உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
13 கரும்பட்டையான் கூட்டத்தின் காளியம்மன் ‘வரி விதிப்பு’ சட்டுப்புன்னு முடிந்துவிட்டது. ஆனால், செம்பட்டையான் கூட்டத்தின் வரி விதிப்பு ரப்பர் மாதிரி இழுத்தது. முதலில் கூட்டத்தை எங்கே நடத்துவது என்று பிரச்சினை மேலாவாரியாக எழுந்தது. ‘காஞ்சான்’ வழக்கம்போல் தன் வீட்டில்தான் நடத்தவேண்டும் என்றார். ஆனால், துளசிங்கம் தலையெடுத்து விட்டதால் அவன் தந்தை ‘எலி டாக்டர்’ தனது வீட்டில் வைக்க வேண்டும் என்றார். இறுதியில் இவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் கூடிவிட்டார்கள். சொல்லி வைத்தது போல், கிழவர்கள் ஒருபக்கமாகவும், வாலிபர்கள் ஒரு பக்கமாகவும் உட்கார்ந்தார்கள். இந்தத் தடவை கரும்பட்டையான் காளியம்மனுக்கு, இந்தச் செம்பட்டையான் சுட்லை மாடனைப் போட்டியாக்குவது என்று தீர்மானமாகிவிட்டதால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் கூட்டத்திற்கு வெளியே காதுகேட்கும் தொலைவில் கூடிக்கூடி நின்றார்கள். அவர்களுக்கும் ஒரு எரிச்சல்... ஒரு ஆசை... அதென்ன எல்லா வருஷமும் முதல் கொடை கரும்பட்டையான் கொடை. ‘குடிமவன்’ குத்தாலிங்கம் பிரித்துக் கொடுத்த நான்கு வெற்றிலைகளைக் குதப்பிக் கொண்டிருந்த கூட்டத்தின் முகப்பில் இருந்த எலி டாக்டர், ‘பால் குடிக்கத் தெரியாத’ அப்பாவி பூனை மாதிரி கேட்டார்... “சரிப்பா எப்போ கொடையை வச்சுக்கலாம்.” “இது என்ன பெரியய்யா புதுக்கேள்வி. இந்த வெள்ளில வரின்னா அடுத்த வெள்ளிலதான கொடை. இதுல ஏன் சந்தேகம் வருது.” காஞ்சான் விளக்கமளித்தார். “சந்தேகம் ஒனக்கு வர்ல... ஆனால் சில பயலுவளுக்கு இருக்கு. அதனால தான் எலி டாக்டர் அண்ணாச்சி கேக்காவ.” “ஏய். யாரும் சபையில் வக்கணப்பேர பேசப்படாது. நெசப்பேரத்தான் சொல்லணும்.” “ஆமா... எலி டாக்டர் தாத்தாவோட நெசப்பேரு என்ன.” “சின்னப்பய மவனுகளா. சும்மா இருங்கடா... சரி... அடுத்த வெள்ளில கொடை... அப்படித்தானே...” “கரும்பட்டையான் கூட்டம் நமக்கு வேற யாருமுல்ல... கொண்டான் கொடுத்தாக... அதோடு காளியம்மா மாடனுக்குத் தாயி... தாய்க்குப் பிறகுதான் மகன்...” “காளியம்மனுக்கு சுடல மவனோ இல்லியோ... ஒங்கம்மா பொறந்தது கரும்பட்டையான் குடும்பம்... ஒனக்கு தாய்மாமன் குடும்பம் உசத்தியாப் போச்சா...?” “ஏல உட்காருல... ஒன் மாமன் மச்சான் உறவ வீட்ல வச்சுக்க. இது சபை...” “என் தாய் மாமனுக்கும் எனக்கும் எழவு எட்டு கிடையாதுன்னு ஒங்களுக்குத் தெரியாதா...?” “ஒரு வேள இந்தச் சாக்குல சேரப் பாக்கியோ என்னவோ...?” “பரம்பரையாய் அவங்கதான் முதல் வெள்ளில கொடுக்காங்க. நாம் அந்தக் கோவிலுல போயி மாலை எடுத்துப் போடுறவங்க. அவங்க நம்ம கோயிலுல வந்து உத்தரவு கேட்கிறவங்க... வேண்டாங்கல... ஆனால் ஒரு வார்த்த அவங்ககிட்ட கேட்டுக்கிட்டு...” “நீ வேணுமுன்னா அவங்க காலுல போயி முட்டு. நாங்க போகப் போறதுல்ல.” காஞ்சானைத் தொலைவில் நின்ற அலங்காரி, முகத்தைச் சுண்டிச் சுண்டிக் கைகளை மேலே மேலே தூக்கி தூக்கித் தூண்டிவிட்டாள். அவர் விடுவாரா... “பரம்பரையாய் பழக்கம் என்கிற கரும்பட்டையான் பருப்பு, செம்பட்டையான் அடுப்புல, இனிமேல் வேகாது. அவங்கள இப்டி விட்டதாலதான் நம்பள இளப்பமாய் நினைக்காங்க. அவங்க கண்ணுக்கு பழனிச்சாமிதான் ஒரே ஒரு பெரிய மனுஷன். நானோ, துளசிங்கம், அப்பாவோ வெறும் மனுஷனாக்கூடத் தெரியல. எவ்வளவு திமுரு இருந்தா நம்ம துளசிங்கம் பய கடைக்குள்ள வந்து அந்தத் திருமலைப் பயல் அடிப்பான். எவ்வளவு திமுரு இருந்தால் நம்ம அலங்காரிய...” “ஏய் யார் பேச்ச பேசுனாலும் அலங்காரி பெரியம்மா பேச்சு எடுக்கப்படாது.” எல்லாரும் எதிர்பாராத வகையில், அலங்காரி அங்கே ஓடிவந்தாள். சில பெண்கள், அவள் சேலையைப் பிடித்து இழுத்தும், அவள் அதை விட்டுவிட்டு வரத் தயாரானவள் போல் முண்டியடித்தாள். கடைசியில், அந்தப் பெண்கள் தான் கூச்சப்பட்டு, பிடித்த சேலையை ஓடிப்போய் அவள் தோளில் தொங்கப் போட்டார்கள். அலங்காரி, சபைக்கு முன்னால் வந்து கத்தினாள். “என்ன அலங்காரி பேச்சு பேசப்படாதா. பெறவு எதுக்குல பெரியம்மான்னு சொல்லுத...? அதுக்குப் பதிலா வேற வார்த்தய போட்டா என்னடா. பேசிதியளோ... பேச்சு செத்த பேச்சு... இது கெளரவ சபையா... இல்ல செம்பட்டையான் சபையா... எனக்கு இப்போ தெரியணும்.” “என்ன அலங்காரி இந்தச் சமயத்தில...” “பின்ன என்ன மச்சான்... கெளரவ சபையில திரெளபதிய துச்சாதனப்பய துகிலுரிஞ்சது மாதிரி... பழனிச்சாமி வீட்ல என்னை அருணாசலம் அப்டி மான அவமானமாப் பேசிட்டான். காஞ்சான் மச்சான பயல்னு வேற திட்டுனாள், அந்த பேச்சி. துளசிங்கம் கடையில வந்து அடிச்சுட்டுப் போறான் திருமல...” “எம்மா... இது ஆம்புள விவகாரம். நீ போ... பொம்புளக்கி வேல இல்ல...” “ஆம்புளைவ பொம்பளையா மாறிட்டா, பொம்புளயவ ஆம்புளயா மாறித்தானே ஆவணும்...? எங்களுக்கு அதான் ஒங்க குடும்பத்து பொம்புளயளுக்கு... இங்க கூடியிருக்கிற செம்பட்டையான்... ஆம்புள மார்ல எத்தனை பேரு கரும்பட்டையான் பயலுவ காலக் கழுவப் போறியள்னு தெரியும்...” எலி டாக்டர், கண்ணைச் சிமிட்டியபடியே எச்சரித்தார். “அலங்காரி ஒனக்கு அபராதம் போட வேண்டியது வரும்.” “அப்படின்னா அதையும் நீருதான் கட்டவேண்டியதிருக்கும். எங்க வீட்டு மம்மத ராசாவோட கூடப் பிறந்த அண்ணாச்சியாச்சே.” “போம்மா... போம்மா... ஏல... பேய்ப் பய மவனுளா... லேசா சிரிங்கல... குடலு அறுந்துடப் போவுது.” துளசிங்கம் எழுந்தான். அப்பாவை ஒரு முறைப்பு முறைத்து, அவரை கப்சிப்பாக்கி விட்டுப் பேசினான். “அலங்காரி சித்தி சொன்னதுல தப்பில்ல. சித்தி நீ ஏன் போறே, இங்கேயே நில்லு. அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம். சரிதானே...” “ஒரு வார்த்த அவங்க கிட்டயும்...” “நாம என்ன வேலைக்காரனுவளா, எசமான்க கிட்ட உத்தரவு கேட்க.” “ஒரே நாள்ல ரெண்டு கொடைக்கு கூட்டம் சிதறும். அடிதடி கூட வரும்...” “அதை நான் பார்த்துக்கிடுறேன். நம்ம மேல ஒரு தூசி துரும்பு விழாது. அப்புறம்...” “அப்படின்னா சரிதான்.” துளசிங்கம் மீண்டும் உட்கார்ந்து அப்பாவைப் பேசவிட்டான். துளசிங்கத்திடம் பலருக்குப் பயம். இவன் கிட்டதான் உரத்த வாங்கியாகணும். இவனோ, ராமய்யா வயலப் பண்ணுவது மாதிரி பண்ணிடப்படாது. அதோட இவன்கிட்டே கடனேன்னு வாங்குனாலும் கடனிலயே வாங்கலாம். எல்லாத்துக்கும் மேல, நம்ம பயல். இளவட்டப் பயலுவல்லாம் இவன் பக்கம். இந்தக் குடும்பத்துல, முதல் தடவையா, நாகரீகம் தெரிஞ்ச நம்ம பயல். “சரிப்பா... வரி எவ்வளவு போடலாம்...?” “அறுபது ரூபாய்.” “போதுமா...?” “போதாட்டா என் மகன் துளசிங்கம் இருக்கான்.” “சபையிலயாவது நான் இருக்கேன்னு சொல்லேன் டாக்டர் அண்ணாச்சி. தலை இருக்கும்போது வால் ஆடலாமோ...” வால்தான் ஆடும் என்பது போல், துளசிங்கம் மீண்டும் எழுந்தான். இலைதழை உடையோடு இதுதான் தீர்ப்பு என்பது மாதிரி பேசினான். “இப்பவே சொல்லிட்டேன்... வீடியோ சினிமாப்படம் போடப் போறோம்...” “திருவிளையாடலா... சம்பூர்ண ராமாயணமா... ரெண்டுல எதுன்னாலும் சரிதான்...” “ரெண்டும் இல்ல. ஒரு இங்லிஸ் சண்டைப்படம். ஒரு தமிழ் காதல் படம்...” “கட்டணம் வசூலிக்காட்டா சரிதான்...” “அப்புறம் வில்லு, பொம்பள வில்லுதான். சர்க்கரைப் பட்டி சடையம்மாவோட வில்லு.” “எல்லாத்தையும் நீயே தீர்மானம் பண்ணிட்டே. நீயும் யாரு,நம்ம பயதானே, சம்மதிக்கோம்... சம்மதிக்கோம்...” “நீங்க சம்மதிப்பிங்கன்னு எனக்குத் தெரியும். எதுக்கு சொல்ல வந்தேன்னா... நம்ம சுடலைமாடன் கோவிலுல இருபத்தோரு சாமிங்க... எக்ஸ் டிராவா ஒருத்தர சேர்த்து இருபத்திரண்டு பேரு சாமியாடுறாங்க... இவங்கெல்லாம் அளவோட ஆடனும்.” “என்னப்பா... நீ குடும்பக் கட்டுப்பாடு கூட்டத்துல பேசுறது மாதிரி பேசுற... சாமிகள பழிக்கப்படாது.” “நான் சாமிகளப் பேசல... சாமியாடிகளத்தான் பேசுறேன். சாமியாடுற எங்கப்பாவையும் இந்த சின்னய்யாவயும் சேர்த்துத்தான் சொல்லுறேன். தண்ணி போட்டுட்டு யாரும் சாமியாடப்படாது. அப்படி ஆடுனா இளவட்டங்க கோயில் பந்தலுலயே கட்டி வச்சுடுவோம்.” ‘பட்டை தீட்டும்’ சாமியாடி ரத்தினம் உரிமைக்குரல் எழுப்பினார். “ஒன் வயசுக்குத் தக்கபடி பேசு துளசிங்கம்.” “துளசிங்கம் சொன்னதுல என்னப்பா தப்பு. சாமியாடுற நாளுலயாவது குடிக்காம இரேன். போன வருஷம் குடிச்சுப்புட்டு மகளேன்னு சொல்லுறதுக்குப் பதிலா மயினின்னு பேசுற. மாடனுக்கு ராமாக்கா எப்படி மயினி ஆனாள்.” “சரி, சபை முடியலாமா...? ரெண்டு நாளையில் வரிப் பணத்த எல்லாரும் கொடுத்துடனும்.” எல்லோரும் எழப்போனபோது, பத்துப் பதினைந்து பேர் சுற்றி வந்து நின்றார்கள். அத்தனைபேரும் கரும்பட்டையான் குடும்பத்தினர். இவர்கள் வரவை எதிர்பாராத காஞ்சான் கத்தினார். “என்னப்பா இது. அடிக்க வாரது மாதிரி வந்திருக்கிய.” வந்தவர்களில் முக்கியமான, ஒருவர் மரியாதையுடன் பேசலானார். “நாம எதுக்கு மச்சான் அடுச்சுக்கணும். நீங்களும் வரி போடுறதா கேள்விப்பட்டோம்...” “ஆமா... அதுக்கென்ன இப்போ...?” “வருஷா வருஷம் நாங்கதான்...” “ஒங்களுக்கு இந்த ‘நான்’ என்கிற அகங்காரம் வரப்படாதுன்னுதான் அடுத்த வெள்ளில கொடை கொடுக்கப் போறோம்.” “அடுத்த வருஷம் நீங்க மொதல்ல கொடுங்க. நாங்களே விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் வரி போட்டுட்டோம்...” “நாங்களுந்தான் போட்டுட்டோம்.” “இப்படி விதண்டாவாதமா பேசுனா எப்படி...?” “கரும்பட்டையான் பேசுனால் வாதம். அதையே நாங்க பேசுனா விதண்டாவாதம். அடுத்த வருஷம் நாங்க விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் நாங்கதான் நடத்தப் போறோம்.” கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த ‘நாட்டு வக்கீல்’ நாராயணன், கெஞ்சாமலும் அதேசமயம் மிஞ்சாமலும் பேசினான். நாட்டு வக்கீல் என்று பெயர் எடுத்தவன்... “கோயில் முறைன்னு ஒண்ணு இருக்கே. காளி, மாடனோட தாய். வருஷா வருஷம் ஒங்க மாடன் எங்க காளிகிட்ட வந்து விபூதி பூசிட்டுப் போய்த்தான் ஆடுறது வழக்கம்.” “இந்த வருஷம் எங்க மாடன் ஒங்க காளிகிட்ட விபூதி வாங்க மாட்டான்...” “சரி வாங்கட்டும். வாங்காமப் போகட்டும். இனிமேல் வருஷா வருஷம் மாறி மாறி காளிக்கும், மாடனுக்கும் கொடை கொடுத்துடுவோம். இந்த வருஷம் காளிக்கே முதல் கொடையா இருக்கட்டுமுன்னு எங்க பழனிச்சாமி அண்ணாச்சி ஒங்ககிட்டே சொல்லச் சொன்னாரு.” கோலவடிவின் சிநேகிதத்தால், அடுத்தவர்கள் பதிலளிக்கட்டும் என்று தன்பாட்டுக்கு இருந்த துளசிங்கம், அந்தப் பக்கமாக வந்த திருமலையைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான். புதிய உறவு பழைய பகையானது. அழுத்தம் திருத்தமாகக் கேட்டான். “ஏன் பழனிச்சாமி எங்ககிட்ட வந்து கேட்க மாட்டாரோ...? அவரு பெரிய மனுஷனா இருந்தால் அவரு வீட்டு வரைக்குந்தான்.” திருமலைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. “ஏல... செறுக்கிமவனே. யார்ல பழனிச்சாமி... பேர் சொல்லிக் கூப்புடுற அளவுக்கு வந்துட்டியா...?” “பழனிச்சாமி... பழனிச்சாமி... என்னல செய்வே...?” “இப்போ ஒன்னையும் ஒன் சொக்காரனையும் என்ன செய்யப் போறேமுன்னு பாரு.” “வீடு விட்டு வீடா அடிக்க வந்திருக்கிய. ஏல... நீங்கல்லாம் நிசமான செம்பட்டையான்னா எடுங்கல அரிவாள. கையில் அது இல்லாட்டா, கல்ல எடுங்கல.” கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் வீரத் தனத்திலும், பேடித்தனத்திலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இருதரப்பும், புறநானூற்று வீரர்கள் போல் மோதப் போனாலும், அந்தப் பள்ளிக்கூட மைதானத்தில் அப்போதைக்கு செம்பட்டையான் வகையறாக்களே அதிகம். போதாக்குறைக்குத் துளசிங்கம், அந்தக் குடும்பத்தின் இளைஞர்களுக்குக் குஸ்தி என்ற பெயரில் எதையோ சொல்லிக் கொடுத்திருந்தான். அவர்கள் அந்த குருவையே ஒரு மாதிரி ஏடாகோடமாய்ப் பார்த்தபோதுதான், அவன் அந்த வித்தைப் பயிற்சியை இடையிலே நிறுத்திவிட்டான். என்றாலும், இந்த வாலிபர்கள் இந்தக் கரும்பட்டையான்களைச் சமாளிக்க கற்றதோர் கைம்மண்ணளவு குஸ்தி போதும் என்பதுபோல் கைகளைச் சுருக்கி வைத்து நீட்டப் போனார்கள். குஸ்தியாம்... சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், இருபது பேர் கொண்ட கரும்பட்டையான் கூட்டத்தை நூறு பேர் கொண்ட செம்பட்டையான் கூட்டம் சுற்றி வளைத்தது. அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிய நாராயணன், பழனிச்சாமியின் தம்பி அருணாசலம், மகன் திருமலை, குள்ளக் கத்தரிக்காய் ராமசாமி, ஆகிய ஒரு சிலர் மட்டும், ‘கிட்ட வாங்கடா’ என்று பேசினார்கள். ஆனால் அந்தக் குரல்களோ கெஞ்சுவது போல் தான் ஒலித்தன. எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், எகிறி எகிறிப் பேசுவது எந்தப் பட்டியில் உண்டோ இல்லையோ இந்தச் சட்டாம்பட்டியின் வழக்கம். கரும்பட்டையான்களைப் பார்த்து செம்பட்டையான்கள் சீறினார்கள். “இப்போ கூட லேட்டுல்ல. தெருவிட்டு தெருவுல அடிக்க வந்ததுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு ஓடிப் போங்க. வழி விடுறோம்... இல்லன்னா ஒங்கள ஒரு வழி பண்ணாம விடமாட்டோம்.” துளசிங்கம், மனித வளைக்குள் மாட்டிக் கொண்ட திருமலையை ஏளனமாகப் பார்த்தபடியே பேசினான். “ஏய். திருமல... இப்ப துள்ளேண்டா...?” “நீ வேணுமுன்னா ஒத்தைக்கு ஒத்தையா வாறியாடா...? பதினைஞ்சு பேர நூறு பேரு மடக்குறது பெரிய வீரமா...?” “இது தெரியாம சவுடால் பேசுறது மட்டும் வீரமா...?” “சரி. தெரியாம வந்தோமுன்னு மன்னிப்புக் கேட்டுட்டு மரியாதியா போங்க.” “ஒத்தைக்கு ஒத்த வாடா.” “வருவேன். ஆனால் நான் எட்டுபேர ஒரே சமயத்துல சமாளிக்கிறவன். ஒன்ன மட்டும் கவனிச்சுட்டு எழுபேர விடுறதுக்கு தயாராய் இல்லல.” செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கைகலப்பு இல்லாமல் வாயாடுவார்களா என்று ஒரு சந்தேகம் வருவது இயற்கைதான். அது அந்த ஊர் மண்வாகு என்பது மட்டுமல்ல, துளசிங்கம் திருமலை தவிர, எவனும் எவனுடனும் தனிப்பட்ட முறையில் மோதவில்லை. ஒருவேளை இந்தச் சூழலே இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்து இருதரப்பில் யாராவது ஒருவர் மீது ஒருவர் கையோ, காலோ தற்செயலாகப் பட்டால், அது கொலைகளில் கொண்டு போய் விடலாம். அத்தகைய சந்தப்பங்களில் கூட்டம் கும்பலாகிவிடும். ஒரு கூட்டம் ஒரே மனிதன்போல் உணர்ச்சி வசப்படும்போது அதற்குப் பெயர் கும்பல். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாமன் மச்சானை வெட்டுவான். மச்சான் மயினியைத் துகிலுரிவான். செம்பட்டையான், இளக்காரமாய்ப் பேசப் பேச, கரும்பட்டையான் வம்சத்துக் கூட்டம் கும்பலாகிக் கொண்டிருந்தது. தற்காப்பிற்காவது தாக்கியாக வேண்டும் என்று திருமலையும், அவன் சிற்றப்பாவும், வேட்டிகளைத் தார்ப்பாய்ந்தபோது அலங்காரி ஓடி வந்தாள். கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடியே கூக்குரலிட்டாள். “ஏய்யா... நாம் இன்னையோட இருந்து இன்னையோட போற அந்நியம் இல்ல. அன்னியோன்னியமா இருக்கவங்க. நாளைக்கு ஒருத்தர் முகத்துல ஒருத்தர் விழிச்சாகணும். சுடலைக்கும், காளிக்கும், பலி கொடுக்க ஆடு இருக்கு, கோழி இருக்கு... மனுஷங்க வேண்டாய்யா...” அலங்காரி, செம்பட்டையான் வட்டத்தை உடைத்து, உள்ளே போய் ஒவ்வொரு செம்பட்டையானையும் பின்னால் தள்ளிக் கொண்டிருந்தாள். பலர் அதுதான் சாக்கு என்று அவள் தொடுமுன்னாலயே பின்னால் போனார்கள். சிலர், அவள் மீதுள்ள பழைய கோபத்தை மனதுக்குக் கொண்டு வந்து, தள்ளியவளையே தள்ளினார்கள். இந்தச் சமயத்தில், ஐம்பது பேர் மேற்குப் பக்கத்தில் இருந்து ஒடி வந்தார்கள்... காத்துக்கருப்பன்கள்... அக்கினி ராசாவின் சித்தப்பா பற்குணம், அந்த கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் போல, முன்னால் நின்றார். அதற்குள் அந்த, ‘காத்துக்கருப்பன் கூட்டம்’ வட்டம் போட்ட செம்பட்டையான் கூட்டத்திற்கு வெளியே ஒரு வட்டம் போட்டது. இந்தக் காத்துக்கருப்பன்கள் அடிதடி திலகங்கள். அடித்துவிட்டுத் தான் பேசுவார்களே தவிர, பேசிவிட்டு அடிக்க மாட்டார்கள். ஊர்விட்டு ஊர் போய் அடித்துவிட்டு, செறு வென்று திரும்புவதிலும் முரடர்கள். பற்குணம் தலைப்பாவைக் கட்டிக் கொண்டே கத்தினார். “தனியா மாட்டிக்கிட்டா இப்படியா, அவங்கள கோடுபோட்டு வைக்கது மாதிரி வைக்கது, ஏய் துளசிங்கம். அவங்கள விடுடா... விடுறியா, இல்ல விட வைக்கணுமா...” துளசிங்கம் சும்மா இருந்தபோது, காஞ்சான் பதிலளித்தார். “என்ன பற்குணம்... விவகாரம் தெரியாமப் பேசுற. மெனக்கெட்டு எங்கள அடிக்கிறதுக்குன்னே இங்க வந்து வம்பு செய்தானுவ. இவனுவள அடிச்சு கிடத்திட்டது மாதிரி பேசுதியே. இந்த இருபது பேரையும் மலத்திப்போட எவ்வளவு நேரமாவும்? செய்தோமா...” “அப்டிச் செய்தால் பின்னால என்ன நடக்குமுன்னும் யோசிக்கனுமுல்லா..” “தெருவிட்டு தெரு வந்த பிறவு அந்த திமுருக்கு அடங்க முடியுமா. அப்படிப்பட்ட உயிருதான் எதுக்கு...” “துளசிங்கம் பெரியவிய பேசும்போது நீ சும்மா இரு. சரி... இப்போ அவங்கள விடப்போறியளா...? இல்லியா...?” “நீ பொதுப்பிள்ள. நீ சொன்ன பிறவும் கேட்காம இருப்பமா? ஏல துளசிங்கம்... இங்க வாடா... மாரியப்பா தள்ளிப் போ. எல கவுகண்ணா... ஒனக்கு தனியா வெத்துல பாக்கு வச்சு சொல்லணுமா...? சரி... பற்குணம் உட்காரு. விஷயத்த இப்பவே பேசித் தீர்த்துடலாம். பழனிச்சாமி மச்சான கூப்பிடுவோமா.” “எங்கப்பா கூப்பிட்டாலும் வரமாட்டாரு.” “எங்க துளசிங்கத்தையும் ஒங்க திருமலையையும் ஊரவிட்டே துரத்திட்டா ஊர்ல பேசுறதுக்கு எந்த விவகாரமும் இருக்காது.” காஞ்சான் பேசப் பேச, எலி டாக்டர் அவரை விலாவில் இடித்தார். ஒருவேளை, அந்தக் குடும்பத்தில் தனக்கு உள்ள இரண்டாவது பெரிய மனுஷத்தனத்தை என் மகன் துளசிங்கம் பறிச்சுடுவான்னு பயப்படுதானா... கழுத களவாணிப் பயல்... தீப்பிடிச்ச பங்காளி வீட்டை அணைக்காம அவன் காலையே கட்டிப் பிடிச்சு அழுத பயல் மாதுரில்லா அழுவுறான். இந்த எலியன்... எலி டாக்டர், காஞ்சான் வாயை, தனது கையாலேயே பொத்திக்கொண்டு பேசினார். “நீயே சொல்லு பற்குணம். எங்க கோவிலுக்கு எப்போ கொடை கொடுத்தா இவங்களுக்கு என்ன. இவங்கதான், மொதல்ல கொடை கொடுக்கணுமுன்னு சட்டமா, இல்ல சர்க்கார் உத்தரவா... சொல்லு பற்குணம்.” பற்குணம் பதில் சொல்வதற்கு முன்பு, அவரின் சின்னய்யா மகன் பீடி ஏசெண்ட் பால்பாண்டி பதிலளித்தான். “சட்டம் வேண்டாம்... உத்திரவு வேண்டாம்... சம்பிரதாயமுன்னு ஒண்ணு இருக்குல்லா. இந்த ஊர்லயே பெரிய குடும்பம் எங்க குடும்பம். எங்க வீரபத்திர சாமிக்கே, ஒங்க ரெண்டு குடும்பமும் காளிக்கும், மாடனுக்கும் கொடுத்து முடிச்ச பிறவுதான் கொடுக்கோம். கடைசி வெள்ளில நடத்துற எங்களால முதல் வெள்ளில நடத்த முடியாதா என்ன...” “சரிப்பா... நாங்க ரெண்டு குடும்பமும் நடத்தல. ஒங்க காத்துக் கருப்பன் வீரபத்திரனுக்கே முதல் வெள்ளில கொடுங்க. ஒங்களுக்கு விட்டுக் கொடுக்கோம். ஆனால் கரும்பட்டையான் கூட்டத்துக்கு எந்த வருஷம் விட்டுக் கொடுத்தாலும் இந்த வருஷம் விட்டுக் கொடுக்கப் போறது இல்ல. இப்பவே சொல்லு, ஒங்க குடும்பத்துல ராமய்யா தம்பிதான் பெரியவன்னாலும், நீதான் தலை. சொல்லு...” எலிடாக்டர் போட்ட கொக்கிப் பிடியில் மாட்டியபடி, பற்குணமும், பீடி ஏசெண்டும், உடம்பை நெளித்தார்கள். ஐம்பது வயதுக்கார பற்குணத்தின் வைரப்பட்ட கருப்புடம்பு களிமண்போல் குழைந்தது. எலி டாக்டரின் இந்த யோசனைக்குக் காத்துக் கருப்பன்களில் பலர் ஒத்துப் பாடினார்கள். “ஆமாண்ணாச்சி... ஆமா தம்பி... ஊரிலயே பெரிய குடும்பம் நம்ம குடும்பம். நாமளே முதல் வெள்ளில கொடை கொடுப்போம்.” பற்குணம் அரசியலில் கொஞ்சம் அனுபவப்பட்டவர். அதனால், உடம்பைக் குழைத்தும், குரலை உயர்த்தியும் பேசினார். “மூள இருக்காடா... பொதுக்கூட்டத்துல கடைசில பேசுறவரு யாரு... தலைவர் தானே. இது மாதிரி... கடைசி வெள்ளில கொடை கொடுக்கதுதான் நம்ம குடும்பத்து பெரும. சரிவே... எலிமச்சான்... என்ன சொல்லுதியரு.” “ஒங்களுக்கு எப்டி கடைசி வெள்ளி முக்கியமோ. அப்டி எங்களுக்கு முதல் வெள்ளி. இதுல பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல.” “ஊர் வழக்கத்தை மாத்தப்படாது. இதனால ஊரே குட்டப் புழுதியாய் ஆயிடும் ஒங்களால. அம்மன் கொடையை அடுத்த வெள்ளிக்கு தள்ளிப் போட முடியுமா, முடியாதா. கடைசியாய் கேட்கேன்...” “கடைசியாய் கேட்டாலும் சரி, மொதல்ல கேட்டாலும் சரி, வச்சது வச்சதுதான். இதுல பேச்சுக்கே இடமில்ல, மாப்பிள்ள...” “அப்போ இந்தக் காத்துக் கருப்பன் குடும்பத்துக்காரங்க சொல்லுறத கேட்க மாட்டிய... அப்படித்தானே மச்சான்.” “நீ அப்டி எடுத்துக்கிட்டால் நாங்க எப்டி பதில் சொல்லுறது மாப்பிள்ள...? ஆனால் எங்க மாடனுக்கு அடுத்த வெள்ளில கொடை நடந்தே தீரும்.” “அதை நடத்த விடாமல் செய்ய எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகுமுன்னு நினைக்கிய.” அலங்காரி ஒதுக்குப்புறமாய் நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்து ஓடோடி வந்தாள். “நீ பேசுறதுல ஒரு வகையும் இல்லல... தொகையும் இல்ல... எங்க சுடலை மாடனுக்கு நடத்துற விசேஷத்த யாராவது தடுத்தால், அவங்கள எங்க மாடனே கேட்பான். சொம்மா பழனிச்சாமி அண்ணாச்சி வீட்டுக்கும் ஒங்க வீட்டுக்கும் கொடுக்கல் வாங்கல் பேச்சு நடக்குதுன்னு தாம் தூமுன்னு குதிக்கப்படாது.” “எங்க குடும்பத்துல பொம்புளைவ இப்டி அம்பலத்துல வந்து பேசுற பழக்கம் இல்ல. அப்டிப் பேசுனா, ஒரே வெட்டா வெட்டிப் பிடுவோம். வருஷக்கணக்குல இப்பிடி விட்டு வைக்கமாட்டோம்.” “எங்க கரும்பட்டையான் குடும்பத்துலயும் அப்படித்தான். எங்க பொம்புளைக எவளும் எங்கள மீறிப் போக மாட்டாளுவ. எங்க பொம்புளயால, எங்க தல, எப்பவும் குனிஞ்சது கிடையாது.” கடைசியாகப் பேசிய திருமலையை உற்றுப் பார்த்தபடியே, துளசிங்கம் ‘ஒகோ அப்படியா...’ என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தான். பற்குணம் எழுந்தபடியே கர்ஜித்தார். “எந்தப் பொம்புளயப் பத்தியும், எந்தப் பயலும் பேசப்படாது. ஆனால் ஒண்ணு, செம்பட்டையான் கூட்டம் சுடலமாடனுக்கு இரண்டாவது வெள்ளியிலயோ, மூன்றாவது வெள்ளியிலயோதான், கொடை கொடுக்கணும். இதையும் மீறி கொடுத்தால் சுடலைமாடன் ஆடமாட்டான், ஊருதான் சுடலையாவும்.” “நீரு இப்டி மிரட்டுறது நல்லதாப் படல.” “நல்லதாப் படுதோ, கெட்டதாப் படுதோ, நாலு நாளு கெடு கொடுக்கேன். நல்லா யோசிச்சு ஊரோட ஒத்துவாங்க.” “நீரு மட்டும் ஊராயிடாதே.” “ஆகுதா ஆகலியான்னு அப்புறம் தெரியும். ஒங்க கோயிலுல மேளச் சத்தம் கேட்டால், அப்புறம் இன்னொரு மேளச் சத்தமும் கேட்கும். அதுக்கு இடந்தராதிய. எழுந்திருங்கல. இவனுவ கிட்ட நமக்கு வேலயில்ல.” பற்குணம் எழுந்தார். அவருடன் வந்த சொக்காரர்களும் கரும் பட்டையான்களும் எழுந்தார்கள். இந்த காத்துக்கருப்பன் கூட்டத்தில் பலர் செம்பட்டையான், கரும்பட்டையான் குடும்பங்களில் பெண் எடுத்தவர்கள், கொடுத்தவர்கள். ஆனால் செம்பட்டையான் குடும்பத்தில் இப்படி உறவு வைத்திருப்பவர்கள் ஏழைகள். அவர்கள் பற்குணம் பேசியதை மனதுக்குள் ஆட்சேபித்துக் கொண்டே தத்தம் உடல்களை பின்னால் நடக்க விட்டார்கள். செம்பட்டையான்கள் ஆடிப்போய் விட்டார்கள். காஞ்சான், எலி டாக்டரை குற்றஞ்சாட்டுவது போல் பேசினார். “ஆழந்தெரியாமல் இறங்கிட்டோமே. காத்துக்கருப்பங்க கரும்பட்டையான் பயலுவகூட சேர்ந்துட்டாங்க. நாம எந்த மூலைக்கு... ஏய்... துளசிங்கம் என்னடா இது...” துளசிங்கம், அழுத்தமாகப் பேசினான். “கவலைப்படாதிய சித்தப்பா. மெட்ராஸ்ல இருந்து லாரில ரெளடிகள கொண்டு வாறேன். சினிமா ஸ்டண்ட் ஆட்களையும் கொண்டு வாறேன். அதுக்குள்ள என் கையும் சுகமாயிடும்...” அலங்காரிக்கு வழக்கம்போல் நெஞ்சு கணத்தது. முன் நெற்றிக்குள், உள்ளிருந்து ஏதோ ஒன்று உருண்டு வந்து மோதியது. காதுகள் இரைந்து, வெளிச்சத்தை விரட்டின. அந்தக் கூட்டமே ஒரு காடாகவும், தான் மட்டும் தனியாகவும் தோன்றியது. எப்பிடில்லாம் குத்திக் குத்திப் பேசுறாங்க. ஏல... காத்துக் கருப்பன்களா... கரும்பட்டையான் மூஞ்சுகளா... என் நிலையில ஒங்க அம்மாரும், பொண்டாட்டிமாரும் இருந்தா, அவளுவளும், என்னை மாதிரிதான் இருப்பாளுவடா. எனக்கு காலமே. காலனா வந்தது, ஒங்களுக்குத் தெரியுமாடா... துளசிங்கம், பேசுவதை, ஆற்றுப்படையாக கேட்டுக் கொள்வதற்காக, சிந்தனையோ, நிபந்தனையோ, எதையோ ஒன்றை தடைசெய்துவிட்டு, உன்னிப்பாய்க் கேட்ட அலங்காரி, இப்போது எக்காளமாகப் பேசினாள். குறுஞ்சிரிப்பும் - கொள்கை முழக்கமுமாய், “எதுவும் வேண்டாம் சுடல மாடன். எனக்கு சொல்லிக் கொடுத்ததை, நான் ஒங்ககிட்ட சொல்லுவேன். நீங்க நான் சொன்னத செய்தாப் போதும். காத்துக்கருப்பன்களையும், அந்த கரும்பட்டையான்களையும், ஒரே கத்திரியால் மொட்டை அடிச்சுடலாம்.” ஆண்கள், அலங்காரியை அதிசயமாகப் பார்த்தார்கள். இதுவரை அவளை இளக்காரமாகப் பார்க்கும் செம்பட்டையான் தாய்க்குலம், அவளைத் தலைவியாக ஏற்றுக் கொண்டதுபோல் அண்ணாந்துப் பார்த்தது. |