9

     அந்த வீட்டின் அகமும் புறமும் போல், மாரியப்பன் ஒடுங்கிக் கிடந்தான்.

     அந்த வீட்டின் பின் பகுதியில் பன்றிக்குடில் மாதிரியான ஒரு பொந்து அறை. வெளி அடைப்பு இல்லாதது. தட்டு முட்டுச் சாமான்களைப் போட்டு வைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தப் ‘பொந்தில்’ அவன் அதே வகைப் பொருள் மாதிரியே கிடந்தான். தலையை நிமிர்த்தினால் அது தட்டும் என்பதால், அசல் காயலான்கடை கோணி மாதிரியே சுருண்டு கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு இதோ அந்த அமீர் வீட்டிற்குள் தென்னை மரத்தில் ஏறியும், கருவாட்டுக் களியைச் சாப்பிட்டும் நடமாடிக் கொண்டிருந்தவன் தான். ஆனால் இப்போது வேறுவழியில்லை. அந்த வீட்டிற்குள் அவ்வப்போது ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் முற்றுகையில் இவனைப் பற்றி என்ன சொன்னாலும் எடுபடாது என்பதால், அந்த வீட்டினரின் விருப்பத்திற்கு விரோதமாகவே அங்கே பன்றியிலும் கேவலமாய், உள்ளே வருகிறவர்களை வேட்டை நாய்களாய் அனுமானித்துக் கொண்டு ஒரு விநோதப் பிராணியாகக் கிடக்க வேண்டியதாயிற்று. அன்று சாராயப் பயல்களுக்கும். ஜகாத் படைக்கும் இடையே மாட்டிக் கொண்ட அவன் எப்படித் தப்பினோம் என்பதை இன்னும் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சாலையில் ஓடியவன் பக்கத்தில் உள்ள கருவேல மரக்காட்டில் குதித்து, கையிலும் காலிலும் முட்கள் முரட்டுத்தனமாக உட்போக எப்படியோ அமீரின் வீட்டுப் பின் பக்கம் வந்து விட்டான். அவன் அப்படி வருவான் அல்லது வரவேண்டும் என்று எதிர்பார்த்தது போல் பாத்திமா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். அவன் அந்த வாசலுக்கு மத்தியில் நின்று கொண்டு குமுறிக் குமுறி அழுதபோது, அவள் முன்வாசல் பக்கம் ஓடிக் கதவைச் சாத்தப் போனாள். அப்போது, அந்த வீடும்-குறிப்பாக அவளும் அந்தச் சூழலில் தன்னை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அனுமானித்து, அவன் அந்த வீட்டின் கொல்லைப்புற வேலியைத் தாண்டப் போன போது, பாத்திமா ஓடிவந்து அவன் கைகளைப் பலவந்தமாகப் பிடித்து, பிடரியில் கைபோட்டு வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். அந்த இருவருக்கும் அப்போதோ அல்லது இப்போதோ இப்படி ஒருவரை ஒருவர் தொட்டது பற்றிய ஒரு பிரக்ஞை கூட ஏற்படவில்லை.

     காலடிச்சத்தமும், வளையல் சத்தமும் கொண்ட கலவைச் சத்தம் கேட்டு மாரியப்பன் கண் திறந்தான். ஜரிகைக் காகிதத்தில் வெள்ளைக் கோடுகள் போட்டது போன்ற சேலை கட்டியிருந்த பாத்திமா தலைமுடி - அந்தத் தலையை யாரோ ஆணி வைத்து அடித்தது போல், அங்குமிங்குமாய்ச்சிதறிக் கிடக்க, எதிரே நின்றாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும், அவளைப் பார்க்கப் அவனுக்கும் என்னவோ போலிருந்தது. வெளியே துருத்தும் மாரியப்பனின் கண்கள் இப்போது குகைகள் போலாகிவிட்டன. வாயோடு போட்டியிடும் பாத்திமாவின் கண்கள் தங்களது எச்சிலை உமிழ்ந்தன. ஒருத்தனுக்கு மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டுமே என்ற தாகம்; ஒருத்திக்கு அவனை, அதிலிருந்து காக்க வேண்டுமே என்ற வேகம், இந்தத் தாகத்தோடும், வேகத்தோடும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபோது, பாத்திமா அவனுக்கு விபரம் சொன்னாள். ஆகாயத்தை நிலவு போல் காட்டிய கூரைமேட்டைப் பார்த்தபடியே, மகாபாரதப் போரை திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொன்னானாமே அப்படிச் சொன்னாள்.

     “முந்தா நாளும், நேற்றும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வந்தது. இன்னிக்கு துப்புரவா ஒரு சொட்டுத் தண்ணிகூட வரலை. முன்னாலே வந்த வெள்ளத்திலே அங்கங்க கிணறுகளும் மணல் மேடாயிற்று. இப்போ தான் துரு எடுக்கப் போனாங்க. அது முடியுமுன்னாலே இப்படிப்பட்ட நிலைமை. ஊர்ஜனமே தெருவுக்கு வந்திடுச்சி. பம்புகளை அடிச்சி அடிச்சி அதோட பிடிங்க தான் கழண்டுச்சி, டவுனிலிருந்து வரவேண்டிய காய்கறியும் வரலை. அரிசி மண்டி ஆறுமுகமும் அதை இழுத்து மூடிட்டு ஓடிட்டார். யாருக்கு என்ன பண்றதுன்னே ஒண்ணும் புரியலே. ஒவ்வொருத்தர் முகமும் பைத்தியம் பிடிச்சது மாதிரியே கண்ணச் சுருக்குது. வாயக் கோணுது. சோறு இல்லாமல் இருக்கலாம், துணிகூட இல்லாம இருக்கலாம். ஆனா தண்ணி இல்லாம எப்படி இருக்கது?”

     அவனிடம் ஆறுதல் கேட்பது போலவும், அவனை ஆற்றுப்படுத்துவது போலவும் பாத்திமா பார்த்தாள். அவன் எதையும் உள்வாங்கும் நிலையில் இல்லாதது போல், ஒரு கையை அம்பாக்கி அதில் தலையைப் போடுவதற்காகக் கீழே குனிந்தான். பிறகு மீண்டும் எழுந்து வெளியே நடக்கும் அவலங்களைக் காண விரும்பியது போல் அந்த அறைக் குகையில் இருந்து தவழப் போனான். பாத்திமா, அதன் வாசலை, கையைக் குறுக்காகப் போட்டு அதைக் கதவில்லாத தாழ்ப்பாளாக்கியபோது, அவன் மோவாய் அந்தக் கையில் உரசியது. அவன் பின்வாங்கியபடியே, பசிபட்ட புலிபோல் வார்த்தைகளைப் பாயவிட்டான்.

     “என்னை விட்டுடு பாத்திமா, என்னையும், இந்த ஊரையும் இந்த நிலைக்குக் கொண்டு வந்த டவுன் பயலுவ எத்தனை பேரை வெட்ட முடியுமோ அத்தனை பேரையும் வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன். அதுக்கு முன்னாலே எங்கப்பா... அம்மாவையும், தம்பி, தங்கச்சியையும் பார்க்கணும்னு ஒரு ஆசை. இந்நேரம் எப்படித் துடிச்சிக்கிட்டு இருக்காங்களோ? என்னைக் காணோமேன்னு அப்பாவுக்கு உயிரே போயிருக்கும்.”

     மாரியப்பன் ஆவேசமாக வெளிப்பட்டு, தடுக்கப்போன பாத்திமாவையும் ஒரு தள்ளு தள்ளிவிட்டு, பின்புறக் கதவில் துருப்பிடித்த தாழ்ப்பாளை இழுத்துக் கொண்டிருந்தான். அது விலகுமோ இல்லையோ கதவு உடைபடப்போவது போல் , "கீச்" போட்டது. பாத்திமாவால் பொறுக்க முடியவில்லை. என்ன செய்கிறோம் என்றும் புரியவில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில், அவன் கழுத்தைச் சுற்றி இடது கையை வளையமாக்கி அவனைப் பின்பக்கமாக இழுத்தாள். அவன் லேசாய் நிலைகுலைந்து தடுமாறிக் கதவை விட்டபோது, பாத்திமா சட்டென்று பாய்ந்து அந்தக் கதவின்மேல் தன் உடம்பைச் சாத்திக் கொண்டாள். பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை நோக்கி “உள்ளே போவும். உள்ளே போவும்” என்றாள். அவன், ஒரு சர்க்கஸ்காரிக்குக் கட்டுப்பட்ட மிருகம் போலவே பின் பக்கமாய் நடந்து நடந்து, ஏதோ ஒரு அனுமானத்தோடு அந்தக் குகை அறையின் விளிம்பிற்கு வந்ததைப் புரிந்து கீழே குனிந்து அந்தக் குகைக்குள் பின்பக்கமாகத் தவழ்ந்தான். பாத்திமா, கதவில் இருந்து விடுபட்டு, அதன் எதிர்ப்புறச் சுவரில் சாய்ந்தபடியே நின்றாள். இப்போது அவனுக்கு அவளிடமிருந்தே ஒரு பாதுகாவல் தேவைப்பட்டதைப் புரிந்து கொண்டாள். வெளியே போய் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமென்றால், அதற்குள் இவன் ஓடிவிடலாம். என்ன செய்வது என்று புரியாமலும், பிறகு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று புரிந்தும் அவள், அவனைப் பார்த்தபடியே சுவரில் தலையை அங்குமிங்குமாய் புரட்டினாள். வெளியே ஏற்பட்ட சத்தங்கள் அவர்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலவே வலி கொடுத்தன.

     “தண்ணி... தண்ணி” என்று குழந்தைகளின் அவலச்சத்தம். “பசிக்கி... பசிக்கி” என்ற பரிதாபச் சத்தம். முன்பெல்லாம் பசி அறியாமல் இருந்த பணக்காரக் குழந்தைகள், இப்போதும் அதன்தாக்கம் புரியாமல் “வயிறு வலிக்கி... வயிறு வலிக்கி...” என்று புலம்பும் ஓலச்சத்தங்கள். “பொறுங்க... பொறுங்க...” என்ற இயலாமைச் சத்தங்கள். “அல்லா அல்லா!! எங்கள் ரப்பே” என்ற பரிதாபச் சத்தங்கள். இவற்றை எல்லாம் மீறி ஒரு ஒப்பாரிச் சத்தம். “என் பெண்ணைக் கொல்லாமக் கொன்னுட்டாங்களே! வாயும் வயிறுமாய் இருந்த மகளை ஆஸ்பத்திரிக்கு போகவிடாமத் தடுத்து மயானத்துக்கு அனுப்பிட்டாங்களே!” என்ற அலறல். உடனே ஒரு முதியவரின் முதுமைச்சத்தம். இராக்கால நரிபோல ஊளைச் சத்தம்... “வேணுமின்னா இங்க வந்து கொன்னுட்டுப் போங்கடா. இப்படி உயிரோட சித்ரவதை செய்யாதீங்கடா!” என்ற ஒரு பெண்ணின் ஒப்பாரிச் சத்தம்.

     அத்தனை சத்தங்களும் மாரியப்பனிடம் ஒரு ஆவேசத்தை எழுப்பியது. ஓங்கிக் குரலிட்டபடியே அவன் மீண்டும் வெளிப்படப் போனபோது, பாத்திமா அந்த குகைக்கு ரத்தமும், சதையுமான திரைச்சீலை போல், சாய்ந்து கொண்டாள். அவன் முகம், முதுகில் உரசுவது போல இருந்தது. உடனே இவள் முதுகை வெளிப்பக்கமாக வளைத்துக் கொண்டாள். பின்பக்கமாய் வாயிருப்பதுபோல, அவனுக்கு பிடரி வழியாக புத்திமதி சொன்னாள்.

     “முதல்ல இங்க இருந்து போகணும் என்கிற எண்ணத்தை விட்டுடும்! யாரு கண்ணுலயும் படாம தப்பிக்க முடியாது! நின்னா கத்தியால் குத்துவாங்க! ஓடுனா கல்லால அடிப்பாங்க! எங்க ஆட்களுக்கு ஒம்ம மேலே அவ்வளவு பகை! அதனாலே இப்ப நீருதப்பிக்கணும் என்கிற எண்ணத்தை விடணும்...”

     “ஐயோ பாத்திமா! இங்கே இருந்து தப்பிச்சு நான் உயிரோட இருக்கணும்னு ஆசைப்படறது மாதிரி பேசுறியே! அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு இல்ல. அந்த ஊரையே இப்படி கைகால் வெட்டினது மாதிரி வெட்டிப் போட்ட பயல்கள்ல கைக்கு அகப்படறவன ஒரே வெட்டா வெட்டணுமுன்னுதான் நான் வெளியில போக நினைக்கேன். என்ன விடு பாத்திமா!”

     பாத்திமா யோசித்தாள். அவனைக் காபந்து செய்து கொண்டு அப்படியே இருக்கவும் முடியாது. அவனை எப்படி முடக்கிப் போடவேண்டும் என்பதும், அதற்கான வார்த்தைகளும் அவளுக்குத் தெரியும். ஆனாலும் எப்படிச் சொல்ல முடியும்? “நீரு இந்த வீட்டைவிட்டு ஒடுறத யாராவது பார்த்துட்டால் எங்க குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாங்க? என் மானம், மரியாதையும் ஒம்ம மாதிரியே ஓடாதா” ன்னு சொன்னால் அவன் அப்படியே முடங்கிக் கிடப்பான். ஆனால் அப்படிச் சொல்வது அவனையும், தங்களையும் கொச்சைப்படுத்துவதாய் ஆகிவிடுமே என்று யோசித்தாள். அடைக்கலமாக வந்திருப்பவனிடம் குடும்ப மானத்தை தொடர்பு படுத்துவதைவிட அவனைக் கொன்றே போட்டுவிடலாம் என்கிற சிந்தனை.

     வெளியே சத்தம் வலுத்தது. பயங்கரமாக வலுத்தது.

     பாத்திமா அவன் பக்கமாய்த் திரும்பிக் கேட்டாள்.

     “எல்லா சோடாவையும் தாகத்துல தவிச்ச ஜனங்களுக்கு அத்தா கொடுத்துட்டார். ஒமக்காக ஒண்ணே ஒண்ணு எடுத்து வச்சிருக்கேன்... குடிக்கியளா?”

     மாரியப்பன் தத்துவம் பேசினான். தானாய் வந்த தத்துவம்.

     “சோடா இருக்கு என்கிற எண்ணத்திலே தாகம் கூட லேசாத் தெரியும் - அது தீர்ந்து போயிட்டதா தெரிஞ்சா எல்லாத் தாகமும் ஒண்ணா வரும்.”

     பாத்திமா, லேசாகப் புன்முறுவல் பூத்தாள். வீட்டுக்குள் போய் அலமாரியைக் குடைந்து ஒரு கோலிச் சோடாவைக் கொண்டு வந்தாள். அதன் வாயில், பெருவிரலை சொருகி அதை இடது கையால் குத்தினாள். கோலி அசையவில்லை. பிறகு அவனிடம் நீட்டினாள். அவன் பெருவிரலை அந்தச் சோடாவின் வாய்க்குள் விட்டு ஒரே ஒரு அழுத்து அழுத்தினான். அந்தக் கோலி உடையப் போவது போல் கீழே போனது. அவள் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள். “எப்பா! இரும்பு விரலு...”

     மாரியப்பன் அந்தச் சோடாவை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள், அவனிடம் நீட்டினாள். இருவருக்கும் இடையே சிக்கிய அந்த சோடா நீர் சிந்தப் போனது. பிறகு மாரியப்பன் ஒரு யோசனை சொன்னான்.

     “ஆளுக்குப் பாதி பாதியா குடிக்கிறதுக்கு சம்மதிச்சா நான் சோடா குடிக்கேன்.”

     “அப்ப முதல்ல நீரு குடியும்”

     “இல்ல நீ முதல்ல குடி!”

     “நீரு தான்.”

     “எச்சிச் சோடாவைக் குடுக்க எனக்கு என்னமோ மாதிரி இருக்கும்.”

     “அப்ப முழுசாக் குடியும்.”

     “இல்ல. அண்ணாந்து குடிக்கேன். அப்பவாவது மீதியைக் குடிப்பியா?”

     பாத்திமா பட்டும்படாமலும் தலையாட்டிய போது, வெளியே ஒரு சின்னக் குழந்தையின் பெரிய சத்தம் தண்ணி தண்ணி என்று சப்த சமுத்திரங்களையும் தேடுவது போன்ற சத்தம் “சும்மா இரு.சும்மா இரு” என்று ஒரு தாய் அதட்டியதும் அந்தக் குழந்தை குரல் இழந்து போகிறது. மாரியப்பன் அதற்கான காரணத்தை யூகித்துச் சொன்னான். “அந்த அம்மா குழந்தையை அடிச்சிருக்கும்! அதுக்கு பயந்து பாவம் சும்மா இருக்குதோ என்னமோ? ஒரு வேளை கத்திக் கத்தி நாக்கு வறண்டு போச்சோ என்னமோ?”

     மாரியப்பன் அந்த சோடா பாட்டிலை அவள் கையில் திணித்தான். அவளைப் போகும்படி முதுகைத் தள்ளினான். அவள் புரிந்து கொண்டவள் போல அந்த சோடாவை எடுத்துக் கொண்டபோது, அந்தக் குழந்தையின் ஓலச் சத்தம் மீண்டும் ஒலித்தது. கையில் பிடித்த சோடாவைத் தரையில் ஊன்றி அந்த ஆதாரத்திலேயே எழுந்தாள். முன் கதவையும் திறந்து விட்டாள். அங்கே ஒடுங்கியபடியே நின்றவர்களைப் பார்த்தாள். அந்தக் குழந்தை அந்த சோடாவை ஒரு பயங்கரவாதிபோல் பிடுங்கப் போனது. அவள் அந்தக் குழந்தையின் வாயில் அதை வைத்தாள். திடீரென்று ஒன்று உறைத்தது. மாரி கதவைத் திறந்திட்டு ஓடியிருப்பாரோ?