6

     அந்த மசூதிக்குள் இருந்து ஒரு பெருங்கூட்டம் பீறிட்டு வெளிப்பட்டது; ஆங்காங்கே தெருத்திண்ணைகளில் உட்கார்ந்திருந்த மூதாட்டிகளும், ஜன்னல்களில் கண் பதித்திருந்த பெண்களும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடினார்கள். புடவைக்கு மூடி போலவும், தலைக்கு மகுடம் போலவும், முகத்திற்கு முகமூடி போலவும் உடுத்திய சேலைக்கு மேலே உச்சி முதல் பாதம் வரை மின்னும் கருப்பு நிற அங்கியை அணிந்து, பாதங்களை செருப்பு மறைக்க, வெறும் மூக்கையும் வாயையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வசதிபடைத்த பெண்களும், பீடிஇலைகளைக் கத்தரித்து அவற்றின் தும்புத் துகளோடு கொண்டைகளில் பூவுக்குப் பதிலாக முந்தானையைச் சொருகி இருந்த பெண்களும் ஓடோடிப் போனார்கள். அந்தக் கூட்டத்திற்கு எதிரே நின்று கைகளை ஆகாயத்தை நோக்கித் தூக்கிக் காட்டியும், முன்பக்கமாய் நீட்டிப் போட்டும் அமைதி காக்கக் கோரினார்கள். அமீரும் காதர்பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் அந்தப் பெண் கூட்டத்திற்கு முகப்பாகி கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார்கள். கூட்டம் கேட்பதாக இல்லை. வழிமறித்த பெண்களுக்கு இடையே ஊடுருவியும், பக்கவாட்டில் கடந்தும் வேகவேகமாக ஓடினார்கள். இதற்குள், பல பெண்கள் அவசர அவசரமாய் தத்தம் சொந்தங்களை கூட்டத்தில் கண்டு, அந்தக் கூட்டத்தைக் கிழித்தபடியே அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். இதனால் கூட்டம் அர்த்தநாரீசுவரியாய் ஆனது. சிலர், இதுதான்சாக்கு என்று நின்று கொண்டார்கள். ஆனாலும் பலர் இன்னும் ஆத்திரமூட்டும்படி ஒலித்த டேப்புப் பாட்டைக் கேட்டு பாய்ந்தார்கள்.

     கூட்டம் கும்பலாகியது. தாய்க்குல சொந்தங்களிடம் கைகால்களை ஒப்படைத்தவர்கள் கூட இப்போது ஆவேசப்பட்டு அவர்களை லேசாய் தள்ளிப் போட்டு விட்டு ஓடினார்கள்.

     அப்படி ஓடிய கூட்டம் அந்த மசூதிக்கு நூறடித் தூரத்தில் உள்ள மூன்று தெரு சந்திப்புக்கு வந்தது. அதே தெருவில் நேராய் ஓடி, அப்புறம் வலது பக்கம் திரும்பினால் சாராயக் கடை கிடைக்கும். ஹாஜி அஜீசும் நூருல்லாவும் திவான் முகமதுவோடு கூட்டத்திற்கு முன்பு வந்து திரும்பினார்கள். கூட்டமும் அவர்களிடம் யோசனை கேட்பதுபோல் இரைச்சலாய் நின்றபோது, தொலைவில் உருண்டு புரண்ட பெண்கள் மீண்டும் அந்தக் கூட்டத்தைப் பிடிக்கப் போவது போல் ஓடிவந்தனர். கூடவே, அமீரும் காதர்பாட்சாவும் கலந்து வந்தார்கள். இதற்கு அஜீஸ், முத்துக்குமாரை மனதில் வைத்து, அவன் தனது மகள் ஆயிஷாவை கல்யாணம் செய்யாமலேயே தலாக் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துப் பேசினார். நூருல்லா, தமது பீடித் தொழிற்சாலை நிர்வாக லட்சணத்தை ஒருகை பார்ப்பதற்காக நர்சரிப் பள்ளிக்கூடத்தில் கூட்டம் நடத்தும் யூனியன் பயல்களை குறி வைத்தும், திவான், பழனிவேலுவை மானசீகமாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியும் ஆணையிட்டார்கள்.

     “முதல்ல கீழ்ப்பக்கம் போங்க, அந்த இந்துத் தெருவில் போய் மாரியம்மன் கோவில்ல இருக்கிற சைத்தான் சிலைகளை எல்லாம் உடையுங்க அந்தக் கோவில் அயோத்தி மசூதி மாதிரி ஆகணும் அங்கேயும் காபீர்கள் அக்கினி திராவகத்தை ஊத்தி வச்சிருக்கிறதா கேள்வி. நாட்டு வெடிகுண்டுகளை சேர்த்து வச்சிருக்கிறதா பேச்சு, எவனாவது கையை ஓங்கினால், அது அப்புறம் தரையில்தான் விழனும்!”

     “இதே போல மேலத்தெருப் பக்கமாகவும் போகணும். முஸ்லிம் பள்ளிக்கூடத்திலே முருகானந்தம் மாதிரி காபீர் பயல்களுக்கு என்ன வேலை? நமக்கு எதிராகவே நம் ஆட்களைத் தூண்டிவிடுகிறான். நாம தாங்கிக்க முடியுமா?”

     “எல்லாத்தையும் விட அந்த சாராயக்கடை முக்கியம்! நமக்கு மானம் மரியாதை இருக்கு என்கிறத காட்டுறதுக்கு அந்தக் கடையை அடியோட இடிக்கணும்!

     எந்தப் பக்கம் போவது என்று யோசித்த கூட்டம், அந்த முப்பெரும் தலைவர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள உறவில் எந்தப் பக்கம் தராசு முள் சாய்ந்ததோ, அந்தப் பக்கம் பாய்ந்து போனார்கள். இடையிடையே கற்களையும் கம்புகளையும் பெண்களின் ஒப்பாரிப் பின்னணியில் எடுத்துக்கொண்டு பேயோட்டமாக ஓடினார்கள்.

     கிழக்குப் பக்கமாக ஓடிய கூட்டம், வழிமறித்த ஒரு கல் கட்டிடத்தின் பாளம் பாளமான சுவர் கற்களை எடுத்துக் கொண்டு, குட்டை மாதிரியான ஒரு பள்ளம் வழியாய் உருண்டோடி, மீண்டும் மலையேறுவது போல் ஏறி, தெற்குப் பக்கம் உள்ள கருவேல மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டு, தென்முனைக்கு வந்து ஒரு விளையாட்டு மைதானத்தை ஊடுருவிக் கிழக்குப் பக்கம் ஓடி, இந்துக்களின் முதலாவது தெரு முனைக்கு வந்து நின்றது. வெளியே நின்ற பெண்கள் முதலில் அவர்களை சினேகிதமாய்ப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டார்கள். கூட்டம் ஏளனமாய் நினைத்து கைகளை ஓங்கி முன்னோக்கி நடந்தபோது, அவர்கள் அலறியடித்து உள்ளே ஓடினார்கள். ஆங்காங்கே நின்ற கணவனையோ, பிள்ளைகளையோ தத்தம் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கதவுகள் சாத்தப்பட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. அப்படியும் தாக்கப்படுவோமோ என்ற அலறல்கள். ‘எய்யோ எய்யோ எம்மோ’ என்ற ஒப்பாரி.

     அந்தக் கூட்டம், தங்களை வரவேற்பது போல் தோன்றிய அந்தக் தெருவின் தீவுத்திடல் மாதிரியான ஒரு தூக்கலான இடத்தில், மாரியம்மனை குறி வைத்து நடக்கப் போன போது...

     முத்துக்குமார், ஏழெட்டுப்பேரை வலுக்கட்டாயமாகக் கூட்டி வருவது போல் கூட்டிப் போனான். கூட்டம் அதை, சவாலாக நினைத்து கத்திய போது, அவன் தனது இரண்டு கைகளையும் தூக்கியபடியே தனது கூட்டத்திற்கு முன்னால் போய் நின்றான். அலறியடித்து ஓடி வந்த பெண்களை ஆங்காங்கே நிற்கும்படி திரும்பிப் பார்த்து கையாட்டி விட்டு, அவன் கூட்டத்திற்கு முன்னால் மேலும் நெருங்கினான். காதர்பாட்சா, அவன் தோளில் கைபோடப் போன போது, கூட்டம் பாட்ஷாவை பின்னோக்கி இழுத்தது. முத்துக்குமார் அமைதியாய்ப் பேசினான்.

     “இதோ உங்ககிட்ட எங்களை ஒப்படைச்சிட்டோம். சிறுபான்மையை பெரும்பான்மை காக்க வேண்டியது முறை. இதைத் தான் நீங்களும் சொல்றீங்க. இங்கே நாங்க சிறுபான்மை. எங்களைக் காக்க வேண்டியது உங்க கடமை. அப்புறம் உங்க இஷ்டம். இதே மாரியம்மன் கோவிலுக்கு நான் ‘வரி’ கொடுக்கல. கோவில் விஷேசம் நடக்கும் போது, டவுனுக்கு போயிடுவேன். ஆனால் இந்தக் கோவில் விசேஷத்துக்கு அஜீஸ் பாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். நூருல்லா பாய் பத்து தேங்காய்களைத் தந்திருக்கிறார்.”

     கூட்டம் அசந்து நின்ற போது, ஒரு குரல் அதட்டியது:

     “சும்மா நடிக்காதேப்பா, இங்க சில வீட்டிலேயே திராவகம் ஊத்தி வச்சிருக்கிறது எங்களுக்குத் தெரியும். நாட்டு வெடிகுண்டு இருக்கிறதாம். நாங்க சோதனை போட்டாகணும்!”

     “சரி, போடணுமுன்னா போடுங்க! அதுக்கு முன்னால எங்க பெண்டு பிளளைங்கள ஒங்க வீடுகளிலே அடைக்கலமாகக் கொண்டு வந்து விட்டுடறோம்.”

     அந்தக் கூட்டத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதாவது இசகு பிசகான ஒரு வார்த்தை விழுந்தால் கொலை கூட விழுந்திருக்கலாம். ஆனால் அந்தத் தெருவாசிகளால் தண்ணீர் தெளித்து விடப்பட்ட முத்துக்குமார், தான் கூட்டி வந்த நடுத்தர வயதுக்காரர்களைப் பேசாது தடுத்துவிட்டான். மெளனமாக தலை குனிந்து நின்றான். அப்படியும் அஜீஸின் அக்கா மகன் கத்தினான். காத்திருந்தவன் ஆயிஷாவை, நேத்து வந்த முத்துக்குமார் கண்ணடிப்பதா?

     “இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும்! பொல்லாத போக்கிரி!”

     காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்த படியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.

     “யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும்!”

     முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். பிறரை அழவைப்பது தவிர , அழுது பழக்கப்படாத அவனைப் பார்த்து காதர்பாட்சாவே ஆச்சரியப்பட்டான். பிறகு அவனைத் தன் பக்கமாய்த் திருப்பி அப்படியே அனைத்துக்கொண்டான். இதற்குள், அமீரும் அங்கே ஓடிவந்தார். அந்தத் தெருவில் இருந்து தள்ளாடித் தள்ளாடி வந்த துரைச்சாமியை அங்கேயே நிற்கும்படிச் சொல்லிவிட்டு, இவர் அங்கே ஓடினார். ‘உங்க மகன் முத்துக்குமாருக்கோ இவங்களுக்கோ எதுவும் நடக்காது முதலாளி’ என்று சொன்னபடியே திரும்பி ஓடிவந்தார். இதற்குள் அந்தக் கூட்டத்திற்குள், ஆங்காங்கே தெருவில் பம்மியும், பயந்து போயும் காணப்பட்ட நட்பு முகங்கள் தெரிந்தன. கூட்டம் சும்மா நின்றபோது, அஜிசின் அக்கா மகனால் அப்படி இருக்கமுடியவில்லை.

     “இதுக்குப் பேர்தான் ஜகாத்தா! கேவலம் கேவலம்! இப்பக் கூட சாராயக்கடைப் பாட்டு நிக்கல சுகம் சுகமாம்... பருவ சுகமாம்...”

     இப்போது முத்துக்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதுபோல் பேசினான்.

     “நீங்க அந்தப் பாட்டைத்தான் அசிங்கம் என்கிறீங்க, ஆனால் நான் அந்த சாராயக்கடையையே அசிங்கம் என்கிறேன். வாங்க அந்தக் கடையை அடிச்சு நொறுக்குவோம்.”

     முத்துக்குமார் அந்தக் கூட்டத்தைத் தாண்டி அதற்குப் பின்பக்கமாகப் போய் நின்றான். கூட்டத்தின் முகம் திரும்புவதற்காகக் காத்திருந்தான். இதற்குள் அமீரும் காதரும் கூட்டத்திலுள்ள நட்பு முகங்களை நெருங்கி அவர்களைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். முத்துக்குமாரும், “வாங்க, ஓடி வாங்க” என்று கூட்டத்திற்கு வழிகாட்டியாக ஓடினான். இரண்டு பெரிய வீடுகளுக்கு இடையே உள்ள இடுக்கு வழியாய் ஓடிய கூட்டம், அந்தச் சாராயக் கடை இருந்த வடமேற்குத் திசை நோக்கி போர்ப்பரணிக் குரலோடு ஓடியது. அமீர் வேகவேகமாய் ஓடி முத்துக்குமாரைப் பிடித்துக்கொண்டார். அவரிடமிருந்து முண்டியடித்தவனின் காதில் பலமாக ஓதி, அவனைப் பின்னுக்குப் பிடித்து இழுத்தார். சாராயக் கடைப்பக்கம் நடைபெறக்கூடிய கலாட்டாவில், தனது மதத்தைச் சேர்ந்த எவனாவது ஒரு வெறியன் அவனைத் தாக்கிவிடிக்கூடாதே என்ற பயம். துரைச்சாமி முதலாளியால் தாங்க முடியாது. செத்தே போவார்.

     இதற்கிடையே மசூதியிலிருந்து மேலத் தெருப்பக்கமாய் ஓடிய இன்னொரு கூட்டம், அந்தத் தெருமுனைக்கு வந்து லேசாய் நிதானப்பட்டது. நான்கு வீடுகள் கட்டக்கூடிய பெரிய காலி மனையில் பாதி இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகை, இடையிடையே மூங்கில் தட்டிகள்; முகம்மது நர்சரிப்பள்ளி என்ற பெயர்ப்பலகை அளவுக்குக் கூட இல்லாத சின்னச் சின்ன அறைகள், அதில் உள்ள இரண்டு அறைகள் ஒன்றாக்கப்பட்டு, இருபது இருபத்தைந்து தொழிலாளர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்க, எதிரே ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்த மீரானின் தோளில் கைபோட்டபடியே, முருகானந்தம் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தான். சராசரியைவிட அதிக உயரம். அந்த சராசரியை மெலிய வைக்கும் தேகம். ஆனாலும் மைக் தேவையில்லாத பெருங்குரல்.

     “ஏழைக்கு ஏழையே எதிரியாகக் கூடாது தோழர்களே! வியாபாரத்தனமான கேளிக்கைகளாலும், கொடூரமான மதவெறியாலும் முதலாளித்துவம் நம்மை அழிக்க வரும்போது நாம், பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கேடயமாகப் போட்டுக்கொண்டு, சமயச் சார்பின்மை என்ற கோட்பாட்டால், அவர்களைத் திருப்பி எதிர்கொள்ள வேண்டும் தோழர்களே! வகுப்புக்களை வர்க்கப்படுத்த வேண்டும் தோழர்களே! இப்போதைய பதட்டமான சூழ்நிலையில் நமது அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச சம்பளம் என்பது...”

     தெருமுனையில் நிதானித்த கூட்டத்தோடு கூட்டமாக நின்ற பீடி முதலாளி நூருல்லா கத்தினார். “என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறிங்க. அயோத்தி மசூதியை இடிச்சுட்டாங்கன்னு நாம அலமோதுறோம். வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சுற மாதிரி பாட்டுப் போடுறான். இங்க என்னடான்னா, ஒரு இந்துப் பயல் துரோகி மீரான் பயல் துணையோட நம்ம பயல்களையே நமக்கு எதிராத் துண்டிவிடுறான். இன்னுமா உங்களுக்கு உணர்ச்சி வரலே?”

     கூட்டம் அப்படியும் உணர்ச்சியற்று நின்றபோது, அந்தக் கூட்டங்களில் ஆங்காங்கே விரவி நின்ற நூருல்லாவின் அடியாட்கள் பக்கத்தில் நின்றவர்களையும் தள்ளிக் கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். இதனால் ஆவேசப்பட்ட அந்தக் கூட்டம், அந்தக் கீத்துக் கொட்டகையை இழுத்துப் போட்டது.

     கடகட வென்று சாய்ந்த தட்டிகளில் உள்ள மூங்கில் கம்புகளை உருவிக் கொண்டது. முருகானந்தம் பேச்சை பாடங் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கும் இங்குமாய் அலைமோதினார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான வாசலைக் கூட்டம் கதவாய் அடைத்தது. மூங்கில் கம்புகளை சுழற்றியது. மீரான் தலையில் ஒரு குத்து. உடனே ரத்த ஊற்று முருகானந்தத்தின் வாயில் ஒரு முஷ்டிக் குத்து. அவன் மல்லாக்கத் தள்ளப்பட்டான். நாலைந்து பேர் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறைக்கு வெளியே கொண்டுவரப் போனபோது, மீரான் மெல்ல எழுந்தான். எழுந்த வேகத்திற்கு எதிர்வேகத்தில் கீழே தள்ளப்பட்டான். முருகானந்தத்தை மீட்கப் போன தொழிலாளர்கள் மூங்கில் கம்புகளின் சுழற்சிகளில் சிக்கி அங்கும் இங்குமாய் நெளிந்தார்கள். அதை... அந்த அடிதடியை ஆனந்தமாய் ரசித்துக் கொண்டு இருந்த நூருல்லா, ஆங் காங்கே சில அப்பாவித் தொழிலாளர்களைப் பார்த்துவிட்டு, ஆணையிட்டார்.

     “பொறுக்கிப் பயலுவளா! எங்கிட்டயா வேலையைக் காட்டுறீங்க? சுகுமாரை விடுங்கடா! மீரானை நொறுக்குங்கடா சண்முகத்தை அடிச்சது போதும்டா. பஷீரை ரெண்டு சாத்துச் சாத்துங்கடா, வில்லியத்தை விடுங்கடா, முருகானந்தத்துக்கு இது போதாதுடா.”

     கூட்டம், சகட்டுமேனிக்கு எல்லோரையும் தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் கீழே விழுந்தும், சுவரில் சாய்ந்தும் திக்கற்று செயலற்று நின்றபோது, அக்கம் பக்கத்துப் பெண்கள் வந்து ஒப்பாரி போட்டார்கள். அந்தப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மண் வெட்டியும் அரிவாளுமாய் ஓடிவந்தார்கள். நூருல்லாவுக்குப் பாதிப்பயம். அதோட மீரானை அடித்ததும் சரி; முருகானந்தத்தை மிதிச்சதும் சரி; எல்லாரையும் சகட்டு மேனிக்கு அடித்துப் போட்டுட்டா அவங்க தேற ரெண்டு நாளாகுமே? அது வரைக்கும் பேக்டரி வேலையை யார் பார்க்குறது?

     நூருல்லா, தனது கூட்டத்தைக் கையமர்த்திவிட்டுக் கீழே கிடந்தவர்களைத் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்துவிட்டு இதம் போட்டுப் பேசினார்.

     “இவுங்களுக்கு தவுடு வச்சு ஒத்துங்கடா! இனிமேலாவது ஒழுங்கா இருங்கடா! யாருக்கிட்டே மோதறம்கிறது ஞாபகம் இருக்கட்டும்; நீங்க மோதுறது என்கிட்டே இல்லடா, இஸ்லாம் கிட்டே. சரி சரி அவரவர் வீட்டுக்குப் போங்க!”

     ஆனாலும் அந்தக் கூட்டம் வீட்டுக்குப் போகவில்லை. அந்தக் கட்டிடத்தின் முன் கொட்டிவைக்கப்பட்ட மணல் குவியல் மேலும், சல்லிக் குவியல் மீதும் ஏறி அவற்றைச் சிதற வைத்தபடியே எட்டிக் குதித்து, இரண்டு கால் பாய்ச்சலில் சாராயக் கடையைப் பார்த்து ஓடியது.

     அந்த முப்பெரும் கூட்டமும், அந்த சாராயக் கடையை மூன்று பக்கமும் சூழ்ந்துகொண்டது. மாரியப்பன் இவ்வளவு சொல்லியும் பாட்டை நிறுத்தாத கடைப்பையன்களில் ஒருவனை அடிக்கக் கையை ஓங்கினான். மற்றவர்கள் அவனை மல்லாக்கத் தள்ள, அவன் கீழே விழுந்து, தள்ளாடி எழுந்தான்.

     அந்தக் கூட்டத்திற்குப் பயங்கரமான கோபம். “தாயத்து போட்ட இந்த வெத்திலைப் பயல், குடிச்சிட்டு வேணு மின்னே பாட்டுக்கேத்தபடியே ஆடுறான். நம்மளைக் கிண்டல் பண்ணுறது மாதிரி ஆடிக் காட்டுறான். எவனை விட்டாலும் இவனை விடப்படாது.”

     கூட்டத்தில் நான்கைந்து பேர் மேலே எழுந்த மாரியப்பனைக் கீழே இழுத்துப் போட்டார்கள். ஒருவன், இடுப்பில் இடறினான். இன்னொருத்தன் அவன் நெற்றியில் தலையை வைத்து அழுத்தினான். கடையில நின்ற பாத்திமா அலறியடித்து ஓடிவந்தாள். எதையோ சொல்லப் போனாள். ஆனால் கேட்கும் நிலையில் இல்லாத கூட்டம கடைக்குள் இருந்த கணக்குப் பிள்ளையைக் கீழே இழுத்துப் போட்டது; கண்ணாடி ரேக்குகளை பாட்டில்களோடு கீழே தள்ளியது. உள்ளே கையெடுத்துக் கும்பிட்டு நடனமாடிய மூன்று பயல்களை முடியைப் பிடித்து, அந்த முடியே அவர்களைக் கட்டிய கயிறாக அனுமானித்து வெளியே இழுத்தது.

     பாத்திமா, மாரியப்பனைத் தொடவும் முடியாமல், விடவும் முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தாள். தொலைவில் நடந்துவந்த அம்மாவைப் பார்த்து வேகவேகமாய்க் கையாட்டினாள். அப்பாவின் முகத்தை அங்குமிங்குமாய் ஈரக்கண்களால் தேடினாள். இதற்குள் ஒரு குரல் அவளை அதட்டியது. இஸ்லாமியக் குரல்தான். சும்சுதீன் குரல்தான்.

     “கோஷாவைப் போட்டுட்டு வீட்டுக்குள் போநாயே?”

     பாத்திமா, அப்படியும் போகாமல், இப்படியும் நகராமல் ஓடிவந்த அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதபோது, கூட்டத்தில் சில நிதானிகள் மாரியப்பனை மீட்டார்கள். கையெடுத்துக் கும்பிட்ட சாராய பயல்களைப் பார்த்து “ஒடுங்கடா நாயிங்களா!” என்று தப்பிக்க வழி சொன்னார்கள். உடையாரின் மதுபாட்டில்கள் அங்குமிங்குமாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்த கண்ணாடிச் சத்தப் பின்னணியில் சாராயப் பயல்கள் திரும்பிப் பாராமலேயே ஓடினார்கள். சில பாட்டில்களை இடுப்பில் சொருகிக் கொண்ட ஒரு சிலர், ஒசைப்படாமல் எங்கேயோ போனார்கள்.

     இதற்குள் கையெடுத்துக்கும்பிட்டபடியே ஓடிய கணக்குப் பிள்ளையும் சாராயப் பயல்களும் கூட்டத்தின் கண்ணுக் கெட்டும் தொலைவில் நின்றுகொண்டு, இரண்டு கற்களை எடுத்துக் கூட்டத்தை நோக்கி எறிந்தபடியே “எங்க பழனிவேல் ஐயாகிட்டே சொல்லி உங்களை என்ன செய்யப் போறோம் பாருங்கடா” என்று கத்தியபடியே, நின்றதற்கு வட்டியும் முதலுமாக மீண்டும் ஓடினார்கள்.

     கூட்டம் கொதித்துப் போனது. பதறியடித்து நின்ற பாத்திமாவைப் பார்த்தபடியே, நடந்ததை நம்ப முடியாமல் வாயில் ரத்த ஒழுகலோடும், தலையில் சிவப்பு எண்ணெயோடும் பித்துப் பிடித்த நின்ற மாரியப்பன் மீது பாயப் போனது. “இவன் அவனுங்களோட சேக்காளி; இவனை அடிக்கறது அவங்களை அடிக்கிறது மாதிரி.”

     ஒருத்தன், மாரியின் கையைப் பிடிக்கப் போனான். இன்னொருத்தன் தலையைத் தொட்டுவிட்டான்.

     மாரியப்பன் கீழே குனிந்துதலைக்கு மேல் நின்ற கையைத் தனது கையால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு ஓடினான். மரண மலையின் விளிம்பிலிருந்து வாழ்வுப்பள்ளத்தாக்கில் குதிப்பவன்போல் குதித்துக் குதித்து ஓடினான். குதிகால்கள் குதிரைக் கால்களாயின. கூட்டம் துரத்தியது. திரும்பிப் பார்த்த சாராயப் பயல்கள் அவன் தங்களிடம் வந்துதான் ஆகவேண்டும் என்பதுபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால எமதூதனாய் காத்து நின்றார்கள். மாரியப்பன் திணறினான். திக்குமுக்காடினான்.