உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
18 நினைத்து பார்க்க முடியாத காலத்தில் இருந்து, மற்றவர்களுக்கு நினைவுகளுக்குரிய உணர்வுகளே இல்லாதது மாதிரி, ஒரு சிலரே எல்லாச் சமயத்திலும், பேசிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதுபோல், இப்போது எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். ஊரில் எது எது எப்படி எப்படி நடக்கிறது என்பது தெரிந்திருந்தாலும், அவை பற்றிய தெளிவில்லாமல் காலங் காலமாய் காலத்தைக் கடத்திய ஏழை - பாளைகள், இப்போது தெளிந்தது போல் பேசினார்கள். எல்லோரும் ஒரு சேரக் குழுமிய அந்த இழவு வீட்டில், பல இழவுகள் நிர்ணயிக்கப் படப் போகின்றன என்பது போன்ற வெடிச் சத்தங்கள். அடிவயிற்றின் சூட்டைக் காட்டும் நெருப்புப் பேச்சுகள். இதயத்தைத் துடைத்தெடுத்து, செம்மைப்படுத்தும் வார்த்தை ரவைகள். பிணமாக வாழ்ந்தவர்களை, பிணங்கள் தெளிய வைத்துவிட்டது போன்ற, 'சாகத் துணிந்த' துணிச்சல் பேச்சுகள். சின்னான் சொன்னது போல், தனித்தனி குச்சிகளாக இருந்தவர்கள், இப்போது ஒருசேர விறகுக் கட்டாகிவிட்டதால் ஏற்பட்ட வீரப் பார்வைகள்! வேதாந்தத்திற்குப் பதிலாக வீரத்தை உமிழ்க்கும் வார்த்தைகள்! ஆண்டாண்டு காலமாக, அடிமனத்தில் பய நெருப்பை வைத்துக் கொண்டிருந்த மனிதர்கள், இப்போது அதை நெஞ்சிலே கோப நெருப்பாகக் கொண்டு வந்தார்கள்! மீனாட்சி இறந்ததற்கு, தான் காத்தாயியை அனுப்பியதுவே காரணம் என்று ஊர் முழுமையாகப் புரிந்து கொண்டால், உதை கிடைக்கும் என்று நினைத்து, தனியாக உதை வாங்கத் தயாராக இல்லாத மாசானந்தான், தன் பழைய காதலியின் புருஷனை 'ரிப்போர்ட்' செய்ய வைத்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆண்டியப்பன் விடுதலை செய்யக் கோரி 'கை' கொடுத்தவர்கள், இப்போது 'கை நீட்டவும்' தயாராகிவிட்டார்கள். குனிந்த தலை நிமிராமல், நிர்மலமான தோற்றமும், நெஞ்சைத் தொடும் வாஞ்சையும் கொண்டு வாழ்ந்த மீனாட்சியை, ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை, இறந்த பிறகும் பழிவாங்கத் துடிக்கும் முன்ஸீப்பின் அற்பத்தனம், அவர்களுக்கு ஆவேசத்தைக் கொடுத்தது. இன்றைக்கு மீனாட்சிக்கு நேர்ந்தது, நாளைக்கு தங்களுக்கும் நேரலாம் என்ற அச்ச உணர்வு, 'தாக்கும்' தற்காப்பு உணர்வாகியது. நடைப்பிணங்களாக வாழ்ந்த பெரும்பாலோர், இப்போது தங்களை, அந்தப் பிணத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். உடலெல்லாம் கோபத் தீ பற்றி, மேனி எரிந்து, வாய் வழியாகப் புகை வருவது போல், வார்த்தைகள் அனல் கட்டிகளாயின. "எங்க பிணத்தக் கொண்டு போகுமுன்னால இந்தப் பிணத்தத் தொட முடியாது." "நீங்க மொதல்ல பிணத்த தொடுங்கடா பார்க்கலாம்!" "ஏன்லே பேசிக்கிட்டு இருக்கிய - செறுக்கி மவனுவள தூணுல கட்டி வையுங்கள..." பேசிக் கொண்டிருந்த கூட்டம், திடீரென்று அமைதியாகும்படி, தங்கம்மா விரித்த தலையோடு, விரித்த கரங்களோடு, கோர சொரூபியான காளிபோல, போலீஸ்காரர்கள் முன்னால் வந்து நின்றாள். புருவங்கள் வில்போல் வளைய, நாக்கு அம்புபோல் நீள, அவள் அழுத்தமான அமைதியுடன் போலீஸ்காரர்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்தப் பார்வையின் கோரத்தை விட அதனைத் தூண்டிவிட்ட சோகம் மனதைக் கௌவியிருக்க வேண்டும். சற்று படபடப்பாகவே பேசினார். "நாங்க எங்க கடமயச் செய்யத்தான் வந்தோம்! ஒரு கிராம முன்ஸீப் தற்கொலை நடந்திருக்கதாய் ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க சும்மா இருக்க முடியாது! சும்மா இருந்தோமானால், வீட்ல சும்மா இருக்க வேண்டியது வரும். அதனால வந்தோம்! ஆஸ்பத்திரியில் பிணத்த சோதனை செய்ய வேண்டியதும், அதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்க கடமை." இதற்குள் காத்தாயி சிடுசிடுவென்று அங்கே ஓடிவந்து போலீஸ்காரர்களுக்கு மத்தியில் பாதுகாப்புத் தேடுபவர் போல் நின்ற முன்ஸீப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே வெடித்தாள். "ஏய்யா முன்ஸீப்பு! ஒன் மொகரக் கட்டைக்கு நீயுல்லாம் முன்ஸீப்பாயா? என்ன பாத்து பதில் சொல்லுய்யா! ஒருத்தி தற்கொலை பண்ணணுமுன்னா, தங்கரளிக் கொட்டைய - இல்லன்னா பயிரோனை சாப்புடணும். என் ராசாத்தி படுத்த படுக்கையா கிடந்தாள். நடக்கவே முடியாத அவளால் தோட்டத்துல போய், தங்கரளிக் கொட்டையப் பறிக்க முடியுமாய்யா? தரையில் விழுந்த கையைத் தூக்கி வாய்கிட்ட கொண்டு போவ முடியாத அளவுக்கு இருந்தவளால எப்படிய்யா எழுந்து நடந்து, மருந்து வாங்கியிருக்க முடியும்? கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா... நீ பிணத்த சோதன போடணுமுன்னு எழுதலாமாய்யா... சோதன போடணுமுன்னு நினைச்சா நீ தாங்குவியாய்யா... தூ... நீயில்லாம் - மனுஷன்?" திடீரென்று தெய்வானை ஓடி வந்தாள். இவள் இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்ஸீப்பிடம் வரி கட்டப் போன போது, சில சமாச்சாரங்களை கையுங் களவுமாகக் கண்டவள். "சோதன போடணுமுன்னு எழுதியிருக்கியரே... ஒம்ம வீட்டு சங்கதி தெரியுமா? ஒம்ம மகள் மல்லிகாவோட ரத்தத்த சோதன போட்டுப் பாப்போமா? பாத்தால் அவள் ஒம்ம மவளா - மாசானம் மவளான்னு தெரியும். அதுக்கு நீரு சோதன போடச் சம்மதிச்சா - நாங்க இதுக்கு சம்மதிக்கோம். என் பிள்ளைக்கு பள்ளிக்கூடத்துல சோறு போடலன்னு, ஒம்மகிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்? அப்போ சும்மா இருந்த கை - இப்போ எதுக்காவய்யா எழுதணும். இந்த கைய ஒடிக்க எவ்வளவு நேரமுய்யா ஆகும்? வரிப்பணத்துக்குத்தான் ரசீது தராம தின்னு தொலைக்க! இப்ப பிணத்தயும் தின்னு தொலைக்க நினைக்கியாக்கும்..." கிராம முன்ஸிப்பால் இதற்குமேல் தாங்க முடியவில்லை. கூட்டத்தில் இருந்த 'சொக்காரப்' பயல்கள் கூட சும்மா இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஏதோ சொல்லப்போனார். இதற்குள் ஆண்டியப்பன் அடிமேலடி வைத்து நடந்து சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றான். காத்தாயி, அவன் ஏதாவது செய்துவிடப் போகிறான் என்பது போல் குறுக்கே வந்த போது, வெறுமையுடன் வெறித்துக் கொண்டிருந்த தங்கம்மாவும், ஓரளவு சுயநினைவு பெற்றவளாய், "நீரு பேசாம நில்லும். அய்யா, போலீஸ் மவராசன்மாரே... உயிருக்கே மதிப்பில்லாத ஆஸ்பத்திரியில பிணத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமுன்னு தெரிஞ்சவள் நான். உங்களுக்கு சடலம் வேணுமுன்னா... என் சடலத்தை வேணுமுன்னா எடுத்துக்கிட்டுப் போங்க! எங்க மயினி..." தங்கம்மாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். முகத்தில் அடித்துக் கொண்டாள். ஆண்டியப்பன் அவளை இழுத்து தன் இடுப்புப் பக்கமாக இணைத்துக் கொண்டிருந்தபோது கூட்டம் கோபமாக எழுந்திருக்கப் போனது. ஆண்டியப்பன் கூட்டத்தினரைக் கம்பீரமாகக் கையசைத்து, சும்மா இருக்கும்படி சமிக்ஞை செய்துவிட்டு, ஆணியடிப்பது போல் பேசினான்: "சப்-இன்ஸ்பெக்டர் சார், இது தற்கொலை இல்ல. இது கொலை ஸார். நீங்க கண்டுபிடிக்க முடியாத அப்படிக் கண்டு பிடிச்சாலும் வழக்கு போட முடியாத கொல ஸார்! என் தங்கச்சிக்கு மார்புல கட்டி வந்தவுடனே, நான் சர்க்கார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன். அங்கே டாக்டர் இல்ல. டாக்டர் இருந்த சமயத்துல மருந்து இல்ல. அந்த ஆஸ்பத்திரியில அவள கவனிச்சிருந்தால் செத்திருக்க மாட்டாள். இந்தப் பாழாய்போற மாட்ட நான் மந்திரி கையால வாங்காமல் இருந்திருந்தால், நானுண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருப்பேன். கிடைக்கிற கூலியில தங்கச்சிக்கு மருந்து வாங்கியிருப்பேன். இவள் செத்திருக்க மாட்டாள். இந்த மாட்டு விவகாரத்த அதிகாரிங்க இழுத்தடிக்காம ஒழுங்கா விசாரிச்சிருந்தால், நானும் இவளோட விவகாரத்த பாத்திருப்பேன். இவளும் செத்திருக்க மாட்டாள். என் தாய் மாமா மகள் மேல, இந்த முன்ஸீப்போட மகள் அபாண்டமா பழி சொல்லாமல் இருந்திருந்தால், என் மாமன் செத்திருக்க மாட்டாரு. இவள் என் தங்கச்சிய கவனிச்சிருப்பாள். அவளும் செத்திருக்க மாட்டாள். "சரி. இந்தக் காத்தாயி புருஷனை போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா மாசானம் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த உடன்பிறவா சகோதரி - என்னோட சகோதரிய ஆஸ்பத்திரியில சேர்த்து பிழைக்க வச்சிருப்பாள். சரி தொலையட்டும். என்னையாவது ஒங்க ஆட்கள் கையைக் கட்டி போலீஸ் ஸ்டேஷன்ல வைக்காட்டால், நான் ஓடோடி வந்து - என்னோட உடன்பிறப்ப காப்பாத்தி இருப்பேன். செத்திருக்க மாட்டாள். அதனால இது கொலை! தற்கொலை இல்ல! கர்ணனை எல்லாருமாய் கொஞ்சங் கொஞ்சமாய் கொன்னது மாதிரி என்னோட தங்கச்சிய சர்க்கார் டாக்டருங்க, அதிகாரிங்க, என்னோட சுத்திக்கிட்டு இருந்த பயலுவ, அந்த மாசானம், இந்த முன்சீப்பு இப்டி எல்லோருமாய் கொலை பண்ணிட்டாங்க. ஒங்களால கேஸ் போட முடியுமா ஸார்..." சற்று நேரத்திற்கு முன்பு தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்ட தங்கம்மா, இப்போது இன்னொரு அவதாரம் எடுத்தவள் போல் கர்ஜித்தாள்: "போலீஸ் எசமானுவளே! என் அத்தை மகன, ஒங்க ஆட்கள் - சர்க்கார் துணிமணியள போட்டுருக்கிற திமிறுல, அவங்களுக்குத்தான் கை காலு இருக்கது மாதிரி அடி அடின்னு அடிச்சி, மிதிமிதின்னு மிதிச்சிருக்காங்க. இன்னா பாருங்க, இந்த மனுஷனோட கையில் காயத்த, உதடு கிழிஞ்சி இருக்கத பாருங்க! வலது கண்ணு வீங்கி இருக்கத பாருங்க! தனியா அகப்பட்டவர்னு அடிச்சிட்டாங்க - இப்போ எங்க கையும் காலும் ஒங்க மேலபட்டால், எங்கள இப்போ கேக்கது யாரு? ஒங்களுக்கு இளநீர் வெட்டிக் குடுத்த பரமசிவம் வருவானா? இல்ல, ஒங்கள மிரட்டி பணியவச்ச குமாரு வருவானா? இப்போ உங்க உயிரு - எங்க கையில! யாரு கையில? சொல்லுங்க எசமான் மாரே?" இப்போது கூட்டம் - கும்பலாக மாறியது. எல்லோரும் எழுந்து போலீஸ்காரர்களைப் பார்த்து முண்டியடித்து முன்னேறினார்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், நிதானம் கலையாத ஒருசிலர், 'பொறுங்கடா பொறுங்கடா' என்று முரட்டுத்தனமாகப் போனவர்களை இழுத்துப் பிடிக்க, கூட்டத்தில் அகப்பட்ட குழந்தைகள் கூக்குரலிட, பிணமான மீனாட்சி, கோபந்தணியாத கண்ணகிபோல் தோன்ற, ஒரே அமளி... ஒரே கூச்சல்... சப்-இன்ஸ்பெக்டர் பயந்து விட்டார். போலீஸ்காரர்கள் தவித்தார்கள். முன்சீப் தோலுரித்த வாழைப்பழம்போல் துவண்டார். ரிவால்வரை எடுக்கக்கூட இடமில்லாதபடி முண்டியடித்த கூட்டத்திற்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், "கொஞ்ச நேரம் சும்மா இருங்க" என்ற பலமான குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். சின்னானும், கோபாலும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களைப் பார்த்த கும்பல், மீண்டும் கூட்டமாகி, அவர்கள் போலீஸ்காரர்களிடம் போவதற்கு வழி விட்டது. கோபால், தன் கையில் வைத்திருந்த சூட்கேஸை ஒரு ஓரமாக வைத்தான். சின்னான் அமைதியாகப் பேசினான். "நடந்ததை வழியில் கேள்விப்பட்டேன். நீங்கள் போலீஸ்காரர்களை அடிக்கப் போறது தப்பு! அவங்க அவங்களோட கடமையைச் செய்ய வந்திருக்காங்க." "அவங்கள அடிக்கப் போகலப்பா... இந்த முன்ஸீப் பயல அடிக்கப் போனோம்! செறுக்கி மவனோட மிளகாய் தலைய பறிக்காம விடமாட்டோம். ஓஹோன்னானாம்..." "அதுவும் தப்பு! முன்ஸீப், போலீஸ்காரர்கள், பண்ணையாருங்க தங்களோட பதவியையும், பணத்தயும் தப்பா பயன்படுத்துறது எப்படித் தப்போ, அப்படி நாம அடிக்கப் போறதும் தப்பு! அவங்க ஏழைகள் மேல் அதிகாரத்த ஏவிவிடுகிறது எப்படிச் சுரண்டலோ, அப்படி நிர்க்கதியா மாட்டிக்கிட்ட தனிமனிதர்களை, நாம் மெஜாரிட்டியாய் இருக்கோம் என்கிறதுக்காக அடிக்கிறதும் சுரண்டல்தான்! இதனால நிர்க்கதியாய் நிற்கிற நாமதான் மேலும் நிர்க்கதியாய் நிற்கணும்!" சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசினார்: "நாங்க முன்ஸீப் ரிப்போர்ட் கொடுத்ததால வந்தோம். இப்போ மீனாட்சி இயற்கையாகவே மரணமடைந்தாள் என்கிறது புரிந்துட்டு, பஞ்சாயத்தார் இப்படி தீர்ப்பளித்துவிட்டதாய் ரிக்கார்டை குளோஸ் பண்ணிருவேன். ஒங்க இஷ்டப்படி நீங்க அடக்கம் பண்ணிக்கலாம். யோவ், முன்ஸீப்பு - ஒன்னோட பதவித் திமுறுல, விவகாரம் எப்படி விபரீதமாய் மாறிட்டு பாத்தியா? தாசில்தார்கிட்ட சொல்லி ஒன்னை என்ன பண்றேன் பாரு? ஒன்னை மாதுரி அறிவுகெட்டவங்க, சின்னச் சின்ன பதவியில இருக்கதாலத்தான் பெரிய பதவியில இருக்கவங்களும் அறிவு கெட்டவனா போயிட்டாங்க." சமயோசித புத்தி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதோடு நிற்கவில்லை. மீனாட்சிப் பிணத்திற்கு அருகே சென்று, தன் தொப்பியைக் கழற்றி, கையில் வைத்துக் கொண்டு, சிறிது நேரம் மௌனமாக தலை கவிழ்ந்து நின்றார். இதைப் பார்த்த போலீஸ்காரர்களும், தங்கள் தொப்பிகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஐந்து நிமிடத்திற்கு முன்பு ஆவேசப்பட்ட அத்தனை பேரும், மனத்துக்குள் அழுதவர்களாய், கண்களில் பொங்கி, கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்தவர்களாய், அப்படியே குலுங்கிப் போய் நின்றார்கள். இந்த சாக்கில் முன்ஸீப் வெளியேறிவிட்டார். இதுவரை அழாமலும் அழுகைக்குரிய அடையாளங்களைக் காட்டாமலும் இருந்த ஆண்டியப்பன், அந்த ஜன சமுத்திர பாச சாகரத்தில், ஆவேசச் சூட்டைத் தணித்துக் கொண்டவன் போல் முதன்முறையாக அழுதான். "மீனாட்சி, ஒனக்காக எத்தனை பேரு அழுவுறாங்க பாரு மீனாட்சி, அனாதையாச் செத்தாலும், இப்போ ஒன்னை மகள் மாதுரி ஜனங்க நினைக்கிறதப் பாக்க மாட்டியா மீனாட்சி? ஒனக்காவ கூடியிருக்கிற இந்தக் கூட்டத்த, ஒரு தடவ பாத்துட்டு, அப்புறமா கண்ண மூடு மீனாட்சி. நாம அனாதை இல்ல மீனாட்சி. ஒருவேளை அண்ணன் அனாதையா நிக்கப்படாதுன்னு - நீயே தெய்வமாகி இவங்கள கொண்டு வந்தியா மீனாட்சி? யாருமே எட்டிப் பார்க்காமல் போன வீட்டுக்குக் கூட்டம் வரணுமுன்னு நினைச்சே செத்தியா? சாகும்போது என்னை நினைச்சியாம்மா... அண்ணன், அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேன்னு கலங்குனியாம்மா... உயிர் போவும்போது - உன் மனசு என்ன பாடுபட்டுதோ! என்னெல்லாம் நினைச்சுதோ! நம்மள மாதுரி ஏழையளுக்கு மனசுன்னே ஒண்ணு இருக்கப்படாது மீனாட்சி - இருக்கப் படாது!" எவரோ இரண்டு பேர் ஆண்டியப்பனைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்து போனார்கள். சப்-இன்ஸ்பெட்கர் கண் கலங்கியவராய் சின்னானைப் பார்த்து, "அப்போ நான் வரட்டுமா ஸார் - டோண்ட் ஒர்ரி! ரிக்கார்டை குளோஸ் பண்ணிடுறேன்" என்றார். சின்னான் உடம்பை அசைக்காமலே, அசைக்க முடியாதபடி பதிலளித்தான்: "மீனாட்சியோட ரிக்கார்டை நீங்க குளோஸ் பண்ணுங்க! ஆனால் அவள் ரிக்கார்டை நாங்க இனிமேல் தான் துவக்கப் போறோம்! ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ஒங்களுக்கு பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க முடியல!" போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள். வாதமடக்கிக் கம்புகள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டு, தென்னை ஓலைகள் விரிக்கப்பட்டன. நாவிதர், 'பிணத்த தூக்குங்கய்யா' என்று சொல்லிக் கொண்டே, கண்ணீரை, கையிலுள்ள சங்காலேயே லாவகமாக துடைத்துக் கொண்டு, சங்கு ஊதினார். உடம்பைச் சிலிர்த்த ஓசை, மனிதனின் ஜீவ மரணக் கணக்கை முடிப்பது போல் ஓங்காரமாக ஒலித்த ஓசைக்கிடையே, மீனாட்சி பாடையில் கிடத்தப்பட்டாள். நாவிதரின் பையன் நிலக்கரிகள் போடப்பட்டு, நெருப்பு மூட்டம் செய்யப்பட்ட கலயத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டான். இதற்குள் மீனாட்சியின் புருஷனும், அவன் அம்மா இதர வகையறாக்களும் வந்துவிட்டார்கள். புருஷன்காரன் அம்மாவுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான். பாடையை நான்குபேர் தூக்கினார்கள். ஆண்டியப்பனையும் நான்குபேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மாவை நான்கு பேர் அணைத்துக் கொண்டார்கள். பிணம் கொண்டு செல்லப்படுவதை, பரமசிவம் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டே மாசானம், குமார், மல்லிகா, பரமசிவம் மகள் ஆகிய நான்கு பேரும் பார்த்தார்கள். நான்கும், நான்கும் ஒன்றைக் கழிக்காமல் பெருக்கும் என்பதுபோல் பெருங்கூட்டம், பிணத்திற்குப் பின்னால் போனது. முதன்முறையாக, மெத்தை போலிருந்த படுக்கையில் படுக்கக் கொடுத்து வைத்த மீனாட்சி, சுடுகாட்டில், ஏற்கெனவே விறகுகள் அடுக்கப்பட்டிருந்த அடுக்கில் வைக்கப்பட்டாள். அவளது குழந்தைக்கு மொட்டையடிக்கப்பட்டது. அந்தச் சின்னஞ்சிறு குழந்தை அம்மாவை விநோதமாகப் பார்த்தது. இதுதான் அம்மாவைப் பார்க்கும் இறுதியான தருணம் என்பது தெரியாமல், அது உறுதியோடு பார்த்தது. அம்மா இருந்தால், கோயில் குளத்தில் எடுக்கவேண்டிய 'பிறந்த முடி' - தாயவள், மடியில் வைத்துப் பிடித்திருக்க, தாய்மாமன் முறுவலிக்க, தகப்பன் சிரிக்க, தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டிய பிறந்த முடியை, தெய்வமாகிய அம்மாவிற்கே கொடுக்க வேண்டிய அவலநிலை தெரியாமல், அந்தக் குழந்தை சிரிக்கக்கூடச் செய்தது. 'தாயில்லாப் பிள்ளை ஊர் சிரிக்க ஆகும்' என்ற உண்மை தெரியாமல் அது சிரித்தது. "குழந்தய, சிதைக்குக் கொள்ளி வைக்கச் சொல்லுங்கய்யா" என்றார் நாவிதர். ஆண்டியப்பன் இடுப்பில் இருந்த குழந்தையுடன் சிதையை நெருங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. நான்குபேர் தள்ளிக்கொண்டு போனார்கள். குழந்தையின் கையில், கொள்ளிக்கட்டை கொடுக்கப்பட்டது. அதன் கையையும், கட்டையையும் சேர்த்து ஒருவர் ஒப்புக்கு சிதையருகே கொண்டு போனார். ஆண்டி கதறினான். அவனையும், குழந்தையையும் முன்னால் கொண்டு வந்தவர்கள், இப்போது பின்னால் கொண்டு போனார்கள். சிதையில் தீ பிடித்தது! சிதையில் மட்டுமா? |