உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
13 வேஷங்கள் கலையும்போது விபரீதங்கள் நடப்பதும், விபரீதங்கள் நடக்கும்போது வேஷங்கள் கலைவதும் இயற்கை. அந்த இயற்கையின் விஞ்ஞானபூர்வமான உணர்வு மாற்றங்களில் ரசாயன சேர்க்கையால், கிட்டத்தட்ட விபரீத மனிதனாக நடந்து கொண்டிருந்தான் ஆண்டியப்பன். சும்மா கிடந்த சங்கை தன் காதில் ஊதி, தன்னைக் கெடுத்து, தங்களை மேம்படுத்திக் கொண்ட உள்ளூர் வேஷதாரிகளின் மோசடித்தனமான பித்தலாட்டப் பேச்சுக்கள், ஒரு அதிகாரியின் அங்கீகாரத்துடன் நடப்பதைப் புரிந்து, புரிந்ததால் நடந்து, நெல்லை நகர வீதி ஒன்றில், நீதிக்கே பலியானவன் போல் ஆவேசமாக நடந்த அவன் எதிரில், அரசங்கச் சின்னங்களான ஒரு போலீஸ் ஜீப், 'கட்டபொம்மன்' பஸ், அமைச்சர் ஒருவரின் வருகையை வரவேற்றுப் போட்டிருந்த வரவேற்பு வளைவு ஆகிய அத்தனையும் துச்சமாகத் தெரிந்தன. பஸ்ஸில் மோதப் போகிறவன் போல் நடந்தான். மாதச் சம்பளக்கார அதிகாரிகளை நம்பி, தனது அன்றாடச் சம்பளத்தையே பறிகொடுத்த அவன், பறிகொடுப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை என்பதுபோல், தலையைச் சாய்த்து, பற்கள் வெட்டரிவாளின் கூர்மையோடு ஜொலிக்க எதையோ பறிக்கப் போகிறவன் போல் நடந்தான். லேசாகத் தூறிய மழை பலமாகப் பெய்தது. பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டு நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு பெரிய கட்டிடத்தின் வெளித் தாழ்வாரத்தில் நின்றான். தற்செயலாக உள்ளே பார்த்தான். 'வாய்மையே வெல்லும்' என்ற ஒரு வாசகம், அவனிடம் யாசகம் செய்வது போல் கெஞ்சியது. பிறகு வாசல் படிக்கட்டிற்கு மேல் ஜொலித்த போர்டைப் பார்த்தான். 'மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம்' என்ற வார்த்தைகள் அவன் கண்களில் குத்தி காதுகளில் உபாதையைக் கொடுத்தன. 'இந்தக் கட்டிடத்தில் நிற்பதை விட மழையில் நனைவது எவ்வளவோ தேவலை' என்பதுபோல் அந்தக் கொட்டும் மழையில் அவன் காறித் துப்பிக் கொண்டே நடந்தான். வெளியே வந்து வேகமாக நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் தாமாக நின்றன. ஒரு தையற்கடையில் சட்டையில் 'காஜா' போட்டுக் கொண்டிருந்த ஒரு எட்டு வயதுப் பாலகனை தையல்காரர் கத்தரியால் அவன் பிஞ்சு விரல்கள் பிசகும்படி அடிக்க, அந்தச் சிறுவன் 'அய்யோ அம்மா' என்று கத்தாமல், குரூரமான அமைதியுடன் தான் வாங்கியதை பெரியவனான பிறகு, இன்னும் பிறக்காத ஒரு சிறுவனுக்குக் கொடுக்கப் போகிறவன் போல், எங்கேயோ வெறித்துப் பார்த்தான். மழை நீரில் சறுக்கி வண்டியைச் சறுக்க வைத்த ஒரு வயோதிக வண்டிக்காரரை டிராபிக் கான்ஸ்டபிள் 'அறிவு கெட்ட மடையா' என்கிறார். அந்த வயோதிகர் 'வயசானவனை இப்படி அறிவில்லாமக் கேட்கலாமா' என்று கூறாததால், மேற்கொண்டும் வண்டியை அவரால் 'சுதந்திரமாக' ஓட்ட முடிகிறது. ஒரு ஏழையின் சுதந்திரம், அவன் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்படாத போதுதான் தற்காலிகமாகவாவது நிற்கிறது என்ற அரிய உண்மையை உணர்ந்தவன் போல், வீதியில் காலிழந்து நிற்கும் முடவர்களையும், கண்ணிழந்து நிற்கும் கிழவிகளையும், விழி பிதுங்கிய ஏழைகளையும் பார்த்த கண்களோடு, விசேஷ பஸ் ஒன்றில், பெண்களைப் பார்த்து 'சீட்டி' அடித்துக் கொண்டு போகும் ஓர் இளைஞர் கோஷ்டியையும் பார்க்கிறான். கல்யாணமும், கருமாதியும் ஒரே சமயத்தில் நடப்பது போல், கற்காலமும், பிற்காலமும் ஒரே சமயத்தில் இயங்குவது போல் தோன்றிய, கூட - கோபுர - குடிசை வீதியில், பளபளப்பான கார்களும், பாதுகை இல்லாத மனிதர்களும், மலிந்த வீதியில், தனியார் பஸ் ஒன்றில் அடிபட்டு, துணியால் மூடப்பட்டுக் கிடக்கும், ஒரு ஏழையின் சடலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே அந்த ஏழைக் குடும்பம், 'நஷ்ட ஈடு' கேட்டால், தன்னைப் போல் ஏமாறத்திற்கு ஆளாகும் என்ற எண்ணம் எரிச்சலாக, தன்னை அறிந்தவன் போல் சிந்தித்து, அவன் தன்னையறியாமலே பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டான். மழையும் நின்றது; அவனும் நின்றான். திடீரென்று தன் கைகள் பிடிக்கப்படுவதை உணர்ந்து, அவன் தலையை நிமிர்த்தியபோது, கோபால் பெட்டி படுக்கையுடன், அவனை ஒட்டிக்கொண்டு நின்றான். அவனிடம் இவனோ, இவனிடம் அவனோ பேசவில்லை. ஆண்டியின் கண்களையும், நிமிர்ந்து நின்ற மோவாயையும் பார்த்துப் புரிந்து கொண்ட கோபால், அவன் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். இருவரும் மவுனமாக, ஒரு ஹோட்டலுக்குள் போனார்கள். இட்லியில் கை வைத்துவிட்டு, சூடு தாங்கமுடியாமல் கையை உதறிய கோபால், "நெருப்பும் நீதியும் ஒன்று - தொட்டால் ரெண்டுமே சுடுது" என்றான். ஆண்டி எதுவும் மறுமொழி கூறாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு "இதனால தான் நீதியை ஆறப் போடுறாங்க போலுக்கு" என்றான். "என்ன நடந்தது" என்று நேரிடையாகக் கேட்காமல், அவன் ஜாடைமாடையாகப் பேசியதைப் புரிந்தோ அல்லது புரியாமலோ, ஆண்டியப்பன் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காமலே அவனுக்கு அவனே பேசுவது போல் பேசினான். "எனக்கு ஒரு சந்தேகம்! என் தங்கச்சிக்கு எல்லா தாயுங்களுக்கும் வாரதுமாதுரி பிரசவத்திற்குப் பிறவு பால் சுரந்தது. அப்டி பால் சுரந்து, மார்புப் புண்ணோட உபாதை தாங்காமல் கஷ்டப்பட்டாள். அத்தை மகளுக்கு அவஸ்தைப்படும்போது ஆறுதல் சொல்றதுக்காவ மாமா மவள் வந்தாள். அதனால் சாகக்கூடாத மனுஷன் செத்துட்டார். எனக்கு ஒரு சந்தேகம்! ஏழைகளுக்கு நல்லதாய் வாரது கூட கெட்டதாய் முடியுமோ? இல்லன்னா விசாரணைக்குன்னு சந்தோஷமா வந்துட்டு, சவக்களையோடு திரும்ப வேண்டியதிருக்குமா? இல்லன்னா பால்மாடு பழிமாடா மாறுமா?" கோபால் ஆண்டியையே மவுனமாகப் பார்த்தான். அவன் கண்கள் தொலைதூரத்தை துழாவுவதுபோல் பார்ப்பதையும், கைகளிரண்டும் வேல்களாய் மாறியவை போல் குவிந்திருப்பதையும் பார்த்த கோபால், "என்ன நடந்தது?" என்றான். நடந்ததை விவரித்து விட்டு, "தேவடியா மவனுவ என் மாமாவ தூண்டிவிட்டு, மாட்ட பிடிக்க வச்சிட்டு, கடைசில அவரு என்கூடச் சேர்ந்து மாட்டை விற்கதுக்கு நாடகமாடுனதா சொல்றாங்க. இவங்கள என் மாமா போன இடத்துக்கே அனுப்புனால் என்ன? இந்த வார்த்தய கேக்கதுக்காவது என் மாமா செத்துத் தொலைக்காம இருக்கப்படாதா..." என்றான். இதற்குள் சர்வர் வந்து, "ஆட்கள் வார சமயம் சீக்கிரமாக சாப்பிடுங்க" என்றார். ஆண்டி வெடித்தான்: "ஏய்யா... அந்த மேஜையில நாலு பேரு டீ குடிச்ச பிறகும் பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்கள முதல்ல போகச் சொல்லய்யா. அழுக்கு வேட்டிக்காரனைக் கண்டால் ஒன்னை மாதுரி ஏழைக்குக்கூட இளக்காரமாப் போச்சு! எங்க ரெண்டு பேரில கூட என்னைப் பார்த்துதான் கேட்கிற! இந்த நாட்ல ஏழைக்கு ஏழைதாய்யா எதிரி! கவலப்படாத - சீக்கிரமாச் சாப்புடுறோம். அதுக்குள்ள ஒன் மொதலாளி கொட்டப் போற காச எடுத்து துண்டுல கட்டிக்கிடு." சர்வர் ஒதுங்கிக் கொண்டார். இவன் ரவுடி. காசு கொடுக்காமல் சாப்பிட வந்த ரவுடி. பேசப்படாது. கோபாலுக்கு ஆண்டியப்பனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. எப்படி அடக்கமாக இருந்தவன் எப்படி மாறிவிட்டான்! அவனை மேற்கொண்டும் பார்த்தால், தனக்கும் ஆவேசம் வந்துவிடும் என்று பயந்தவன்போல், மடமடவென்று இட்லிகளை விழுங்கினான். சர்வர் பழிவாங்கப் போகிறவர் போல் ஆண்டியிடம் 'பில்லைக்' கொடுத்தார். பயந்து கொண்டுதான் கொடுத்தார். இருவரும் வெளியே வந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குப் போகும் - வெளியே சிங்காரமாகவும், உள்ளே சீரழிந்தும் கிடந்த எக்ஸ்பிரஸ் பஸ் வந்து நின்றது. கோபால் படுக்கையை பஸ்ஸின் 'சைடில்' இருந்த மூடி மறைத்த பள்ளத்தில் போட்டுவிட்டு, சூட்கேஸுடன் பஸ்ஸுக்குள் ஏறினான். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு, வெளியே நின்ற ஆண்டியப்பனின் கைகளிரண்டையும் தன் உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டு புலம்பினான். "என்னை மன்னிச்சிடு ஆண்டி! ஒனக்கே தெரியும்... ஐந்து தங்கைகளையும் நான் தான் கரையேற்றி ஆகணும். அவங்க சார்பில அவங்களுக்காகவே அப்பா என்னை படிக்க வச்சாரு. அதனால் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற இந்த வேலயை என்னால விட முடியல. பாரீன் கம்பெனி; பம்பாய்ல இட நெருக்கடியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த வேலையில் சேர்ந்தால், படிப்படியாய் சம்பளம் கூடும். 'ஒன்னை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போறோமேன்'னு நினைக்கவே கஷ்டமாய் இருக்கு. ஆனால் என்னோட குடும்பக் கஷ்டத்தையும் பார்க்காம இருக்க முடியல. தங்கச்சிகளோட கூலி வேலையில படிச்ச நான், அவங்களுக்குக் கூலி கொடுக்காட்டால், கடவுள் எனக்குக் கூலி கொடுப்பார். ஆனால் ஒண்ணு மட்டும் சத்தியமாச் சொல்றேன். நான் குமார் இல்ல! நான் மாணிக்கம் இல்ல! மானங்கெட்ட மாசானம் இல்ல! ஒன்னப்போல ஒரு ஏழை. ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குனாலும், தங்கச்சிகளுக்காக ஏழையா வாழப்போற பணக்கார ஏழை. நான் என்றைக்குமே ஒன் நண்பன். எங்கே போனாலும் என் மனசு ஒன்கிட்டதான் இருக்கும்... ஒன்கிட்டதான்... ஒன்கிட்ட... ஒன்..." கோபால் அழுகையை அடகக் முடியாமல், அதை, அதன் போக்கில் விட்டான். ஆண்டியப்பன் சிலிர்த்துப் பேசினான்: "அட எதுக்காவப்பா அழுவுற! பொம்புள்ளயளே அழாத இந்தக் காலத்துல நீ ஆம்பிள அழலாமா... அப்படியே அழுதாலும் எனக்காக அழாத! நான் இப்போ துணிஞ்ச கட்டை! இது ஒண்ணு விறகா எரியணும்! இல்லன்னா ஒருவன் தலையிலயாவது விலகாம விழணும்! அழாதப்பா... நீ பம்பாய்க்குப் போய்த்தான் ஆகணும். அஞ்சு தங்கச்சிகளும் ஒன்னையே நம்பியிருக்கையில - நீ நம்பிக்கைத் துரோகம் பண்ணப்படாது. அழாதப்பா... கண்ணைத் துடைச்சு மனசையும் துடைச்சுக்கோ!" பஸ்சில் இருப்பவர்கள் எல்லோரும் தன்னைப் பார்க்கும்படி, கோபால் விம்மிக்கொண்டே பேசினான். கெஞ்சினான். கேவினான். "என் தங்கச்சிகளை, பரமசிவம் - குமார் கோஷ்டி ஏதாவது பண்ணிப்படாதே... ஏற்கெனவே மீசைக்காரனும் குமாரோட தம்பியும் ஜாடைமாடையா கிண்டல் பண்ணுனாங்களாம்... அய்யாவுக்கும் வயசாயிட்டுது." "இந்த உடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்கது வரைக்கும், அந்த ரத்தங்கெட்ட பயலுவளால ஒன் தங்கச்சிமாருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன்னால் எனக்கு பாளை அரிவாள்தான் துணை. சட்டம் என்கிறதை சட்டம் போட்டு வைக்கிற காலத்துல அதை நான் நம்புன காலம் காலமாயிட்டு. இப்போ நானே காலனா மாறிட்டேன்! ஒன் தங்கச்சி ஒருத்தியோட கையையாவது பிடிக்கணுமுன்னு இல்ல - பிடிக்க நினைச்சாலே போதும்... அந்தக் கை ரெண்டா விழும். கவலப்படாமப் போ! இப்போ எந்தக் குணத்தோட இருக்கியோ அந்தக் குணத்தோடயே திரும்பி வா! சின்னப் பிள்ளை மாதுரி அழாத. பாரு... எல்லாரும் வேடிக்க பாக்காங்க பாரு. விருதுநகர்ல போய் முகத்தை அலம்பிக்க." எக்ஸ்பிரஸ் பல்லவன் புறப்பட்டது. கோபால் ஆண்டியின் கைகளைத் தூக்கி முத்தமிட்டான். பஸ் சக்கரங்களும், தார் ரோட்டுக்கு முத்தமிட்டுக் கொண்டே உருண்டன. பஸ் போவது வரைக்கும் ஸ்தம்பித்து நின்ற ஆண்டியப்பனின் கண்கள், அந்த பஸ் மறைந்ததும், நீரை நெருப்புக் குழம்பாக, கீழே சிந்தியது. அதற்குப் போட்டி போடுவது போல், உள்ளம் அக்கினிக் குழம்பாக மாறிக் கொண்டிருந்தது. நெருக்கமானவனின் நிர்ப்பந்தமான பிரிவுத் துயரைவிட, அந்தப் பிரிவினால் நெருக்கமானவனும் காலச் சூழலால், மனதாலும் அந்நியப்பட்டுப் போகலாம் என்ற நட்பின் எதிர்கால அச்சுறுத்தல்தான், அவனை அதிகமாக வாட்டியது. இதே கோபால், அடுத்த ஆண்டு வந்து 'ஹாய் ஆண்டி...' என்று சொல்லிவிட்டு இவனுடைய பதிலுக்குக் காதுகளைக் கொடுக்காமலே போகலாம். இருப்பவன் அவனைப் பொறுத்த அளவில் இறந்தவனாகப் போகலாம். இந்த வகையில் எதிர்காலம் என்பது இறந்த காலமாகலாம். நிகழ்காலம் - நீதி நிகழாத காலமாயிட்டு. காதலித்த மாமன் மகள், கண்முன்னாலேயே மாறிவிட்டாள். கண்முன்னால் நடந்த அநியாயம், வாய்வழி வார்த்தைகளாகக் கூட, ஊரில் வரவில்லை. எதிர்காலம் என்பது எதிரியாக வரும் காலம். சூன்யத்தால் சூழ்ந்தவன் போல் ஆண்டியப்பன் சுற்றிச் சுற்றி வந்தான். ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், தன்னை இழந்தவன் போல், தன்னையே தானே தொலைத்துவிட்டு, தேடுபவன் போல், அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்குப் போவதற்காக, தனித்தனி தடங்களில் நின்று கொண்டிருந்த பஸ்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு, ஊருக்குப் போய், எவனை முதலில் 'பொலி' போடுவது என்று அவன் யோசித்துக் கொண்டே, மூலதனம் தேவை இல்லாத ஒரு திட்டத்தை அவன் தீட்டிக் கொண்டிருந்த போது - பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு அல்வா கடையருகே ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு குமார் ஆண்டியை அடையாளம் காட்டினான். "கோபால் பயலக் காணுமே. அவனதான் மொதல்ல பிடிச்சிப் போடணும்" என்றார் மாசானம். குமார், தலைவன் ஆகையால் ஒரு தாசிக்குரிய போலித்தனத்தோடு பேசினான்: "இன்ஸ்பெக்டர் சார்! அவனை நீங்க கஷ்டப்படுத்தணுமுன்னு நாங்க நினைக்கல! அது எங்களோட நோக்கமும் இல்ல. எங்க உயிருக்கு உத்தரவாதம் வேணும்! அதுதான் எங்க லட்சியம். ஊருக்கு வந்ததும் ஏதாவது செய்திடப்படாதே என்கிற பயத்துலதான் ஒங்ககிட்ட வந்தோம். அவனை பழிவாங்கணும் என்கிற நோக்கத்துல வரல. நல்லவேளை எங்க சித்தி மகன் கூட நீங்க 'டிரெயினிங் மேட்டாய்' இருந்திருக்கீங்க - இல்லன்னா நாங்க தைரியமா ஊருக்குப் போக முடியாது!" இன்ஸ்பெக்டர் ஆறுதல் கூறினார். "நீங்க தைரியமாய் போங்க - நான் பாத்துக்கிறேன்." கார் பறந்தது. போலீஸ்காரர்கள் ஆண்டியப்பனிடம் வந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே ஒரு கான்ஸ்டபிள் அவன் கன்னத்தில் அறைந்தார். இன்னொருவர் பிடரியில் அறைந்தார். இன்ஸ்பெக்டர் விறைத்து நின்ற ஆண்டியப்பனை பார்த்துச் சீறினார். "நீ என்ன பெரிய ரவுடியாடா... ஊர்ல கொலை செய்யுறதுக்கு குத்தகை வாங்கியிருக்கியா... ஒன் கூட்டாளி கோபால் எங்கடா? சொல்றியா... ஒதை தின்னுறியா..." பிரயாணிகளும், ஹோட்டல்களில் பிரியாணி தின்றவர்களும், நின்ற அமர்ந்த இடங்களில் இருந்து அசையாமலே, ஆண்டியப்பனைப் பார்க்க, அவனோ முதலில் செய்வதறியாது திகைத்து, பிறகு சுபாஷ் சந்திரபோஸைப் போல - பாலகங்காதர திலகரைப் போல - பாரதியாரைப் போல - லெனினைப் போல - கண்கள், போலீஸ்காரர்களை சாட்டையடி கொடுப்பது போல, நிமிர்ந்து பார்த்தான். உடம்பில் அடிபட்டாலும் ஆன்மாவில் அடிபடாதது போல், அவன் கம்பீரமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, விவேகானந்தரைப் போல் நின்றான். நேராக நின்றான். போலீஸ் இன்ஸ்பெக்டர் அதட்டினார். "சொல்லுடா, கழுத! ஒன் கூட்டாளிய எங்கே? நீ சொல்லாம ஒன்னை விடப்போறதில்ல. சொல்லுடா..." ஆண்டியப்பன் கம்பீரமாகப் பதில் சொன்னான்: "நான் இந்த நாட்டின் பிரஜை. முதலில் என்னை 'டா' போடாமல் மரியாதை கொடுத்துப் பேசுங்க. என்னை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேளுங்க. அப்புறம் மீதி விவகாரத்தைப் பேசலாம்!" இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போனவர் போல் அவனைப் பார்த்தபோது, கான்ஸ்டபிள் ஒருவர், "இது ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய கேஸ் ஸார்" என்றார். அந்தப் போலீஸ்காரர்கள் நல்லவர்கள். கையில் விலங்கு மாட்டினால், அவனுக்கு வலிக்கும் என்று நினைத்து, அவன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, நன்றாக முறுக்கி, அவன் கைகளைப் பின்புறமாகக் கொண்டு வந்து கட்டினார்கள். அப்போது புறப்படப் போன டவுன் பஸ்சில் அவனை ஏற்றிவிட்டு அவர்களும் ஏறிக் கொண்டார்கள். பஸ்சில் இருந்தவர்கள், 'ஒடம்பு... இப்டி இருக்கே, இவனுல்லாம் எதுக்காகத் திருடணும்' என்று ஒருவருக்கொருவர் திருட்டுத்தனமாகப் பேசிக் கொண்டார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. மேம்பாலத்திற்கு அருகே இருந்த ஒரு ஜவுளிக்கடையில் குமார் கோஷ்டி புடவைகளை விரித்துப் பார்த்தார்கள். கல்யாணத்திற்கு துணி எடுக்கிறார்கள் போலும். ஆண்டியப்பனின் கண்களிலும் அவர்கள் அகப்பட்டார்கள். அவர்களைப் பார்த்து அங்கேயே கர்ஜனை செய்ய வேண்டும் என்பதுபோல் துடித்த ஆண்டி, அந்தத் துடிப்பை கண்களில் மட்டும் ஏவுகணைபோல் விட்டுக் கொண்டான். அவன் நெற்றியைச் சுழித்ததால் ஏற்பட்ட புருவ வளைவுகள், மூன்றாவது கண்போல் மின்னியது. வார்த்தை பிரளயங்களாக வராமல் போன வேகம் , புதியதோர் ஆறுமுகத் தீப்பொறி போல, கண்களை அக்கினிக் கட்டிகளாக்கின. |