உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
![]() |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 5 லட்சுமிக்கு உடல் களைப்பு அதிகமானாலும் உறக்கம் வருவதில்லை. இன்று உழைப்பின் களைப்போடு மன வலியும் கவலையும் சுமையாக அழுத்துகின்றன. உறக்கம் கொள்ளவில்லை. கிழவர் வாயிலில் கறட்டுக் கறட்டென்ற ஒலி எழும்ப மூச்சு விட்டுக்கொண்டு திண்ணையில் தூங்குகிறார். மாமியார்க்காரி, குந்தி இருந்தபடியே தூங்குவாள். காலை நீட்டிப்படுப்பதே அபூர்வம். அம்சு... கபடம் எதுவும் பற்றியிராத உழைப்பாளிப் பெண். பசி தாங்க மாட்டாள். ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுச் சோறு உள்ளே செல்லுமுன் உறக்கம் வந்துவிடும்... இந்தக் காந்திமதி... பையனைப் போல் இவளும் குடும்பத்தை விட்டுப் போய் விடுவாளோ என்ற அச்சம் மேலிடுகிறது. இவளை எப்படியேனும் இந்தத் தை பிறந்ததும் கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்ற தீவிரத்தில் தான் சீட்டு, நாட்டுப் போட்டு ஏழெட்டு எவர்சில்வர் உருப்படி வாங்கி வைத்திருக்கிறாள். நாயக்கர் வீட்டில் இருக்கின்றன. தலைவர் வீட்டில் முதல் கல்யாணம் என்று மகனின் திருமணம் நடக்கவில்லை. எத்தனை திருமணங்களுக்கோ சென்று தலைமைப் பதவியின் கௌரவம் பெற்றுக் கொண்டு மொய் எழுதி விட்டு வந்திருக்கிறார்கள். திருமணம் என்றால் ஐந்துக்குக் குறையாமல் செலவாகும். மேல் சாதிக்காரரெல்லாம் வருவார்கள். நல்லபடியாக விருந்து வைக்கவேண்டும். மாப்பிள்ளைக்குக் கடியாரம், மோதிரம், சட்டைத்துணி எடுக்க வேண்டும். குப்பன் சாம்பார் மகள் கல்யாணத்துக்கு பிரியாணி விருந்து வைத்து, இருபது ஏனம் எடுத்துக் காட்சிவைத்தான். அதைவிடக் குறைவாக இவர்கள் செய்யலாமா? இத்தனை ஆண்டில் உழைப்பின் பயனாக எதுவும் சேரவில்லை என்றும் சொல்ல முடியாது. என்றாலும், இன்னமும் எதிர்பார்ப்பிலும், தடங்கல்களிலும், அச்சுறுத்தல்களிலும் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் என்ற கெளரவத் துண்டைக் கழற்றாமல் பண வசூல் செய்பவராக மட்டுமே எத்தனையோ பேர் இருக்கிறார்களாம். ஆனால் இன்னமும் புருசன் வயலில் இறங்குபவன்தான். போன வாரம் உழவோட்டும் போதுதான் காலில் முள் குத்தியிருக்கிறது. அவளும் சேற்றில் இறங்குபவள் தான். உச்ச வரம்புக்கு மேல் என்று ஐயர் நிலம் ஐந்து ஏகரா சாகுபடிச் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வருசங்களே ஆகின்றன. அதுவரையிலும் வெளியே நடவு, களை பறித்தல் எல்லாவற்றுக்கும் அவளும் மாமியாரும் போய்க் கொண்டிருந்திருக்கிறார்கள். கிழவரும் கூட உழைக்காமல் சோறு தின்றவரில்லை. அண்டைக் கட்டுவதும், வெட்டுவதும், சுமப்பதும் விட்டுச் சில நாட்களே ஆகின்றன. பையன் படிக்கிறான், பெண் படிக்கிறாள் என்று அந்தக் குடிக்கே எவ்வளவு பெருமையாக இருந்தது? காந்தி எட்டாவது வரையிலும் ரங்கநாதபுரம் பள்ளிக்குச் சென்று படித்தாள். இப்போது கிளியந்துறையிலேயே பள்ளிக்கூடம் வந்திருக்கிறது, அப்போது இல்லை. பிறகு மூன்றாண்டுகள் புதுக்குடி மிஷன் பள்ளியில் விடுதியில் இருந்து படித்திருக்கிறாள். இங்கிலீசில் கடிதாசி வந்தால் படித்துச் சொல்லும் அளவுக்குச் சூட்டிகையான பெண் என்று மிகப் பெருமையாகத்தானிருக்கிறது. ஆனால் சடங்கு சுற்றி எட்டு வருசமாகிறது. விடலைப் பிள்ளைகள், கண்ட கண்ட பாட்டுக்கள், சினிமாக்கள் இதெல்லாம் சுற்றிப் பார்க்கும் போது, அச்சம் நெருப்புப் பொறியாய் உறுத்துகிறது. வாசலில் நாய் குரைக்கிறது. அடிச் சத்தங்கள் கேட்கின்றன. லட்சுமி விளக்கைப் பெரிதாக்கிக் கொண்டு வாசலுக்கு வருகிறாள். காளி, சிவத்தையன், மாமுண்டி... “எல்லாம் போங்க, காலம பாத்துக்கலாம்.” உள்ளே வந்து உட்காருகிறான்... “குளுருது அந்தப் போர்வய எடுத்திட்டு வா...” வெளியே போக வர, சற்றுப் புதிதாகப் பெட்டியில் வைத்திருக்கும் போர்வையை எடுத்து வந்து போர்த்துகிறாள் லட்சுமி. “காச்சல் அடிக்குதா என்ன?” கன்னத்தில், நெற்றியில் கை வைக்கிறாள். நல்ல குடு இருக்கிறது. “இவனுக அடிச்சிப் புரண்டா போலீசுகாரனுக்கு வாக்கரிசி, நம்ம பொழப்பு எப்படியாயிட்டது பாரு?” “சோறு சாப்பிடுறீங்களா? அடுப்புல சூடாயிருக்கு. குழம்பும் நல்லாயிருக்கு?” “சோறு குழம்பு எதும் நாக்குக்கு ருசிக்கிறாப்பல இல்ல. சூடா கொஞ்சம் காபி வச்சுத் தந்தா நல்லாயிருக்கும். இன்னி முச்சூடும் வீணலச்சல்.” காபித் தூளில்லை, தேயிலைத் தூள்தானிருக்கிறது. சீனியும் கிடையாது. துருப்பிடித்த தகரம் ஒன்றில் நாலைந்து வெல்லச்சுகள் இருக்கின்றன. அம்சுதான் வயிற்றுப்பட்டி, வெல்லச்சு வாங்கி வைத்தால் அவள் தான் தின்றுவிடுவாள். நாகு வெல்லம் வைத்தால்தான் பிடிசோறு தின்பான். இப்போதெல்லாம் அவனை அப்படிக் கவனித்துச் சோறே போடுவதில்லை. நினைக்கும்போதே வயிற்றில் சொரேலென்று சங்கடமேற்படுகிறது. பகலில் பிடிவாதமாக அவள் தான் நான்கு பிடி ஊட்டுவாள். கிழவி சோறு போட்டிருப்பாள். ஆனால், சாப்பிட்டிருக்க மாட்டான். அதுதான் சோர்ந்து உறங்கிக் கிடக்கிறான். “சக்கர போட்டியா?” “ஏதுங்க சக்கர! வெல்லந்தா... ஒரச்சுத் தட்டிப் போட்டே வாய்க்கு நல்லாயிருக்கா?” “என்னாத்துக்குப் போட்ட? எனக்கென்னமோ ரத்தத்துல சக்கர இருக்குமோன்னு பயமாயிருக்கு...” “ரத்தத்தில் சக்கரயா? அதெல்லா ஒண்ணுமில்லிங்க. சக்கரயா நெதம் தின்னிட்டிருக்கிறீங்க, ரத்தத்தில அது வந்து குந்தியிருக்க?” “இல்ல லட்சுமி, எனக்குத் தெரிஞ்சி, நம்ம பெரிய பண்ண நாயக்கரு மகன், ரத்தத்துல சக்கரன்னு மட்ராசிக்குத் தூக்கிட்டுப் போயி வருசமா வைத்தியம் பண்ணாங்க. அவனுக்கு இப்பிடிக் காலுலதா வந்து, பிறகு செத்தே போனான்.” “அட போங்க, அதயும் இதயும் ஏன் நினச்சிட்டு! அலட்டிக்காம படுத்துக்குங்க, நமக்கு அதெல்லா ஏன் வருது?” படுக்கச் சொல்லிவிட்டுப் போர்த்துகிறாள். கொசுக்கள் பாடுகின்றன. முன்பெல்லாம் சீமை எண்ணெயை எடுத்துப் பூசிக்கொள்வாள். இப்போது அதற்கும் பஞ்சம், சாம்பலையேனும் பூசிக்கொள்ளலாம் என்றால் அடுப்புச் சாம்பலில் கூடக் கைவைக்க முடியாது. திருநீற்றை எடுத்துத் தடவுகிறாள். நள்ளிரவு கடந்து வெகுநேரம் ஆகிவிட்டது. பின் தாழ்வாரத்து அறையில் விளக்கெடுத்துக் கொண்டு போய்ப் பார்க்கிறாள். அமாவாசை நெருங்கும் நாட்களில் கொஞ்சம் ஒடிச்சாடுவான். மற்றபடி எந்த உபயோகமும் இல்லாமல் இப்படி ஒரு கடன் இருபத்தைந்து வயசு கடந்த பையன். இவன் எதற்குப் பிறப்பு எடுத்திருக்கிறான்! பல சமயங்களிலும் அவள் புருசன் இந்த அறியாப் பயலை அடிக்கும் போதும், கடுகடுக்கும் போதும் இவளுக்கு அவனை ஆற்றில் கொண்டு சென்று அமிழ்த்தி விடலாமா என்று தோன்றும். அந்த உள்மனதின் கரவை உணர்ந்து கொண்டிருப்பானோ என்னவோ? ஆற்றுப் பக்கமே வர மாட்டான். குளம், ஆறு என்றால் ஒரே பயம். நாய்க்குட்டி போல் தண்ணிரைக் கண்டாலே பதுங்குவான். இவனை ஆற்றிலோ குளத்திலோ எட்டு நாட்களுக்கொருமுறை முழுக்காட்டுவ தென்றால் குடியிருப்பே கிடுகிடுக்கக் கூச்சல் போடுவான். இரண்டு மூன்று வயசு வரையிலும் ஒன்றுமே தெரியவில்லை. இவள் வயலில் வேலை செய்யப் போகும் போது புளிய மரத்தடியிலோ, புங்க மரத்தடியிலோ மற்ற பிள்ளைகளோடு விட்டுப் போவாள். கோபால் பிறந்து ஒன்னரை வயசில் பேசத் தொடங்கி விட்டான். இது எச்சிலை ஒழுக விட்டுக் கொண்டு கிடந்தது. இது எத்தனையோ நாட்களில் பூச்சியோ எதோ தீண்டிப் போயிருக்கக் கூடாதா என்று கூட உள்ளூற வேண்டியிருக்கிறாள். ஆனால். பசிக்கிறது என்று சொல்லத் தெரியாத, நோகிறது என்று காட்டத் தெரியாத இது நீண்ட ஆயுளோடு இந்த விட்டில் பற்றிக் கொண்டிருக்கிறது. நினைப்பிலேயே கண்கள் கசிந்து எரிச்சலாகக் கனிகின்றன. தாழ்வாரத்திலேயே வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் படுத்துக் கிடந்து விடியற்காலையின் குளிர்ச்சியிலேயே சற்றே கண்ணயருகிறாள். அம்சு சாணம் தெளிக்கும் ஓசையில்தான் விழிப்பு வருகிறது. கோழிக்கூண்டைத் திறந்தி விட்டுவிட்டுக் கிழவி, “ஏண்டி இங்கு படுத்திட்ட? புள்ளக்கிக் காவலா?” என்று கேட்டுவிட்டுப் போகிறாள். கிழவி எப்போதும் பேசமாட்டாள், எப்போதேனும் அறியாததுபோல் ஒரு சொல்லை உதிர்ப்பாள். அது திராவகச் சொட்டாக இருக்கும். “லட்சுமி. சுடுதண்ணி வச்சிக் குடேன்? வாயெல்லாம் கசக்குது...” “காச்சலடிச்சிருக்குது. இன்னிக்கு எங்கும் போகாம படுத்திருங்க... காலுக்கு மஞ்சள் அரச்சிப் பத்துப் போடுறன்...” எழுந்து இயற்கைக் கடன் கழிக்கச் செல்வது கூடச் சிரமமாக இருக்கிறது. பின் தாழ்வரையில் நாகு குந்திக் கொண்டிருக்கிறான். சம்முகம் படியில் அமர்ந்து அம்சு கொண்டு வந்து கொடுத்த சுடுநீரால் முகம் கழுவுகிறார். ஆற்றுக்கரை மேட்டிலிருந்து பையன் சைக்கிளில் இறங்சி வருகிறான். அவன் மட்டுமல்ல, தொப்பி முடியும், பெரிய மூக்குக் கண்ணாடியும் பாம்புத் தோல் மினுமினுப்பாகச் சட்டையுமாக... ஆறுமுகத்தின் பயல், முதல் நாள் விசுவநாதன் வீட்டுக்கு வந்தானே, ஸ்டாலினோ, புல்கானினோ அந்தப் பயல்தான். சைக்கிளைப் பின்புறமே நிறுத்துகின்றனர். படலையைத் தள்ளிக்கொண்டு பையன் நண்பனை அறிமுகப் படுத்துவது போல் நிற்கிறான். “வணக்கம்...” என்று நண்பன் புன்னகை செய்து கை குவிக்கிறான். சம்முகம் நிமிர்ந்து பார்த்துவிட்டு வாய் நீரை உமிழ்கிறார் வேகமாக. “கொல்லையில ஏண்டா வந்து நிக்கிறிங்க?” எரிச்சலில் மேலும் மேலும் நீரை ஊற்றிக் கொப்புளிக்கிறார். “உள்ள வாங்க, சாலி...” சுற்றி வந்து திண்ணையில் நண்பனை உட்காரச் சொல்கிறான் கோபு. காந்தி திடுக்கிட்டாற் போல் எழுந்து கதவண்டை எட்டிப் பார்த்துவிட்டு உடனே உள்ளே மறைகிறாள். எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான் பாட்டன். “யார்ரால அது?” “...உங்க சிநேகிதர் மகன்தா தாத்தா, வெட்டுகுடி ஆறுமுகம்” “ஆருமவன்?... ஆருமுகமா?... அவந் துரோகிப் பயல்ல? உண்ட வூட்டுக்குத் துரோகம் பண்ண பன்னிப்பய...” கிழவன் இந்த வரிசையை உதிர்த்த கையோடு சிரிக்கிறான். கசப்பின் இறுதியில் அசட்டுத் தித்திப்பும் அருவருப்பாகிறது. “டோன்ட் மைன்ட் பிரதர். எங்க தாத்தா எப்பவும் யாரையும் துரோகிப்பயன்னுதா சொல்வாரு. அப்பதா அவருக்கு திங்கிற சோறு செமிக்கும்.” அவன் உள்ளே செல்கையில் காந்தி முகம் கழுவி புருவங்களுக்கிடையில் கவனமாகப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறாள். லட்சுமி கிழவருக்கு நீராகாரம் கலக்குகிறாள். “யம்மா, கொஞ்சம் காபி வச்சிக் கொண்டா!” “காபி...! ஏண்டா, இதென்ன கவுனர் வீடுன்னு நினைப்பா? ஐயா கெடந்து அல்லாடிட்டிருக்காரு. சைக்கிள் வச்சிருக்கேல்ல? கடைப்பக்கம் போயி ரெண்டு பன்னு வாங்கிட்டுவா. ராத்திரியே அவுரு வவுத்துக்கொண்ணும் திங்கல...” “என்னம்மா நீ, நேரம் காலம் தெரியாம! வந்திருக்கிறவங்க யாருன்னு தெரியுமில்ல! நம்மூட்டுக்கு வரக்கூடிய ஆளில்ல; கொஞ்சம் கவுரதியா நடக்கவானாமா? ஏ, காந்தி, நீதா கொஞ்சம் காபி வச்சுக்கொண்டா!” “பாலில்லாமயா? அம்சு கொடியான் வீட்டில போயி கொஞ்சம் பாலு வாங்கிட்டு வா!” காந்தி கவனித்துக்கொள்வாள் என்ற திருப்தியுடன் கோபு வாசலில் வந்து உட்கார்ந்து கொள்கிறான். “இந்தத் திண்ணய எக்ஸ்டென்ட் பண்ணி சிமின்ட் போடணும்னு. எங்க தாத்தாதா முட்டுக்கட்டை. இவருக்கு அந்தக் காலத்துல எப்பிடி இருந்தாங்களோ அப்படியே இருக்கணும். இதப்பாருங்க இப்பவும் நீராரம் தான் குடிப்பாரு.” “காபி வச்சிட்டா ஒரே ரகள... நேத்து காபிதானிருந்திச்சி. சண்டபோட்டு ஆரு வீட்டேந்தேனும் வாங்கிட்டு வரச்சொல்லி அடம்புடுச்சாரு. எப்படி இந்த மனுசங்கள வச்சிட்டு முன்னுக்கு வரது?” “ஓல்ட் பீப்பிளே இப்படித்தான். நீ இதுக்காக பாதர் பண்ணிக்காத பிரதர்.” காந்தி அப்போது நிலைப்படியில் வந்து நிற்கிறாள். “வணக்கம்...” “இதாம் பிரதர் ஸிஸ்டர், நா சொல்லியிருந்தேனே?” “ஓ, இவங்கள நான் பார்த்தேனே?... உக்காருங்க..” என்று சாலி மரியாதையாக அவளை உபசரிக்கிறான். “நீங்க ஒருத்தர் இங்க படிச்சி முன்னுக்கு வர ஆர்வமாயிருக்கிறது ரொம்பப் பாராட்டத்தக்கது. வாய்ப்பைப் பயன்படுத்திட்டு முன்னேறத் துடிக்கிறவங்க உங்களைப் போல ஒருசில பேருதான்.” “ரொம்ப தாங்க்ஸ், உங்க பாராட்டுக்கு. ஆனா... சொல்லவே கஷ்டமாயிருக்கு. இப்பகூட, டெக்னிகல் கோர்ஸ் படிக்கலான்னு இன்டர்வியூ போனேன். ரெண்டாயிரம் டொனேஷன் கேக்கிறாங்க...” “ஆமா, அவங்களுக்கும் புது இன்ஸ்டிட்யூஷன்; எக்ஸ்பான்ட் பண்ணணுமில்ல? டொனேஷன் வாங்கியாக வேண்டியிருக்கு. ஆனா, இப்ப அதெல்லாம் கஷ்டமில்ல... பணம் வங்கிலகூடக் கிடைக்கும். என் ஃபிரன்ட் ஒருத்தனுக்கு ஃபாரின் போகவே நா பத்தாயிரம் ஏற்பாடு செஞ்சி குடுத்தேன்.” சட்டைக்காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பாட்டனையும், பாட்டியையும், பிறகு தெருவில் நடவுக்குச் செல்லும் பெண்களையும் பார்த்துக் கொள்கிறான் சாலி. காந்திக்கு முகமெல்லாம் ஆவலாகப் பளபளக்கிறது. “பாங்க்ல இதுக்கு லோன் கிடைக்குமாங்க?” “உங்களுக்குப் பணம் கிடைக்கும். ஆனா எனக்கு. ஒரு சின்ன யோசன. உங்களப்போல லேடீஸ்ங்க, பி.ஏ., எம்.ஏ.,ன்னு படிச்சி ஸ்கூல் காலேஜில வேலை பார்க்கலாம். இல்லாட்டி எதானும் ஆபீசிலே பூந்திட்டா ரிஸர்வேஷன் இருக்கு, மளமளன்னு முன்னுக்கு வரலாம். இந்த டெக்னிக்கெல்லாம் உங்களப்போல இருக்கிற மென்மையான பொண்ணுகளுக்குச் சரிவருமா? பிற்கால வாழ்க்கைக்கு ஒத்துவரணும் பாருங்க?” “அப்ப. பி.ஏ., பி.எஸ்.சி., சேர்றதுதான் நல்லதுங்களா?” “சந்தேகமில்லாம இல்லாட்டி மெடிஸின், நர்சிங் கோர்ஸ் படிக்கலாம். அதுதான் நமக்கு வேணும்.” “ஐயோ இதுக்கே ரொம்ப சிரமமாயிருக்கு. அதெல்லாம் கனவுகூடக் காணுறதுக்கில்ல.” “அட, நீங்க என்ன அவநம்பிக்கப்படுறீங்க?... இப்பிடித்தா, நம்ம பண்ணைக்காரு ஒருத்தர், மகனப் படிக்கவச்சி எஸ்எஸ்எல்சி முடிச்சிட்டான். அப்பா அப்ப அவனப் பஞ்சாயத்து ஆபீசில நுழைச்சி விட்டாரு மளமளன்னு எதோ யுனிவர்சிடில பியுசி, பிஏ எல்லாம் படிச்சி மட்றாஸ் செகரிடேரியட்டுக்குப் போயிட்டான். போன வருஷம் டிபுடி கலெக்டர் செலக்ஷனுக்கு வந்திச்சி. அப்பாட்ட வந்து அல்லாம் பணம் செலவாகும்னு சொல்றாங்களேன்னு வருத்தமா நின்னான். ஒரு பைசா செலவில்லை. இப்ப எங்கியோ வடாற்காட்டில் வேலையாயிருக் கான்னா பார்த்துக்குங்க...” “ஏன் கிடைக்காது? நீங்கதா மாத்துக்கட்சி, அரசியல் விரோதம்னெல்லாம் பாக்குறீங்க. கட்சியெல்லாம் யாருக்கு? நம்ம சொந்த வாழ்க்கைன்னு வரப்ப கட்சி பாக்கிறதப்போல மடத்தனம் கிடையாது. அது பாலிசி வேற சொந்த வாழ்க்கை வேற...” கால்களை ஆட்டிக்கொண்டு ஆழ்ந்த பார்வையால் அவளை ஊடுருவுகிறான் சாலி. “கட்சி அது இதெல்லாம் எனக்கு ஒரு சுக்கும் கிடையாதுங்க. சொல்லப்போனா இந்த வீட்டில நானும் விவசாயத் தொழிலாளி இல்ல, எங்கண்ணனும் இல்ல. எனக்கு எங்கேனும் வேலை கிடைக்கும்னா, நான் இப்பவே அதுக்கு என்ன செய்யனுமோ செய்யத் தயார். மூணு வருசமா ஸ்கூல் முடிச்சிட்டுக் கஷ்டப்படுறேன். மேல படிக்கவும் இத்தன நாளா பொருளாதார நிலைமை இடம்கொடுக்கல. எங்கப்பாரும் எங்கும் போயிக் கேக்க மாட்டாங்க...” “அடாடா... இந்த கோபு ஒரு வார்த்த முன்னமே சொல்லிருந்தா கூட அப்பாட்ட சொல்லி நான் எதானும் ஏற்பாடு செஞ்சிருப்பேன். நேத்து, உங்களப் பாத்த பிறகு, இவனத் தற்செயலா ராத்திரி பாத்ததுமே விசாரிச்சேன். அதா இப்பிடியே வந்தேன். வேணுங்கறவங்க எதுக்குக் கஷ்டப்படணும்?” முன்முடி இரண்டு நெற்றியில் விழுந்து அவனிடம் சரசம் பேசுகிறது. மோதிரம் போட்ட விரல், மினுமினுவென்ற பட்டைக்காலர் சட்டை அவன் மரியாதையான பேச்சு... காந்தியின் மனம் சிறகடித்துப் பறக்கிறது. “எதுக்கும் நீங்க அப்பாவ வந்து ஒரு நடை பாத்துடுங்க. அப்பா நிச்சயம் செய்வாரு. இப்ப கூட அப்பா சொல்வாரு யூ.ஜி. காலத்துல சம்முகம் தோசைப் பொட்டலத்தக் குச்சில துக்கிட்டு ஓடியாருவா... மேச்சாதிக்குக் குடுக்கிற சாப்பாட்டத் தொட்டாப் பாவம்னு அவருக்கு வருத்தம். அப்படி ஒரு காலத்துல ஒதவினவங்களுக்கு ஒத்தாச பண்ணணும்னா கண்டிப்பா மறுக்கமாட்டாரு...” “காந்தி...!” கக்கல் கரைசலுடன் பீரிட்டடிக்கும் சினக்குரல் உள்ளிருந்து வந்து தாக்குகிறது. அவள் திடுக்கிட்டாற் போல் திரும்பி உள்ளே பார்க்கிறாள். “நான் உயிரோடு இல்லன்னு நினைச்சிட்டியாடீ?...” “என்னப்பா சொல்றீங்க...” “சொல்றேன். சுரக்காக்கி உப்பில்லன்னு. நான் செத்துட்டனா? இல்ல, நான் செத்துட்டனான்னு கேக்குறேன்?” இந்தச் சாட்டை வீறலை எதிர்பார்த்திருந்தாலும் அவள் விக்கித்துப் போகிறாள். கோபு எழுந்து உள்ளே சென்று மெதுவான குரலில் கண்டனம் செய்கிறான். “இது உங்களுக்கே நல்லாருக்குதாப்பா? வாசல்ல அவன வச்சிட்டு ஏம்ப்பா மரியாதியில்லாம கத்தறிங்க?” “என்னடால என்ன மெரட்டுற? இது ஏ வூடு. நா கத்துவேன், கூப்பிடுவேன். மரியாத இல்லன்னா போச்சொல்லுடா! என்னமோ பாலிசியாம், மயிராம்; வர்றானுவ சொந்தத்துக்கு ஒரு கட்சி. மேலுக்கு ஒரு பேச்சி. ஏண்டா, வீட்டக் கூறுபோட்டுப் போகவா இப்ப வந்த?” “ஏம்ப்பா வீணா ஆத்திரப்படுறீங்க?” “நீ என்னடா மயிரா எனக்குப் புத்தி சொல்ல வந்திட்ட? பல நூறு பேரு உசிரக் குடுத்துக் கட்டி வளர்த்த கோட்டடா இது! இதுல குச்சி கொளுத்தி திரி சொருவி வெளையாடவாடா வந்திருக்கிய? போங்கடா இங்கேந்து!” சம்முகத்தின் அடித்தொண்டையின் உக்கிரங்களாகச் சொற்கள் விழுகின்றன. அவன் முகம் கனலுகிறது. குரல் கேட்டுப் பானை கழுவும் லட்சுமி ஓடிவருகிறாள். “டே கோபு, அப்பா கோவத்தக் காலங்காத்தால ஏன் கிளறுறிய? அவருக்கு எத்தினி தொல்ல? வூட்டுக்கு மூத்த பய்யன் புரிஞ்சிக்காம நடக்குற?” “சேச்சே! இந்த வூட்டில நல்லது எதுவொண்ணும் சொல்லவும் முடியாது; செய்யவும் முடியாது. நீங்களா முன்னுக்கு வரவும் மாட்டிய, பிறத்தியார் சொன்னாலும் கேக்க மாட்டிய! நீசத்தண்ணியைக் குடிச்சிட்டு அழுக்கில குந்திக் கிடப்பிங்க! இந்த நாட்டுக்கு உங்களால ஒரு விமோசனமும் இல்ல!” என்று தீர்த்துவிட்டு வெளியே வருகிறான். “வந்த விருந்தாளிய விரட்டி அடிக்கிறீங்க. பண்பாடு தெரியாதவங்க, துத்தேறி!” “வாங்க பிரதர் போகலாம்!” “காபி கூடச் சாப்பிடாம போறீங்க...” வாசல்படி இறங்கி மெதுவான குரலில் காந்தி மன்னிப்புக் கேட்கும் பார்வையை இறக்குகிறாள். “பரவாயில்ல. நா இதெல்லாம் மனசில வச்சிக்க மாட்டேன். சந்தர்ப்பம் இப்ப சரியில்ல. பின்ன பார்ப்பம். வரட்டுமா?” அந்தப் பார்வையும் குரலும் நெஞ்சின் உள்ளே வந்து மென்மையாகத் தொடுகின்றன. சைக்கிளுடன் அவர்கள் நடக்கையில் அவளும் வீடு சுற்றி மேட்டில் ஏறும்வரை சென்று வழியனுப்பி விட்டுப் பின்புறமாகப் படலைப் பக்கம் நின்று பார்க்கிறாள். |