உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) கனி 6 “சுசீலா!” என்று மெதுவான குரலில் அவன் அழைத்தான். என் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கீழே சிந்தி விடாதபடி அடக்கிக் கொள்ள முயன்றவளாக நான் அவனுடைய இரக்கம் மேலிட்ட முகத்தை நோக்கினேன். “எப்போது வந்தீர்கள்?” என்று நான் கேட்க நினைத்த வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. அவனாகவே அதே தணிந்த குரலில், “நான் அப்போதே வந்துவிட்டேன், சுசீ! வரதன் இங்கு இருக்கும் போதே வந்துவிட்ட நான் திடுக்கிட்டு வெளியிலேயே நின்றிருந்தேன் இந்நேரம். நீ கிறீச்சிட்ட போது நான் உள்ளே நுழைந்திருப்பேன். ஆனால் அடுத்த விநாடியே அவன் வெளியே வந்ததைக் கண்ணுற்று விட்டேன். என்னைக் கவனியாமலே அவன் சென்றான். உம். ராமநாதன் எங்கே போயிருக்கிறார், சுசீலா?” என்று கேட்டான். நான் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன். அப்போதே யாரோ ஆள் அரவம் கேட்டது போல் இருந்ததே? உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசிய வரதன் தான் கவனிக்கவில்லை என்றால், குழம்பிய நிலையில் இருந்த நானும் பிரமை என்று எண்ணினேனே? அவன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. வெறித்துப் பார்த்தேன். கன்னங்களிலே வழிந்த கண்ணீர் காய்ந்து தோலை இழுத்தது. பேச்சு, சிந்தனா சக்தி எல்லாம் எனக்குத் தடைப்பட்டு விட்டன போல் இருந்தது. “சுசீலா!” என்று மறுபடியும் அவனுடைய வாஞ்சை ததும்பும் குரல் என் செவிகளில் விழுந்தது. நான் மீண்டும் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்கினேன். ஆம். அவனுடைய முக விலாசம் எனக்கு நடுக்கத்தை உண்டு பண்ணவில்லை. வரதனைப் போல் அல்ல அவன். என் நெஞ்சத்திலிருந்து உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்தது. பொலபொலவென்று கண்கள் முத்துக்களைச் சிந்த முதல் தடவையாக அவனை நான் “அண்ணா!” என்று அழைத்துக் கதறி விட்டேன். அவனும் பதறித்தான் போய்விட்டான். பரபரப்பாகப் பேசினான். “என்னம்மா சுசீலா? எனக்கு எதுவுமே புரியவில்லையே? வரதனின் நடத்தையைக் குறித்து வருத்தப்படுகிறாயா? ஞாயிற்றுக்கிழமைகளில் கூடவா ராமநாதன் ஆபீசுக்குப் போகிறார்? அவர் உன்னிடம் அன்பாக இருக்கவில்லையா, சுசீலா? நான் அப்போதே கேட்ட போது மழுப்பினாயே? இப்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று நான் நினைத்ததற்கு மாறாக, ஒரே அதிர்ச்சி தரும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறதே? என்னிடம் சொல்லு, சுசீ!” என்று சொல்லி அவன் என் அருகிலே உட்கார்ந்தான். ஆதரவிழந்த அநாதைக் குழந்தை அன்பு தோய்ந்த முகத்தைக் கண்டால் ஒட்டிக் கொள்வதைப் போல நான் விம்மலுக்கு நடுவே, “எனக்கு தந்தை இல்லை. தாயும் மற்றவர்களும் என்னை அறியாதவர்கள் ஆகி விட்டார்கள். அன்றே நீங்கள் சொன்னீர்கள். எனக்கு மூத்த சகோதரன் நீங்கள் தாம். இந்தச் சமயம் எனக்கு ஆறுதல் கூற உங்களைத் தவிர யாருமே இல்லை” என்று நாத் தழுதழுக்க நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன். “சுசீ. நான் தான் உன்னை மஞ்சு என்று எண்ணியிருக்கிறேன் என்று அன்றே கூறினேனே? என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்லு, சுசீலா! ராமநாதன் உன்னை அன்பாக நடத்தவில்லை என்பதை அறியவே எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது” என்று அவன் கேட்டான். மனத்திலே பொங்கி எழுந்த துயரத்தை, அத்தனை நாட்களுக்குப் பிறகு நான் தாளாமலே அவனிடம் கொட்டி விட்டேன். “கடந்த மூன்று வருஷ வாழ்க்கை வெளிப் பார்வைக்குத்தான் நன்றாக இருந்திருக்கிறது. என்னை மணந்து கொண்டுவிட்ட கடனுக்காக அவர் என்னை மனைவியாக நடத்துகிறாரே ஒழிய, உல்லாசமில்லை, சல்லாபமில்லை, சண்டையில்லை, சச்சரவில்லை, கோபமில்லை, தாபமில்லை. இந்தப் பாலைவன வாழ்க்கையில் வெம்பி நான் சாகவுங் கூடச் சில சமயங்களில் எண்ணம் கொண்டு விடுகிறேன். அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லையே? என் கண்ணீருக்கு முன் அவர் வாயிலிருந்தே ஒரு நாள், ‘உன்னை நான் மணந்து கொண்டு மாபெரும் தவறு இழைத்து விட்டேன்’ என்று வந்துவிட்டது. அதன் அர்த்தம் அப்போதைய சூழ்நிலையில் எனக்கு ஒரு விதமாகப் புரிந்தது. இப்போது ஒரு விதமாகப் புரிகிறது. என்றாலும், அவருக்கு என் மீது கடுகளவும் அன்பு இல்லை!” மூர்த்தியின் கண்கள், உதடுகள் எல்லாம் அசைவற்றுப் போயின. என்னைப் பார்த்துக் கொண்டே மனத்திலே எழுந்த பிரமிப்பைச் சமாளிக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். நான் தொடர்ந்தேன். “என்னை நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள். வரதன் நடந்து கொண்ட முறையும் பேசிய முறையும் தவறு தான். ஆனாலும் அவன் கூறிய சில விஷயங்கள் முற்றும் உண்மை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் கொஞ்சமாவது அறியும் இயல்பினராக அவர் இருந்தால் என் வாழ்வு சீர்ப்பட நம்பிக்கை இருக்கும். நான் அவரை அந்தக் காலத்திலே என் இருதய பீடத்தில் அமர்த்திக் கிடைத்தற்கரிய கணவர் என்று போற்றினேன். அவர் என் மீது கரை காணாத காதல் கொண்டிருக்கிறார் என்று நம்பி அவருக்காக எந்த விதமான தியாகத்தையும் செய்யச் சித்தமாக இருந்தேன். என் நம்பிக்கையை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்திய அவர், இந்த நாட்களில் என் மனத்தை உடைத்து விட்டார். சித்திரவதையையும் விடக் கொடிய தான இந்த மனநோவைச் சகிக்க முடியாமலே தான் நான் ஆறுதலை நாடி என் சங்கீத அறிவைக் கொண்டு வேறு பாதையிலே செல்லலானேன். அதிலே வரதன் வந்து இப்படிக் குறுக்கிடுவான் நான் எண்ணியிருக்கவில்லையே? அவன் பேசியவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்களே?” என்று கேட்டவாறு நான் படபடப்பைத் தணித்துக் கொள்ளும் வகையில் சற்று நிறுத்தினேன். “இதற்கு முன் இந்த வகையில் அவன் பேசியிருக்கிறானா சுசீ?” என்று மூர்த்தி சட்டென்று கேட்டான். அவன் கேள்வி ஏனோ எனக்குத் தணதணப்பைக் கொடுத்தது. என் மனம் ராமநாதனின் மனைவி என்ற வரையறையிலிருந்து நழுவும் வகையில் ஆட்டம் கண்டிருக்கும் என்பதை அவன் ஊகித்துக் கொண்டு விட்டானா என்ன? எத்தனை உறுதியான கற்கோட்டையாக இருந்தாலும் காவலாளிகள் சரியாக இல்லை என்றால் பகையாளி உள்ளே நுழைந்து விடச் சுலபமாகி விடுகிறதல்லவா? அவர் மனைவி தான் நான். வழி வழியாகக் கணவனைத் தெய்வமாகப் போற்றும் மங்கையர் மரபிலே நான் வந்தவள் தான். எனினும் இந்த உறுதிக் கோட்டையை ஏதும் பக்கபலமின்றிக் காக்கும் என் ஒடிந்த இருதயம் வரதனுடைய எதிர்ப்புக்கு முன் சமாளிக்க முடியாது போல் தளர்கிறதே? நினைக்கவே நெருப்பைத் தொட்டது போல் சுரீலிடுகிறது. என்றாலும் ஊடே ஒரு குறுக்குப் புத்தி, வரதன் கூறியவைகளிலே உண்மை இருக்கிறது, உண்மை இருக்கிறது என்று ஏன் தாளம் போட வேண்டும். “ஏன் சுசீலா? நான் கேட்டதற்குப் பதில் கூறவில்லையே?” என்று மூர்த்தி மறுபடியும் கேட்டான். “உம், உம்! இல்லை. வானொலி நிலையத்திலே நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றிலே அவனுடன் நானும் பங்கு கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆம், தலைவனுடன் தலைவி பாகமாக. என்னைப் போலக் கலை உள்ளம் கொண்டவன், ரசிக உணர்ச்சி படைத்தவன் என்று உயர்ந்த நோக்கிலே நான் அவனிடம் மதிப்பு வைத்து அதற்கு ஒப்புக் கொண்டேன். அந்த முறையிலே இருந்து அவன் இப்போது...” என்று மேற்கொண்டு முடிக்காமல் நான் நிறுத்தி விட்டேன். சில விநாடிகள் மூர்த்தி மௌனம் சாதித்தான். பிறகு நிறுத்தாமல் கடல் மடை திறந்தது போல் ஆரம்பித்தான். “ராமநாதன் ஒன்றுமே விசாரிப்பதில்லை. வரதன் உன்னுடன் பழகுவதைச் சரளமாக அனுமதிக்கிறார், இல்லையா சுசீ? நீ உன் மனத்தைத் தளர விட்டு விட்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது. அது தவறு. அவர் உன் மீது அன்பு பாராட்டவில்லை என்பது நிச்சயமாக உனக்குப் பட்டால், அதற்குரிய வழியை முயல வேண்டுமே ஒழிய, புனிதமான மணப் பிணைப்பிலிருந்து நழுவும் வழியிலே உன் மனத்தை விட்டு விடலாமா? ஒரு காலத்தில் அவரை இருதய பீடத்தில் வைத்துப் பூசித்தேன் என்றாயே, அத்தகைய அன்பும் காதலும் உண்மையாகக் கொண்டிருந்த நீ, தியாக புத்தி கொண்டவளாக இருந்தால் வழியில் ஏற்பட்ட முள்ளைக் கண்டுபிடித்துக் களைய அன்றோ முயல வேண்டும்? நீ நம் இந்தியப் பெண் குலத்தின் தர்ம வழுப்பாட்டிலிருந்து பிறழ்ந்து விடும் நிலைக்கு வருவாய் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.” “சுசீலா, நீ உன் மனத்தையே புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் குழந்தையைப் போல வரதனின் அலங்காரச் சொல்லில் குழம்பிப் போகிறாய். அவன் சொற்களில் உண்மை இருக்கிறது என்றாயே? என்ன உண்மை இருக்கிறதாம்? கணவனும் மனைவியும் விருப்பு வெறுப்புகளில் மன ஒற்றுமை கொண்டு இருக்க வேண்டும் என்றானே? அதைப் போலத் தவறு வேறில்லை. அவனுக்கு ரசிகத்தன்மை இருக்கிறது. உனக்கு கலைப்பற்று இருக்கிறது. இதனாலே மன ஒற்றுமை என்று அவன் முடிவு கட்டுகிறான் இல்லையா? இன்னும் எத்தனையோ பேரிடம் அவன் இந்த ஒற்றுமையைக் காணலாம். இதிலிருந்து காதல் வந்து விட்டது என்று கூறுவது மடத்தனம். உன் கண்களைக் கட்ட அவன் கையாளும் தந்திரம், இது. வெளித் தோற்றங்களிலேயும் நாட்டங்களிலேயும் மலையும் மடுவும் போன்ற வேற்றுமை கொண்டவர்கள் மனமொத்து வாழ முடியாது என்பது முழுத் தவறு. உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை தான் ஒளிவிடும். அவனுக்குப் பரிச்சயமில்லாத விஷயத்திலே அவள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவனுக்கு ஆச்சரியம் கொடுக்கும். அதன் மூலம் அவனுக்கு அவளிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அவள் விஷயமும் அப்படியே. பரஸ்பரம் இந்த வேற்றுமை அவர்களிடையே பிரேமையை அதிகரிக்க உதவுமே ஒழிய குன்றிவிடச் செய்யாது. அவன் சொல்லும் மாதிரியிலே ஒற்றுமை இருந்தால் தான் ஆபத்து. விவாதங்களுக்கும், மனத்தில் போட்டி பொறாமைக்கும் இடம் ஏற்பட ஏதுவாகும். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் தம்பதிகள் இருந்தார்கள். அவளுக்குக் கெட்டிக்காரி, கைராசிக்காரி என்ற புகழ் ஏற ஏற அவனுக்குப் பொறாமை ஏறியது. அதன் விளைவு, இப்போது இருவரும் மன வாழ்விலிருந்தே பிரிந்து ஜன்ம விரோதியாகி விட்டார்கள். இந்த ஒற்றுமைக்கு என்ன சொல்லுகிறாய், சுசீ? வாழ்க்கையில் ஒளியை ஊட்ட உறுதுணையாக உள்ளது ஒற்றுமையுமல்ல, வேற்றுமையுமல்ல. அன்புதான் ஆதாரம்” என்று ஆராய்ச்சி முடிவிலே வெளியிடும் நீண்ட அறிக்கையைப் போல் அவன் தன் அபிப்பிராயத்தை வெளியிட்டான். வரதனின் பேச்சில் உண்மை இருக்கிறதென்று ஆமோதித்த உள்ளம், இப்போது மூர்த்தியின் அபிப்பிராயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொண்டது. “வரதன் விஷயத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நீங்கள் இப்போது கடைசியாகக் கூறியது போல ஆதி காரணமாகிய அன்பு இல்லையே அவருக்கு? இருக்கிறாயா? இரு. வெளியே போகிறாயா? போ. இது என்ன குடித்தனம்? என் மனம் தளர்ந்து போனதற்கு நீங்கள் என் மீதே குற்றம் சாட்டுகிறீர்களே? அவரால் தானே நான் மனமுடைந்து போனேன்? அவர் வேறு எந்த மங்கையிடமாவது மன நாட்டம் கொண்டிருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி என்னிடமிருந்து விடுதலை பெற்றுப் போகட்டும். என் கண் முன் நடமாடி என்னை நோகச் செய்வதை விட அது எனக்கு ஒரே துயரமாகிவிடும். அவருடைய இந்த வேற்று நடத்தை தானே வரதன் என்னிடம் இத்தனை துணிகரமாக வார்த்தையாடத் தைரியமளித்து விட்டது? நான் என்ன செய்வேன்? எனக்குத் தெரியவில்லை. ஆமாம், எது நன்மை, எது தீமை என்று எனக்குப் புரியவில்லை. வருஷக் கணக்கில் மனமும் அறிவும் போராடிப் போராடி நான் அலுத்து ஓய்ந்து விட்டேன்.” “இப்போது சிந்தித்துப் பார்த்தால் ஒருவரை ஒருவர் அறிந்து பழகி, காதல் மணம் செய்து கொள்கிறார்களே, அதுவே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். என் மணப் பருவத்தில் எனக்கு இத்தனை அறிவு பதப்பட்டிருக்கவில்லை. அவர் ‘அப்படி இருப்பார், இப்படி இருப்பார்’ என்று விளையாட்டுப் போலக் கோட்டை கட்டினேன். எல்லாம் பிரமையாக முடிந்து விட்டது. எனக்கு அவர் மீது ஏற்பட்ட அன்பு கூடப் பிரமையோ, இயற்கையாக எழுந்ததில்லையோ என்று எண்ணும் அளவுக்கு நான் வந்து விட்டேன். தர்ம வழி, அது இது எல்லாம் இந்த என் போன்ற அன்பில்லாத சூழ்நிலையிலே தரித்து நிற்க முடியாது. கணவனை விட்டு விலகுவதை மனத்தால் கருவதையே, பத்தினிப் பெண்டிரின் தர்மத்திலிருந்து பிறழ்ந்து விட்டதாக எண்ணும்படியான மகளிரிடையே வளர்ந்தவள் தான் நான். ஆனால் இந்த உறுதி நிலைத்து நிற்கக் காதல் வேண்டும். வாழ்விலே ஒருவரை ஒருவர் பிணையுமுன்பு இந்த அஸ்திவாரம் அவசியம். எங்களுக்குள் இது இல்லாததால் தான் இன்ப மாளிகை எழவில்லை. அவரையும் குற்றம் சாட்டுவதற்கில்லை. எனக்கும் அவருக்கும் இருந்தக் கணவன் - மனைவி மேல் பூச்சு நாடகம் தீராத வேதனையையும் நோயையும் தருகிறது. லீலாவுடன் அவரைச் சேர்த்து வரதன் மட்டுந்தானா கூறினான்? ஜயம் மன்னி கூட என்னிடம் ஜாடைமாடையாக வந்து எச்சரித்தாள். நான் அவளையே கேட்டிருப்பேன். ஆனால் அவள் இங்கு இருக்கும் போது எனக்கு இந்தச் சந்தேகம் மனத்தில் உறைக்கவில்லை. அவர் என்னை நடத்தும் விதத்துக்கு வேறு ஏதேதோ உப்புக்கு உதவாக் காரணங்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தேன். இப்போது அதுவும் உண்மையாக இருக்குமோ என்று கூட எனக்குக் கலங்குகிறது” என்று தோன்றியதை யெல்லாம் நான் அவனிடம் கூறிவிட்டேன். வார்த்தைகளை முடித்த பின் தான் சட்டென்று மனத்திலே அவனிடம் ஏன் இப்படியெல்லாம் கூறினோம் என்று வெட்கம் முட்டுக் கட்டை போட்டது. கண நேர நெகிழ்ச்சியிலே மனத்திலே பட்டதையெல்லாம் பொழிந்து விட்டேனே? அப்படித்தான் என்ன, அவன் அநுபவம் முற்றி வாழ்க்கையில் அடிபட்டவனா? எனக்குத் தெரிந்து லீலாவை ஏமாற்றி விட்டு செல்வத்திலும் அந்தஸ்திலும் மோகம் கொண்டு ஹேமாவை மணக்க முற்பட்டவன். பெண் புத்தி பின் புத்தி என்பது ஒவ்வொரு தடவையிலும் மெய்யாகும்படி நான் நடந்து விடுகிறேனே? ஆனால் அவன் மீது லீலா விஷயமாக என்ன கோபம் எழுந்தாலும், கடுமையான வார்த்தைகள் கூற வேண்டும் என்று எண்ணியிருந்த போதிலும் சமயத்தில் மறந்து விட்டனவே? அவன் வாஞ்சை ததும்பும் முகத்துக்கு முன் என்னை அறியாமல் ஏனோ பாசம் இழுக்கிறது? அவனைச் சகோதரனாக அங்கீகரித்ததில் மனப் பளு குறைந்து விட்டது போல் ஏனோ நான் ஆறுதல் காண வேண்டும்? இந்தப் பிறப்பில் இல்லாத ரத்தப் பந்தம் முற்பிறப்பில் இருந்ததோ? மனச்சுமையை ஓர் உறுதியுடன் இறக்கி விட்டேன். உறுதியுடன் ஒரு செயல் புரிந்தால் பின்பு தடுமாறக் கூடாது. அடுப்பு எரியவில்லை என்று விறகை இழுத்து மாற்றிக் கொண்டே இருந்தால் நெருப்பு எப்படிப் பிடிக்கும்? எனக்குள்ளேயே அது சரியில்லை இது சரியில்லை என்று குழம்புவதில் என்ன பயன்? இத்தனை நேரம் வாய் திறவாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தி, “சுசீலா, நான் ஒரு தரம் அல்ல பத்து தரம் சொல்லுகிறேன். உன் மனத்தை நீ புரிந்து கொள்ளவில்லை. ஏமாற்றத்தாலும் நிராசையாலும் வாடிப் போயிருக்கிறாய். அதனால் தான், ‘அவரிடம் நான் அன்பு கொண்டது பிரமை’ என்கிறாய். முதன் முதலிலே நான் உன்னை ஊருக்கு அழைத்து வந்த போது, ராமநாதனின் பேச்சை எடுத்தாலே உன் மனம் விம்மியதை முகம் எப்படிக் காட்டியது என்பதை இன்னமும் என் நினைவில் வைத்திருக்கிறேன். ஆச்சரியமாகக் கூட இருந்தது. எனக்கு அப்படி இருந்த நீ இன்று எப்படி என்னிடம் விவாதிக்கும் நிலைக்கு வந்து விட்டாயே! உன்னை மணந்தது ஏன் தவறு என்று நீ கேட்டாயா சுசீ?” என்று என்னைக் கேட்டு மடக்கினான். நான் ஆத்திரத்துடன் பதிலளித்தேன். “கேட்க வேண்டுமாக்கும்! அன்று பகல் அவர் மதனி என்னைக் கடிந்து கொள்ள மனஸ்தாபம் நேரிட்டிருந்தது. என் கண்ணீரைக் கண்டதும் தமையனுக்கும் மதனிக்கும் கடமைப்பட்டிருந்த அவரைப் பிளவு ஏற்படும் வகையில் நான் குறுக்கிட்டு வந்திருக்கிறேன் என்று உணர்ந்து அப்படிச் சொன்னார் என்று நம்பினேன். இதெல்லாம் நான் ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? உண்மையாக அவர் காதல் உள்ளம் படைத்தவராக இருந்தால் நான் மாபெரும் குற்றம் செய்தாலும் மன்னித்து விடமாட்டாரா? நான் ஏமாந்தேன். வாழ்விலே பெருந் தோல்விதான் என் பாக்கியம். அவர் ஒரு நாளின் பெரும் பகுதியை வெளியிலே கழித்து விடுகிறார். எங்கே போகிறார், என்ன செய்கிறார், என்னைப் போல வேதனைப் படுகிறாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே வகையில் நானும் இருக்க முடியாது என்பதை இதோ வரதனுடைய குறுக்கீடே காண்பித்து விட்டது. நான் அவரிடமிருந்து விலகி வாழ்வதை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். ஏன், என்னைப் பெற்ற தாயே ஒப்புக் கொள்ளாமல் இடிப்பாள். பெண்ணாய்ப் பிறந்தவள், புருஷனுடைய எத்தகைய கொடுமைக்கும் என்றென்றும் அடி பணிந்து தலை கொடுக்க வேண்டியது தான் என்ற மனப்பான்மையில் ஊறிய அவள், நானும் அப்படியே இணைந்து போக வேண்டும் என்றே விரும்புகிறாள். அது போல அவரிடம் சரணாகதி அடைந்து விட என்னால் முடிய வில்லையே? பூமிக்கு வெகு அடியிலே மறைந்து கிடக்கும் தண்ணீரைக் கூட பாறைகளைப் பிளக்கும் வெடிகளும் மனிதனுடைய இடைவிடாத் தோண்டுதலும் காண்பித்துக் கொடுப்பதில்லையா? அப்படி அறியாமையும், என்னை நானே தாழ்த்திக் கொள்ளும் வறுமை மனப்பான்மையும் என்னுடைய கொஞ்சம் சுயமதிப்பைக் கூட மூடி விட்டிருந்தன. ஆனால் வெடி மருந்துகள் போன்று என் நாட்களிலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் அவமதிப்புகளும், எனக்கும் சுயமதிப்பு உண்டு, அன்புக்கு அடி பணியலாமே ஒழிய ஆணவத்திற்கு அசையக் கூடாது என்ற விழிப்பை வெளிக் கொணர்ந்து விட்டனவே! அது வலியப் போய் அவரிடம் சரணடைய வொட்டாமல் தடுக்கிறதே!” “புரியாத விஷயத்தை நேரிலேயே கேட்பது சரணாகதி அடைவது என்று அர்த்தமா, சுசீ? உன் மனம் திரிந்து விட்டதற்கு வருத்தப்படுகிறேனே ஒழிய, உன்னை நான் குற்றம் சாட்டவில்லை. நீ கேட்க வேண்டாம். எனக்குத் தெரிந்து விட்டது. நானே ராமநாதனிடம் நேராகக் கேட்டு விடுகிறேன். லீலாவைப் பற்றிய வம்புகளிலே எனக்குச் சிறிதும் நம்பிக்கை எழவில்லை என்றாலும் நீ கூறும் மாதிரி...” அவன் தொண்டை கரகரத்தது. என்னால் வாளா இருக்க முடியவில்லை. லீலாவின் கடிதம் நினைவில் வந்தது. “எனக்கும் லீலாவை அப்படி நினைக்கவே மனம் கூசுகிறது. நீங்கள் கைவிட்டு விட்டீர்கள் என்று மனமுடைந்து விட்டாள். எனக்கு ஆறுதல் நாடுவது கிடக்கட்டும். முதலிலே நீங்கள் செய்த செய்கையின் பலனைப் பாருங்கள். பணக்கார மாமாவின் ஆதரவிலே மேல் நாடு சென்று திரும்பி விட்டீர்கள். செல்வத்திலே கொழிக்கும் ஹேமாவை மணக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இது நியாயமாக்கும்! உங்கள் மீதுள்ள காதலின் மிகுதியால் வரதனையும் செல்வத்தையும் சுற்றத்தையும் கூட வெறுத்துவிட்டு அவள் வெளியேறி விட்டாள்!” என்று முகம் கொதிக்கக் கூறிய நான் அவள் கடிதத்தை அவனிடம் வீசி எறிந்தேன். அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவன் லேசாக நகைத்தான். “சுசீ. பெண்ணே பொறுமையற்றவள். என் வாயால் நான் என்றாவது ஹேமாவை மணந்து கொள்ளப் போகிறேன் என்று கூறினேனா? அதற்குள் நெய்யில் விழுந்த ப்பம் போல ஆத்திரப்பட்டால் நான் என்ன செய்ய? ஏதும் வாயை விட்டுக் கேட்காமல் திடீரென்று கோபித்துக் கொண்டால் எனக்கு எப்படிப் புரியும்? ஊரை விட்டுப் போகும் போது லீலாவைச் சந்தித்து என் யோசனைகளைக் கூற வேண்டும் என்று ஆன மட்டும் முயன்றேன். அவள் பிடி கொடுக்கவே இல்லை. எனக்கும் வேறு சந்தேகம் தட்டியது. ராமநாதன் அவளை அடிக்கு ஒரு முறை மிஸஸ் வரதன் என்று பட்டம் கட்டி அழைத்தாரே? அவர்கள் விருப்பத்துக்கு வளைந்து போகக் கூடிய நிர்பந்தமாக்கும். அதனால் தான் அவள் எனக்கு முகம் கொடுக்கவில்லையாக்கும் என்று எனக்கு விரக்தி உண்டாயிற்று. நான் புறப்பட்டுச் செல்லும் போது மனம் என்ன பாடுபட்டுக் கொண்டு போனேன் என்பதை அறிவாளா அவள்? மாமா, மாமியிடம் உங்கள் வருங்கால மாப்பிள்ளையாக நான் இருக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பண உதவி பெற்றுக் கொள்ளவில்லையே? அவர்கள் அந்த நம்பிக்கையிலே வெளியே டமாரம் அடித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியா? கிட்டி முட்டிக் கல்யாணம் என்ற பிரஸ்தாபம் நான் இங்கு வந்த பிறகேதான் என் வரைக்கும் வந்தது. நான் முன்பே திட்டமிட்டிருந்தபடி, எங்களுக்கு இருந்த ஒரே வீட்டை விற்று, அவர்களிடம் நான் கடனாகப் பெற்றுக் கொண்டிருந்த தொகையைத் திருப்பி விட்டேன். ‘உங்கள் பெண்ணுக்கு நான் தகுதியானவன் அல்ல’ என்ற என் எண்ணத்தையும் உடைத்துக் கூறிவிட்டேன். என் தாய் தந்தையருக்குக் கூட நான் ஹேமாவை மறுத்ததில் கோபமில்லை. ஏனெனில் அவளுடைய அதீதமான நாகரிகம் அவர்களுக்குக் கூடப் பிடிக்கவில்லை. மேல்நாடு செல்லும் ஆசையிலே, அவசரத்துக்கு அவர்களிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டது தவறாகுமா? நேற்றுத்தான் ரெயில்வே தொழிற்சாலையில் வேலையை ஒப்புக் கொண்டேன். இவ்வளவு சுலபமாக லீலா என்னை நம்பிக்கையற்றவனாக ஆக்கிவிட்டதற்கு நீயும் ஒத்துப் பாடுகிறாயே, சுசீலா? பெண்ணே ஆத்திரப்பட்டவள். மனத்திலே உள்ளதை வெளிப்படையாகவும் கேட்க மாட்டாள். ராமநாதனை நான் கேட்டால் கூட இப்படித்தான் ஏதாவது சொல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று மூர்த்தி விவரித்தான். “ஆமாம்! உங்களைப் புரிந்து கொள்ளும்படியும் நடக்க மாட்டீர்கள். பிறரையும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பிறகு பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று குற்றம் சாட்டுவீர்கள்?” என்று நான் இன்னும் ஏதேதோ ஆத்திரத்துடன் கூற வாயெடுத்தேன். கதவு இடிபடும் சப்தம் என்னை உலுக்கியது. திடுக்கிட்டுத் திரும்பிய நான் அறை முழுவதும் பார்த்தேன். நான் இழுத்துத் தாழிட்டிருந்த முன்னறைக் கதவு தான் உட்புறமிருந்து இடிபட்டது. திகைப்பூண்டை மிதித்தவள் போல் நான் பேச்சு மூச்சற்று நிற்கையிலேயே மூர்த்தி, “என்ன சுசீ? ராமநாதன் ஆபீசுக்குப் போய்விட்டார் என்றாயே? உள்ளே யார்? அவரை வைத்தா தாழிட்டாய்” என்று கேட்ட வண்ணம் கதவைத் திறந்தான். கூர்மையான பார்வையை என் மீது பதித்த கனிந்த விழிகளுடன் என் கணவர் தாம் அறை வாயிற்படியிலே நின்றார். என்னுள்ளே ஒரு பிரளயம் வந்துவிட்டது போல் இருந்தது. அவர் எல்லாவற்றையும் கேட்டிருப்பார்! கேட்டிருக்கட்டுமே? ஒரு நாள் இல்லாது போனால் ஒரு நாள் துயர் தாங்காமல் நான் உடைத்தெறிந்துவிடக் காத்திருந்தேனே, தானாகவே இன்று சந்தர்ப்பம் வந்து விட்டது! நான் என்ன முயன்றாலும், அவர் மீது கனலை வளர்த்துக் கொள்ள அவருடைய அநீதிகளை எவ்வளவுதான் துணை தேடினாலும், அவரை நேருக்கு நேர் காணும் போது ஏனோ குற்றவாளி போல நான் தலை குனிகிறேன்? தைரியமாக நேருக்கு நேர் உதாசீனம் செய்ய என் உள்ளம் மறுப்பானேன்? பழக்க தோஷமா? அல்லது கணவன் என்று வேரூன்றிய எண்ணத்திலே எழும்பிய அர்த்தமற்ற மதிப்பா? அல்லது நான் அவர் மீது கொண்ட அன்பு பிரமை என்று எண்ணுவதும் பிரமை தானோ? “தூங்கினீர்களா என்ன? நீங்கள் ஆபீசுக்குப் போய்விட்டீர்கள் என்று சுசீ கதவைச் சாத்தித் தாழ் இட்டுவிட்டாள்!” என்று மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான். புது நடுக்கம் ஒன்று என்னுள்ளே புகுந்து கொண்டு அவர் முன் என்னை அசல் குற்றவாளியாக ஆக்கியது. அவர் வீட்டில் இல்லாததை நான் வரவேற்பது போலும், வரதனை நான் எதிர்பார்த்திருப்பது போலும், என் செய்கை ஒருவேளை அவருக்குக் கற்பித்திருக்குமோ? சே! என்ன அசிரத்தை எனக்குத்தான்! கதவைத் திறந்து பார்த்துவிட்டுத் தாழிட மாட்டேனா? ஏன் அவர் தாம் ஆகட்டும், வரதன் வந்து அத்தனை நேரம் முறை தவறிப் பேசியிருக்கிறான்! மூர்த்தி வந்து வேறு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. குரல் கேட்டவுடனேயே கதவை இடிக்க மாட்டாரா? என்னைச் சோதிக்கத் திட்டமிட்டது போல் பேசாமல் மூச்சுக் காட்டாமல் இருந்திருக்கிறாரே! “எல்லாம் நன்மைக்கே என்ற அறிவுரை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான் ஆபீசுக்குப் போய்விட்டேன் என்று சுசீ நினைத்ததும் நல்லதாகவே ஆகிவிட்டது. போவதாகவே இருந்தது. உள்ளே இருந்து துணி துவைக்கும் சத்தமும், மாவரைக்கும் சத்தமும் காதிலே விழுந்து தூங்க இடைஞ்சல் விளைவிக்கிறதென்று கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். அப்படியே தூங்கியிருக்கிறேன். சுசீலா தாழிடுவது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வரதனின் பேச்சுக் குரலில் விழித்துக் கொண்டு விட்ட நான், ஜன்னல் வழியே, நீ உள்ளே செல்லுவதையும் கவனிக்க நேர்ந்து விட்டது” என்று நிறுத்திய அவர் என் அருகில் வந்து அமர்ந்து என்னை நோக்கிப் புன்னகை பூத்தார். பொங்கி வந்த அவமானத்தால் எழும்பிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நான், “அதுதான் வேண்டுமென்று வெளியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்க உளவறியும் நாடகம் ஆடினீர்களாக்கும்! என் மனத்தை முறித்து இத்தனை கோலத்திற்குக் கொணர்ந்தது போதாது என்று இந்த விதத்திலும், ‘இவள் என்ன செய்கிறாள் பார்க்கலாம்’ என்று தானே நெஞ்சழுத்தத்துடன் உட்கார்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டதும் குபீரென அழுகை வெடித்துக் கொண்டு வந்தது எனக்கு. நான் சற்றும் எதிர்பாராத விதமாக அவருடைய கரம் என் முகத்தை மூடியிருந்த கைகளை அகற்றியது. “நான் செய்த எத்தனையோ தவறுகளுடன் அறிந்து செய்த இந்தத் தப்பையும் மன்னித்துக் கொண்டு விடு சுசீ! நான் அப்படி உடனே கதவைத் திறந்து கொண்டு வந்திருந்தால் இவ்வளவு தெளிவாக எது வைரம், எது கண்ணாடிக் கல் என்று புரிந்திருக்காது. வரதன் குரல் மட்டும் கேட்டு மூர்த்தியின் குரல் கேட்காமலிருக்கவே, அவனும் என்னைப் போல வெளியே நிற்கிறான் என்று அறிந்து கொண்டு முதலில் பேசாமல் இருந்தேன். என் துடிக்கும் ஆவலைத் தடைக்கட்டிக் கொண்டு நான் மறைந்திருந்ததற்கு, உங்கள் தூய உள்ளம் எனக்கு வெளிப்பட ஏதுவாக இருந்த சம்பாஷணையை நான் முழுவதும் கேட்க விரும்பியதுதான் காரணம் சுசீலா. என்னைக் காணும் போதெல்லாம், ‘நீ ஒரு சுத்த மடையன்’ என்ற அடைமொழி இல்லாமல் வரதன் பேச மாட்டான். நான் மடையன் தான். சந்தர்ப்பக் கோளாறுகளால் நிகழ்ந்த சம்பவங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆதாரம் இல்லாத பிரமை ஒன்றில் மூடிப் போய் என்னையும் வருத்திக் கொண்டு உன்னையும் குலைத்தேன்!” என்றார். என் உள்ளம் புல்லரித்தது. ‘நிஜந்தானா நடப்பது?’ என்ற பிரமிப்பிலே அசைவற்றுச் சிலையானேன். மறுபுறம் மூர்த்தியிடம் திரும்பினார். “என் பிரமைத் திரையை நீ அகற்றியவன் மட்டுமல்ல மூர்த்தி! எனக்குச் சரியான புத்தி புகட்டி விட்டாய். உள்ளன்பு பரிணமிக்கும் போது பிறருடைய வம்புகளில் மிதக்கும் செய்திகளில் நம்பிக்கைக் குறைவுக்கு இடம் கொடுக்காத உயர்ந்த மனம் படைத்த உன் முன் உண்மையைக் கூறவே எனக்குக் கூசுகிறது” என்று புதிர் போட்டார். “என்ன சுசீலா இது? அவர் மீது நீ அத்தனை குற்றம் சாட்டினாய்? அவரானால் ஏதேதோ பேசுகிறார்? அவர் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றாய். நீயுந்தான் அவரைப் புரிந்து கொண்டிருக்கவில்லை! எல்லாம் கிடக்க, என்னை ஏதேதோ முகஸ்துதி செய்கிறார். எனக்கு ஒன்றுமே விளங்காமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறதே?” என்றான் மூர்த்தி. “உம். நினைத்தால் எனக்கே ஒரு புறம் சிரிப்புத்தான் வருகிறது! உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு, மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக் கொண்டு, ஒவ்வொரு விநாடியும் உள்ளப் போராட்டத்திலே சுழன்று வீணே கஷ்டப்பட்டேனே?” என்று கூறிய அவர் உள்ளே சென்றார். அலமாரியிலுள்ள டிராயரைத் திறந்து மூன்று குறிப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். “இதிலே சிவப்புக் கோடிட்டிருக்கும் தேதிகளைப் படித்துப் பார், சுசீலா!” என்றார். “நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை முழு முட்டாளாக்கி விட்டீர்கள். லீலா இத்தனை அழுத்தல் ஆசாமியாக இருப்பாள் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நேற்றிரவு கூட சுசீ, நான் மூர்த்திக்கு ஹேமாவை மணந்து கொள்ள இஷ்டமில்லை போல் இருக்கிறது என்று கூறிய போது, நீ மறைத்துதானே வைத்தாய்? நீயும் லீலாவும் கூடிக் கூடிப் பேசும் போது என்ன தான் ரகசியம் இருக்குமோ என்று ஆச்சரியப்படுவேன். எனக்கு மறைத்து வைத்துதான் இத்தனை விபரீதங்கள் நிகழ்ந்ததற்கே காரணம்!” என்று கூறிய அவரைக் குறுக்கிட்டு நான், “ஆமாம், நான் அதைச் சொல்லலாம் என்று தான், லீலாவுக்கு வரதனை விவாகம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமலிருக்கலாம் என்று கோடி காட்டினேன்! நீங்கள் சிரத்தை காட்டாததால் நான் வேறு விதமாக எடுத்துக் கொண்டேன்” என்றேன். நாங்கள் பேசிக் கொள்ளும் அழகைப் பார்த்தோ என்னவோ, மூர்த்தி அடக்க முடியாமல் சிரித்தான். “நீ சிரிப்பாய் அப்பா! உனக்கு நகைப்பாய்த்தான் இருக்கும் இப்போது. சுசீ நான் வருவதற்குள் நீ அந்தக் குறிப்புகளைப் படித்து விடு. நான் இவனை இழுத்துக் கொண்டு கொஞ்சம், தபாலாபீஸ் வரை போய் வருகிறேன்” என்று சட்டையை மாட்டிக் கொண்டு அவர் கிளம்பினார். மூர்த்திக்கு என்ன தெளிந்ததோ என்னவோ, மறுவார்த்தை கூறாமல் அவரைப் பின் தொடர்ந்தான். என் கைகள் நடுங்க, என்ன என்னவோ எண்ணங்கள் மனத்தைப் படபடக்க, நான் டயரியைப் பிரித்துப் புரட்டினேன். ஸெப்டம்பர் 4 : என்னால் நம்ப முடியவில்லை. என் சுசீலாவா இத்தனைக் கண்டிப்பாக என்னை நிராகரித்தாள்? என் இருதய அந்தரங்கத்திலே வீற்றிருக்கும் என் சுசீலாவா என்னை வெருட்சியுடன் பிடித்துத் தள்ளினாள்? உலகமே அந்த நிமிஷத்தில் என் கண்முன் பஸ்மீகரமாகப் போய்விட்டது போல் இருந்தது. ‘போங்கள்!’ என்று அவள் படாரென்று கதவைத் தாழிட்டது என்னைப் புகவிடாமல் அவள் மனக் கதவைத் தாழிட்டு நிராகரிப்பது போலல்லவா இருந்தது? ஏமாற்றமும் அதிர்ச்சியும் என்னால் தாளத்தான் முடியவில்லை. ‘என்னைத் தொடாதீர்கள்! போங்கள்!’ என்ற இரண்டு சொற்களும் என்னை ஒவ்வொரு கணமும் மனத்திலே நெருப்புப் பொறிகள் போல வேதனை செய்கின்றன. அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? அவள் நடத்தைக்குக் காரணந்தான் என்ன? சந்தர்ப்பங்கள் குறுக்கே புகுந்து தடையிட்டதனால் அதிகரித்துத் துடிக்கும் ஆவலுடன் முதல் முதலாக நெருங்கும் கணவனை - அன்பு கொண்டவனை - ஒரு மங்கை இத்தகைய அதிர்ச்சியுடன் வரவேற்க வேண்டுமானால்...? புரியவில்லை. மனம் குழம்பிக் கொந்தளிக்கிறது. ஆயினும் நான் எப்படியோ அடக்கிக் கொள்ள வேண்டும். ஸெப்டம்பர் 13 : அவள் நடத்தையின் காரணம் இன்று எனக்குப் புலனாகிவிட்டது. ஆம். அவள் என் சுசீலா அல்ல! என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்துவிட்டதை உணர்ந்து விட்டேன். என் மேஜையின் மேலே இருந்த அந்தப் புத்தகம் - உயிரோவியம் - வேண்டுமென்றே நான் படிக்க வேண்டும் என்று தான் - சுசீலா வைத்திருக்க வேண்டும். அலைபாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் தான் நான் அதைப் படிக்க ஆரம்பித்தேனே ஒழிய, என் கண்ணைத் திறந்து, பெரியதோர் உண்மையைப் புலப்படுத்திவிடும் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நான் அதைப் படிப்பதைப் பார்த்து விட்டு, சுசீலா மறுநாள் என்னிடம் அந்தப் புத்தகம் எங்கே என்று கேட்டாள். நான் அதை அவளிடம் கொடுத்து விட்டேன். ஆனால் ஜீவா என்ற ஆசிரியர் எழுதிய அதில் வந்த விஷயங்கள்? பாடம் கற்பிக்க வந்த ஆசிரியனை மாணவி காதலிக்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலே அன்பு கொண்டு விட்டதை, அறிந்தோ அறியாமலோ, தந்தை மகளை வரவேற்றான். ஒருவனுக்கு மணம் செய்து கொடுக்கிறான். மணம் நிகழ்ந்த தினம் மன அதிர்ச்சியால் மங்கை மூர்ச்சித்து விழுகிறாள். (சுசீலாவும் அன்று மூர்ச்சித்து விழுந்தாளே?) ஆசிரியன் மனம் குமுறி மணம் நிகழ்ந்த காதலியைத் தனியே சந்தித்து மனம் தளர விடுகிறான். ஆனால் அவள் தன் செம்மை மொழிகள் மூலம் அவனை உறுதிப்படுத்தி, தான் வேறொருவனுக்குச் சொந்தம் என நினைப்பூட்டுகிறாள். அவளுடைய உயர்ந்த பண்பிலே ஒளி பெற்ற காதலன் உறுதி கொண்டு திரும்புகிறான். இவர்கள் சந்திப்பை அறியாமல் கவனித்த கணவன் அவர்களுடைய உயர்ந்த காதலுக்கு வியந்து, மகத்தான தியாகம் செய்கிறான். தான் மணந்து கொண்ட கன்னியைச் சகோதரி போல நடத்த உறுதி கொள்கிறான். காதலர்களை விட அந்தக் கணவனின் தியாகமே என் மனத்தில் வெகுவாகப் பதிந்து விட்டது. சுசீலா என்னுடையவள் அல்ல! அதனாலேயே குறிப்பாக இந்தப் புத்தகத்துக் கணவன் போல நான் நடக்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறாள். அன்று புடவைகள் கொண்டு கொடுத்த மூர்த்தியைப் பற்றி மன்னி ஒருவிதமாகப் பேசினாள். ‘வாசல் வரை கொண்டு விட்டு வந்தாள் சுசீலா. எனக்குப் பிடிக்கவில்லை. உள் வரை வந்து பேசி விட்டுப் போக அவன் என்ன அண்ணனா, தம்பியா?’ என்று அவள் அப்போது கூறிய போது எனக்குக் கோபந்தான் வந்தது. ஆனால் அவன் ஊரிலிருந்து நேற்று வந்தான். சுசீலா அவன் தங்கை இறந்ததற்கு துக்கம் விசாரித்து விட்டு போகிறீர்களா? என்று வாயிற்படியில் வந்து கேட்ட போது விழிகளில் ஏக்கமும் சோகமும் தென்படுவானேன்? மன்னி கூறுவது போல் அவன் கிட்டிய உறவில்லை. என்றாலும் ‘சுசீலா, சுசீலா!’ என்று அவ்வளவு பாசத்துடன் பேசுவானேன்? ஆகா! அந்த முதல் இரவில் அவள் கண்களில் நீர்த்திரை இட்டதன் அர்த்தம்? மூர்த்தி புடவையுடன் முதல் தடவை வந்த அன்று நான் அவனைப் பற்றி விசாரித்த போது அவள் சுரத்தே இல்லாமல் பதிலளித்ததன் காரணம் என்ன? அன்றொரு நாள் ஊரை நினைத்து அவள் குலுங்கக் குலுங்க அழுததன் அர்த்தம் என்ன? எல்லாம் பளிச்சென்று புலனாகிறதே? ஆய்ந்து விசாரியாமல் நான் அவர்களுக்குத் தீங்கு இழைத்து விட்டேன். கதையில் வரும் கணவனாக நான் தியாகம் செய்தே ஆக வேண்டும். ஆனால் எத்தனை அடக்கினாலும் மனம் கட்டுக்கு அடங்காமல் அவளை நோக்கிப் பாய்கிறதே? நினைத்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல இருக்கிறதே? அடுத்த குறிப்புப் புத்தகம்: ஏப்ரல் 18 : நானும் சமனப்படுத்த முடியாமல் தவிக்கும் என் நெஞ்சத் துடிப்பைத் தவிர்க்க, சுசீலாவுடன் என் பழக்கத்தையே குறைத்துக் கொண்டும் பார்க்கிறேன். அவளைக் காணாமல் இருந்தால் அமைதி நிலவுமே என்று இருந்த எண்ணம் முற்றும் தவறு என்னும்படியாக அவள் ஊரில் இருந்த இரண்டு மாதங்களும் நான் பட்ட பாடு! அப்பா! ஆனால் கண்முன் அவள் நடமாடுவது இன்னும் வேதனையை அதிகரிப்பது போல் இருக்கிறது இப்போது. எல்லோரும் பிருந்தாவனம் செல்லும் போது நான் அவள் வராமலிருப்பதை விரும்பினேன். ஆம், என் மனம் நிச்சயமாக நெகிழ்ந்து போயிருக்கும். நாங்கள் இல்லாத சமயம் மூர்த்தி வந்திருக்கிறான். அவளும் அவனும் ஏற்கனவே காதலில் பிணைபட்டவர்கள் என்பதை எனக்கு நன்றாகத் தெரிவிக்கும் வகையில், இரவு நான் ஏதோ காரியமாகக் கீழே வந்த போது சுசீலாவின் பாட்டி, அவள் மூர்த்தியுடன் தனிமையில் வராந்தாவில் நின்று பேசியதற்குக் கடிந்து கொண்டாள். என் மனநிலையை என்னால் விவரிக்கவே இயலவில்லை. ஏப்ரல் 19 : காலையிலே மூர்த்தி வந்தான். படபடப்பாக அவன் பேசியது, எங்கள் மனஸ்தாபத்தைத் தீர்த்து வைக்கும் முறையில் என்னை அவளை அழைத்துப் போகும்படி தூண்டியது, எல்லாம் நான் கொண்டிருந்த உறுதியைப் பலப்படுத்தும் வகையில் அமைந்து விட்டன. நீங்களும் வருகிறீர்களா?” என்று சுசீலா மூர்த்தியைக் களையிழந்தவளாகக் கேட்பானேன்? ஹேமாவையும் அவனையும் சேர்த்து நான் பரிகாசம் செய்த போது அவன் அப்படி வெறித்து நிற்பானேன்? அவன் நடத்தை எனக்கு, மனமுடைந்த அவளை உறுதிப்படுத்த முயலும் உத்தமக் காதலன் அவன் என்றே அறிவிக்கிறது. என்னையும் அவனையும் பிருந்தாவனத்தில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான் அவன். என் அருகில் குனிந்து நின்ற அவளை நான் ஒரே ஒரு முறை ஆவல் தாங்காதவனாகத் திரும்பிப் பார்த்தேன். மனவேதனை பிரதிபலித்த அவள் முகம் என்னைப் பிளந்து விடும் போல் இருந்தது. நான் தனிமையில் சென்று மனத்தை அமைதி செய்து கொள்ளாது போனால், என் இனமறியாத உணர்ச்சிகளுக்கு நிச்சயம் அடிமையாகியிருப்பேன். அவன் அவளிடம் மன வேதனையைக் கிளர்த்திக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. திரும்பி வரும் போது அவன் வலுவிலே காட்டிய உற்சாகம் குன்றிக் களையிழந்தவனாக ஆகிவிட்டான். வரதனுடைய வளவளப்பிலும் நான் அவனைக் கவனியாமல் இருக்க முடியவில்லையே? சுசீலாவுக்குத்தான் இன்னும் எந்த விதத்தில் நான் ஆறுதலளிப்பேன்? என்னுடைய மனத்தை எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்வேன்? ஏப்ரல் 21 : நான் என் உறுதியை நிலைநாட்டிக் கொள்ள அவளிடமிருந்து அதிகப் பேச்சு வார்த்தைகளைக் கூடக் கத்தரித்துக் கொள்ளும் முயற்சிக்கு இந்த வரதன் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறான். அவன் என்ன கண்டான்? சுசீலாவிடம் வர வர அளவுக்கு மீறி மன்னி அதிகாரம் செலுத்துவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவள் தான் எத்தனை பொறுமையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தவள்? உள்ளத்தில் ஒருவனைக் கொண்டு, வேற்று ஒருவனுக்காக, வேற்று வீட்டில், வேற்று மக்களுக்காக ஓடி ஓடி வேலை செய்யும் அவள் பொறுமை இன்னும் என்னைப் பித்தனாக்குகிறது. மன்னி கடிந்து கொண்டவுடன் அவளுக்கு எத்தனையோ விதத்தில் ஆறுதல் கூற நான் துடிதுடித்தேன். ஆனால் அநுதாபம் என்று இளகிவிட்டால், ‘தொடாதே’ என்ற அவளுடைய ஆணையை மீறி இன்னும் நான் அவளுக்குத் தீங்கிழைத்து விட்டால்? இரவு அவள் கண்ணீருக்கு முன் நான் கரைந்து போய் விட்டேன். ‘அறியாமல் நான் தவறு இழைத்து விட்டேன். மன்னித்து விடு’ என்று மனம் விட்டுக் கேட்ட பின் அவள் சற்று ஆறுதலடைந்தவள் போல் எனக்குத் தோன்றியது. ஜூன் 22: அவளைப் பார்த்துக் கொண்டு பாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்வது சிரமமாக இருக்கிறதென்று அப்போது தோன்றுகிறது. ஆனால் கண் முன் காணாத சமயங்களிலோ, கண்டாவது தேறுதல் கொள்ளலாம் போல மனம் துடிக்கிறது. அப்படி நினைத்துத்தான் பித்தனைப் போலக் கோவைக்கு வந்தவன் உதகை புறப்பட்டு வந்தேன். வரதன் வந்ததும் வராததுமாக அவளுடைய சங்கோச மனப்பான்மையைக் குறித்து நான் தெளிய வைக்காததற்காகக் குற்றம் கூறினான். ஒவ்வொரு சிறிய சம்பவமும் எனக்கு, மூர்த்தியும் அவளும் காதலர்கள் என்பதையும் நான் தவறிழைத்தேன் என்பதையும் அறிவுறுத்தும் மாதிரியிலா அமைய வேண்டும்? மூர்த்தியுடன் சங்கோசமின்றிப் பழகும் அவள், இயற்கையாகவே லீலாவைப் போல அந்தச் சுபாவம் படைத்திருந்தால் வரதன் ஏன் இந்தக் குற்றம் சாட்டுகிறான்? மூர்த்தி மேல்நாடு செல்லப் போகிறான் என்று நான் அறிவித்ததும் அவள் முக மலர்ச்சியை முகம் எப்படிக் காட்டியது! அக்டோபர் 3 : பாவம்! மன நோயைத் தவிர்க்க அவள் தான் கற்றிருக்கும் கலையை விருத்தி செய்து கொள்வதில் ஈடுபட்டிருக்கிறாள். விடியற் காலையிலே என் அருகில் அமர்ந்து அவள் தன் இனிய குரலில் கானம் செய்யும் போது நான் ஒவ்வொரு நாள் மனவெழுச்சியை அடக்கிக் கொள்ள இயலாமல் எழுந்து எங்காவது போய்விடலாமா என்று கூட எண்ணி விடுகிறேன். ஏற்கனவே நொந்த அவள் இருதயத்தை மன்னி கோலிடும் பாவனையில் புண்படுத்தினாள். வீட்டிலே விவரிக்க இயலாத சகிப்புத் தன்மையுடன் நடமாடும் அவள் மீது மன்னிக்கு ஏனோ இத்தனை எரிச்சல்? நானும் அவர்களுடைய கோள்களுக்குச் செவி சாய்த்துப் பொறுமை இழந்து விட்டேன். இனி, தனியாகப் போக வேண்டியதுதான். கடைசிக் குறிப்புப் புத்தகம். ஏப்ரல் 30 : தனியாக வந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆயினும் பழக்கத்தில் சாந்தி அடையாமல் இன்னமும் அதிகரித்துக் கொண்டே அல்லவா போகிறது என் கொந்தளிப்பு? மூர்த்தி திரும்பி வரப் போகிறான் என்ற நினைப்பில் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி? அவளும் சந்தோஷமடைய வெளி உலகிலே தன் கலையுதவி கொண்டு கலந்து பார்த்தாள். பத்திரிகைகளின் விமரிசனங்களிலிருந்து புகழுங்கூட அவளுக்குக் கிட்டியிருப்பதை நான் காண்கிறேன். இத்தனையிலும் இயற்கையாகச் சந்தோஷம் காணாத பேதையாக இருந்தவள், மூர்த்தி வருவான் என்று அறிந்ததும் மகிழ்வுடன் அலங்கார வேலைகளில் கூடச் சிரத்தை கொள்ள ஆரம்பித்து விட்டாள். மே 3 : அண்ணாவை விட்டு உத்தியோகத்தினின்றும் விலகி விட்டதைக் கூட சுசீலாவிடம் நான் தெரிவிக்காததைக் குறித்து இன்று லீலா என்னை வெகுவாகக் கடிந்தாள். குடும்பத்திலிருந்து பிரிந்த பின் உத்தியோகப் பிடிப்பினின்றும் சிக்கலறுத்துக் கொண்டால் நலம் என்று பட்டது. வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்ட பின் அதை இழக்காமல் உபயோகித்துக் கொண்டேன். அவளிடம் நெருங்கிப் பேசவே அச்சமுற்ற நான் அசிரத்தையாக இருந்து விட்டதை லீலாவிடம் தெரிவிக்க முடியுமா? இதற்கு மேல் டயரியில் குறிப்பு எதுவுமே எழுதியிருக்கவில்லை. படிக்கப் படிக்க அனலிட்டுக் காய்ச்சப்படும் மெழுகைப் போல என் உள்ளம் கண்ணீராக உருகியது. கடினமான ஓட்டை கொண்ட தேங்காயில் இனிய பருப்பும் நன்னீரும் உண்டு என்றறியாது வீசி எறியும் பேதையைப் போல் அவருடைய உவமை கூற இயலாத உள்ளத்தைக் கல் நெஞ்சம் என்று இகழ்ந்தேனே? நான் என் வெறுப்பை அவரிடம் எத்தனையோ முறை காட்டிக் கொண்டேன். எரிந்து விழுந்தேன். தாமாகவே நேர்ந்தவைகளை அவராக வேண்டுமென்று செய்தார் என்று அவரை புண்படுத்தும் முறையிலே அலட்சியம் செய்தேன். அப்பா இறந்து போனபோது வந்திருந்தாரே, அப்போதுதானே நான் அவரை வெகுண்டு, கடிந்து உதாசீனம் செய்தது? அவருடைய மாறுதல் எனக்குக் கற்பித்த பொய்யைப் போன்று, என்னுடைய கண நேரக் குழப்பமும், முட்டாள் நம்பிக்கையின் மூலம் வளர்ந்த ஆத்திரமும் அவர் மனத்திலே எத்தகைய பிரமையை நெய்ய இழையிட்டு விட்டன. புத்தகம்? எனக்கு அது ஏது, எது என்றே நினைவுக்கு வரவில்லை! லீலா எப்போதாவது, “இது நன்றாக இருக்கிறது சுசீ, உனக்குப் படிக்க என்று கொண்டு வந்தேன்’ என்பாள். படிக்க எங்கே பொழுது இருந்தது? இரண்டு நாட்கள் வைத்திருந்து விட்டோ, பாதி படித்து விட்டோ கொடுத்து விடுவேன். அதுவும் அவர் பிரஸ்தாபித்து இருக்கும் புத்தகம் நான் எப்போதோ படித்ததாகக் கூட நினைவில்லை! பெரிய பெரிய முத்தர்களாலும் சித்தர்களாலும் கூட மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர் காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையிலே எத்தனை உறுதியைக் கைக் கொண்டும் சலனமற்றிருப்பது போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்? வரதனுடைய அலங்காரச் சொல்லிலே தளர்ச்சி கண்ட நான் அவருடைய மாசற்ற காதல் இருதயத்துக்கு உகந்தவள் தானா? அவர் காலடியில் வீழ்ந்து அவருடைய பாதங்களைக் கண்ணீரால் கழுவினால் கூட நான் மனத்தில் அவரைத் தவறாக நினைத்து இகழ்ந்ததற்குப் பிராயச் சித்தம் ஆகுமா? செருப்பு ஒலி கேட்டது. நான் எப்படி அவர் முகத்தில் விழிப்பேன்? குறிப்புப் புத்தகமும் கையுமாகச் சிலையாக அயர்ந்திருந்த நான் நிமிர்ந்து பார்க்கவே கூசிக் குறுகினேன். “சுசீ!” என்ற அந்த அன்புக் குரல். பழைய அன்புக் குரல், என் செவிகளில் அமுதத்தை வார்த்தது. அவர் கரம் என் முகத்தை நிமிர்த்தியது. “என்னை மன்...னி...ப்...பீர்களா...?” வார்த்தைகள் தொண்டையில் நிரடின. என் வசமிழந்த நான் அவரது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குழந்தை போல் தேம்பினேன். “சுசீ, தவறு என்னுடையது. நடந்ததைக் கனவென்று மறந்து விடுவோம். அழாதே. பெண்ணுள்ளத்தை நான் புரிந்து கொள்ள ஏதேதோ ரீதியில் சென்று பலத்த துணைகள் கொண்டு ஆராய்ந்ததன் பலன் இது. பட்டுப் புழுவின் கூட்டைப் பார்த்திருக்கிறாயா சுசீ? பட்டு நூல் அதிலே மிக நுண்ணியதாகச் சுற்றப்பட்டிருக்கும். நுனியை மட்டும் ஜாக்கிரதையாக எடுத்து கவனமாகப் பிரித்தால் சுலபமாகப் பிரிந்து விடும். பிரிப்பது மிகவும் கஷ்டம் என்று பார்வையிலேயே தளர்ந்து அளவுக்கு மீறிய சக்தியைப் பிரயோகித்தால் நூல் சிக்குண்டு அறுந்தும் போகும். இந்த வழியிலே நான் சென்று உன்னை எவ்வளவு கொடிய வேதனைக் குள்ளாக்கி விட்டேன் என்பது இப்போதுதான் புலப்படுகிறது. வரதனின் முறை தவறிய நடத்தைக்கும் நானே தான் காரணம். இனி நானும் உன் கலை வளர்ச்சியில் ஒத்துழைக்கிறேனா இல்லையா, பாரேன்?” நான் சட்டென நிமிர்ந்தேன். “நான் இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இயலாது என்று தெரிவித்து விடப் போகிறேன். மூர்த்தியைப் போலத் தூய மனம் படைத்தவர்களாகவே வெளி உலகிலே தலை நீட்டும் பெண்களை எல்லாரும் மதித்து விடுவதில்லையே? இந்த அபாயம் தெரிந்த பின்னும் நான் உணராமல் நடப்பது ஆபத்து!” என்று கூறிய நான் அவருடன் மூர்த்தி வரவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். “மூர்த்தி எங்கே? அப்படியே போய்விட்டானா என்ன?” “வழியில் யாரோ நண்பன் அகப்பட்டான். இருவருமாகப் பேச்சில் இறங்கினார்கள். நான் வந்து விட்டேன். நீ அப்படிப் பின் வாங்கி விடக் கூடாது சுசீலா! கலை வளர்ச்சி, ஆண், பெண் இருவரும் ஒத்துழைக்க வேண்டிய துறை. வரதன் இனியும் அம்மாதிரி நடக்க நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? நீ தான் அவனுக்கு வேண்டியபடி கடும் சொற்களால் வெருட்டி அடித்தாயே? இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்துவிட்டு, விட்டு விடுவது கோழைத்தனம்.” விலை மதிப்பற்ற முத்துச் சிப்பியைக் கிளிஞ்சல் என எண்ணி அவமதித்தேனே? நான் எத்தனை தரம் நொந்து கொண்டாலும் சமாதானமாகுமா? “லீலாவுக்குத் தந்தி கொடுக்கலாம் என்று எண்ணித்தான் அவனையும் அழைத்துப் போனேன். பேசிக் கொண்டே சென்றதில் விலாசம் கொண்டு போக மறந்தது தெரியவில்லை. உனக்குத்தானே கடிதம் எழுதியிருந்தாள்? எங்கே அது? மூர்த்தி ஆயிரத்தில் ஒருவன், சுசீ! வரதனை நான் எவ்வளவோ உயர்வாக மதித்திருந்தேன். ஆனால் கிட்ட நெருங்கிப் பார்த்தால் தான் வைரத்தின் ஜாஜ்வல்யமும் போலிக் கல்லின் தன்மையும் தெரியவரும்.” அவர் கூறிக் கொண்டே இருக்கையிலே, “அதற்குள் வந்துவிட்டாரா என்ன? தெருவிலே என்னை நிற்க வைத்து விட்டுக் குடுகுடுவென்று வந்து விட்டார் சுசீலா! நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்து விட்டான். “நீ பேசிக் கொண்டிருக்கையிலே நான் லீலாவின் விலாசத்தைக் கேட்டு வாங்கி வரலாம் என்று தான் ஓடி வந்தேன்!” என்று அவனைப் பார்த்து முறுவலித்தார் என் கணவர். “சுசீலா, பெண்மையை அவர் போற்றவில்லை, காதலுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று நீ குற்றம் சாட்டினாய். அவர் எல்லாவற்றிலும் ஒரு படி மிஞ்சி விட்டார்! தபாலாபிஸுக்கு என்று எதற்காக அழைக்கிறாரோ என்று போனவனை எங்கெல்லாமோ சுற்ற வைத்து அவர் உன்னைப் புரிந்து கொண்ட லட்சணத்தைச் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது. லீலாவின் விலாசம் இதோ என்னிடம் இருக்கிறது! என்னிடம் கேட்காமல் அதற்காக சுசீயிடம் ஓடி வந்தீர்களாக்கும்?” என்று சட்டைப் பையிலிருந்து நான் கொடுத்த அவள் கடிதத்தை எடுத்துக் காட்டிய மூர்த்தி, “நீங்கள் ஞாயிற்றுக்கிழமையும் தானுமாக இன்று தந்தி கொடுக்கவா கூப்பிட்டீர்கள்? கோபித்துக் கொண்டு காசி யாத்திரை சென்றிருக்கும் பெண்ணைப் புது நாளைய மாப்பிள்ளையாக லட்சணமாக நானே அடுத்த வாரம் போய் அழைத்து வரப் போகிறேன்!” நாங்கள் இருவரும் அவனுடன் சேர்ந்து மனம் விட்டு நகைத்தது, அறையிலே கலகலவென ஒலித்தது. பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|