உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
21 பழைய ஊர்ச் சாவடிக் கட்டடத்திற்கு அருகே உள்ள புதிய கட்டடத்திற்கு முன்னால் கூட்டம் போய் நின்றது. கூட்டுறவுச் சங்கக் கட்டடம் அது. சத்தத்தைக் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கூட்டுறவுத் தலைவர், தற்செயலாகக் கதவைத் திறந்தார். ஏதோ கிறிஸ்தவர்கள் பாடிக்கொண்டு போவதாக நினைத்த தலைவர், ஆண்டியப்பனைப் பார்த்துவிட்டு, அந்தப் பயத்திலேயே அவனை அடுத்து நிற்பவர்களைப் பார்க்க விரும்பாமல், கதவைச் சாத்தப் போனார். கதவின் ஒரு பகுதியை மூடிவிட்டு, இன்னொரு பகுதியை மூடப்போன போது, பிச்சாண்டி அவரையும் அந்தக் கதவையும் ஒருசேர இழுத்தான். "விட்டுடுப்பா - வாரேன்" என்று தலைவர் கத்த, பிச்சாண்டியின் இரும்புப் பிடி, வெண்ணெய்ப் பிடியாக, தலைவர் வெளியே வந்து இரண்டு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் கொண்டு போய் வைத்துக் கொண்டு, "நீங்க என்ன சொன்னாலும் கேக்கேன்! எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையும் மோசம் பண்ணிட்டானுவ. நீங்க என்ன செய்தாலும், எனக்குச் சந்தோஷந்தான்" என்றார் அழுதுகொண்டே. சின்னான் அதட்டினான்: "இப்போ அழுவுறீர்! அப்போ இந்த ஆண்டி அழுதான்! அவன் தங்கச்சி அழமுடியாத இடத்துக்குப் போயிட்டா! ஒரு வார்த்த பரமசிவத்த தட்டிக் கேட்டீரா? அநியாயத்த தட்டிக் கேக்காதவன் முதுகயும் தட்டிப் பார்க்கிற காலம் வந்துகிட்டு இருக்குய்யா... கூட்டுறவ... குடும்ப உறவா ஆக்கின ஒம்ம இப்போ என்ன செய்யப் போறோம் தெரியுமா?" "சபையில நான் தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்! என்ன சொன்னாலும் செய்யுறேன்! நானே ஒங்ககிட்டே வரப்போற சமயத்துல நீங்க என்கிட்ட வந்திருக்கிங்க." "யோவ், இது சபை - கூட்டுறவுச் சங்கமில்ல. இந்தத் தளுக்குப் பேச்சில்லாம் வேண்டாம்." "என்ன செய்யணும் சொல்லுங்க." "சரி பேரேட்ட எடும். எத்தன பேரு வீட்ல - எத்தன பேரு பேர்ல - எத்தன மாடு இருக்கு. விவசாயக் கருவி இருக்குன்னுச் சொல்லணும். பேரேட்ட எடுத்துக்கிட்டு வாரும். உம் சீக்கிரம்." கூட்டு(றவு)த் தலைவர், பைண்ட் செய்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். ஆண்டியப்பன் அதட்டினான்: "கதவப் பூட்டிட்டு வாரும்வே! இல்லன்னா குமார் பய சங்கத்த கொள்ளையடிச்சிட்டு பழிய எங்க மேல போடுவான்." சின்னானுக்கு திடீரென்று ஒரு யோசனை. "கேஷ் புக்கை கொண்டு வாரும்." தலைவர் உள்ளே போய், கேஷ் புக்கைக் கொண்டு வந்தார். அதன் அட்டை பழைய காலணா நாணயம் போல் மங்கியிருந்தது. சின்னான் அவரது கைகளிலேயே அந்த நோட்டு இருக்கும்படி பிரித்துக்கொண்டு, "கேஷ் பாலன்ஸ் ஆயிரம் ரூபாய் பதினைஞ்சி காசு இருக்கணும். இருக்கா?" என்றான். "அது வந்து..." "நாங்க திருட்டுக் கூட்டம் இல்லய்யா... பணத்தத் தொடமாட்டோம். பேலன்ஸ் பணம் இருக்கான்னு செக் பண்றதுக்காகத்தான் கேட்டேன்!" "அது வந்து... ஒரு அவசரமுன்னு மாசானம் ராத்திரி ஐந்நூறு கேட்டான்." "மீதி ஐந்நூறு ரூபாய் பதினைஞ்சி காசு?" "குமார் அவசரமுன்னு..." "ஏய்யா, கூட்டுறவுன்னா என்னென்னு தெரியுமாய்யா? ஊரே ஒரு குடும்பமாய் இருந்து எல்லாத் தொழிலையும் செய்யுறதுக்காக அமைக்கப்பட்ட லட்சியம் கூட்டுறவு. காக்கா கூட ஒண்ணாச் சாப்புடுது. மனுஷனும் ஒண்ணா உழைத்து ஒண்ணாச் சாப்பிடக்கூடாதா என்கிற கேள்விக்கு விடைதாய்யா கூட்டுறவு. காக்காவப் பார்த்து கத்துக்கிடுறதுக்குப் பதிலா 'காக்கா' பிடிக்கதுக்குக் கூட்டுறவுச் சங்கத்த பயன்படுத்தலாமாய்யா." கோபால் ஒரு காலை தரையில் தேய்த்துக் கொண்டே கத்தினான்: "புதுசா இவன் கட்டுன வீட்டுல கூட்டுறவுப் பணம் எவ்வளவு போயிருக்குன்னு கேளு சின்னான்! இவன அடிச்சாத்தான் உள்ளத சொல்லுவான்!" சின்னான் கோபாலை கையமர்த்தினான். கூட்டுறவுத் தலைவர் உடம்பெல்லாம் நடுங்கியது. மார்கழிக் குளிரிலும் உடம்பு வியர்க்க வெலவெலத்து நின்றார். உயிர் இப்போது 'பினாமி மாதிரி, ஒட்டியும் ஒட்டாமலும் நிற்பதுபோல், சவக்களை படர, தவளை மாதிரி தலையைத் தூக்கிப் பார்த்தார். முடியவில்லை. சின்னான் அமைதியாகப் பேசினான்: "சரி ஒம்மச் சொல்லிக் குற்றமில்ல. கண்ணு முன்னால பல கூட்டுறவுச் சங்கத்த மோசடி பண்ணுனவங்க, பளபளக்கிற கார்ல போறதப் பார்த்த நீரு, கஸ்டம்ஸ்ல இருந்து வந்த துணிகள, பெண்டு பிள்ளிகளுக்கு கொடுத்ததுலயோ - சர்க்கரய தென்காசியிலேயே வித்ததுலயோ - தப்பில்ல; தப்பு எங்க மேலத்தான். ஸ்டாக் ரிஜிஸ்டர் இருக்காவே? சர்க்கரை மூட்டை இருப்பு எவ்வளவு இருக்கணும்? ரிஜிஸ்டர்ல இருக்கிறபடி இருக்கா?" "பரமசிவம் வீட்டுக் கல்யாண வகைக்காவ..." "ஆயிரம் இழவுல ஒரு கல்யாணத்த நடத்துறவங்க கூட, இன்னும் நீரு சேரப் போறீரா?" "சாமி சத்தியமா மாட்டேன்!" "சரி. அப்படின்னா கூட்டத்துக்கு முன்னால நடயும்... பேரேட்ட வச்சிக்கிடும். ஒவ்வொருவனும் எத எத, யார் யார் பேர்ல வாங்கியிருக்கான்னு சொல்லணும்... சொல்லுவீரா?" "சொல்லாட்டா காலுல கிடக்கிறத தூக்கி தலயில அடி!" "இவன் சொன்னாலும் அடிக்கணும். சொல்லாட்டாலும் அடிக்கணும்." "நம்ம வாயில் இருந்து இந்த மாதிரி வார்த்த வரப்படாது. சரி நடயும்." கூட்டுறவுச் சங்கத் தலைவர் - பலருக்கு, பல மாடுகளை ஏழைகள் பேரில் வாங்கிக் கொடுத்தவர், இப்போது மாடு மாதிரி முன்னால் நடந்தார். 'வேகமா நடயும்வே' என்று கூட்டம், ஒரே குரலில் சொல்ல, அவரும் ஒரே காலில் நடப்பவர் போல் ஓடினார். கூட்டம் போய்க் கொண்டிருந்தபோது, ஓவர்ஸியருடன், வேகமாக நடந்துகொண்டிருந்த மாசானம், திரும்பிப் பார்த்துவிட்டு, திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, ஓடப்போனார். அவரால் முன்பு உதைபட்ட பிச்சாண்டி, கையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வைத்துக்கொண்டு, "ஏல, ரெண்டு பயலுவளும் மரியாதியா நில்லுங்க. இல்லன்னா இந்தக் கல்லால ஒரே போடு" என்று சொல்லிவிட்டு, கையைக் கிரிக்கெட் ஆட்டக்காரன் மாதிரி தூக்கியபோது, மாசானமும், பஞ்சாயத்து யூனியன் ஓவர்ஸியரும், அந்தக் கல், தலைக்குமேல் போகட்டும் என்பதுபோல் குனிந்து கொண்டே நின்றார்கள். கூட்டம் அங்கே போவது வரைக்கும், மண் நோக்கி நின்றார்கள்; புலியைப் பார்த்ததும், ஓட நினைத்தும், ஓட முடியாமல், அப்படியே குன்றிப் போய் நிற்கும் ஒட்டகம் மாதிரி! கோபால் ஓவர்ஸியரை அதட்டினான்: "கையில என்னதுய்யா..." "எம் புக்... யூனியன் ரோடுகளப் பற்றிய கணக்கு." "அது எனக்குத் தெரியும். இப்டிக் கொடுங்க." கோபால் ஓவர்ஸீயர் கொடுத்த 'எம்' புக்கைப் புரட்டிப் பார்த்தான். "ஆமாம். சேரில ரோடு போட்டதா எழுதியிருக்கு - எப்பய்யா போட்டியரு? குளத்துப் பக்கத்துல கல்வெர்ட் கட்டுனதா இருக்கு - எப்போய்யா போட்டியரு? நீரு கெட்டிக்காரன் - பேப்பர்ல ரோடு போடுறதுல. ஒங்கள மிஞ்ச முடியாது போலுக்கே. அவனவன், போட்ட ரோட்ல கொஞ்சம் மாற்றி எழுதி அட்ஜெஸ்ட் பண்ணுவான். நீ போடாமலே எழுதிட்ட! உண்மையிலேயே நீ ஸ்பெஷலிஸ்டுய்யா... சீ நீயில்லாம்..." காத்தாயி கத்தினாள். "ஓவர்ஸியர் எஜமான், எங்க சேரில ரோடு போட இடமே இல்ல. இல்லாத இடத்துல ஒம்மால எப்டி ரோடு போட முடிஞ்சது? இப்படி ஏழை எளியவங்க வரிப் பணத்துல வாழ்றதவிட நீரு - ஒம்ம பெண்டாட்டிய கூட்டிக் கொடுத்துப் பிழைக்கலாம் எசமான். வழி தெரியாத ஜனங்களுக்கு, நீரு வழி போட்டு நல்லாத்தான் வழி காட்டியிருக்கியரு. அய்யா, நம்ம சேரில வந்து, பாவம் கஷ்டப்பட்டு- மாசானம் மவராசன் போட்ட ரோட்ட அளந்து பாத்திருக்காரு பாருங்க... ஏய் சின்னான், சாமிக்கு ஒரு கலர் உடச்சி கொடு. தூ... எங்களுக்கு நல்லது பண்ணக்கூட வேண்டாம் - நல்லது பண்ணுனதாச் சொல்லாமலாவது இருக்கப்படாதா?" ஓவர்ஸியர் தலைகவிழ்ந்து நின்றார். அவர் போட்டிருந்த டெர்லின் சட்டையும், டபுள் நெட் பேண்டும், தனியாகக் கழன்று விழுந்து நிர்வாணமாக நிற்பதுபோல் தலைகவிழ்ந்து நின்றார். மாசானம் கொடுத்த பணத்தில் வாங்கிய ஆடைகள், அவரது மானத்தை மறைக்க முடியாமல் வியர்வையை உறிஞ்சி, உப்பின. கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, தூக்குக் கயிறு போல் அழுத்தியது. சின்னான் பொறுமையோடு பேசினான்: "நானும் போனவாரம் வரைக்கும் கவர்மென்ட் சர்வண்ட்தான் ஸார்! நமக்கு சம்பளம் குறைவுன்னாலும் அரசாங்கம் நம்மை நம்பி லட்சக்கணக்கான பணத்தை, நம்ம பொறுப்புல கொடுத்திருக்கு. நாமதான் சேவை செய்யத் தகுதியானவங்கன்னு நாம படிச்சிருக்க படிப்பை நம்பி, பொறுப்பை கொடுக்குது. சர்க்கார் என்கிறது ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்ல. அது நாலரைக் கோடி தமிழ் மக்கள். அறுபது கோடி இந்திய மக்கள். இந்த அறுபது கோடி மக்களோட பணத்துல, நாம ஒரு காசு எடுத்தாலும் - அது நம்ம பெண்டு பிள்ளைகள அறுபது கோடி பேருக்கும் கூட்டிக் கொடுக்கதுக்குச் சமானம். இப்ப ஒம்ம போலீஸ்ல ஒப்படைச்சிடலாம்... ஒம்ம குடும்பந்தான் நடுத்தெருவுல நிக்கும். ஒம்ம இடத்துக்கு ஒரு யோக்கியன் வந்தாலும் ஒரு மாதத்துல அயோக்கியனாயிடுவான். தனிப்பட்ட சொத்துரிமை இருக்கது வரைக்கும் இந்த மாதிரி அதிகாரிகள் தான் இருப்பாங்க. ஒவ்வொருவனும் தன் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு அரசியல்வாதிய பைக்குள்ள போட்டுக்குறான். அதிகாரி - அரசியல்வாதி பைக்குள்ளவும், அரசியல்வாதி - அதிகாரி பைக்குள்ளயுமாய் இருந்துக்கிட்டு, அரசாங்க பைக்குள்ள கையைப் போடுற காலம் - ஒங்கள மாதிரி ஆட்களுக்குத்தான் மேல் அதிகாரிங்க கிட்டயும் நல்ல பேரு கிடைக்கும். நீங்கதான் இஷ்டமான இடத்துக்கு, இஷ்டமான சமயத்துக்குப் போக முடியும். சரி, எதுக்காவ அழுகிறீங்க? அப்படியே அழுதாலும் - இந்த சமூக அமைப்புக்காக அழும். நாங்க ஒம்ம அடிக்க மாட்டோம் - அழாதேயும்!" ஆண்டி குறுக்கிட்டான்: "இவனுவ, அடிச்சா வலிக்குமேன்னுதான் அழுவாங்களே தவிர, மானம் போகுதேன்னு அழமாட்டாங்க. மானங்கெட்ட பயலுவ!" "பொது பணத்த ஒருவன் அபகரிக்கும்போது ஒவ்வொரு பிரஜையும் - தன் சொந்தப் பணம் போறது மாதிரி துடிச்சா இந்த மாதிரி நடக்காது. அப்படி எவனும் துடிக்கவும் இல்ல. துடிக்கவும் மாட்டான். ஏன்னா பொது வாழ்க்கை வேறு. சொந்த வாழ்க்கை வேறு என்று இரண்டு நிலை இருக்கது வரைக்கும், ரெட்டை வேடமும், ரெண்டுங் கெட்டான் வேடமும் இருக்கத்தான் செய்யும். யோவ் மாசானம், இவருக்குக் காசு கொடுக்கதுக்காக கூட்டுறவுச் சங்கப் பணத்த வாங்கியிருக்கியரே நியாயமாய்யா!" மாசானம் சமாளித்துக் கொண்டே பேசினார். "தப்புத்தான். ஆனால் ரெண்டு கை தட்டினால் தான் ஓசை கிடைக்கும்." "எந்த ஓசையில சொல்றீரு..." "இதை வெளிப்படையா சொல்லணுமா?" "உதை வேண்டாமுன்னால் சொல்லும். பொதுப் பணத்த எடுக்கது அயோக்கியத்தனம் தெரியுமா..." "வட்டிக்கு விடுறது?" "என்னய்யா சொல்லுத?" "கூட்டுறவுத் தலைவர் சும்மாத் தரல - வட்டிக்குத்தான் தந்தார்! ஐயேஞ்சு இருபத்தஞ்சு ரூபாய எடுத்துக்கிட்டுத்தான் தந்தாரு." எல்லோரும் கூட்டுறவுத் தலைவரைப் பார்த்தார்கள். அவர் பல்லைக் கடித்துக் கொண்டே, "இவன் - பிச்சாண்டி பேர்ல போன வருஷத்துக்கு முந்தின வருஷம் ஒரு கறவ மாடு வாங்கினான்" என்றார். பிச்சாண்டி துள்ளினான்: "ஒப்பன உதைக்கிற பயல! என் மாட்டத் தாறியா... இல்ல ஒன் கழுத்துல கயிறு கட்டி என் வீட்டுத் தொழுவுல கட்டட்டுமா?" மாசானம் அறுக்கப் போகிற ஆடு மாதிரி விழித்தார். அதே அந்த ஆடு கூட்டுறவுத் தலைவரை, ஓநாய் மாதிரியும் பார்த்தது. முத்துக்கருப்பன் கத்தினான். கையை ஓங்கினான். "என்னை போலீஸ் பிடிச்சதா புரளிய கிளப்பி விட்டிருக்கியே. நீ உருப்படுவியா...?" சின்னான் மீண்டும் அமைதியாகப் பேசினான்: "அடிபட வேண்டியது மாசானம் அல்ல; அவனைப் போன்றவர்களை உருவாக்கும் சமூக அமைப்பே!" "சரி, சரி. நீரு - அந்த மாட்டை பிச்சாண்டிகிட்ட கொடுத்துடும்." சின்னானின் அமைதியான வார்த்தைகளுக்குப் பின்னால் 'தர்ம அடி', 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட மாசானம், விடுவிடென்று நடந்தார். கூட்டம் அவர் பின்னால் நடந்தது. ஓவர்ஸியர் மட்டும் அங்கேயே நின்றார். கோபால் கையிலுள்ள 'எம்' புக்கை 'எம் புக்கு' என்று சொல்ல முடியாமல், நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டம் அவரைக் கண்டுங்காணாமல் நகர்ந்தது. மாசானம் தொழுவில் கட்டியிருந்த, கறவை மாட்டை அவிழ்த்து பிச்சாண்டியிடம் நீட்ட, அவன் "என் தொழுவுல கட்டுவே" என்று சொல்ல, அவன் மனைவி, இடையில் ஏதாவது நடந்து, வலிய வந்த மாடு போய்விடக்கூடாது என்ற பயத்தில், "சும்மா கிடயுமே - ஒரு மனுஷன ஒரேயடியாய்யா அவமானப்படுத்துறது" என்று சொல்லிக் கொண்டே மாட்டை வாங்கிக் கொண்டாள். "இவன் என்னை தென்னை மரத்துல கட்டி வச்சத மறந்துட்டியாடி?" "இவன் ஒரு பொட்டத் தென்னை. இப்பதான் நல்லா 'அனுபவிக்கான்' - கட்டையில போறவன விட்டுத் தொலையும்." பிச்சாண்டி 'விட்டுத் தொலைக்கவில்லை' - இடும்பன்சாமியையும், இன்னும் இரண்டு பேர்களையும் கூட்டிக் கொண்டு, மாசானம் வீட்டுக்குள் போய், பத்து நெல் மூட்டைகளை முதுகில் வைத்துத் தூக்கி, கூட்டத்தின் மத்தியில் போட்டான். ஆளுக்கொருவராய் நெல் மூட்டைகளைத் தூக்கி அருகே இருந்த இடும்பன்சாமியின் வீட்டில் போட்டுவிட்டு சின்னத்துரை வீட்டைப் பார்த்துப் போனார்கள். அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரியான கண்ணாடி ஆசிரியை சிலுவைக் குறியைத் தூக்கி, ஜீசஸுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே, கூட்டத்தில் சேர்ந்தாள். கூட்டம் மானேஜர் ஜம்புலிங்கப் பயலை, கவனிக்காமலா இருக்கும்! சின்னத்துரையின் வீட்டு முன்னால் கூட்டம் ஒட்டு மொத்தமாக நின்றபோது, உள்ளே குளித்துக் கொண்டிருந்த 'பிணவியாபாரி' ஈரத்துண்டை கட்டிக்கொண்டே வந்தார். சின்னான் ஆவேசமாகப் பேசினான்: "ஒம்மக்கிட்ட பேசிக்கிட்டு நிற்க நேரமில்ல. நயினாரம்மாவுக்கும், மூக்கையா பெண்டாட்டிக்கும், மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வேணும். கொண்டு வந்து தாறீரா- நாங்களே எடுத்துக்கட்டுமா? கொஞ்சம் பொறூங்கப்பா... அவரு விவேகி - வெட்டு விழுமுன்னு தெரியும்." சின்னத்துரை பிரமை பிடித்து நின்றபோது, "போய் எடுத்துக்கிட்டு வாரும்வே" என்று சொல்லிக்கொண்டே, முனியாண்டி அவரைத் தள்ளினான். "அவரு செஞ்சதெல்லாம் தப்புத்தான்... நான் தாரேன்." உள்ளே இருந்து சத்தங் கொடுத்த அவர் மனைவி பணத்துடன் வந்தாள். சின்னான் வாங்கிக் கொண்டே, சின்னத்துரையை அதட்டினான். "ஒம்மோட செல்ல மகன் குமார் எங்கவே... அந்த மாபெரும் தலைவரை நான் இப்போ பார்க்கணும்." தாய்க்காரி கெஞ்சினாள். சின்னத்துரை பிரமையில் இருந்து விடுபடவில்லை. "சின்னான், ஒன்கிட்ட பிச்சை கேக்கேன். புத்தி கெட்ட பய - என் முகத்துக்காவ..." "கவலப்படாதிங்கம்மா... நாங்க எங்களக் காக்குறக் கூட்டமே தவிர, தாக்குற கூட்டமில்ல. என் அம்மாவ மாதிரித்தான், நீங்களும் அவனைப் பெத்து வளர்த்திருப்பீங்கன்னு தெரியும்." சின்னத்துரையின் மனைவி கையெடுத்துக் கும்பிட்ட போது கூட்டம் நகர்ந்தது. மாசானமும், கூட்டுறவுத் தலைவரும் கூட்டத்தின் முன்னால் வருவதைப் பார்த்துப் புரிந்துகொண்ட பண்ணையார்கள், ஜனசக்தியின் வெப்பம் தாங்க மாட்டாதவர்களாய் தத்தம் வீடுகளில் உள்ள 'பினாமி' விவசாயக் கருவிகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள். கூட்டுறவுத் தலைவர் ஒவ்வொருவர் வீட்டு முன்னாலும் நின்று, "இவன் வீட்ல குப்பனோட மாடு இருக்கு. ராமதுரையோட குதிரு இருக்கு" என்று படிப்பதும், உடனே சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட பொருள்களையும் மாடுகளையும், தானாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டு முன்னால் தலைவர் படிப்பதைக் கேட்கவும், பண்ணையார்கள் கொண்டு வந்து போடுவதைப் பார்க்கவும், கூட்டத்திற்கு ரம்மியமாக இருந்தது. சிலர் அவசரத்தில் தங்கள் நிஜப் பெயருக்கு வாங்கிய போஸ் கலப்பைகளைக்கூட கொண்டு வந்து போட்டார்கள். கூட்டத்திலிருந்தவர்களில் பலர், தாங்கள் 'ஒருநாள் ராஜாவாக' இருந்து ஆட்சி செய்த கறவை மாடுகளையும், உழவு மாடுகளையும் தாங்களே அவிழ்த்துக் கொண்டார்கள். அவ்வளவு பெரிய கூட்டமும், சின்ன சத்தங்கூட இல்லாமல், அசுரத்தனமான அமைதியோடும், கறவை மாடுகளுடனும், விவசாயக் கருவிகளுடனும், பழைய பஞ்சாயத்து பரமசிவத்தின் வீட்டின் முன்னால் வந்து நின்றது. பழைய காலத்துக் கட்டிடம், உறுதியாக இருந்தது. நாலைந்து படிகள் சாய்வாக ஏறித்தான் கதவுப் பக்கம் போகலாம். கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும் படியேறி, வாசல் கதவைத் தட்டிக்கொண்டே "பரமசிவம் நம்ம காலம் முடிஞ்சிட்டு. இன்னும் நாம இதைப் புரியாட்டால் - நம்ம தலையில் நாமளே மண்ணை வாரிப் போட்டதா அர்த்தம். கதவைத் திற. உன் உயிருக்கு நான் உத்தரவாதம்" என்றார். கதவு திறக்கப்பட்டது. பல தலைகள் தெளிவில்லாமல் தெரிந்தன. முந்திய இரவு, ஏதோ 'அரிசிக் கூட்டம்' போடுவதற்காகக் கூடியிருந்த குமார், மாணிக்கம், மல்லிகா, சரோஜா அம்மையார் ஆகியோர் தலைகளும், இதர ஆசாமிகளின் தலைகளும், தூரத்துப் பார்வைக்குச் சின்ன சின்ன தேங்காய்கள் மாதிரி தெரிந்தன. இதுவரை பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்த ஆண்டியப்பன் இப்போது கர்ஜித்தான். ஆறு மாதமாக அடக்கி வைத்திருந்த கோபம், கரையைப் பிய்த்தெறியும் காட்டு வெள்ளம் போல் சுழி போட்டது. "ஏய் மானங்கெட்ட குமார்! அடுத்துக் கெடுக்கிற மாணிக்கம்! - நீங்க ஒரு அப்பனுக்குப் பிறந்தவங்கன்னா கீழே இறங்குங்கல! இப்போ எந்த போலீஸ் வருதுன்னு பார்ப்போம்! திருநெல்வேலியில, என் கையக் கால கட்டிக் கொண்டு போவ வச்ச எச்சிக்கல பயலுவளா - ஒங்க கையக் கால இப்போ கட்டிப் பாக்கட்டுமாடா! கீழ இறங்குங்கல! பரமசிவம் இன்னுமா என் மாட்டை தராம நிக்கிற?" சின்னான் ஆண்டியின் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டே, "பழைய தலைவரே, நேரத்தக் கடத்துனால் மானம் மரியாதி எல்லாம் கடந்து போயிரும். ஆண்டி கேக்குறது காதுல விழலியா" என்றான். கூட்டுறவுத் தலைவர், "பரமசிவம், சீக்கிரமா வாப்பா. ஒன் உடம்புல ஒரு தூசிகூட படாது" என்றபோது - காத்தாயி, "ஏன்னா - நாங்க தூசிய அடிக்கமாட்டோம்" என்று தலைவர் கோடிடாத இடத்தைப் பூர்த்தி செய்தாள். ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டவர்போல், பரமசிவம் கீழே இறங்குவதற்கு காலைத் தூக்கிய போது, அவரது மனைவி, "பே மனுஷன், பேத்தனமா செய்தத, காலால் உதறிப் போட்டுடுங்க! எனக்குத் தாலி பிச்சை கொடுங்க! தாலிப் பிச்சை கொடுங்க" என்று அழுதபோது, ஊர் மக்களை எப்போது அகம்பாவமாகப் பேசும், அவளையும் கூட்டம் அனுதாபத்தோடு பார்த்தது. உடனே சின்னானும், "நீங்க நினைக்கது மாதுரி நாங்க நடக்க மாட்டோம் - அழாதிங்கம்மா" என்றபோது, பரமசிவம் மடமடவென்று கீழே இறங்கினர். மீசைக்காரன் மடமடவென்று மேலே ஏறினான். மீசைக்காரன், தழைமிதிக் கருவி, நெற்குதிர்கள் போன்ற பொருட்களை மேலே இருந்து கொண்டுவந்து போட்டபோது - பரமசிவம், ஆண்டியப்பனின் மாட்டை, கன்றோடு கொண்டுவந்து, அவற்றின் கயிறுகளை அவனிடம் நீட்டினார். அந்த ஜெர்ஸி கலப்பினப் பசு, ஆண்டியப்பனை, தன் கன்றுக்குட்டி மாதிரி நினைத்து, அவன் கையை நாக்கால் தடவியது. கன்றுக்குட்டியோ அவனை முதலில் பார்த்து சிறிது மிரண்டுவிட்டு, பின்னர் அவனைப் பார்த்து 'ம்மா... ம்மா...' என்றது. தங்கம்மாவுக்கும் ஆண்டியப்பனின் ஆவேசம் தொத்திக் கொண்டது. கதவருகில் நின்ற மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே கனல் கக்க முழங்கினாள்: "அடியே மல்லிகா! அப்போ சொன்னது ஞாபகம் இருக்காடி. என் அத்த மகனை என்ன பேச்சுப் பேசின? என் அய்யாவ எப்டிக் கொன்னுட்ட? பழிகார முண்ட... மரியாதியா ஒன் மாமன்கிட்ட இருக்கிற மாட்டுக் கயிற்ற, என்கிட்ட வாங்கிக் கொடுடி... கொடுக்கியா இல்ல, மாட்டு வாலுல ஒன் கொண்டய கட்டணுமா? இப்பவாவது புரிஞ்சிக்கடி. சின்னான் அண்ணன் சொன்னது மாதுரி ஏழைங்க நெருப்புக் குச்சிடி! உரசிட்டா விடாதுடி. சரி மாட்ட வாங்கி என்கிட்ட கொடுடி. நீ இங்க வாரியா - இல்ல நான் அங்க வரட்டுமா? அடியே - மாசானம் வைப்பாட்டி சரோஜா! நான் கள்ளப்பிள்ள பெத்ததாச் சொன்னே - ஒன் கள்ள மவள, இங்க வந்து மாட்ட கொடுக்கச் சொல்லுடி! இல்ல..." குமாரும், மாணிக்கமும் பேயறைந்தவர்கள் போல, பேயை அறைந்தவள் போல் நின்ற தங்கம்மாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தலைகளை அதைரியமாகக் கீழே கொண்டு போனபோது, காத்தாயி, "மல்லி, வா ராசாத்தி! வந்து, மாட்ட நீ கொன்ன கிழவர் மகள் கிட்ட கொடு புண்ணியவதி" என்றாள். மல்லிகா தயங்கித் தயங்கி, ஒரு படியில் இறங்கி, இன்னொரு படியில் காலை இறக்கப் போனபோது, தங்கம்மா "அங்கேயே நில்லுடி - சவத்து முண்ட! ஒன்கிட்ட ஜெயிச்சு எனக்கு என்னடி ஆக வேண்டியதிருக்கு" என்றாள் அமைதியாக. மல்லிகா, 'எம் புக்' ஓவர்ஸியர் மாதிரி, நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டத்தை ஒரு குரல் உலுக்கியது. பல சரக்கு சீமைச்சாமி, இரண்டு மூட்டைகளைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, கூட்டத்தின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார். அந்த மூட்டைகளில் 'ஸிவில் ஸ்ப்ளை கார்ப்பரேஷன்' என்ற முத்திரை இருந்தது. சீமைச்சாமி கீழே இருந்து எழாமலே கெஞ்சினார்: "தர்மப் பிரபுக்களே! என்னை மன்னிச்சேன்னு சொல்லணும். இந்தப் பரமசிவம் இந்த அரிசி மூட்டையுவள, என் கடையில வச்சிருக்கச் சொன்னாரு. இது சர்க்காரோட அரிசி மூட்டைன்னு தெரிஞ்சும் தெரியாம வாங்கிட்டேன்!" சின்னான் கோபத்தோடு பேசினான்: "புட் பார் ஒர்க். அதாவது ஏழைபாளைகளுக்கு வேலைக்கேத்த உணவாய் கொடுக்கதுக்காக, அரசாங்கம் நம்பிக் கொடுத்த அரிசி மூட்டைங்க... அட பாவி! முத்திரையைக் கலைக்காமக் கூட அவசரத்துல வித்துருக்கியே. நீயில்லாம் பஞ்சாயத்துத் தலைவரா? பலசரக்கு எசமான், இது நியாயமா அய்யா... ஆயிரம் மக்களின் நாயகமே! பரமசிவம் மவராசா... பதில் சொல்லும்..." பரமசிவம் தலையைத் தாழ்த்திக் கொண்டபோது, பலசரக்கு, "நான் தான் கொடுத்தேன். சீமைச்சாமி ஒரு பாவமும் அறியாதவன்னு சொல்லும்வே" என்று தாழ்த்திய தலை மீண்டும் தாழும்படி அதட்டியது. கூட்டம் புறப்பட்டது. வழிநெடுகிலும் பண்ணையார்கள் எடுத்து வைத்த விவசாயக் கருவிகளையும், மாடுகளையும், கூட்டுறவுத் தலைவர் உதவியோடு, சம்பந்தப்பட்டவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மானேஜர் ஜம்புலிங்கம் வீட்டிற்கருகே வந்தபோது, இடும்பன்சாமி, "வாங்க உள்ள போகலாம்" என்று குரல் கொடுத்துவிட்டு, 'ஆம் ஆம்' என்ற கோரஸை எதிர்பார்த்தபோது, சின்னான், "வேண்டாம் - அதுக்கு வேற வழியிருக்கு" என்று சொல்லித் தடுத்தான். 'மூதேவி' என்று தட்டாசாரி கொடுத்த பட்டத்தைச் சுமந்த ஆசாரிப் பையன், "எங்க மூதேவி வீட்ட சோதனை போட்டால் நிறையத் தங்கம் கிடைக்கும். அது இருக்கிற இடமும் எனக்குத் தெரியும். என்ன சொல்றிய" என்றபோது சின்னான் அவனையும் தடுத்துவிட்டு கம்பீரமாகப் பேசினான்: "இனிமேல் தான் நமக்கு சோதனையே இருக்கு. இப்போ பயப்பட்டு ஒதுங்கி நிற்கிற பரமசிவம், குமார் வகையறாக்கள் ஊருக்கு போலீஸ் கொண்டு வரலாம். பரவாயில்ல. பயப்படவும் வேண்டாம். நாமே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவோம். நம்ம பிள்ளிங்கள அதுல சேர்ப்போம். இடும்பன்சாமியும் சஸ்பெண்டான மீதி இரண்டு பேரும் பள்ளிக்கூடத்தைக் கவனிப்பாங்க." கண்ணாடி ஆசிரியை கண்களால் கெஞ்சிக் கொண்டு பேசினார்: "சின்னான், நான் ஒனக்கு ஒரு காலத்துல பாடம் சொன்ன ஆசிரியை என்கிறத மறந்துடாத சின்னான்... என்னையும் சேர்த்துக்க சின்னான். சம்பளங்கூட வேண்டாம் சின்னான். கடைசிக் காலத்துலயாவது மரியாதையாய் வேலை பார்க்கதுக்கு ஒரு ஆசை. அதை நிராசையாக்கிடாதடா கண்ணு." சின்னான் நெகிழ்ந்து பேசினான்: "என்னம்மா நீங்க... 'டேய் மடையா நான் தாண்டா பள்ளிக்கூடமுன்னு' கேட்காம இப்படி கெஞ்சுறீங்களே! ஆண்டி, நம்ம டீச்சர் நம்மள அப்போ அடிச்சது மாதுரி அடிச்சிக் கேளாம பேசுறதப் பாரு..." ஆண்டியப்பன் ஆசிரியையின் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டான். கண்ணாடி ஆசிரியை சிலுவைக் குறியை எடுத்து அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டார். 'இந்த மக்குபயல் ஜம்புலிங்கம், என்ன கேள்வி கேட்டான். இந்த மாதுரி ஒரு 'இது' இருபது வருஷத்துக்கு முன்னால வந்திருந்தால் நாயி கிட்டயும் பேயி கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியது இருந்திருக்காதே!' சின்னான் கூட்டத்தைப் பார்த்து பலத்த குரலில் பேசினான்: ஒரு கூட்டுறவுச் சங்கத்தையும் அமைப்போம். நாம் அமைக்கிற இந்தச் சங்கத்துக்கும், பள்ளிக்கூடத்திற்கும், அரசாங்கத்திடம் அங்கீகாரம் கேட்போம். தந்தால் தரட்டும். தராவிட்டால் போகட்டும். இனிமேல் நாம் ஒன்றாய் வாழ்வோம். இல்லன்னா ஒன்றாய் சாவோம். நாம் ஒவ்வொருவரும் இந்தக் கூட்டத்துக்குக் கண்கள், காதுகள் என்றும், நம் ஒவ்வொருவருக்கும், இந்தக் கூட்டம், கண்கள், காதுகள் என்றும் நினைக்கும் போது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கு தெரியுமா? இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏது? இனிமேல் நமக்குள் எந்தவித பேதமும் கிடையாது. கோபால் ஒரு எஞ்ஜினியர். இவனோட பொறுப்பில், ஒரு சிறு தொழிலை துவக்குவோம். நாம் ஐம்பது பேராய் நுழைந்து, இப்போ முந்நூறு பேராய் ஆயிட்டோம். மனதுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் ஏழைகள், சந்தர்ப்பம் கிடைத்தால் புரட்சிப் படையோடு சேர்வார்கள். பெரிய மனிதர்கள் விடுக்கும் போராட்டத்தை ஆண்டியை மாதுரி ஒரு சில ஏழைகள் வலுவாகப் பிடித்துக் கொண்டால் இதர ஏழைகள் நிச்சயம் நம் பக்கமே வருவார்கள் என்பதை நிரூபிச்சிட்டோம். அந்தக் காலத்து மன்னர்கள், எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு அறிகுறியாக, அந்த நாட்டுப் பசுமாடுகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்களாம். எதிரி - மாடுகளை மீட்டிவிட்டால், போர் துவங்கும். இது போல் நம் ஆண்டியோட மாட்டை பறித்து, பண்ணையார்கள் போர்ப்பிரகடனம் செய்தார்கள். நாம் அந்த மாட்டை மீட்டிவிட்டோம். இனிமேல்தான் இந்தப் போராட்டம் போராகப் போகிறது. மக்கள் சக்தியின் முன்னால், எந்த சக்தியும் தூளாகும். சரி. மாடுகளைக் கட்டிவிட்டு சீக்கிரமாய் வாருங்கள். பினாமி நிலத்தில் போய் ஏர் கட்டுவோம்." தங்கம்மாவும், இதர பெண்களும், கறவை மாடுகளைப் பற்றிக் கொண்டு, தத்தம் இருப்பிடம் வந்தார்கள். தங்கம்மா, பசுமாட்டையும் அதன் கன்றையும் ஆண்டியின் வீட்டில் கட்டினாள். அவள் அம்மாக்காரி அதற்கு வைக்கோல் கொண்டு வந்து போட்டுவிட்டு, கூட்டத்தை நோக்கி ஓடினாள். தங்கம்மாவும் அதோ அந்தப் புளிய மரத்தில் இருந்து வயக்காட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புதிய ஜாதியுடன் சேரத் துடித்தவளாய் ஓடுகிறாள். அந்த ஓட்டத்திலும், அத்தை மகன் ஆண்டியின் கம்பீரமான குரலில் கண்டுண்டவள் போல், சிறிது நின்று ரசித்துவிட்டு, மீண்டும் பாய்ந்து நடக்கிறாள். இதுவரை தெரிந்தும் தெரியாமலும் இருந்த சங்கதிகள், இப்போது அசாதாரணமாய்த் தோன்ற, அந்தத் தோற்றத்தில் உயர்ந்து கம்பீரப்பட்டவர்களாய், நீண்டதோர் போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டவர்களாய், புதிய பாட்டாளி ஜாதி, ஆண்டியப்பன் - சின்னான் வழிநடத்த, நிலம் நோக்காமல், தொலைவில் தெரிந்த பினாமி நிலக்காட்டை நோக்கி, நிமிர்ந்து சென்று கொண்டிருந்தது. "புதிய ஜாதி பிறக்குது" என்ற பாடல், ஆன்மிக ராகத்துடன் ஒலிக்க, அந்த ஒலியே ஆகாயம் பூமியெங்கும் பேரொலியாய் வியாபிக்க, ஒருவரே பலராய் ஆனதுபோல், பலரே ஒருவராய் ஆனதுபோல், வெல்வதும் வேண்டாம், வெல்லப்படுவதும் வேண்டாம் என்ற இலக்கை நோக்கி, கோழையாய் வாழ மறுத்த அந்த ஏழைக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. (முற்றும்) |