விளக்குகள் மஞ்சளாக அழுது வடிகின்றன! கூண்டு போன்ற போலீசு வண்டி ஏற உயரமாக இருக்கிறது. மற்றவர் உதவியுடன் ஏற்றப்படுகிறாள். அது ஒரு சனிக்கிழமை இரவு. வண்டி இவளைக் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்கிறது.