உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 அந்தக் காலத்தில், அடிமைகளைத் தண்டிக்கும் வகையில் அவர்களை ஒருவர் பின் ஒருவராக சிங்கக் கூண்டுக்குள் விட்டு, பசியோடு பாய்ந்து கவ்வும் சிங்கத்தையும், அதன் பசிக்கு ருசியாகி, குருதி கொப்பளிக்க, நரம்புகள் தெறிக்க, நாலு பக்கமும் அடைபட, மிருகத்தின் வாய்ப்பக்கம் போகும் அடிமையை சீமான்களும் சீமாட்டிகளும் பத்திரமான இடத்தில் அமர்ந்து ரசித்ததாக வரலாறு கூறுகிறது. அந்த வரலாறு இப்போது வேறு ரூபத்தில் அதே சமயம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் நடந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக, மல்லிகா, தங்கம்மாவைக் கண்களால் கவ்வுகிறவள் போல் பார்த்தாள். மாதர் சங்கத் தலைவி சரோஜா அம்மையாரும், அவளை முப்பது வருடத்திற்கு முன்பே கையைப் பிடித்து, கழுத்தில் கயிறு கட்டிய கிராம முன்சீப்பும், குறுஞ்சிரிப்புடன் மோவாய்களைத் தடவிக் கொண்டு, முன் நெற்றிகளைச் சுருக்கிக் கொண்டு, தங்கம்மாவைப் பார்த்தார்கள். வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன், தங்கம்மா பக்கமும், மாணிக்கம் பி.ஏ.பி.டி. மல்லிகா பக்கமும், மனத்துக்குள் அணிவகுத்துக் கொண்டார்கள். தங்கம்மாவோ, எதுவுமே நடவாததுபோல், ஒரு கையை இடுப்பில் ஊன்றி, வில் மாதிரி வளைத்துக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ளவர் பக்கம் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். அய்யாவைத் தேடி, புளியந்தோப்புப் பக்கமாகப் போய், அங்கே அவர் இல்லாததால் பதைபதைத்து, பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் பார்த்துவிட்டு, இங்கே தெருவில் வந்து ஜாடைமாடையாகப் பார்த்த போது, அடைக்கலசாமிக் கிழவர், தன் முதுகு மாதிரி, மகளின் சுயமரியாதை ஆக வேண்டும் என்று நினைத்தவர் போல், அவளை உள்ளே கூப்பிட்டு, மன்னிப்பு கேட்கச் சொன்னார். நான்கு நாட்களுக்கு முன்பே, முன்சீப் நடந்த விவரத்தைச் சொன்னதும், மனத்துக்குள் மகளைப் பாராட்டிய அந்த கூனுக் கிழவர், இப்போது கேடு கெட்ட, விசுவாசம் கெட்ட, எல்லாங் கெட்ட ஆண்டிப் பயலுக்காக தன் மகள் ஒரு கிராமத் தலைவரின் மகளை - அதுவும் தான் வேலை பார்க்கும் பண்ணையாரின் தங்கை மகளை, 'நாயே பேயே' என்று பேசியது, அதிகபட்சமாகத் தெரிந்தது. அவரும் ஒருதலைப்பட்சமாக நிற்கத் துணிந்து விட்டார். இவள் பிறப்பதற்கு முன்பே, இவர் சேவிக்கும் குடும்பம் இது. மகள் வருவாள். போவாள். ஆனால் சேவகம் இருக்கே அது அப்படியல்ல. அது பாசத்தைத் தாண்டும் பக்தி. தங்கம்மா, அலட்சியமாக நிற்பது, கிழவருக்கு அவமதிப்பாகத் தெரிந்தது. கண்கள், இரத்தம் கொப்பளிப்பது போல் சிவக்க, "இப்போ, தெரிஞ்சி தெரியாமப் பேசிட்டேன்னு கேட்கப் போறியா - இல்ல..." என்றார். தங்கம்மா, வெளியே ஆண்டியப்பனைப் பார்த்தாள். பிறகு தன்னைத்தானே சிலிர்த்துக் கொண்டு, "மன்னிப்புன்னு வந்ததுன்னா முதல்ல அதுதான் கேக்கணும். எங்க அத்த மகனை, காரணமில்லாமல் திட்டுனால், நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?" என்றாள். மல்லிகா, ஆட்கள் இருக்கிற தைரியத்தில் அதட்டினாள். "அது இதுன்னு பேசுனால், கெட்ட கோபம் வரும். நான் என்ன ஆடுமாடா?" கிராம முன்சீப் சிலிர்த்தெழுந்தார். "ஒன் அய்யா முகத்துக்காவ பாக்கேன். இல்லன்னா நீ, என் மகள பேசியிருக்கிற பேச்சுக்கு, சுண்ணாம்புக் காளவாசலுல வச்சி..." சரோஜா அம்மையார், அரசியல்வாதியானார். "அய்யா கேக்குறார் இல்ல. அவருக்கு மரியாத கொடுக்கிறதுக்காவது, தெரியாமப் பேசிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லேன்! இவ மூணு நாளா கன்னம் வீங்கும்படியா அழுதுகிட்டு கிடந்தாள். நாங்ககூட அவளை 'நீன்னு' சொன்னதுல்ல. பெத்த அப்பனுக்கு மரியாத கொடுக்கவளா இருந்தால், இந்நேரம் அவரு சொன்ன மாதுரி கேட்டிருப்பே. நீதான் அப்பனையே மதிக்காதவளாச்சே!" தங்கம்மா, ஊன்றிய கையை எடுத்து, ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டு, "சும்மா வாழைப்பழத்துல ஊசியை ஏத்தறது மாதிரி பேசாண்டாம்மா. ஒவ்வொருத்திவ கட்டுன புருஷனையே மதிக்காம சிலுப்பிகிட்டு பிறத்தியாருக்கு உபதேசம் பண்ண வந்துடுறாவ. இவரு, இந்த வீட்ல இருக்கது வரைக்கும், என்னைப் பெத்த ஐயா இல்ல - உங்களோட வேலக்காரர். என் உயிரு போனாலும் போவுமே தவிர என் வாயில இருந்து நீங்க விரும்புறது மாதிரி வார்த்த வராது!" 'பெண்டாட்டி மதிக்கவில்லை என்கிற சமாசாரம், இந்த வேலைக்காரப்பய மவளுக்கும் தெரிஞ்சிப் போச்சே' என்ற இரகசியமான ஆத்திரத்தில் முன்சீப் ஐயா எழுந்தார். "நீ மட்டும் என் மகளாக இருந்திருந்தால், இந்நேரம் கொண்டையைப் பிடிச்சி, 'திருவு திருவு'ன்னு திருவியிருப்பேன்" என்று சரோஜா அம்மையார் சொன்னார். அடைக்கலசாமி ஆவேச சாமியானார். திடீரென்று மகள் மீது பாய்ந்து, அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் சுற்றிக் கொண்டு, மகளின் முதுகில் பலங்கொண்ட மட்டும் குத்தினார். 'அய்யோ, போனேனே' என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டே, தங்கம்மா, அப்பாவின் கையைப் பிடித்து, தலையை உதற உதற, அவளுக்கு வேதனை விஸ்வரூபமாகியது. எப்படியோ அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நாலடி தள்ளிப்போய் நின்று கொண்டாள். இதுவரை, அய்யாவிடம் ஒருதடவை கூட அடிபடாத தனக்கு - திட்டித் தொலைக்கும் அம்மாவைக்கூட, 'என் மகள பேசுனியானா குழிவெட்டிப் புதச்சிடுவேன்' என்று சிங்கம்போல் கர்ஜிக்கும் பெற்றவன், நான்குபேர் முன்னிலையில் அடித்த அடியின் வலியைவிட, அதன் காரண காரியம், அவள் இதயத்தில் பெரும் வலியைக் கொடுத்தது. விம்மப் போனாள். 'அய்யோ அய்யோ' என்று அழப்போனாள். 'என்னையா அடிச்சியரு - என்னையா அடிச்சியரு' என்று கத்தி, தன் தலையிலே கூட, கைகளைப் பாயவிடப் போனாள். திடீரென்று அவள் கண்கள் மல்லிகாவைப் பார்த்தன. அதில் ஜொலித்த அகங்காரத்தையும், உதட்டோரத்தை விரித்த குறுஞ்சிரிப்பையும் பார்த்தன. எதுவுமே நடவாததுபோல் இருந்த சரோஜாவைப் பார்த்தன. அவ்வளவுதான். நீரை விழ வைக்கப் போன கண்கள், இப்போது நெருப்பைக் கொட்டின. உள்ளத்து ஓலம், போர்ப்பரணியாகியது. இயலாமை, எதிர்ப்பாக மாறியது. தங்கம்மா, மல்லிகாவை, அவளும் அவள் பெற்றோரும் பயப்படும் அளவுக்கு சற்று நெருங்கிக் கொண்டு, அழுத்தந்திருத்தமாகப் பேசினாள்: "அடியே, மல்லிகா! குதிரக்கொண்டை, என்னைப் பழிவாங்கிட்டதா நினைக்காதடி! நானாவது எங்கய்யா கிட்டதாண்டி அடிபட்டேன். ஒன் அகங்காரத்துக்கும், மண்டக்கனத்துக்கும் நீ ஊர்ல அடிபடப் போற காலம் வரப்போவுதுடி. எனக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டதா நினைக்காதடி. இப்போ எங்கய்யா என்னை அடிச்ச அடி, பிட்டுக்கு மண்சுமந்த பரமசிவத்தை, பாண்டிய ராஜா அடிச்சது மாதிரியான அடிடி! இந்த அடி, ஒங்களமாதுரி அக்கிரமக்காரங்க ஒவ்வொருவர் மேலயும் படப்போவுதடி!" மல்லிகா வாயடைத்துப் போய் எழுந்தபோது, அடைக்கலசாமி, அருகே கிடந்த ஒரு தார்க்கம்பை எடுத்துக் கொண்டு, மகளை நோக்கி ஓடினார். திடீரென்று அவருக்கும், தங்கம்மாவுக்கும் இடையே ஓர் உருவம் வந்து நின்றது. கடுமையான கோபம், மேனியெங்கும் ஆடுவது போல் உடலெல்லாம் சிலிர்த்து நிற்க, உயிரையே பணயம் வைக்கத் தயாராவது போல், அந்தக் கம்பீர உருவம், கிழவரையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தது. ஆண்டியப்பன் மாட்டைப் பறிகொடுத்துவிட்டு, மாமன் மகளையும் பறிகொடுத்தாலும் அவளைப் பலி கொடுக்கச் சம்மதிக்காத ஒரு ஏழை. கம்பீரமாகச் சவாலிட்டான். "இனிமேல் அவள்மேல் ஒரு அடி விழுந்தாலும், இப்பவே கொலை விழும். ஒரு கொலையோட நிக்காது. வேணுமுன்னால் அடிச்சிப் பாக்கட்டும்." அடைக்கலசாமி, அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம் வரவில்லை. தனக்கு ஏன் கோபம் வரவில்லை என்றும் அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவேளை, தனக்கு ரோஷம் இல்லாமல் போய்விட்டதோ என்று கூடப் பயப்பட்டார். எவரையும், 'ஒத்தைக்கு ஒத்தையாய்' சமாளிக்க முடியும் என்று இதுவரை தன் வீரத்தில் அசைக்க முடியாத அபிமானம் வைத்திருந்த அந்தக் கிழவர் வாயடைத்து, கையடைத்து, காலடைத்து நின்றார். மகள் மேல், அக்காள் மகன் வைத்திருக்கும் பாசத்தின் தரிசனத்தில், அடிமனத்தில் ஏற்பட்ட பெருமிதம் அவர் வெளிமனத்தில் ஏற்பட்ட கோபதாபத்தை செல்லுபடியாக்காமல் செய்த ரசாயன மாற்றம், அவருக்கே தெரியாது. இதற்குள், வெளியே இருந்து மாசானம், கோபால், மாணிக்கம், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் ஓடிவந்து ஆண்டியப்பனைப் பிடித்துக் கொண்டார்கள். கிராம முன்சீப், அடைக்கலசாமியை ஒப்புக்குப் பிடித்துக் கொண்டார். ஆண்டியப்பன் தங்கம்மாவைப் பார்த்து ஆணையிட்டான்: "தங்கம் வீட்டுக்குப் போ! என் வீட்டுக்குப் போ! என் மாமனும் ஒன் அய்யாவும் செத்து ஒரு மணி நேரமாவுது! இனிமேல் நீ... நீ... என் வீட்டுக்கே போகலாம். உம் போம்மா... இது நிற்கக்கூடாத இடம்." அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவள் போல் தங்கம்மா முக்காடு போட்டுக்கொண்டு நகரப் போனாள். பிறகு, தன் முக்காட்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, சேலையை இறுக்கிப் பிடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாக வெளியேறினாள். "ஏளா... அவன் வீட்டுக்குப் போயி தொலைச்சிராத!" என்று கிழவர் சொல்லிவிட்டதாக நினைத்தார். ஆனால் வார்த்தைகள், வாயை விட்டு வெளியேறவில்லை என்பது அவருக்கே தெரியாது. முன்சீப்பிற்கு, இப்போது தன் உத்தியோகத்தின் நினைப்பு வந்தது. மாசானத்தைப் பார்த்ததும், அந்த எண்ணம் அதிகமாக வந்தது. அதட்டினார். "என்ன மாசானம்! காலிப் பயலுவள கூட்டியாந்து என் வீட்ல கலாட்ட பண்ண வந்தியா? இதே மாதிரி நானும் உன் வீட்ல கலாட்டா பண்ண எவ்வளவு நேரமாவும்... இல்ல போலீஸ் ரிப்போர்ட் பண்ணத்தான் நேரம் ஆவுமா? பதில் சொல்லுப்பா?" மாசானம் பதில் பேசினார். "அண்ணாச்சி! தப்பா நினைச்சிட்டிய. சும்மா வழிலே வந்தேன். இந்தப் பையங்க, ஒங்களப் பாக்கப் போறதா சொன்னானுவ. ஆண்டியப்பன் மாட்ட இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதச் சொல்லி, ஒங்ககிட்ட ஒரு ரிப்போர்ட் வாங்கிக்கிட்டு, பெரிய அதிகாரிகள பாக்கப் போறதாச் சொன்னானுவ. சரி சின்னப் பயலுவ, பெரிய மனுஷங்ககிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ண பேசிடப்படாதேன்னு நானும் கூட வாரேன். கடைசில என்னடான்னா, எனக்குத் தான் கெட்ட பேரு. என் ஜாதகமே அப்படி. சின்ன வயசில இருந்து இப்படி." சரோஜா அம்மா புரிந்து கொண்டாள். சின்ன வயதில், தான் காதலித்துக் கட்டிப்பிடித்த 'மாசான மச்சான்' 'கருவாட்டு ஜாதகத்தால்', தன்னை மணக்க முடியாமல் போனதை சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொண்டு, அந்த ஐம்பது வயதுக்காரி, இப்போது இருபது வயதுக்காரியாகித் தவித்தாள். எப்பவோ நடந்தது இப்பத்தான் நடந்தது மாதிரி இருக்கே... வாலிபத்தைத் திரும்ப வரவழைத்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்களின் 'புனிதக் காதல்' தாபங்களைப் புரிந்து கொள்ளாத மணியக்காரர் தன்பாட்டுக்குப் பேசினார். "ஒரு கொலையோட நிக்காதுன்னு இவன் மிரட்டுறான். இவனுக்கா நான் ரிப்போர்ட் கொடுக்கணும். நல்லா இருக்கே நியாயம்!" இ.ந. மன்றத்தின் உதவித் தலைவர் கோபால் பதிலளித்தான். "நியாயம் நல்லா இருக்கணும் பெரியப்பா! அதுக்காகத்தான் வந்தோம். பரமசிவம் மாமா தூண்டுலுல இவனோட மாட்ட, இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டார். வேணுமுன்னா இப்பவே இவர விசாரியும். நீரு ஒரு ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க போலீஸ்ல கம்ளெயிண்ட் கொடுக்க வசதியா இருக்கும். அதோட இது ஒம்மோட கடமை. முடியாதுன்னு சொல்றதுக்கு உரிமை இல்லாத கடமை." மணியக்காரர் மார்தட்டிப் பேசினார். "ஊர குட்டப் புழுதியாக்குறதுன்னு தீர்மானம் பண்ணிட்டிய! பரவாயில்ல. நான் ரிப்போர்ட்டும் தர முடியாது. வேணுமுன்னால், என்னைப் பற்றி தாசில்தார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிக்கங்க." வேறு வழியில்லாமல், நற்பணிக்காரர்கள் வெளியே வந்தார்கள். மாணிக்கம் மல்லிகாவைத் திரும்பிப் பார்த்தான். அவள், அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். "ஒனக்கு வேணும் மல்லிகா - நீ எதுக்காக பிறத்தியாருக்கு வக்காலத்து வாங்கணும். இப்போ நடக்கத பார்த்தியா?" என்று சரோஜா, மகளிடம் கோபமாகப் பேசுவது மாணிக்கத்தின் காது வழியாக இதயத்தைக் குத்தியது. இருந்தாலும். இ.ந. மன்றத்தின் தலைவன் அவன். ஒரு லட்சியப் புருஷன். படுகளத்தில் காதல் ஒப்பாரி வைக்கலாகாது! மாசானம் அந்த இளைஞர்களை பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்குக் கொண்டு போனார். அவர்களை ஆணையாளரின் முன்னால் நிறுத்திவிட்டு, அருகேயுள்ள அறையில் வரைபடங்களை முறைத்துக் கொண்டிருந்த யூனியன் எஞ்ஜினீயரின் காதை கடிக்கப் போய்விட்டார். மாணிக்கம் பி.ஏ.பி.டி., ஆணையாளரிடம் நடந்த விவரங்களை ஒப்புவித்தான். அந்த ஆணையாளர் நேர்மையானவர். அதே சமயம் தனக்குக் கீழே இருப்பவர்களையும் நேர்மையாக்க நினைத்ததால், மேலே இருப்பவர்களின் பொல்லாப்புக்கு ஆளானவர். ஏற்கெனவே இந்தப் பரமசிவம் தனக்குக் கட்டாத - கட்ட விரும்பாத வீட்டுக்கு சிமெண்ட் அலாட்மெண்ட் கொடுக்கவில்லை என்பதற்காக இவர் லஞ்சம் வாங்குவதாகக் கலெக்டருக்குப் புகார் செய்து, அந்தப் புகார் மனுவை விசாரிக்க கலெக்டர் தேதி குறித்திருக்கிறார். இந்தச் சமயத்தில், இந்தப் பரமசிவத்தைப் பகைப்பது தூக்குப் போட்டுச் சாவதற்குச் சமம். அதோடு ஆணையாளருக்குப் பல 'அபிஷியல்' சிரமங்கள். 'வேலைக்கு உணவு' திட்டத்தை பழுதில்லாமல் செயல்படுத்த வேண்டும். யூனியன் கணக்குகளை தணிக்கை செய்துவரும் ஆடிட்காரர்களுக்கு ஒரு மாதம் வரைக்கும் இவர் தான் சிகரெட்டில் இருந்து சினிமா வரையில் காசு கொடுப்பதோடு, அவர்களின் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் இவர் தான் 'மொய்' எழுத வேண்டும். பயணப்படி வாங்கும் ஆடிட்காரர்கள், ஒரு நயாபைசா தங்கள் உணவிற்காக செலவழிக்கத் தயாராக இல்லை. தணிக்கை என்பது ஆணையாளர் அவர்களுக்கு 'தனிக் கையால்' செலவழிக்க வேண்டும் என்று 'அன் அபிஷியலாக' ஆகிப் போன அபிஷியல் சமாச்சாரம். இந்த வேதனையில் அவருக்கு நற்பணி மன்ற வேதனை சின்னதாகத் தெரிந்தது. ஆகையால் அந்தப் பிள்ளைகுட்டிக்காரர் பக்குவமாகப் பேசினார். "இது எனக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. கலெக்டருக்கு மனுநீதி நாள்ல மனு கொடுங்க. இல்லன்னா பால் பண்ணை அதிகாரியப் பாருங்க. இல்லன்னா கூட்டுறவு டெப்டி ரிஜிஸ்டிராரைப் பாருங்க. இல்லன்னா புராஜெக்ட் ஆபிஸரப் பாருங்க. ஒண்ணும் முடியலன்னா போலீஸ் ஸ்டேஷன் போங்க. ஆனால் ஒண்ணு - நான் தான் இவங்களைப் பாக்கச் சொன்னதா தயவு செய்து சொல்லிடாதீங்க." மாசானம், யூனியன் அலுவலகத்திலேயே ஒதுங்கிக் கொள்ள, நற்பணிக்காரர்கள், அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தை நோக்கிப் போனார்கள். மயானத்துக்கு அருகே இருந்த போலீஸ் நிலையத்தில், வழி மறிப்பது போல் போட்டிருந்த மேஜையில், காலைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பன், அவர்களைப் பார்த்ததும், 'வாங்கோ வாங்கோ' என்று எழுந்து வரவேற்றார். உடனே ஓடிப்போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர்களை எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்: "ஒங்க தலைவர் குமார் - மன்னிக்கணும் மிஸ்டர் குமார் வரலியா?" மாணிக்கம் முந்திரிக் கொட்டையானான். "அவன் எட்டயப்பனா மாறிட்டான் சார்! எங்க மன்றத்தில் இருந்து அவன நீக்கிட்டோம் சார்! நன்றி கெட்ட பய சார்! எங்களப் பயன்படுத்தி எங்களையே காட்டிக் கொடுத்துட்டான் சார்!" சப்-இன்ஸ்பெக்டர் முகம் இறுகியது. அப்படியானால், இந்தப் பசங்க, மிஸ்டர் குமாரோட எதிரிகளா... தெரியாத்தனமா உட்காரச் சொல்லிட்டேனே... "என்ன விஷயம்? விஷயத்த சட்டுப்புட்டுன்னு சொல்லுங்க. ஒங்களோட குசலம் விசாரிச்சுட்டு இருக்க எனக்கு நேரமில்ல." அதிர்ந்து போன மாணிக்கம், விவகாரத்தை ஆதியோடு அந்தமாகச் சொன்னான். சப்-இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டே பேசினார். "இது சிவில் சமாச்சாரம். அதோட மாட்டைப் பிடிச்சது அடைக்கலசாமி. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்த சம்பந்தப்படுத்துறது அதிகப் பிரசங்கித்தனம். இதுல யாரு ஆண்டியப்பன்?" "இவன் தான் சார்!" "இவன் தானா... யோவ், எழுந்து நில்லுய்யா. வேட்டிய கால்வரைக்கும் போடுய்யா - பெரிய துரை மாதுரி மடிச்சிக் கட்டிட்டு நிக்கதை. முன்சீப் ரிப்போர்ட் தந்தாராய்யா?" ஆண்டியப்பன், அதிர்ந்து போய் எழுந்தான். யந்திரம் போல் வேட்டியைக் கீழே இறக்கினான். "முன்சீப் தரமாட்டான் சார்" என்றான். சப்-இன்ஸ்பெக்டர் குதித்தார். "பெரிய மனுஷன, அவன் இவன்னு பேசினால் பல்ல உடச்சிடுவேன். நீங்கல்லாம் படிச்சவங்க. இந்தக் கிறுக்கனை எதுக்காக இன்னும் கிறுக்கனாக்குறீங்க." ஆண்டியப்பனும், இதர இளைஞர்களும் அதிர்ச்சியுற்று, செய்வதறியாது திகைத்த போது, சட்டாம்பட்டி தலையாரி, அங்கே வந்து, இரண்டு கடிதங்களை சப்-இன்ஸ்பெட்கரிடம் நீட்டினார். ஒன்று, முன்சீப், ஆண்டியப்பன் தன்னைக் கொலை செய்ய வந்ததாகக் கொடுத்த ரிப்போர்ட். இன்னொன்று ஆண்டியப்பனை 'உள்ளே போட' குமார் எழுதியிருந்த ரெகம்மண்டேஷன் லட்டர். சப்-இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். "நீங்க வரும்போதே நினைத்தேன். ஏய்யா ஆண்டி, முன்சீப்ப கொல பண்ற அளவுக்கு ஒனக்கு தைரியம் வந்துட்டு இல்ல? உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்." ஆண்டியப்பன், 'வைக்கவேண்டிய' இடத்தில் வைக்கப்பட்டான். லாக்கப்பிற்கு உள்ளே தள்ளப்பட்ட அவன், இரும்புக்கிராதிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது திணறினான். |