இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 5 ...

2.41. திருச்சாய்க்காடு

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

437  மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
       கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
       விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
       தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே. 2.41.1

438  போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
       சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
       வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
       பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 2.41.2

439  நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
       சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
       பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
       நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 2.41.3

440  கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
       தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
       மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
       பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே. 2.41.4

441  கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
       பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
       தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
       ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே. 2.41.5

442  சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
       தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
       ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
       தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே. 2.41.6

443  மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
       சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
       கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
       தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே. 2.41.7

444  தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
       படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
       தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
       இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே. 2.41.8

445  வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
       ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
       தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
       தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே. 2.41.9

446  குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
       அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
       திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
       புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே. 2.41.10

447  நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
       அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
       சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
       எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே. 2.41.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சாயாவனேசுவரர்
தேவி - குயிலுநன்மொழியம்மை

2.42. திருஆக்கூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

448  அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்
       தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
       புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
       தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.1

449  நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
       காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
       கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
       தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.1

450  வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்
       தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
       வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
       தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.3

451  கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
       பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
       அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
       தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.4

452  வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
       பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்
       ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்
       தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.5

453  பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
       கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
       விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்
       தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.6

454  வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
       வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
       பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
       தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.7

455  கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
       இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
       பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந்
       தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.8

456  நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
       தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
       இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
       தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.9

457  நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
       பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
       சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
       தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.10

458  ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
       மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
       நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
       பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே. 2.42.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சுயம்புநாதேசுவரர்
தேவி - கட்கநேத்திரவம்மை

2.43. திருப்புள்ளிருக்குவேளூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

459  கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
       உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
       தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
       புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 2.43.1

460  தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
       ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
       மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
       பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.2

461  வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
       ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
       யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
       பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.3

462  மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
       ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
       ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
       போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.4

463  கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
       பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
       வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
       போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.5

464  திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
       அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
       மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
       புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.6

465  அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
       பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
       பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
       புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.7

466  பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
       மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
       எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
       புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.8

467  வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
       சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
       ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
       போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.9

468  கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
       தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
       விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
       புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.10

469  செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
       பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
       கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
       மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 2.43.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமி - வைத்தியநாதர்
தேவி - தையல்நாயகியம்மை

2.44. திருஆமாத்தூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

470  துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
       பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
       அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
       பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 2.44.1

471  கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
       மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
       அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
       பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 2.44.2

472  பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
       தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
       ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
       சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 2.44.3

473  கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
       பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
       ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
       காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 2.44.4

474  பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
       சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
       ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
       வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 2.44.5

475  சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
       காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
       யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்
       தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 2.44.6

476  மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
       வேறாக நில்லாத வேடமே காட்டினான்
       ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
       கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 2.44.7

477  தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
       நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
       ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
       கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.44.8

478  புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
       உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
       அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
       வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 2.44.9

479  பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
       கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
       அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
       நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 2.44.10

480  ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
       கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
       நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
       பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 2.44.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - அழகியநாதேசுவரர்
தேவி - அழகியநாயகியம்மை.

2.45. திருக்கைச்சினம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

481  தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
       மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
       நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
       கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.1

482  விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
       படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
       நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
       கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 2.45.2

483  பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
       சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
       ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
       காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.3

484  பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
       சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
       விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்
       கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.4

485  தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
       வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
       சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக்
       காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.5

* நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.

486  மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
       அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
       திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
       கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.6

487  வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
       எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
       பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
       கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.7

488  போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
       மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
       நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
       காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.8

489  மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
       எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
       பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
       கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.45.10

490  தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
       கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
       பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
       விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே. 2.45.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கைச்சினநாதர்
தேவி - வேள்வளையம்மை

2.46. திருநாலூர்த்திருமயானம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

491  பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
       மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
       நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
       மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 2.46.1

492  சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
       ஆடும் பறைசங் கொலியோ டழகாக
       நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்
       பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 2.46.2

493  கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
       றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
       நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
       சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 2.46.3

494  கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
       நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
       ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
       சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே. 2.46.4

495  கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
       பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
       நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
       இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே. 2.46.5

496  கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
       பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
       நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
       நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 2.46.6

497  கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
       பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
       நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
       எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே. 2.46.7

498  பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
       வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
       நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
       அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே. 2.46.8

499  மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
       மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
       நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
       பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 2.46.9

500  துன்பாய மாசார் துவராய போர்வையார்
       புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
       நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
       இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே. 2.46.10

501  ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
       நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
       சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
       கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே. 2.46.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பலாசவனேசுவரர்
தேவி - பெரியநாயகியம்மை

2.47. திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

502  மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
       கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
       ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
       கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.1

503  மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
       கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
       ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
       துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.2

504  வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
       துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
       தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
       விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.3

505  ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
       கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
       கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
       ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.4

506  மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
       கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
       நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
       தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.5

507  மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
       கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
       அடலானே றூரும் அடிக ளடிபரவி
       நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.6

508  மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
       கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
       பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
       ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.7

509  தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
       கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
       பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
       கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.8

510  நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
       உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
       கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
       பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.9

511  உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
       இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
       கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
       பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.10

512  கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
       தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
       ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
       வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 2.47.11

திருச்சிற்றம்பலம்

இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - கபாலீசுவரர்
தேவி - கற்பகவல்லியம்மை

2.48 திருவெண்காடு

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

513  கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
       பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
       பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
       வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 2.48.1

514  பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
       வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
       வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
       தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 2.48.2

515  மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
       எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
       பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
       விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 2.48.3

516  விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
       மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
       தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
       கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 2.48.4

517  வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
       மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
       மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
       ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 2.48.5

518  தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
       ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
       பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
       வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 2.48.6

519  சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
       அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
       மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
       முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 2.48.7

520  பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
       உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
       கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
       விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 2.48.8

521  கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
       ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
       வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
       றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 2.48.9

522  போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
       பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
       வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
       றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 2.48.10

523  தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
       விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
       பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
       மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 2.48.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சுவேதாரணியேசுவரர்
தேவி - பிரமவித்தியாநாயகியம்மை

2.49. சீகாழி

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

524  பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
       பாடி யாடிய வோசை நாடொறும்
       கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
       பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
       மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
       அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 2.49.1

525  மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
       மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
       கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
       வண்ட லம்பிய கொன்றை யானடி
       வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
       விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 2.49.2

526  நாடெ லாமொளி யெய்த நல்லவர்
       நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
       காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
       தோடு லாவிய காது ளாய்சுரி
       சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
       வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 2.49.3

527  மையி னார்பொழில் சூழ நீழலில்
       வாச மார்மது மல்க நாடொறுங்
       கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
       ஐய னேயர னேயென் றாதரித்
       தோதி நீதியு ளேநி னைப்பவர்
       உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 2.49.4

528  மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
       வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
       கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
       வலிய காலனை வீட்டி மாணிதன்
       இன்னு யிரளித் தானை வாழ்த்திட
       மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 2.49.5

529  மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
       வானு ளோர்களும் வந்து வைகலுங்
       கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
       நெற்றி மேலமர் கண்ணி னானைநி
       னைந்தி ருந்திசை பாடுவார் வினை
       செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 2.49.6

530  தான லம்புரை வேதி யரொடு
       தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
       கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
       ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
       வாகி நின்றவொ ருவனே யென்றென்
       றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 2.49.7

531  மைத்த வண்டெழு சோலை யாலைகள்
       சாலி சேர்வய லார வைகலுங்
       கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
       அத்த னேயர னேய ரக்கனை
       யன்ற டர்த்துகந் தாயு னகழல்
       பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 2.49.8

532  பரும ராமொடு தெங்கு பைங்கத
       லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
       கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
       திருவின் நாயக னாய மாலொடு
       செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
       இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 2.49.9

533  பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
       யாது வண்டுகி லாடை போர்த்தவர்
       கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
       தொண்டை வாயுமை யோடுங் கூடிய
       வேடனே சுட லைப்பொ டியணி
       அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 2.49.10

534  பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
       உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
       கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
       நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
       ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
       உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 2.49.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

2.50 திருஆமாத்தூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

535  குன்ற வார்சிலை நாண ராவரி
       வாளி கூரெரி காற்றின் மும்மதில்
       வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
       தென்ற லார்மணி மாட மாளிகை
       சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
       அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.1

536  பரவி வானவர் தான வர்பல
       ருங்க லங்கிட வந்த கார்விடம்
       வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
       கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
       சந்து காரகில் தந்து *பம்பைநீர்
       அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.2

* பம்பை என்பது ஒரு நதி.

537  நீண்ட வார்சடை தாழ நேரிழை
       பாட நீறுமெய் பூசி மாலயன்
       மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
       பூண்ட கேழல்ம ருப்பரா விரி
       கொன்றை வாளரி யாமை பூணென
       ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 2.50.3

538  சேலின் நேரன கண்ணி வெண்ணகை
       மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
       தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
       பாலின் நேர்மொழி மங்கை மார்நட
       மாடி யின்னிசை பாட நீள்பதி
       ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 2.50.4

539  தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
       தூவி நின்கழ லேத்து வாரவர்
       உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
       வண்ட லார்கழ னிக்க லந்தும
       லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
       அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.5

540  ஓதி யாரண மாய நுண்பொருள்
       அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
       நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
       சோதியே சுடரே சுரும் பமர்
       கொன்றை யாய்திரு நின்றி யூருறை
       ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 2.50.6

541  மங்கை வாணுதன் மான்ம னத்திடை
       வாடி யூடம ணங்க மழ்சடைக்
       கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
       பங்க யமது வுண்டு வண்டிசை
       பாட மாமயி லாட விண்முழ
       வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.7

542  நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
       யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
       வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
       குன்றெ டுத்தநி சாசரன் திரள்
       தோளி ருபது தான் நெரிதர
       அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.8

543  செய்ய தாமரை மேலி ருந்தவ
       னோடு மாலடி தேட நீண்முடி
       வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
       தைய லாளொடு பிச்சைக் கிச்சைத
       யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
       டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.9

544  புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
       நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
       பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
       முத்தை வென்ற முறுவ லாளுமை
       பங்க னென்றிமை யோர் பரவிடும்
       அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.10

545  வாடல் வெண்டலை மாலை யார்த்தும
       யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
       ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
       கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
       கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
       பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 2.50.11

திருச்சிற்றம்பலம்

ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - அழகியநாதேசுவரர்
தேவி - அழகியநாயகியம்மை



இரண்டாம் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5