2

     கிட்டத்தட்ட அந்த ஓலை வீட்டின் உயரத்திற்கு காண்டாமிருகத்தின் கம்பீரத்தோடு, காட்டு யானையின் வாளிப்போடு, பச்சை வண்ண மேனியில் பால்வண்ணப் புள்ளிகள், அங்குமிங்குமாக அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகள் போல் காட்சியளிக்கத் தோன்றிய அந்த ஜெர்ஸி கலப்பினப் பசுவையும், சற்றுத் தொலைவில் ராட்சதக் கருவண்டு போல் காட்சியளிக்கும் அந்தக் கன்றையும் ஆண்டியப்பன் கண்கொட்டாது பார்த்தான்.

     கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், வெட்னரி டாக்டரின் ஆமோதிப்பில், பெங்களூர்ல் இருந்து வாங்கி வரப்பட்ட அந்த மாடு, தொலைவில் கட்டப்பட்டிருக்கும் தன் கன்றை நக்குவதற்குத் திமிறி, அது முடியாமல் போகவே கட்டிக் கொண்ட கயிற்றை, நாக்கால் தடவியது. பின்பு வாய் வலித்ததாலோ, என்னவோ தான் பிணைக்கப்பட்டிருக்கும் வாதமடக்கி மரத்தை முட்டியது.

     ஆண்டியப்பனுக்கு, மனம் கேட்கவில்லை. கை கால்களை உதறிக்கொண்டே எழுந்து கன்றை அவிழ்த்து, மாட்டின் நாக்குப் படும் இடத்தில் கட்டிவிட்டு, மாட்டை ஒரு கையாலும் கன்றை ஒரு கையாலும் தடவிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில் இளமையிலேயே, 'பதவி ஆசை' பிடித்து சிவலோகம் போய்ச் சேர்ந்த தன் அன்னையையும் வீட்டுக்குள் கைக்குழந்தையுடன் மார்பில் ஏற்பட்ட கட்டிகளால் அழாமல் அழுதுகொண்டிருக்கும் தங்கை மீனாட்சியையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு தடவை தங்கையைப் பார்த்து, அவளுள் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்று நினைத்தவனாய் வீட்டுக்குள் போனான்.

     சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓலைப் பெட்டியில் இருந்த புண்ணாக்கை எடுத்துக்கொண்டு வந்து, விளிம்பு உடைந்த மண்பானையில் அதை நீரிட்டுக் கலக்கி, மாட்டின் முன்னால் வைத்தான். அந்த சீமைப்பசு சாப்பிடுவதைப் பார்த்து தான், தனக்குப் பிடித்தமான கோழிக்கறியை சாப்பிட்டுவிட்ட திருப்தியில், தன்னையறியாமலேயே, வாயைத் துடைத்த போது, தங்கம்மா அங்கே வந்து நின்றாள்.

     அவளை, ஆண்டியப்பன் கவனிக்கவில்லை என்பதை அவள் கவனிக்கவில்லை. அத்தை மகன், தன்னை அலட்சியப்படுத்துகிறான் என்பது போல், சிறிது கோபப்பட்டது போல், தன் வீட்டுக்குத் திரும்பப் போகப் போவது போல், லேசாகத் திரும்பினாள். அப்படியும், அவன் பார்க்காததால், இப்போது அவள் செருமினாள். தலை நிமிர்ந்த ஆண்டியப்பனைப் பார்த்து "மாடு வந்துட்டு... இனும ஒமக்கு கண்ணு தெரியுமா?" என்றாள் - தன் கண்களை மாட்டின் மீதும், மச்சான் மீதும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே.

     சுத்தி செய்யப்படாத வைரம்போல், நாட்டுக்கட்டை மேனியில், பருவம் 'சன்மைக்கா போல்' பளபளக்க, நூல் புடவையிலும் நூதனமாக விளங்கிய மாமன் மகளிடம், ஆண்டியப்பன் சிரித்துக் கொண்டே பேசினானா அல்லது பேசிக்கொண்டே சிரித்தானா என்பது, விவாதத்துக்குரியது. பேசினான், சிரித்தான். சிரித்தான், பேசினான்.

     "என்ன சொன்ன?"

     "மாடு வந்துட்டு... இனும, மவராசனுக்குக் கண்ணு தெரியுமா?"

     "நீ வந்தத சொல்லுதியா?"

     "என்னைப் பார்த்தா ஒமக்கு மாடு மாதிரி தெரியுதா?"

     "ஆமாம். நீ எனக்கு என்னைக்குமே காராம்மணிப்பசு. காமதேனுப் பெரும் பசு. இந்த மாட்டுக்கு இந்தப் புண்ணாக்கு எப்படியோ, அப்படி நீ எனக்கு."

     "சரியான புண்ணாக்கு மாடன். இந்த மாட்ட வசக்க முடிஞ்சது. எங்கம்மாவ மட்டும் முடியல."

     "முடியற காரியமா! புலிய வசக்குற சர்க்கஸ்காரனால கூட ஒம்மாவ வசக்க முடியாதே! பாவம்! எங்க மாமனே ஒம்மாக்கிட்ட குட்டுப்பட்டு குட்டுப்பட்டு கூனாப் போயிட்டாரே! ஒம்மா... சரியான..."

     "இதுக்குமேலே எங்கம்மாவ பேசுனா... எனக்குக் கெட்ட கோபம் வரும்."

     "ஒனக்குக் கோபம் வந்தால், எனக்கு யோகம் வந்தது மாதுரி. தலையில குட்டுவ, கையில கிள்ளுவ, எப்படியோ, உன் கை என்மேல பட்டா சரிதான்..."

     "நான் எதுக்காவ சொல்லுதேன் என்கிறத, நீரு விளையாட்டா எடுத்துக்கிட்டா அப்புறம் நாம பழகுனதும் விளையாட்டா போயிடும்"

     "பொறு தங்கம்மா... இந்த மாட்ட கட்டியாச்சு; உன்னைக் கட்டுறதுதானா பெரிசு? ஒம்மாவ பாலால குளிப்பாட்டி, ஒய்யாவ நெய்யால குளிப்பாட்டி, நீ, என்னைக் குளிப்பாட்டும்படியான காலம் வரப்போவுது..."

     "மாட்ட, பரமசிவம் கேட்கலியா?"

     "ரெண்டு தடவ ஆள் வந்தது. தர முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த மீசக்காரன் மாட்ட 'அவுக்கப்' போனான். நான் அருவாள எடுத்தேன். திரும்பிப் பாராம போயிட்டான். வேலக்காரனுக்கு, வேலைக்காரனே எதிரியா மாறுறான் பாரு. சர்க்காருல ஏழ எளியவங்களுக்காவ கொடுக்கிற கறவ மாட்டையும், உழவு மாட்டயும், மற்ற பொருளயும் - பண்ணையாருங்க அமுக்கப் பாக்கதுல என்ன நியாயம்? உதாரணமா இந்த மாடு மூவாயிரம் ரூவா. இதுல சர்க்கார் மட்டும் ஆயிரம் ரூவா இனாமா கொடுக்குது. இதுக்காவ, நம்ம பேர்ல வாங்கச் சொல்லி, அவங்க அனுபவிக்கணுமுன்னா என்ன நியாயம்? அதுலயும் அவங்க விட்டு வச்சதத்தான் நாம எடுக்கோம். கர்ணம், பொண்டாட்டி பேருக்கு ஒரு மாடு வாங்கியிருக்காரு. அந்த அம்மா சிறு விவசாயியாம்... மிராசுதார் குமாரசாமி, காலேஜ்ல படிக்கற பேரன் பேருல உழவு மாடு வாங்கியிருக்காரு. அவன் மிகச் சிறு விவசாயியாம்... இப்டி எல்லா பணக்காரனும், பொண்டாட்டி பிள்ளியள கூட பிச்சக்காரங்களா ஜோடிச்சதுல, இப்போ கிராமத்துல எவன் பிச்சக்காரன், எவன் பிரபுன்னே சர்க்காருக்குத் தெரியல!"

     "அநியாயமா இருக்கே!"

     "நம்ம ஆளுங்களச் சொல்லு... முனுசாமி, தான் வாங்கின வண்டிய குமாரசாமிகிட்ட கொடுத்துட்டான். ராமசாமி, நெற்குதிர வாங்கி, சரோஜாகிட்ட ஒப்படைச்சுட்டான். இன்னைக்கி பரமசிவம் வீட்ல பண்ணைக்காரங்க மேடையில வாங்குனத எல்லாம் - அவரு வீட்ல போட்டுட்டு வாராங்க ஊரு எப்டி உருப்படும்? வீட்டு முன்னாலயே, முளையுறவங்கள வச்சி என்ன பண்ண?"

     "எங்கய்யா கூட உழவு மாட்ட பரமசிவம் வீட்ல கட்டிட்டு வந்துட்டார். போதாக்குறைக்கி நான் மல்லிகா கிட்ட 'தெரியாம திட்டிட்டேன்னு' மன்னிப்புக் கேக்கணுமுன்னு ஒத்தக் காலுல நிக்காரு. நான் ரெண்டு காலுல இங்க வந்துட்டேன்."

     "ஒய்யாவ மாதிரி ஆளுவளாலதான் ஊரே குட்டிச் சுவராப் போச்சு! பரமசிவத்துக்கு, செருப்புத் தைக்கதுக்காவவே உடம்புல தோல வச்சிருக்க மனுஷன். ஆனால் நான் அப்படி இல்ல. ஆனானப்பட்ட மல்லிகாவயே அடிக்காத குறையா பேசுன தங்கம்மாவோட அத்த மகன்."

     "எங்கய்யா இல்லாம நான் எப்படி வந்துட்டேன்? அது கிடக்கட்டும். இனிமேல், இது ஒம்ம மாடு சரிதான?"

     "நம்ம மாடுன்னு சொல்லு பிள்ள..."

     "மணவறத் தட்டுல இருக்கிற பொண்ணு மாப்பிள்ளயளே மாறிப்போற காலத்துல கழுத்துல தாலி ஏறுமுன்னால, நான் அப்டிச் சொல்லப் போறதில்ல. அண்ணிக்கு எப்டி இருக்கு?"

     ஆண்டியப்பன், அவளை முறைத்துப் பார்த்தான். பிரித்துப் பேசும் அவளிடம், 'ஒம்மா புத்திதான ஒனக்கும் இருக்கும்' என்று சொல்லப் போனவன், கோபத்தை அடக்கிக் கொண்டு, வார்த்தைகளை விடக்கூடாதவன் போல், உதட்டைக் கடித்தபோது, தங்கம்மா, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மாட்டைத் தடவி விடுவது போல், அதன் முதுகைத் தடவிவிட்டு, அந்தச் சாக்கில் மாட்டின் முதுகின் மீது வந்திருந்த அவன் கையருகே, தன் கையைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு வந்து, அவன் கையைப் பிடித்து, லேசாக வருடிக்கொண்டே, "இப்படிச் சொன்னாலாவது ஒமக்கு ரோஷம் வந்து, சுந்தரிய, அபிமன்யூ கூட்டிகிட்டு போனதுமாதிரி, என்னைக் கொண்டு வருவீரான்னு பாக்கேன்" என்றாள்.

     பிறகு அவன் கைமேல், தன் கை 'அதுக்காக' படவில்லை என்று காட்டும் வகையில், "அண்ணி எப்படி இருக்காவ?" என்றாள்.

     அவனும் அவள் மேற்கொண்டு எதையாவது பேசி இப்போது ஏற்பட்ட நெருடலின் நெகிழ்வை கலைத்துவிடக் கூடாது என்று நினைத்தோ அல்லது தங்கையின் நிலையைக் கருதியோ "வீட்டுக்குள்ள சின்னான் அக்காளோட எதையோ முனங்கிக்கிட்டு இருக்காள். போயிப் பாரு" என்றான்.

     தங்கம்மா, துள்ளிக் குதித்துப் போனபோது, ஆண்டியப்பனின் மனமும் துள்ளிக் குதித்தது இந்தப் பசுமாடு, எட்டு லிட்டர் பால் கறக்குது. பதினாலு ரூபாய்; சங்கத்துல பால் வாங்காமப் போனாலும் பரவாயில்ல. வெளியில விற்றுப் பணத்தைக் கட்டலாம். ஐந்து ரூபாய் லோன்ல கழிந்தால், ஐந்து ரூபாய் மாட்டுத் தீவனத்துக்குப் போய்விட்டால், தினம் நாலு ரூபாய். மாதம் நூற்றிருபது ரூபாய். தங்கை மகனுக்கு, இனிமேல் நாடிமுத்து பயக்கிட்ட வாங்குற தண்ணிப் பாலுக்குப் பதிலா நிஜப்பால கொடுக்கலாம். சேருற பணத்துல, தங்கச்சியோட மூக்குத்திய மீட்டணும். ஒரு 'அட்டியல்' செய்து போடணும். அதை அவள் கழுத்துல மாட்டி, 'முறச்சிக்கிட்டு' இருக்கிற அவள் புருஷன்கிட்ட கெஞ்சி கூத்தாடடி, ஒப்படைச்சுடணும்.

     பரமசிவம், அகங்காரம் பிடித்த மனிதர். நாலு நாளாய் வெளியூர்ல இருக்கார். ஊருக்கு வந்ததும், மாட்டை விட்டு வைப்பாரா? இந்த சொசைட்டி பயலுவ கூட, பாலக் கொண்டு போனால், வாங்கமாட்டேன்னுட்டாங்களே... எல்லாம் கூட்டுக் கள்ளங்க! பாத்துப்புடலாம் மாடாச்சு... இல்லன்னா உயிராச்சு.

     ஆறு மாதத்திற்கு முன்பு பரமசிவம், ஆண்டியப்பனிடம், "இதுல ஒரு கையெழுத்துப் போடுடா... சொசைட்டில மாமா ஒன்னச் சேர்க்கப் போறேன்னு" சொல்லி அவனிடம் ஒரு கையெழுத்து வாங்கினார். பிறகு, தன் சட்டைப் பையில் இருந்து, இருபத்தோரு ரூபாய் நீட்டி, "இத உன் பேர்ல சொசைட்டில கட்டிடு" என்றார். மறுநாள் ஆண்டியப்பன், "இந்தாரும் மாமா பத்து ரூபா. மீதி பதினோரு ரூபாய வேல பாத்து கழிச்சுடுறேன்" என்றான்.

     பரமசிவம், வாரத்துக்கு நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி வாங்கும் அந்த வள்ளல், "ஒன் பணம் வேற - என் பணம் வேறயால" என்று பதறிச் சொன்னபோது, ஆண்டி, "தாயா பிள்ளையா இருந்தாலும் வாய் வயிறு வேறதான் மாமா" என்று பக்குவமாகச் சொல்லி, பணத்தை அவர் பைக்குள் திணித்துவிட்டான்.

     அப்புறம், ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான். புராஜெக்ட் ஆபீஸர், அவனுக்கு, நிலமில்லாத ஏழை என்பதற்கு அடையாளமாக ஒரு 'எல்' கார்ட் கொடுத்தார். பச்சை நிறம். தபால் கார்ட் அளவு. அவன் பெயர், முகவரி எல்லாம் அதில் உள்ளன. அந்த கார்டுக்காகவும், கூட்டறவு சங்கத்தில் உறுப்பினர் ஆனதாலும், மாடு கிடைத்திருக்கிறது. அப்ளிகேஷனில் போட்ட கையெழுத்து, அவன் சொந்தக் கையெழுத்து. இந்த மாடும் அவனுக்கே சொந்தம். என்ன வந்தாலும் சரி... முடியாது, கொடுக்க முடியாது.

     உள்ளத்தில் ஒரு பக்கம் உறுதி தோன்றினாலும், இன்னொரு பக்கம் கவலை தோன்றியது. படித்த இளைஞர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தைத் துவக்கியபோது அதிகமாக ஆனந்தப்பட்டவன் ஆண்டியப்பன். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் குமார், மேடையில் பேசிய விதம், அவனுக்கு தன்னை யாரோ குரல்வளையை நெரிப்பது போலிருந்தது.

     வாங்கிய மாட்டைக் கட்டிவிட்டு அவன் ஊர்ப் பாலத்திற்குப் போனான். அவன் போகுமுன்பே, பெரிய கலாட்டா. குமார் பங்காளிகளும், மாணிக்கம் பங்காளிகளும் ஒருவரை ஒருவர் அடிக்கப் போனார்கள். இளைஞர் மோதல், ஊர்ச் சண்டையாக மாறுமளவிற்குப் போய்விட்டது. கடைசியில் ஆண்டியப்பன் தான் 'விலக்கு'த் தீர்த்தான்.

     இப்போது குமார், 'இளைஞர் பெரும்பணி மன்றம்' என்று ஒன்றைத் துவக்கி இருக்கிறான். பஞ்சாயத்துத் தலைவருடன் பேசிக்கொண்டும், அவர் மகள் பத்மாவைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறானாம். அமைச்சருடன் அரை நிமிடம் பேசியதால் அவனுக்கு புதிய செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. வேலை தேடி அலையும் எல்லாப் பயல்களும் அவன் மன்றத்தில் சேர்ந்ததால் ஒரிஜினல் மன்றம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாகப் போய்க் கொண்டிருந்தது.

     சிந்தனையில் இருந்து விடுபடாமலே அவன் எழுந்தான். வீட்டுத் திண்ணைக்கு வந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.

     உள்ளே அவன் தங்கை மீனாட்சி மல்லாந்து படுத்துக் கிடந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆனால் அவளால் பால் கொடுக்க முடியாத அளவுக்கு மார்பகத்தில் கட்டிகள் வந்தன. ஆளை வண்டியில் ஏற்றி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கூட்டிப் போனான். அங்கே டாக்டர்கள் இல்லை. அதே டவுனில் 'பிராக்டீஸ்' பண்ணப் போய்விட்டார்களாம்.

     என்ன செய்வதென்று தெரியாமல், அவன் தவித்த போது ஆஸ்பத்திரி ஆயா, அவர்களை கடுமையாக பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே மீனாட்சிக்கு இன்னொரு கட்டி வரும் போலிருந்தது. இறுதியில் 'மூக்குத்தியை' மார்வாடியிடம் அடகு வைத்து, பிரைவேட் டாக்டரிடம் காட்டினான். மீனாட்சிக்கு புண் ஓரளவு சுகப்பட்டாலும், வலி நிற்கவில்லை வேறு வழியில்லாமல், மீண்டும் போனான். அப்போது முன்பிருந்த ஆயாகூட இல்லை.

     ஆண்டியப்பன், தன் 'வெள்ளிக்கொடியை' அடகு வைத்து, 'பிரைவேட் டாக்டரிடம்' போனான். சுரந்த பால் வெளியேற முடியாமல் இருப்பதால், வலியெடுப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டாக்டர், பால் சுரக்காமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இந்த வகையில், இருநூறு ரூபாய் செலவாகி விட்டது. இப்படி அவன் கடன்பட்டதுக்கு, சரியாகப் பணி செய்யாத அரசாங்க டாக்டர்களே காரணம் என்று அவன் நினைக்க நினைக்க, தன்னிடம், ஒவ்வொரு டாக்டரும் கடன்பட்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

     ஆண்டியப்பன் திண்ணையில் நின்றபடியே உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்து நின்றான்.

     சின்னானின் அக்கா காத்தாயி, தன் கைப்பிள்ளையை தங்கம்மாவிடம் கொடுத்துவிட்டு, மீனாட்சியின் குழந்தையை எடுத்து, பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே, கொத்தவரைக்காய் போல் இருக்கும் இந்த ஹரிஜனப் பெண், தன் நோஞ்சான் பிள்ளைக்கே பாலில்லாத இந்த இளம் பெண், தங்கையின் பிள்ளைக்குப் பால் கொடுப்பதை நினைக்க நினைக்க ஆண்டியப்பனுக்கு, அவள் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது போலவும், அவளைப் பார்த்து 'அம்மா அம்மா' என்று கத்த வேண்டும் போலவும் தோன்றியது. மீனாட்சி, காத்தாயியிடம் புலம்புவது, அவனுக்கு நன்றாகக் கேட்டது.

     "பாரு காத்தாயி, அந்த மனுஷன் குழந்தய பாக்க வந்தாரா, இல்ல என் மூக்குத்திய பாக்க வந்தாரான்னு தெரியல. வந்ததும் வராததுமா 'மூக்குத்திய எங்க'ன்னு கேட்டாரு. நான் பதில் சொல்லுறதுக்கு முன்னாலயே 'ஒண்ணன் வித்துத் தின்னுப்புட்டானா - பெருச்சாளிப் பயன்னு' தாம் தூமுன்னு குதிச்சிட்டுப் போயிட்டாரு. பிள்ளையப் பாக்கவே இல்லை பிள்ளைய."

     "அழாதீங்கம்மா... அதுக்காவ நீங்க 'எங்கண்ணன் நடந்துபோற தூசில, அறுந்துபோற தூசிக்கு பெறுவியரா? எங்கண்ணன சொன்னா ஒம்ம வாயில கட்டி வரு'முன்னு சொல்லியிருக்கப்படாது. இப்போ அவருக்கு வாயில கட்டி வந்திருக்காம். யாரையும் திட்ட முடியலியாம். நேற்று குட்டாம்பட்டிக்கு பெட்டி விக்கப் போன எங்க பெரிய்யா மவள் சொர்ணம் சொன்னாள்."

     மீனாட்சி பதறினாள்.

     "அய்யய்யோ கட்டி வந்துருக்காம? காத்தாயி, நீ நல்லா இருப்ப. இப்பவே போயி பார்த்துட்டு வருவியா. நான் சண்டாளி. எந்த நேரத்துல வாய் திறந்தேனோ, பாவி மனுஷன் எப்படிச் சாப்பிடுவார்? வயித்துக்குள்ள ஒண்ணுமில்லாத சமயத்துல, வாய்க்குள்ள கெட்ட வார்த்தய வச்சுக்கிட்டு துப்புற மனுஷனாச்சே காத்தாயி-காத்தாயி..."

     "சும்மா கிடங்கம்மா. கட்டுன பெண்டாட்டியையும் பெத்த பிள்ளையையும் விட மூக்குத்திய பெரிசா நினைச்ச மனுஷன் கொஞ்ச நாளைக்கி லோலு படட்டும்."

     "அப்படிச் சொல்லாத காத்தாயி. அவரு நல்ல மனுஷன் தான். சின்னப்பிள்ளை மாதுரி சூதுவாது தெரியாத மனுஷன். ஆனால் என் மாமியார் இருக்காளே, அவதான் மூளியலங்காரி... மூதேவி சண்டாளி... அவள் போடுற சாம்பிராணி புகையிலதான், இந்த மனுஷன் குதிப்பாரு. அப்புறம், அழுதுகிட்டு இருக்கிற என்கிட்ட வந்து என் கண்ணத் துடைச்சிட்டு, ரகசியமா வாங்கி வந்த அல்வாவ வாயில் ஊட்டுவாரு."

     மீனாட்சி, வெட்கப்பட்டுக் கண்களைப் 'பொத்திக்' கொண்டாள். காத்தாயியின் குழந்தைக்கு முத்தமாரி பொழிந்து கொண்டிருந்த தங்கம்மா, அண்ணியையே பார்த்தாள். உடனே அவளுக்கு ஆண்டியப்பனின் நினைவு 'தற்செயலாக' வர, வெளியே எட்டுப் பார்த்து, சுவரோடு, சுவராக நின்ற ஆண்டியப்பனை அதட்டினாள்.

     "பொம்புளய பேசுற இடத்துல உமக்கென்ன வேல...?"

     ஆண்டியப்பன், தனக்கு வேலை இருப்பதுபோல், உள்ளே வந்தான். தங்கையைப் பார்த்து, "கவலைப்படாத - நானே போய் மாப்பிள்ளய பார்த்துட்டு வாரேன்" என்றதும், அல்வா சமாசாரம் அண்ணனுக்கும் தெரிந்துவிட்டதே என்று நாணப்பட்டாள்.

     காத்தாயி, அவனை அதட்டினாள்.

     "ஒமக்குக் கொஞ்சங்கூட பொறுப்பில்ல முதலாளி. ஒம்மாலதான் மீனாட்சியும், அது குழந்தையும் அவஸ்தப்படுது. பறச்சிகிட்ட பால் குடிச்ச பிள்ளன்னு ஊருல கிண்டல் பண்ணுவாங்க"

     "செறுக்கி மவனுவள - கையக் கால ஒடிக்கேன். ஆமா, நீ பால் கொடுக்கதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?"

     "பின்ன என்னய்யா? நீரு காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா ஒம்ம பெண்டாட்டி இந்நேரம் ஒரு பிள்ளய பெத்திருப்பாவ. மீனாட்சியம்மா மவனுக்கும் பால் கெடச்சிருக்கும்."

     "நான் கல்யாணம் செஞ்சி, வீட்டுக்காரி இவள்கிட்ட சண்டை போட்டிருந்தா நீயே என்னைப் பிடிபிடின்னு பிடிச்சி திட்டியிருப்ப."

     "எங்கயாவது மாமா மகள், அத்த மகன்கிட்ட சண்ட போடுமா - நம்ம தங்கம்மா தங்கக் கம்பியா..."

     "நான் தங்கம்மாவதான் கட்டியிருப்பேன்னு சொல்லுதியா..."

     "நீரு விட்டாலும், அது விடாது என்கிட்ட ஒம்மப்பத்தி எவ்வளவு ஆசயோட சொல்லியிருக்கு தெரியுமா..."

     "சரி, நீ சொல்றபடியே காலா காலத்துல இவளக் கல்யாணம் செஞ்சிட்டாலும் இவள் இதுக்குள்ள பிள்ள பெத்திருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? முதல் பிள்ளைக்கு அவசரப்படக் கூடாதுன்னு என்கிட்டயே எத்தனை தடவ சொல்லியிருக்கா தெரியுமா...?"

     தங்கம்மாவின் முகம் சிவந்தது. அப்போதே கல்யாணம் நடந்து, அப்போதே குழந்தை பிறந்துவிட்டது போல், தரையையே பார்த்தாள். பிறகு சிலிர்த்தெழுந்து "ஏன் பொய் சொல்றீரு - ஒம்ம மூஞ்சி" என்று சொல்லிவிட்டு, வெளியே 'ஓடப்போனாள்'. அதற்குள் வாசல் பக்கம் அடைக்கலசாமி நின்றதால், அய்யாவின் முகத்தில் விழிக்கப் பயந்து, உள்ளேயே ஒடுங்கிக் கொண்டாள்.

     அடைக்கலசாமி, உள்ளே வந்தார். ஆண்டியப்பன் சற்று ஒதுங்கி உட்கார்ந்து கொண்டு "உட்காரும் மாமா" என்றான். தான் பேசியது, மாமாவுக்குக் கேட்டிருக்குமோ என்று சங்கோஜம். அதேசமயம், நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வரும் மாமனுக்கு உறைக்கட்டும் என்ற குறும்புத்தனம்.

     அடைக்கலசாமி, தான் எடுத்து வளர்த்த தங்கை மகள் மீனாட்சியை ஆதரவாகப் பார்த்துக் கொண்டே "இப்ப எப்படியம்மா இருக்கு? ஆண்டி அந்த மருந்துச் சீட்ட எடுடா எங்கிட்ட கொஞ்சம் பணமிருக்கு. கோணச்சத்திரத்தில வாங்கிட்டு வாரேன்" என்றார்.

     "ஒம்ம செலவுக்கு?"

     "இருக்கிற செலவப் பார்த்தால் கையில இருக்கிற காசு பத்தாது. அதெல்லாம் பாக்க முடியுமா... என் தங்கச்சி மவள் எழுந்து உட்கார்ந்தா எனக்கு எழுபதாயிரம் ரூபா கிடைச்சது மாதிரி. அப்புறம், மாட்ட ஏண்டா பரமசிவம் வீட்ல கட்டல?"

     "எந்த மாட்ட மாமா?"

     "என்னடா தெரியாதது மாதிரி கேக்குற. நீ ஒப்படைச்சிடுவேன்னு - நம்பிக்கையா ஒன்ன வாங்கச் சொன்ன மாட்ட, நீ வச்சிக்கிட்டு இருக்கது நம்பிக்கத் துரோகண்டா..."

     "நான் செய்தது நம்பிக்கத் துரோகமில்ல மாமா! சர்க்கார்ல ஏழைங்களுக்காவ கொடுக்கிற மாடுங்கள, ஏமாத்தி வாங்குற பரமசிவந்தான் நம்பிக்கைத் துரோகி!"

     "இப்போ நீ மாட்ட விடப்போறியா இல்லியாடா?"

     "என் மாட்ட நான் எதுக்காவ விடணும்?"

     "நான் சொல்லியும் விடமாட்டியா?"

     "நீரு ஒம்ம வீட்டுக்குக் கேட்டிருந்தா, நானே கொண்டு வந்து கட்டியிருப்பேன். இப்போ நீரு தாய் மாமனா வரல - பரமசிவத்தோட வேலக்காரனா வந்திருக்கியரு..."

     "நான் சொல்றதக் கேளு. அவ்வளவு பெரிய சபையில, மந்திரி கையால மாடு கொடுத்து கவுரவம் பண்ணுனவருக்கு துரோகம் பண்ணப்படாது!"

     "அது கவுரவம் இல்ல மாமா! கோயிலுல வெட்டப் போற கிடாவுக்கு கொம்புல பூ சுத்துனது மாதுரி."

     "ஒனக்கு எவன் கொம்பு சீவியிருக்கான்னு எனக்குத் தெரியும். ஒப்பன் புத்திதான ஒனக்கும் இருக்கும். அவன், கள்ளத் தேங்காய் பறிச்சவன் தான்..."

     "மாமா! எங்கய்யாவ பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும். அதுவும் பரமசிவம் வேலைக்காரனா வந்துக்கிட்டு..."

     "ஒன்கிட்ட என்ன பேச்சி. நான் பரமசிவத்தோட உப்பத் தின்னவன். அவரு சொன்னது மாதுரி, மாட்ட அவுக்கப் போறேன். நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்க! அவுத்துத் தாறீயா - நானே அவுத்துக்கிடட்டுமா...?"

     "அவுக்கிற கையி, துண்டா விழும். அது யாரு கையா இருந்தாலுஞ் சரி."

     "பாத்துப்புடலாம்..."

     அடைக்கலசாமி, ஆவேசமாக வெளியே வந்து மாட்டின் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். ஆண்டியப்பனும், 'முற்றத்தில்' கிடந்த ஒரு பாளை அரிவாளை எடுத்துக் கொண்டு, மாமனை நெருங்கினான்.