உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து இருபது பார்வதி எதிரில் அசடு வழிய நின்று கொண்டிருந்த ராஜா, ‘தான் கூறிய பொய்களையெல்லாம் அத்தை புரிந்து கொண்டு விட்டாளே! இனிமேல் ஒருவேளை என்னையும், பாரதியையும் வெளியே செல்ல அனுமதிக்கவே மாட்டாளோ?’ என்று எண்ணமிட்டான். “போடா! போய்ச் சாப்பிடு; மணி பத்தரை ஆகப் போகிறது. பாவம்! உனக்காக ஞானமும், காமாட்சி அம்மாளும் எத்தனை நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், பார்! இனிமேல் சினிமாவுக்குப் போவதாயிருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும், தெரிந்ததா? சினிமாவே பார்க்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவளல்ல நான்.” “மக்களின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அந்தச் சாதனம், பெரும்பாலும் நேர்மாறான முறையிலேயே உபயோகப் படுத்தப்படுகிறது. அதனால்தான் சினிமாவை நான் வெறுக்கிறேன். நல்ல படங்கள் பார்ப்பதை நான் எப்போதுமே ஆட்சேபித்ததில்லை. ராஜா!... எனக்கு இரண்டே இரண்டு கண்கள் தான் உண்டு. அவை என்ன தெரியுமா? ஒன்று சாரதாமணிக் கல்லூரி; இன்னொன்று நீ! என்னுடைய கண்களில் ஒன்று என் கண்ணெதிரிலேயே கெட்டுப் போவதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? நீ சிறு குழந்தையாயிருந்தபோதே உன் தாயார் உன்னைப் பிரிந்து சென்று விட்டாள். அன்று முதல் உன்னை ஆசையோடு, பாசத்தோடு வளர்த்து வருகிறேன். வருங்காலத் தில் நீ எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறேன்.” “ஏன் அத்தை வருத்தப்படறீங்க? நான் இப்ப என்ன செய்துட்டேன்?... சினிமாவுக்குப் போகக் கூடாதுங்கறீங்க. அவ்வளவுதானே! இனிமே போகல்லே! அப்படிப் போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்காமல் போவதில்லை. சரி தானே!” “ரொம்ப சரி; சாப்பிடு போ...” “எனக்குப் பசியே இல்லை அத்தை!” “எப்படிப் பசிக்கும்? டீ பார்ட்டியிலே மசாலா தோசை சாப்பிட்டிருக்கியே!” என்று சிரித்தாள் பார்வதி. “கேலி செய்யாதீங்க அத்தை !...” என்று கூறிக் கொண்டே ராஜா கீழே இறங்கிச் சென்றான். ‘ஒரு மட்டில் அத்தையிடம் தப்பினோம்’ என்ற உற்சாகத்தில் போகும் போதே சினிமாப் பாட்டு ஒன்றை நீட்டி முழக்கிச் சீட்டியடித்துக் கொண்டு போனான்! “பாரதி ! நீ சாப்பிட்டாயிற்று அல்லவா? இப்படி என் பக்கத்திலேயே படுத்துக்கொள்...” என்று பிரின்ஸிபால் கூறியதும் பாரதி, அதிக வெளிச்சமின்றிக் குளுமையாக ஒளி வீசும் நீலவிளக்கைத் தவிர, மற்ற விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்துக் கொண்டாள். மணி பதினொன்றுக்கு மேல் ஆகியும் பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை. சந்தடிகள் குறையக் குறைய, ஊர் அடங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் செல்லும் கார்களின் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன அவளுக்கு. அவர் இப்போதெல்லாம் முன்போல் இங்கே வருவதில்லையே, ஏன்? ஒரு வேளை அவர் கொண்டுவந்த மாதுளம் பழங்களை நான் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலோ? இருக்காது; அவர் தம்முடைய கையால் எடுத்துக் கொடுத்ததை நான் என் கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டேனே! அவருக்கு எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ காரியங்கள். அவற்றுக்கிடையில் என்னை வந்துகாண அவகாசம் சிறிதாவது வேண்டாமா?... ஒரு வேளை உண்மையிலேயே என் மீது அவருக்கு அன்பேதான் இல்லையோ? சே! ஒரு நாளும் அப்படி இருக்காது. என்மீது அவருக்கு அன்பு இல்லையென்றால் தம்முடைய தங்கை காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, ‘உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்’ என்று... அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேகநிலை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறாராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களை யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாராமே! இங்கே வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம். பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள். ‘சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப்படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே, மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நினைவாகவே அவர் கவலையாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்து போக வேண்டியதுதானா? இந்த எண்ணம் என்னுள்ளேயே அழிந்து போக வேண்டியது தானா? நான் ஏன் அழிய வேண்டும்? என்னை அணு அணுவாக அரித்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன். அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தாலும் நாளையோடுழித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.’ பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்து போயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள். கடிகாரத்தில் மணி பதினொன்றரை அடித்தது. ‘இப்போது அமைதியாகத் தூங்கப் போகிறேன்’ என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனப்பட்டாள். என்றுமில்லாத நிம்மதி காரணமாக, உள்ளத்தில் வியாபித்திருந்த மகிழ்ச்சி காரணமாக உணர்ச்சி பரவசமாகியிருந்த பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை. திடீரென்று, கீழே, காமாட்சி யாருடனோ மெல்லிய குரலில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. இன்னொரு குரல் யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் உற்றுக் கவனித்தாள். அவள் ஊகித்தபடி அது சேதுபதியின் குரலேதான்! அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை. மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஒசை கேட்கவே, பார்வதி கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல் படுத்திருந்தாள். அறைக்கு வெளியே வந்து நின்ற சேதுபதியும் காமாட்சியும் ஜன்னலினூடே நிழலுருவமாகத் தெரிந்தனர். நீல விளக்கின் லேசான ஒளியில் தெரிந்த பார்வதியின் முகத்தையே சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி. “எழுப்பட்டுமா, அண்ணா?...” காமாட்சி கேட்டாள். “வேண்டாம்; நான் இங்கு வந்து போவதே அவருக்குத் தெரியக்கூடாது. அதற்காகவேதான் நான் இங்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறேன். நான் காரில் வந்தால் அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டுவிடப் போகிறாரே என்பதற்காகவே நடந்து வருகிறேன்.” “டாக்டர் என்ன சொல்கிறார் அண்ணா?” காமாட்சி கேட்டாள். “அதிர்ச்சியாலும் கவலையாலும் அடிக்கடி மயக்கம் வருகிறதாம். ஆகையால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். இந்த நிலையில் அவரை நான் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகவே தினமும் இந்த நேரத்தில் வந்து பார்த்து விட்டுப் போகிறேன்...” “இன்று கூட உன்னைப்பற்றி விசாரித்தார். எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா என்ன? இங்கே வருவதே இல்லையே என்று கேட்டார்.” “நீ என்ன பதில் கூறினாய்?” “ஊரில் தான் இருக்கிறார். டெலிபோனில் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றேன். நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா அண்ணா ? எழுப்பட்டுமா?...” என்று கேட்டாள் காமாட்சி. “வேண்டாம், வேண்டாம்... அதோ அந்தப் பக்கம் படுத்துக் கொண்டிருப்பது யார்? பாரதியா?....” என்று கேட்டார் சேதுபதி. “ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணா அவருக்கு?...” “ஓ... சரி காமாட்சி! நான் போய் வருகிறேன் பார்வதியின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறேன்...” சேதுபதியும் காமாட்சியும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது. தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிறாள் பார்வதி. பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸுட ன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, “இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந்தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத்திடம் சொல்லி விடுங்கள்” என்றாள் பார்வதி. “அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?” “பேஷாக ஆகும். எனக்கென்ன ஜூரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே!” என்றாள் பார்வதி. “இட்லி என்றால் என் அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும்...” என்றாள் காமாட்சி. “முன்னொரு நாள் கூடச் சொல்லியிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணாவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள் பார்வதி. “இருக்கிறார்; நான் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் காமாட்சி. “வேணாம். அது மரியாதை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசுகிறேன், அதுதான் மரியாதை!” என்றாள் பார்வதி. பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது. “ஓ நீங்களா? வணக்கம், உங்கள் உடல் நிலை பற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலையே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் இருந்தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார்” என்றார் சேதுபதி. “அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. எனக்குக் கூட அப்படித் தான் தோன்றுகிறது. இப்போது தங்களை நான் போனில் அழைத்தது கூட அதற்காகத்தான். உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். தயவுசெய்து இன்று மாலை ஐந்து மணிக்கு இங்கே வந்து போகமுடியுமா? உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும்” பணிவோடும் கனி வோடும் ஒலித்தது பார்வதியின் குரல். “ஓ! வருகிறேனே... இதென்ன சிரமம்? நானும் உங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று. அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வருவதில்லை. மாலையில் அவசியம் வருகிறேன்...” “ரொம்ப சந்தோஷம்...” என்று கூறி ரிஸீவரை வைத்த பார்வதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “ராஜா! இன்று மாலை பாரதியின் அப்பா இங்கே வரப் போகிறார், டிபனுக்கு இட்லியும் காரமாகத் தக்காளிச் சட்னிவும் போடச் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டு வாசல் தோட்டத்திலேயே காற்றாட உட்கார்ந்து பேசுகிறோம். ஐந்து மணிக்கு அங்கே இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கச் சொல்லு...” என்றான். “ஆகட்டும் அத்தை!” என்றான் ராஜா. மாலையில் சேதுபதியைச் சந்திக்கும்போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எப்படி உபசரிக்க வேண்டும்? எவ்வாறு பேச்சைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு வைத்துக் கொண்டாள் அவள். மணி ஐந்தடிக்கும்போதே சேதுபதியின் கார் உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்ட பார்வதி, என்றுமில்லாத குதூகலத்துடன் அவரை வரவேற்க எழுந்து நின்றாள். தன்னை வரவேற்கத் தோட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து, “நீங்கள் ஏன் கீழே இறங்கி வந்தீர்கள்? நானே மாடிக்கு வந்திருப்பேனே!” என்றார் சேதுபதி. “நான் தினமும் கீழே இறங்கித் தோட்டத்துக்குள் கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார். ஆகையால் இன்று தங்களுடன் பேசிக் கொண்டே சற்றுநேரம் நடக்கலாம் என்று எண்ணினேன்.” “அப்படியா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுங்கள்” என்றார் சேதுபதி சிரித்துக் கொண்டே. “இப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டாள் பார்வதி. “இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் அழகாயுமிருக்கிறது...” என்றார் சேதுபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே. பாரதி சுடச்சுட இட்லியும், தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள். “பேஷ்! எனக்குப் பிடித்த டிபன்!” என்றார் சேதுபதி. “எனக்கும்தான்” என்று கூறினாள் பார்வதி. “தக்காளிச் சட்னி ரொம்பக் காரமாயிருக்குமே! நீங்கள் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது” என்றார் சேதுபதி. “எனக்கு ஜுரம் ஒன்றுமில்லை. எது பிடிக்கிறதோ அது சாப்பிடலாம் என டாக்டரே கூறியிருக்கிறார்” என்றாள் பார்வதி. “இளம் வயதில் கல்லையும் ஜீரணம் செய்து கொள்ளலாம். ஐம்பதைத் தாண்டிவிட்டால் ஆகாரம் சாதுவா யிருக்கவேண்டும். ஆவியில் வெந்த இட்லி எளிதில் ஜீரணமாகி விடக்கூடியது. வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. ஆமாம், எனக்கு இட்லி பிடிக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டார் சேதுபதி. “யாரும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே செய்யச் சொன்னேன். இது உங்களுக்கும் பிடித்த பண்டமாக அமைந்துவிட்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்றாள் பார்வதி. “இந்த இட்லியும், தக்காளிச் சட்னியும் ரொம்பப் பொருத்தமாக அமைந்து விட்டன. நல்ல காம்பினேஷன்” என்றார் சேதுபதி. “மண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றாள் பார்வதி. சேதுபதி அவளை ஏறிட்டுப் பார்த்தார்; அந்தப் பார்வையில் ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்ற கேள்வி தொக்கி நின்றது. “தங்களிடம் இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். நான் கூறப்போவதைத் தாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினாள் பார்வதி. “என்ன விஷயம் அது?” என்று நிதானமாகக் கேட்டார் சேதுபதி. “திருமண விஷயம்தான்” என்று கூறிவிட்டுப் பார்வதி, சேதுபதியின் முகத்தையே கண்கொட்டாமல் கவனித்தாள். அவர் முகத்தில் எவ்வித வியப்புக் குறியும் தோன்றவில்லை, சலனமற்ற அவர் முகம் எப்போதும் போல் அமைதியாகவே இருந்தது. |