7

     அடைக்கலசாமிக் கிழவர் இறந்துவிட்டார்.

     நம்பமுடியாத உண்மை. என்றாலும் இருந்த ரோஷத்தை அது இல்லாதவர்களுக்காகவும், உடன்பிறந்த வீரத்தை, உடனிருந்தே கொல்பவர்களுக்காகவும், விட்டு வைத்திருந்த அந்த வீரக் கிழவர், பூச்சி மருந்தைக் குடித்து தன்னைத்தானே கொன்று கொண்டார். ஆண்டியப்பன் வீட்டில் இருந்து, தங்கம்மா பாதி வழியைக் கடக்குமுன்பே, துள்ளத் துடிக்க வாழ்ந்த அவள் அப்பா, துள்ளத் துடிக்கச் செத்துப் போய்விட்டார்.

     தங்கம்மா அப்பாவின் மார்பில் புரண்டு அழுதாள். "நான் பாவிய்யா - படுபாவி... சண்டாளி... ஒம்ம நான் தான் கொன்னுட்டேன். எங்க அய்யாவ நானே கொன்னுட்டேனே... விடுங்க, என்னை விடுங்க. நானும் சாவணும்! அவரை வழியனுப்பி வச்சதே நான். நானும் அவரோட போயிடணும்! விடுங்க. அய்யா... அய்யா... என்னப் பெத்த அய்யா..."

     தலையிலும் முகத்திலுமாக பலங்கொண்ட மட்டும் அவள் கைகளை மோதவிட்டு அடித்துக் கொண்டாள். இதனால் கையில் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் நொறுங்கி, அவள் முகத்தில் குத்தி, ரத்தத்தைக் கொண்டு வந்தது.

     "அய்யாவே... அய்யாவே... ஆசையுள்ள
          அய்யாவே - ஒம்ம
     கொல்லாமல் கொன்னுட்டேனே
          கொலை பண்ணாமப் பண்ணிட்டனே - நான்
     இல்லாமல் போயிட்டேனே - நீரு
          எங்கேயோ போயிட்டீரே...
     என்னையும் கூட்டிப் போவும்...
          இரக்கமுள்ள அய்யாவே..."

     அடைக்கலசாமியின் மனைவியும் அழுது கொண்டிருந்தாள். மகளைக் கட்டிப்பிடித்து, கண்களைத் துடைத்து விட்டு பின்பு தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

     வெளியே நாவிதர் படபடப்போடு பேசினார்:

     "பிணத்தைக் குளிப்பாட்ட கொண்டு வாங்கய்யா."

     தங்கம்மா அந்தப் பிணத்தையே பார்த்தாள். பிணம் போல் பார்த்தாள்.

     வெளியே ஒரே கூட்டம், கசமுசாப் பேச்சுகள்.

     "எதுக்கும் கலங்காதவரு எப்படிச் செத்தாரு?"

     "பிள்ளை குலமழித்தால் பெத்தவன் என்ன செய்வான் - இது பழமொழி."

     "சொந்த மகள் ஓடிப் போயிட்டாள். மானமுள்ள அப்பன் வேற எதச் செய்வான்?"

     "ஊரு உலகத்தில் நடக்காததா நடந்துட்டு? எத்தன பணக்கார வீட்ல கல்யாணம் ஆகுமுன்னாலேயே கள்ளப் பிள்ளியள கழிச்சிக்கிட்டு இருக்காளுவ. அத்தை மகனை போலீஸ் ஸ்டேஷன்ல பார்க்கப் போனது தப்பாவே? சோளத்தட்டைக்குள்ளயா கூட்டிக்கிட்டுப் போனாள்?"

     மாடு மேய்க்கும் பையன் ஒருவன் விளக்கினான்:

     "முன்சீப் வீட்டுக்கு இந்த தாத்தா வந்தாரு. தங்கம்மா அத்தைக்கு வெளியூர்ல ஒரு பையனைப் பார்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருந்தப்போ, மல்லிகா உள்ள இருந்து சாடப் போறது மாதிரி ஓடிவந்துக்கிட்டே, 'ஒம்ம மகள் அத்தை மகனை மீட்டி, அப்படியே கல்யாணமும் பண்ணிக்கிட்டு வாரதுக்குப் போயிட்டாளாம். வயித்துல வேறு - மூணு மாசமாம். கல்யாணமா பண்ணப் போறிய'ன்னு கேட்டாள். உடனே இந்த தாத்தா 'அப்படியே இருந்தாலும் நீ இப்படி பேசலாமாம்மா... ஒம்மாவோட சமாசாரம் ஒனக்குத் தெரியுமாம்மா... ஒங்க குடும்பத்துக்கு மாடாய் உழைக்கிறவன - நாய் மாதுரி நடத்துலாமாம்மா'ன்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்தார். இப்போ ஒரேயடியாய் வெளியப் பாத்து போயிட்டாரு. இது தெரியாம இந்த தங்கம்மா அத்தை... தான் அய்யாவக் கொன்னது மாதுரி அழுவுறாள். அவரக் கொன்னது அந்த மல்லிகா செறுக்கிமவள் தான்."

     "எல்லாம் இந்த ஆண்டியப்பன் பயலால் வந்த வினை. ஆழந்தெரியாமக் கால விடலாமா? கல்லுல தலை மோதுனாலும் தலையில கல்லு மோதுனாலும் சேதம் தலைக்கு தானவே? இது ஏன் இந்தப் பயலுக்குத் தெரியல. பரமசிவத்துக்கிட்ட இவனால மோத முடியுமா? இவன் அவனுக்கு ஜோடியா?"

     "நீரு சும்மா கிடயும்வே! அவனுக்கு இருக்கிற மானத்துல ஒமக்கு நாலுல ஒண்ணு இருந்தால் ஊரு இப்படி குட்டிச் சுவரா போயிருக்காது."

     "நீரு அந்தக் குட்டிச் சுவர்ல முதுகைத் தேச்சிக்கிட்டு நிக்கமாட்டீரு. இந்த ஆண்டிப்பயல பாரும்வே. எப்படி அடிச்சிப் புரண்டு வாரான்."

     ஆண்டியப்பன் தலையில் அடித்துக் கொண்டு வந்தான். வந்த வேகத்தில் ஒரு மரத்தில் மோதி, பின்னர் அந்த மரத்திலேயே தலையை மோதிக் கொண்டு நின்றான். இரண்டு பேர் ஓடிப்போய் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை விலக்கிக் கொண்டே அவன் மாமாவின் வீட்டுக்குள் ஓடினான்.

     மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மாமாவின் காலைப் பிடித்துக் கொண்டே, "மாமா, ஒம்ம நான் கொன்னுட்டேனே! எடுத்து வளத்த ஒமக்கு நானே எமனாய் மாறிட்டேனே"ன்னு புலம்பினான். அப்போதுதான் அழுகையை ஓய்த்துவிட்டு, மருவிக் கொண்டிருந்த தங்கம்மா, கேவிக்கொண்டே, "நாம ரெண்டு பேருமாய் அய்யாவக் கொண்ணுட்டோமே மச்சான்" என்று சொல்லி முடிக்கு முன்பே தலையில் அடித்துக் கொண்டாள்.

     இன்னொரு பக்கமாக அழுதுகொண்டிருந்த அவள் அம்மா, மகளைப் பார்த்தாள். 'இன்னுமா மச்சான்...? இவனா இங்க வந்திருக்கான்?' அந்தக் கிழவி எழுந்து நின்று கத்தினாள்:

     "நீ எதுக்குல வந்தே? நாய்க்குப் பொறந்த நாயே! என்னோட மவராசனை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததுமுல்லாம, கேலி பண்ணுதது மாதிரி வந்தால நிக்கே? கொலைகாரப் பாவி! நீ போறீயா... இல்ல நான் இந்த க்ஷணத்துலயே உயிர விடட்டுமா? போறீயா இல்லியா? கொலைகாரப் பாவி... போடா!"

     ஆண்டியப்பன், தங்கம்மாவைப் பார்த்தான். அவள் பரிதாபப் படுவதுபோல் பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை.

     கிழவிக்குக் கோபம் ரெட்டிப்பாகியது.

     "இன்னுமால நிக்கிற - போறீயா இந்த க்ஷணத்துலேயே உயிரை விடட்டுமால? சோம்பேறிப் பய மவனே!"

     ஆண்டியப்பன் மவுனமாக வெளியேறினான். வீட்டுக்குத்தான் போகப் பார்த்தான். அவனால் போக முடியவில்லை. வெளியே போய், ஒரு பூவரசு மரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். மரத்தோடு மரமானவன் போல், அப்படியே சாய்ந்து கொண்டான்.

     எல்லாம் முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. பிணத்தைத் தூக்கிப் போனபோது இரண்டு போலீஸ்காரர்கள் வந்து 'தற்கொலை பண்ணியிருக்கார். புதைக்கப் போனால் எப்படிவே' என்று சொல்லிக்கொண்டு, அந்தப் பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, 'போஸ்ட் மார்ட்டம்' செய்யப் போனார்கள்.

     தங்கம்மாவும், அவள் அம்மாவும் ஆஸ்பத்திரியின் நுழைவாயிலுக்குள் போகும்போதே, 'கேட்கீப்பர்' கையை நீட்டப் போனார். ஆனால் விரிந்த தலையுடன், நீர் வழியும் கண்களுடன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனிடம் நியாயம் கேட்கப் போன கண்ணகி போல் தோன்றிய தங்கம்மாவையும், ஒடிந்து போன சிலம்பு போல், ஓலைப் பாய்க்குள் முடங்கிக் கிடந்த பிணத்தையும் பார்த்தபோது, நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் உள்ள 'உயிர்கீப்பர்கள்' அப்படி இல்லை. 'எப்படிச் செத்தார். அய்யோ பாவம்' என்று வாயால் சொல்லவில்லையானாலும், மனத்தில் அத்தகைய உணர்வு தோன்றி, அந்த உணர்வு முகத்தில் அனுதாபமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்த்த 'பிணச்' சொந்தக்காரர்கள், கிட்டத்தட்ட பிணமாகும்படி 'பிணத்தனமாக' நடந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் பிறந்த உயிர் ஒன்று போய்விட்டது என்ற உணர்வில்லாமலேயே, பிணத்தைப் பார்வையிட்டவர்களின் அட்டகாசமானச் சிரிப்புகள், கிரிக்கெட் உபன்யாசங்கள், அரசியல் விமர்சனங்கள். அந்தப் பிணத்தைப் பார்த்துக்கூட, நீங்களும் ஒருகாலத்தில் பிணமாகப் போகிறவர்கள் தான் என்பதை உணராத உயிர்ப்பில்லாத பேச்சுகள், பிணத்தைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் நின்ற நர்ஸம்மாக்களுடன் வாய் விளையாட்டுகள்...

     திடீரென்று 'தங்கம்' என்ற குரல் தங்கம்மாவுக்குக் கேட்கவில்லை என்றாலும், அவள் தாய்க்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.

     ஆண்டியப்பன்!

     தானே இறந்து, தனக்குத்தானே துக்கம் அனுசரிப்பவன் போல், மேல்துண்டை எடுத்து, வாய்க்குள் வைத்துக் கொண்டு விம்மினான். குடை சாய்ந்த வண்டி போல பாதாதிகேசம் வரை ஒரு பக்கமாய்ச் சாய, "மாமா மாமா" என்றான். கிழவியால் திட்டாமல் இருக்க முடியவில்லை.

     "அவர அறுக்கத வேடிக்க பாக்கவால வந்த? ஒன்னையும் இப்படி அறுக்குற காலம் வராமலா போவும். எத்தனாவது சட்டப்படி நீ இங்க வரலாம். போல... போல. நீ செஞ்சது போதும். என் மவராசன் உன்னாலயே - சாவு முன்னாலயே பிணமா போயிட்டாரு. அவரு செத்தது ஒப்புக்குத்தான். கொலகாரப்பய. இங்க எதுக்காவல வருத?"

     ஆண்டியப்பன் கேவிக் கேவி அழுதான். தங்கம்மாவைப் பார்த்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவன் இருக்கிறான் என்பது போல் பார்க்கக்கூட இல்லை. இதற்குள் கிழவி, "போல, போயிடுல. நீ நின்னா என் மவராசனோட ஆவி நிம்மதியா இருக்காது" என்று சொன்னபோது, ஆண்டியப்பன் அங்கிருந்து நகர்ந்து நகர்ந்து, நடந்து நடந்து எங்கேயோ போய்விட்டான்.

     பிணத்தைக் கொண்டுவந்து, மூன்று மணி நேரம் ஆகியும், முறையான பரிசோதனை ரிப்போர்ட் கிடைக்கவில்லை. ஆர்ம்.எம்.ஓ. எங்கேயோ போய்விட்டாராம். ஆனால் அதற்குப் பிறகு வந்த இரண்டு 'வசதியான' பிணங்கள், வந்தது தெரியாமலே போய்விட்டன.

     தங்கம்மாவுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

     'அட கடவுளே, பிணமான பிறகு கூட ஒருவன் சுதந்திரமாக விடப்படமாட்டானோ... பிணத்திற்குக்கூட ரேட்டா? இங்கே இருப்பவர்கள் மனிதர்களா, இல்ல சுடுகாட்டில் சமாதிகளில் நீட்டிக் கொண்டிருக்கும் கற்களா? பிறப்பது தெரியாமல் பிறந்து, போவது தெரியாமல் போகும் ஏழை மீது எத்தனை கரிசனம்? அறுபது வருஷமாய் உழைப்பையும், நன்றி விசுவாசத்தையும் தவிர, எதையுமே அறியாத அய்யாமீது எவ்வளவு பாசம்? கொஞ்ச நேரம் அவரை ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு பெரிய இரக்கம்? அய்யா, நீரு கொடுத்து வச்சவரு. நீரு சாவுறது வரைக்கும் பண்ணையாருங்களுக்குக் கைகட்டி கால்கட்டி நின்னியரு. இப்போ அதுக்குப் பிரதியா, அவர்களோட தூண்டுதலால், டாக்டர் துரைமாரு மவராசன்மாருங்க, ஒம்ம கையைக் காலை எப்படிக் கட்டுறாங்க. இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கைய்யா கிடைக்கும்? யாருக்குக் கிடைக்கும்...?'

     தங்கம்மாள் விம்மியபோது, கிழவி அவளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போது, வெள்ளை யூனிபாரத்தில், வனதேவதை போலத் தோன்றிய நர்ஸம்மாக்கள், இப்போது அவளுக்கு விதவைகள் போல் தோன்றினார்கள். எப்போ ரிப்போர்ட் கிடைக்கும்? எப்போ பிணத்துக்கு விடுதலை கிடைக்கும்?

     அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, சின்னான் வந்தான். கிழவி முகத்தைத் திருப்பிக் கொண்டாளே தவிர, திட்டவில்லை. "ஏய் கிழவி, இது என்ன உன் வீடுன்னு நினைச்சியா? ரிப்போர்ட் ரெடியானால் தரமாட்டோம்?" என்று ஒரு வெள்ளை யூனிபாரக்காரி விரட்டியதால், அவளால் சின்னானை விரட்ட முடியவில்லை.

     சின்னான் அங்குமிங்குமாக அலைந்து, ஒருவழியாக பிணத்தை எடுத்தான். பிணத்தின் கால் இரண்டையும் இழுத்துக் கொண்டு வந்தே, கொடுக்கப்பட்டது. ஏதோ பெரிய காரியம் செய்தது போல், இரண்டு பேர் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். ஊருக்கு, ஒரு வண்டியில் அதே ஓலைப்பாயில் பிணம் வந்தபோது, சேரி ஜனங்களும், 'ஜாதி' ஜனங்களும் கூடிவிட்டார்கள். மௌனம் பயங்கரமாகப் பேசியது. பயங்கரமே மௌனமாகியது. மாடியில் நின்றபடியே, மல்லிகா வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டே அந்தப் பிணத்தைப் பார்த்தாள். ஆண்டியப்பனும், அவள் தங்கை மீனாட்சியும் வீட்டுக்குள்ளேயே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, சிந்தையிழந்து, செயலிழந்து கிடந்தார்கள்.

     அந்த ஊரில் எத்தனையோ பேர், தற்கொலை செய்திருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவர்களை வெளியே தெரியாமலே புதைத்திருக்கிறார்கள். கிராம முன்சீப்பே, சிலரை சுடுகாடு வரைக்கும் போய் வழியனுப்பி இருக்கிறார். ஆனால் 'ஒம்மா சமாசாரம் தெரியாதாம்மா' என்று, தன் சம்சாரத்தைப் பற்றிப் பேசிய அந்தக் கிழவரை, செத்த பிறகும், முன்சீப் சும்மா விட விரும்பவில்லை. அதோடு, மல்லிகா வேறு, 'தங்கம்மாவை நாய் மாதிரி இழுத்தடிக்கணும். அவள் ஆஸ்பத்திரில நாய் மாதுரி காத்துக் கிடக்கணும். நீங்க ஒங்க டூட்டியைத் தானே செய்யுறீங்க' என்றாள்.

     பரமசிவம் - முன்சீப் வகையறாக்களுடைய வீடுகளுக்கு வாசல் போல, கால்களுக்குச் செருப்பு போல, கைகளுக்குக் கத்தி போல வாழ்ந்த ஒரு ஜீவனை, இறந்த பிறகு விட்டு வைக்கத் தயாராக இல்லாத மணியக்காரரின் செயல், ஊரில் இரகசியமாகக் கண்டிக்கப்பட்டது. சொல்லியே தீர வேண்டும் என்ற உணர்வில் வந்து, சொல்ல முடியாமல் போன முணுமுணுப்புகள்! ஜாக்கிரதையான குமுறல்கள்! 'மாடாய் உழைச்ச மனுஷனையே ஆஸ்பத்திரியில அறுத்துப் போட வச்சாங்கன்னால், நம்மள விட்டு வைப்பாங்களா?'

     ஒரு வாரம் ஓடியது.

     ஆண்டியப்பனுக்கு, லாக்கப்பே தேவலை போல் தோன்றியது. தன்னுள்ளே பாதுகாப்பாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்த ஒன்றைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை. மாமா, மல்லிகா சொன்னதுக்காக மட்டுமா செத்திருப்பார். இல்ல, அதுக்காக மட்டும் இருக்காது. என்னை லாக்கப்புல போட்ட வருத்தமும் இருந்திருக்கும். ஊர்ல அநியாயக்காரங்களுக்கு அடிமையா போயிட்டோமே என்கிற வருத்தமும் இருந்திருக்கும். அக்கா மகனோட மாட்டைப் பிடிச்சி மானபங்கப் படுத்திட்டோமே என்கிறதும் இருந்திருக்கும். இப்படி எல்லாம் இருந்ததுனால... அவரு இல்லாமப் போயிட்டாரு.

     ஆண்டியப்பன் செய்வதறியாது திகைத்து நின்றான். தங்கைக்கு மருந்து வாங்கப் பணம் இல்லை. வேலைக்குப் போய் நாளாகிவிட்டது. இருந்த அரிசி தீர்ந்து போச்சு. 'டவுனுக்குப்' போகும்போது கூட எல்லாப் 'பயலுவளுகும்' இவனே டிக்கெட் எடுத்தான். ஒரு பயலாவது 'நான் எடுக்கேன்னு' பையைக் கூடத் தொடல. தங்கச்சி கழுத்துல, காதுல இருந்ததுல்லாம், மருந்துக்குப் போயிட்டு. குழந்தைக்கோ பாலில்லை. காத்தாயியக்கூடக் காணல. டீக்கடையில ஆழாக்கு தண்ணிப் பாலைக் கேட்டுப் பார்க்கலாம். குழந்தைக்கிக் காய்ச்சிக் கொடுத்துட்டு மத்தியானமாய் மரம் வெட்டப் போகலாம். மூணு ரூபாய் கிடைக்கும். அரைக்கிலோ அரிசி, ஒரு வாழைக்காய், மிச்சதுக்குப் பாலு.

     ஆண்டியப்பன் சலிப்போடு டீக்கடைக்குப் போனான். அங்கே இருந்தவர்கள் இவனை ஏனென்று கேட்கவில்லை. வழக்கமாக அவனைப் பார்த்து, 'ஏண்டா பேரா, சடுகுடு விளையாட வாரீயா? நீ ஜெயிச்சுட்டா என் மீசையை எடுத்துடுறேன்' என்று கேலி பேசும் பழனியாண்டித் தாத்தா கூட பாராமுகமானார்.

     'தங்கச்சிக்கு எப்படிடா இருக்கு' என்று கேட்கும் பெரியசாமி மாமா அவன் உட்கார்ந்த இடத்திற்கு அருகே உட்கார மனமில்லாதவர் போல், நின்று கொண்டிருந்தார். எப்படிப் பேசமுடியும்? ஒருவர் அப்படி அவனிடம் பேசிய மறுநாளே அவர் மகனுக்கு பள்ளிக்கூடத்துல சர்டிபிகேட் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க - அதுவும் வரச் சொல்லிவிட்டு. அந்த சர்டிபிகேட் - 1966ஆம் ஆண்டு படித்த சர்டிபிகேட். கிடைத்திருந்தால் அவர் பையனுக்கு டவுனில் பியூனாய் வேலை கிடைத்திருக்கும்.

     அவனோட பேசிய இன்னொருவனை போலீஸார் பட்டை சாராயம் குடித்ததற்காகக் கூட்டிக் கொண்டு போனபோது எதிரே வந்த பஞ்சாயத்துத் தலைவரிடம் 'மாமா' என்றான் அவன். அவரோ, "ஆண்டி ஜாமீனுக்கு வருவாண்டா" என்றார். அப்படிப் பேசிவிட்டு, அவனை விடுவிக்கவும் செய்தார். அவன் எப்படி இவனிடம் பேசுவான்? வாயினை விற்று வார்த்தைகள் பேசினால் பட்டை போட முடியுமோ?

     ஆனால் ஒரே ஒரு எளியவன் மட்டும் ஆண்டிக்கருகே உட்கார்ந்து கொண்டு, "கவலைப்படாதடா, ஆண்டி! ஒனக்கும் காலம் வரும்" என்றான். உடனே டீக்கடைக்காரன், அவனைப் பார்த்து, "ஒன் வேலயப் பார்த்துட்டுப் போயா... இங்க யாரும் அனாவசியமா பேசப்படாது" என்றான்.

     ஆண்டியப்பன் எழுந்தான். இவனிடம் பால் வாங்க முடியாது. சீ... அவன் தந்தாலும் வாங்கப்படாது.

     உலகிலே யாருமே இல்லாமல் போனதுபோல, தான் மட்டும் தனியாக இருப்பது போல, ஆண்டியப்பன் புளியந்தோப்பைப் பார்த்து, போவது தெரியாமலே போய்க் கொண்டிருந்தான். வழியில் தங்கம்மா ஒரு மண்வெட்டியுடன் போனாள். கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருப்பாள்.

     ஆண்டியப்பன் வேகமாக நடந்தான். இந்தத் தங்கம்மா கூட வீட்டுக்கு வரவில்லை. வீட்டுக்குக் கூட வர வேண்டாம். வழியில பார்த்தால் கூட, முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள். எப்படி மனசு வந்தது. இந்த மனசுன்னு மட்டும் ஒண்ணு இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

     அவன் வருவதைப் பார்த்து, தங்கம்மாவும் வேகமாக நடந்தாள். திரும்பிப் பாராமலே நடந்தாள். போகலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்த ஆண்டி, பிறகு ஒரே ஓட்டமாக ஓடி, அவளை வழிமறிப்பது போல் குறுக்கே நின்றுகொண்டே கேட்டான்:

     "தங்கம், நான் என்ன தப்புப் பண்ணினேன்... ஏன் பேசமாட்டக்கே?" தங்கம்மா முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டே பேசினாள்:

     "நான் வாரேன், நேரமாயிட்டு."

     "இதுதான் ஒன் பதிலா? நான் பண்ணின தப்பையாவது சொல்லிட்டுப் போ!"

     "நாம தப்புப் பண்ணுனால்தான் அவஸ்தப் படணும்னு இல்ல! பிறத்தியார் செய்யுற தப்புக்கும் - அவங்களுக்குப் பதிலா - நாம அவஸ்தப்படணும்னு ஆயிட்டுது... நான் வரட்டுமா...?"

     "மச்சான் மச்சான்னு சுத்திச் சுத்தி வந்த என் தங்கமா இப்படிப் பேசுறது...?"

     "நேரமாவுது, நான் வாரேன்."

     "எனக்கும் ரோஷம் இருக்கு பிள்ள! நானும் போறேன்."

     தங்கம்மா இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவனை ஆசையோடு பார்த்துவிட்டு, பிறகு அதுவே தப்பு என்பது போல், முகத்தை மூடிக்கொண்டே, கைவிரல்களை விரித்து, கண்களில் படரவிட்டு, விரலெல்லாம் நனைய, வேதனையோடு பேசினான்.

     "என்னை மன்னிச்சிடுங்க. நான் கொலைகாரியாய் போயிட்டேன். அப்பனைக் கொன்னவள்னு ஊர்ல பேசுறாவ. இனிமே, ஒம்ம கல்யாணம் பண்ணுனால், நான் அய்யாவக் கொன்ன கொலைகாரின்னு ஊர்ல பட்டம் கொடுத்துடுவாங்க. என்னோட அய்யாவ, ஒம்மவிட நான் உசத்தியா நினைச்சது நிசம். இந்த நிசத்தக் காட்டுறதுக்காவ நான் விலகி நிக்கேன். எப்பவும் விலகி நிக்கப் போறேன். அம்மா, ஒம்மகிட்ட நான் பேசுனால் தூக்குப் போட்டுச் சாவேன்னு சொல்லுதாள். அய்யாவ மாதுரி நான் அம்மாவையும் கொல்லப்படாது. இன்னார் மகள் அவள் அய்யா செத்ததுக்கு அபராதம் கட்டுறது மாதிரி கண்ணுக்குள்ள கண்ணாய் இருந்த அத்தை மவனையே கட்டிக்கலியாமுன்னு ஊர் சொல்லணும். 'அய்யாவக் கொன்னுப்புட்டு அத்தை மகன்கிட்ட போயிட்டா'ன்னு பேசப்படாது. எங்கைய்யா எதை அவமானமா நெனச்சி செத்தாரோ, அதையே நான் செய்யப்படாது. அவரு நினைச்சது தப்புன்னாலும், அவரோட தப்பை நான் ஏத்துக்கிடணும். மயினி எப்படி..."

     "சரி. ஒனக்கு நேரமாவுது. நீ போம்மா. ஒன் கல்யாணத்துக்காவது சொல்லு. அழாதே! இந்த அழுகையை நான் செத்தபிறகு வச்சிக்கலாம்!"

     தங்கம்மா சிறிது தயங்கி நின்றுவிட்டு, அவனையே குளுமையாகவும், வெறுமையாகவும் பார்த்துவிட்டு மண்வெட்டியை மறந்துவிட்டுப் போனாள். பிறகு நினைவு வந்தவளாய் திரும்பி வந்தாள். மண்வெட்டியை எடுத்து அவளிடம் கொடுக்கப் போன ஆண்டி, பிறகு அதைத் தரையில் வைத்துவிட்டு, தரையில் கால் படாதவன் போல், ஆகாயத்தில் பறப்பவன் போல், அதற்குள் எதையோ தேடுபவன் போல் நடந்தான்.

     நையாண்டி மேளம்போல, இதயம் துடிக்க, உடம்பு வேர்க்க, உள்ளம் கனக்க, தலையெல்லாம் நோக, வேகவேகமாக நடந்து, ஊரின் ஒவ்வொரு மூலையிலும், இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் மாணிக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ., பி.டி.யோ...