2

     இருபுறமும் இருந்து வந்த துளசிங்கமும், கோலவடிவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எதிரெதிராய் வந்து நின்றார்கள். துளசிங்கம், அவளை லேசாகப் பார்த்து விட்டுக் கையில் இருந்த கம்பைத் தலைக்கு மேலே தூக்கி, சிவப்பு வைரங்களாய் மின்னிய ஆலம்பழங்களை அடித்தடித்து விழத்தட்டினான். அப்படி அடித்ததில் ஓரிரு பழங்கள் கோலவடிவின் முன் நெற்றியில் மரகதக் கற்கள் போல் பதிந்தன. அவள், அவற்றை எடுத்து தூர வீசியபடியே, அவனை முகஞ்சுழித்துப் பார்த்தாள். துளசிங்கம், சித்திக்காரி அலங்காரியிடம் எதையோ பேசப் போனான். கோலவடிவு தன் சித்தப்பா மகள் சந்திராவிடம் எதையோ கேட்கப் போவதுபோல் மேலுதட்டை கீழுதட்டால் ஈரப்படுத்த அவற்றை பிரிக்கப் போனாள்.

     அலங்காரி இலைகளை மூடியிருந்த ஈரக் கோணித்துண்டை எடுத்து உதறுவதுபோல் உதறி, அந்த இருவரையும் ஓரங்கட்டிப் பார்த்தாள். அவள் எதையும், எவரையும் சாய்க்கப் போவதுபோல் சாய்த்துப் பார்ப்பவள். காக்கா பார்க்குமே அப்படிப்பட்ட பார்வைக்காரி. இதனால், ஊரில் இவள் இருக்கும்போது, சித்தி என்றும், அக்கா என்றும் உண்மையான அன்போடு அழைப்பவர்கள்கூட, அவள் இல்லாதபோது, ‘காக்காக் கண்ணி’ என்பார்கள். ஆலமரத்தில் உட்கார்ந்திருக்கும் எந்த காக்காயாவது எச்சம் போடும்போது, இந்த அலங்காரி, “பய காக்காவ பாருங்க” என்பாள். எல்லோரும், காக்காவை ஒப்புக்குப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பாய் சிரிப்பார்கள். அலங்காரிக்கு கண்தான் காக்காக் கண்ணே தவிர, உடம்பு என்னமோ, கருடன் மாதிரி பறக்க முடியும் என்பது போன்ற லேசாய்த் தட்டையான உடம்பு. தடிப்போ ஒல்லியோ இல்லாத பிடிபடாத அழகைச் சுமக்கும் பிடிப்பான உடம்பு. நாற்பது வயதிலும் நளினம் குறையாத தோரணை. அதேசமயம், மனதுக்குள் ஏதோ ஒன்று குடைவது போன்ற முகப் புழுக்கம்.

     வாடாப்பூ எதேச்சையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

     “ஏன் ரெண்டு பேரும் சொல்லிவச்சது மாதிரி நிக்கிய... ஒக்காருங்களேன். நாங்க படுற பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்... ஏழா சந்திரா, அந்தப் பாயைத் தா... துளசிங்கம் உட்காரட்டும்... கோலவடிவு நீயும் உட்காரேன்...”

     அலங்காரியை வரம்பிற்கு மீறித் திட்டிவிட்டோமோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதால் தப்புத் தப்பாய் பீடி சுற்றிய சந்திரா, அவளுக்கு சலுகை காட்டுவது போல், அந்த இரண்டு சதுரடிப்பாயைத் துளசிங்கம் நின்ற பக்கமாக வீசினாள். அவன், உடனே அதை எடுத்து ஆலமரக் கிளைபோல் நீண்ட வேரில் மடித்துப் போட்டு உட்கார்ந்தான். கோலவடிவு அப்படியே நின்றாள்.

     அலங்காரி புதிய வரவுகளான இருவரையும் நோட்டமிட்டுப் பார்த்தாள். இரும்பைச் சிலையாக்கி, அதில் எண்ணெய் தேய்த்துவிட்டது போன்ற துளசிங்கத்தை, துள்ளிவிழப் போகும் ஆமணக்குக் செடி ஒய்யாரத்தில் தோன்றிய கோலவடிவுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். அவனின் முடிகுறைந்த வட்டக்கிராப்பையும், அவளின் கோதி முடிந்த மல்லிகைப்பூ கொண்டையையும், மனதுக்குள் ஒன்று சேர்த்து வைத்துப் பார்த்தாள். ஒரு அழுத்தத்தை, ஒரு மென்மையுடன் இணைத்துப் பார்த்ததில் அவளுக்குக் கணவனால் கிடைக்காத சுகம் கிடைத்தது. இப்போது, தன் மனதில் தோன்றிய சபதத்தைக்கூட மறந்து, அந்த இருவரையும் இயல்பாக இணைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டாள். சந்திாா, அலங்காரியை தாஜா செய்வதுபோல் கேட்டாள்.

     “அத்த, ஒங்க மச்சான் மகன் ஊமையா?”

     அலங்காரிக்கு இப்போது மனம் லேசாய் சுகப்பட்டது. அவளும் இயல்பாகவே திருப்பிக் கேட்டாள்.

     “ஆமாண்டி என் மருமவளே... அதே கேள்விய அத்த திருப்பிக் கேக்கேன், ஒன் பெரியப்பா மகள் கோலவடிவுக்கு வாய் பேச வராதோ...”

     கோலவடிவும், துளசிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். துளசிங்கம், லேசாய் வளைந்த தன் மூக்கு நுனியை ஆள் காட்டி விரலால் அடித்தபடியே, கோலவடிவையும், சந்திராவையும் பொதுப்படையாய்ப் பார்த்தபடியே பேசினான்.

     “நான் பேச ஆரம்பிச்சால்... ஒங்க காது தாங்காது... கம்மலு அறுந்து என் கையில விழும். அப்படிச் சிரிப்பிங்க...”

     “ஒமக்கு மங்கலமா பேச வராதோ... ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க அதிக நாளாய் டவுனுல இருந்தவருல்லா... கிராமத்து நாகரிகம் வராதுதான்.”

     “என் மவன அப்பிடிப் பேசாத... சந்திரா... நம்ம ஊர்ல... மூட்டை தூக்கி வண்டியடிச்சு... கடைசியல வக்குல்லாம மெட்ராசுக்கு போன பய மவனுவல்லாம் அங்க எச்சிப் பாத்திரத்தை கழுவுனாலும், ஊருக்கு வந்து கண்ணுல கறுப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டு வாயில சிகரெட்ட ஊதிக்கிட்டு ஒரு நாளுலயே நேரம் போவமாட்டக்குன்ன துள்ளறதப் பார்க்கும்போது... எங்க துளசிங்கம் ஊருக்கு வந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஊர விட்டுப் போகணுமுன்னு நினைக்கல... பிள்ள... ஏண்டா துளசிங்கம்... ஒன்னத் தாய்யா... ஒன் உரக்கடை எப்படிடா இருக்கு...?”

     துளசிங்கம் கையில் இருந்த கம்பைத் தன் மார்போடு மார்பாய்ச் சாத்திவிட்டுச் சிறிது எரிச்சலோடு பதிலளித்தான்.

     “என்ன சித்தி நேத்துத்தான் உரக்கடையைப் பத்தி ராமாயணம் மாதிரி கேட்டே... நானும் மகாபாரதம் மாதிரி பதில் சொன்னேன்... இப்பவும் கேட்டா எப்படி...”

     “ஒரு நாளைக்குள்ள உரக்கடை உசந்திருக்கலாமில்லியா... ஏதோ தெரியாமக் கேட்டுட்டேன். தப்புத் தாம்பா... நான்னா... எல்லோருக்கும் இளக்காரந்தான்...”

     “இப்படித்தான் எங்க சித்திக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துடும்... சித்தி இன்னொரு நல்ல செய்தி... சிமெண்டுக்கும் ஏஜென்சி கிடச்சுட்டு... உரக்கடை பக்கத்துலயே தனிக்கடை போடப் போறேன்... இதைச் சொல்லத்தான்... இப்போ வந்தேன்...”

     “பாத்தியா... அப்போ... சித்தி கேட்டதுல தப்பில்லியே...?”

     துளசிங்கம் அலங்காரிச் சித்தியின் முதுகைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தபோது வெள்ளை வெளேர் முத்தம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.

     “துளசி மச்சான்...”

     “ஏழா... ஒனக்கு அவன் அண்ணாச்சி முறை வேணும்... ஒங்க தாத்தாவோட அம்மாவும், அவன் தாத்தாவோட அம்மாவும் சின்னம்மா பெரியம்மா மக்கள்... ஆசைக்காக உறவை மாத்தப்படாது...”

     “ஏதோ ஒரு முறை... துளசி... ஒம்மத்தான்... மொத்தம்... நீரு எவ்வளவு இடம் சுத்தியிருப்பியரு...”

     “எண்டா பராக்கு பாக்கது மாதிரி பாக்கே... எல்லாப் பொட்டப் பிள்ளியளும் ஆவலோட முகத்த நிமித்துறாளுவ பாரு... ஒன் பவுசத்தான் சொல்லிக் காட்டேன்...”

     துளசிங்கம், ஒரு குட்டிப் பிரசங்கம் செய்யப் போகிறவன்போல், மார்பில் சாத்திய கம்பை நிமிர்த்தி மைக் மாதிரி பிடித்துக் கொண்டான். பிறகு எல்லோரையும் பொதுப்படையாகவும், கோலவடிவைக் குறிப்பாயும் பார்த்தபடி பேசப் போனான்.

     “பத்து வயசில... எங்கப்பா என்னை...”

     “ஆமாம்... மச்சான் தப்பா நினைக்கப்படாது... ஒங்கப்பாவை ஏன் எல்லோரும் எலி டாக்டர்னு சொல்லுதாவ...”

     அலங்காரி, பொய்க் கோபத்துடன் அதட்டினாள்.

     “ஏய் முத்தம்மா... வாயைக் கிழிச்சுப்புடுவன் கிழிச்சி... என் மச்சானை என் முன்னால வச்சே... எலி டாக்டருன்னு சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துட்டோ... ஏதோ சின்ன வயசுல... என் மச்சானை... அப்படி ஒருத்தன் மசக்கிப்புட்டான்... அப்போ மச்சானுக்கு ஏழு வயசாம்... ஒரு ஜோஸ்யக்காரன் அவருகிட்ட காலணா வாங்கிக்கிட்டு... நீ பிற்காலத்துல டாக்டரா வருவடான்னு சொல்லிட்டுப் போயிட்டானாம். இந்த கூறு கெட்ட மனுஷனும் அதை நம்பி, ஒரு செத்த எலியை தூக்கி வச்சுக்கிட்டு... ‘நான் டாக்டரு. இந்த எலியை ஊசி போட்டு பிழைக்க வைக்கேன் பார்’னு சொல்லி அந்த எலியை கோணி ஊசியை வச்சி... குத்தோ குத்துன்னு குத்துனாராம்... இந்த சட்டாம்பட்டிக்காரங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா... வக்கணை வச்சுட்டானுவ... எலி டாக்டர்னு...”

     அலங்காரி நாடக பாணியில் பேசுவதை வாயாடாமல் கேட்ட பெண்கள் கலகலப்பாய்ச் சிரித்தார்கள். கோல வடிவு, துளசிங்கத்தைப் பார்த்தபடி குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்தாள். உடனே அவன், தான் சிப்பி வயிற்றில் பிறந்த முத்து என்பதை நிரூபிப்பது போல் பேசினான்.

     “எங்கப்பன் கதையை விட்டுவிட்டு, என் கதையைக் கேளுங்க... பதினைந்து வயசுல சிகரெட்டு பிடிச்சேன்னு எங்கப்பா என்னை அடிச்சிட்டாரு. நான் வீட்ல இருந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு டில்லி போனேன்... கரோல்பாக்குல காய்கறிக்கடை போட்டேன்... தேறல... கல்கத்தா போனேன்... ஹோட்டல்ல சர்வரா இருந்தேன்... முடியல... அப்புறம் பம்பாய்க்கு வந்து தாராவில நம்ம தமிழ் ஆள்கள் பகுதியில் இருந்தேன். ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டிக்கிட்டே, இந்திப் படங்கள்ல ஸ்டண்ட் வேடங்கள்ல நடிச்சேன்...”

     “ஒமக்கு ரஜினிகாந்த், கார்த்திக் மாதிரி சண்டை போடத் தெரியுமா?”

     “அவங்களுக்கு என்னை மாதிரி சண்டை போடத் தெரியுமான்னு கேளு... அமிதாப்பச்சனுக்கே ஸ்டண்ட் ரோலுக்கு நான்தான் டூப்... சிலம்பு, கத்தி, குஸ்தி... எல்லாம் அத்துபடி, இந்த ஊர்ல எவன வேணுமுன்னாலும் வரச்சொல்லு...”

     எல்லாப்பெண்களும் அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். கோலவடிவு, முன்பு அவன் ஸ்போர்ட் பேண்ட்டையும், டி சர்ட்டையும் பார்த்து, அவனை வான்கோழியாக நினைத்து மனதுக்குள் வைதவள்; இப்போது அவன் உடையையும், உடைக்குள்ளே இருந்த உடம்பையும் ரசித்துப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே திட்டிக்கொள்வதுபோல் மெல்ல முனங்கினாள். அலங்காரி அவனை ஏறிட்டுப் பார்க்காமலே கேட்டாள்.

     “திருஷ்டி பட்டுடப் போவதுடா... இதுக்கு மேல எதுவும் சொல்லாத...”

     “எத்தே. உங்க மவன நாங்க தின்னுட மாட்டோம்... அப்போ மச்சான் ஒமக்கு எல்லா சினிமா நடிகரும் பழக்கம் இருக்குமுல்ல...”

     “பழக்கம் இருக்குமா... எல்லாரும் என்னைப் பார்த்து மாஸ்டர் மாஸ்டர்னுதான் கூப்பிடுவாங்க.”

     “ஒம்ம உடம்புக்கு நீரும் சினிமாவுல நடிச்சிருக்கணும்... இந்த ஊருக்கு வந்திருக்கப்படாது...”

     “கரெக்டா சொன்னே... ஆனால் நான் எங்கப்பா மாதிரி எலி டாக்டரா இருக்க விரும்பல... புலி டாக்டரா இருக்க விரும்பறேன்... ஸ்டண்ட் தொழிலுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு... இனிமேல் நடிச்சால் ஹிரோ... இல்லன்னா வில்லன்... சின்னச் சின்ன வேடத்துல நடிக்கப் பிடிக்கல... அதான் ஊருக்கு வந்துட்டேன்... இப்போ மூணு லட்சம் சம்பாதிச்சாச்சு... ஒரு காலத்துல சினிமா எடுக்கத்தான் போறேன்...”

     “அப்போ பேசாம நம்ம ஊர்லயே ஒருத்திய கதாநாயகியாய் போடணும்.”

     “நீயே சொல்லு... யாரைப் போடலாம்...”

     “இந்தக் கேள்வியே கேக்கப்படாதுடா... நம்ம கோலவடிவை பக்கத்துல வச்சுக்கிட்டே கதாநாயகிக்கு ஆள் தேடுறது... கோலத்தோட அழக அவமானப்படுத்துறது மாதிரி... பாருடா... அவள் எப்படி வெட்கப்படுறாள்னு... பாரு, அதுலே எவ்வளவு அழகு இருக்குன்னு பாரு... இவள்தாண்டா ஒனக்கு கதாநாயகி...”

     துளசிங்கத்தோடு சேர்ந்து எல்லோரும் கோலவடிவைப் புதிய கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல், அவள் சந்தோஷப்படவில்லை. துளசிங்கத்தைக் கோபமாய்ப் பார்த்தபடியே, அலங்காரியிடம் சினந்து பேசினாள்.

     “அலங்காரி அத்தே... ஒங்க மனசுல என்னதான் நெனச்சுக் கிட்டே...? என்னைப்பத்தி... எவ்வளவு தப்புக் கணக்கு போட்டுட்டே... எங்கப்பாகிட்ட சொல்லுறேன் பாரு...”

     எதற்கும் ஆடாத அலங்காரி, கொஞ்சம் ஆடித்தான் போனாள். அந்த மாற்றத்தைக் காட்டுவதுபோல், ஆலமரத்தின் கைபோலான ஒரு விழுதின் விரலைப் பிடித்தபடியே, கோலவடிவைப் புரியாதவள் போல் பார்த்தாள். அவளுக்குக் கொஞ்சம் பயமெடுத்தது. இந்தக் கோலவடிவின் தந்தை பழனிச்சாமி, கரும்பட்டையான் குடும்பத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படாத - தேர்ந்தெடுக்க அவசியமில்லாத - தலைவர். வம்புச் சண்டைக்கும் போகவும் மாட்டார். வந்த சண்டையை விடவும் மாட்டார். அதோடு, இவள் வீட்டு வாசல் கதவைத் தட்டாத ஒரே ஒரு பெரிய மனிதர் அவர்தான். அலங்காரி ஒரு தடவை லிமிட்டை அதிகமாகத் தாண்டுகிறாள் என்று நினைத்து, அவள் வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்து சொக்காரர்கள், அவளை அடிக்கப்போன போது, ‘கண்ணால் காணாமல், காதால் கேளாமல், தீர விசாரிக்காமல் ஒரு பெண் மேல பழி போடப்படாதுடா... எம்மாளு நீயும் பழி வாராது மாதிரி நடக்கப்படாது’ என்று அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர். அவர் சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தோ, அல்லது அடிக்க வந்த சொக்காரர்களில் பலர் அவளது ராத்திரியாட்ட சொக்கட்டான்கள் என்பதாலோ, அவளை அடிக்காமலே போய்விட்டார்கள்.

     என்றாலும் இந்த பங்காளிப் பயல்கள் எதிர்காலத்தில் அவளை அடிக்க, பிடிக்க வரமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது... அப்போதெல்லாம் இந்தப் பழனிச்சாமிதான் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பார் காரணம் பழனிச்சாமியின் கண் இவள் நடத்தையை ஒருவேளை பார்த்து விட்டாலும், அவர் காதில் எதையாவது சொல்லி மழுப்பிவிடலாம். காதால் கேட்டாலும், அவர் கண்ணை, தன் கண்ணிரால் மறைத்துவிடலாம். தீர விசாரணை என்பது, இந்தச் சட்டாம்பட்டியில் நடக்காத காரியம். விவகாரம் என்று வந்துவிட்டால், சின்னய்யா மகன் என்ன நியாயத்தைச் சொல்வானோ, அதற்கு எதிர் அநியாயத்தை பேசுபவன் பெரியய்யா மகன். இவன்களுக்கு எது நியாயம் என்பது முக்கியமில்லை. எவன் நியாயம் பேசுகிறான் என்பதே முக்கியம். ஆகையால், அலங்காரி, கோலவடிவைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, "என் அண்ணாச்சி... மவளே... உட்காரே முழா...” என்றாள்.

     அங்கிருந்த பீடிப் பெண்கள் பலருக்கு, அலங்காரி மீது கோபம் கோபமாய் வந்தது. ஒவ்வொருத்தியும் தன்னையே கதாநாயகியாக நினைத்துக் கொண்டிருப்பவள். அந்த நினைப்பிலேயே, நடக்கும்போது ஒரு குலுக்கலோடும், இருக்கும்போது ஒரு சிணுங்கலோடும், எழும்போது ஒரு முகவெட்டோடும், பேசும்போதுகூட ஒரு சினிமாப் பாட்டைப் பின்னணியாக முனங்கிக் கொண்டே பேசுகிறவர்கள் இவள்கள். அப்படிப்பட்ட நாயகிக் குணங்களில் ஒன்றுகூட இல்லாத கோலவடிவை, அலங்காரி கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தது அவள்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. இந்தக் கோபத்தை முத்தம்மா, வக்கிரமாய்க் காட்டினாள். மனதுக்குள், ஒரு ஐ.நா. சபையையே குடியிருக்க வைத்திருப்பவள்.

     “ஏய் சித்தி... பேச்சுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்... என்ன பேச்சு பேசிட்டே... செத்த பேச்சு... அதுவும் ஒரு முழுத்த பொம்புள பிள்ளயப் பார்த்தா இப்டி சொல்லுறது... இப்போ அவளச் சொன்னே... நாளைக்கு எங்களச் சொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்...”

     “இடையர் பொறுத்தாலும் இடக்குடி நாய் பொறுக்காதாம்... கோலவடிவே நான் சொன்னதுக்கு லேசா கோபப்பட்டுட்டு இப்போ சும்மா இருக்காள். ஒங்களுக்கு என்னடி... வந்துட்டு”

     அமைதியாய் உட்கார்ந்திருந்த கோலவடிவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘லேசா கோபப்பட்டேன்... என்கிறாளே... லேசா இல்ல... இல்ல... நான் நெசமாகவே கோபப்பட்டனாக்கும்... அலங்காரிக்கு அது தெரியாமப் போச்சின்னா தெரியப்படுத்தணும்...’

     “ஏய் அலங்காரி... அத்தே... என்ன சொன்ன...? நான் லேசர் கோபப்பட்டேனா...? அப்படியே இருக்கட்டும்... எங்கப்பா முழுசா கோபப்படுவாரு... அப்போ தெரியும் ஒனக்கு... என்னை என்ன சினிமாக்காரின்னு நெனச்சியா...? என்னப் பாக்கத்துக்கு ஒனக்கு என்ன தளுக்கி... மினுக்கியா தெரியுதா...?”

     அலங்காரி சரணடைகிறவள் போல், மடியில் கிடந்த பீடித்தட்டைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு, தன்னிலை விளக்கமாகவும், அவளைச் சமாதானப்படுத்துவது போலவும் பேசினாள்.

     “ஒன் மேல இருக்கிற பாசத்துல பேசிட்டேன்... மருமகள் என்கிற உரிமையில பேசிட்டேன்... வேற தப்பான எண்ணத்துல பேசல... துளசிங்கம் சினிமாப்படம் எடுக்கவும் வேண்டாம்... அப்படியே எடுத்தாலும் நீ அவன்கூட நடிக்கவும் வேண்டாம்... ஆளை விடும்மா...”

     இன்னொருத்தி இடைமறித்தாள்.

     “எம்மாடி... சினிமா வந்த பிறவுதான் தகராறு வரும்... துளசிங்கம் மச்சான், படம் எடுக்கதுக்கு முன்னாலேயே தகராறு வருது பாருங்க...”

     அந்தப் பெண்களில் எவளும் இடைமறித்துப் பேசிய தமாஷை ரசித்துச் சிரிக்கவில்லை. தன்னைத்தான் கதாநாயகி என்று துளசிங்கமோ அல்லது அவன் சித்திக்காரியோ தேர்ந்தெடுக்கும் வரை சிரிப்பதில்லை என்று உறுதி பூண்டவர்கள் போல் வாய்களைப் பற்கதவுகளால் அடைத்தார்கள். இவர்களில் தனி ரகம் பாஷாடை சந்திரா. இந்த ஒரு விவகாரத்திற்கு கோபப்பட வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்று அவள் குழம்பும்போது, அவளுக்கு வேண்டியவர்கள், அந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொள்வாள். பெரியப்பர் மகள் கோலவடிவு கதாநாயகி தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்று, ரசித்துச் சிரித்தவள், இப்போது கோலவடிவே கோபப்பட்டதால், அந்தத் தேர்வு மோசம் என்றும், ஆகையால் தானும் கோபப்பட்டுச் சொக்கார பலத்தைக் காட்ட வேண்டும் என்று கத்தினாள்.

     “ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு அடாவடி ஆகப்படாது அலங்காரி அத்தே... எங்க அக்காவைப் பார்க்கக் குலுக்கி மினுக்குகிற சினிமாக்காரி மாதிரியா தெரியுது... வாலிபப் பயலுவ கூட டூயட் பாடுற மாதிரியா தெரியுது... இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால்... எங்கக்காவைப் பத்தி என்னவோ சொல்லுவே போலுக்கு... எங்கக்கா ஒன்னை மாதிரி சிலுக்குறாளா... இல்ல மினுக்குறாளா...”

     கோலவடிவுக்கும் சித்தப்பா மகள் சந்திரா பேசுவது அதிகப்படியாகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளைக் கட்டுப்படுத்துவது, தான் கதாநாயகியாக நடிப்பதில்லை என்ற முடிவை, கல்யாணமான நடிகைகள் மறுபரிசீலனை செய்கிறார்களே, அப்படி மறுபரிசீலனையாய் கருதப்படும் என்று பயந்துபோய் சும்மா இருந்தாள். ஆனால் அலங்காரியால் அப்படிச் சும்மா இருக்க முடிய வில்லை. லேசாய்க் கோபமும் வந்தது. அதைப் பேச்சாக மாற்றினாள்.

     “ரொம்பத்தான் துள்ளாத சந்திரா... போன வருஷம் பள்ளிக்கூடத்து நாடகத்துல கதாநாயகன் மார்புல கண்ணை மூடிக்கிட்டு சாய்ஞ்சு கிடந்தே... சிங்காரன் விசிலடிச்சப்போகூட டயலாக்க மறந்து அப்பிடியே கிடந்த...”

     “அது பொம்புள போட்ட ஆம்புள வேடம்... அதுல என்ன தப்பு?”

     “நீ பொம்புள கிட்டயே அப்படினன்னா...”

     “என்னழா... வாய் ரொம்ப நீளுது? ஒன் புத்திய மாதிரி எல்லோரையும் நெனச்சிட்ட பாரு... இப்பவே எங்க பெரியப்பாகிட்ட சொல்லி ஒன் நாக்க வெட்டிப் போடச் சொல்லுதேன் பாரு... கோலக்கா எழுந்திரு...”

     “சரியம்மா... தெரியாமச் சொல்லிப்புட்டேன்... இந்தப் பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசலாம்.”

     அந்தப் பெண்களுக்குள் நடந்த ஏடாகோடமான பேச்சை ரசித்துக் கேட்பது போலவும், அதைப் பொருட்படுத்தாதது போலவும், கையில் இருந்த கம்பால் ஆலவேரில் சாரிசாரியாச் சென்ற எறும்புகளை இடித்து இடித்துக் கொன்று குவித்துக் கொண்டிருந்த துளசிங்கத்திற்கு ஆவேசம் வந்தது... கோலவடிவு மேல் மெலிதாகவும், சந்திராமேல் பலமாகவும் வந்தது. சித்திக்குச் சொல்வது மாதிரிச் சொன்னான்.

     “நம்ம கண்ணு முன்னாலயே அம்மணமாத் திரிஞ்ச சின்னப் பொண்ணு இந்தச் சந்திரா... ஏதோ பீர்க்கங்கா மாதிரி வளர்ந்துட்டாள்... பெரியவள் என்கிற நெனப்புல குதிக்காள்... போயும் போயும்... அவள் கிட்ட போயி... மன்னிப்புக் கேட்ட பாரு... அவளுக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளராமப் போச்சு... இல்லன்னா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஆடமாட்டாள்...”

     “இந்தா பாரும்... ஒமக்கும் எனக்கும் பேச்சில்லே... போயும் போயுமுன்னு பேசுதியரே... நான் என்ன தெருவுலயா கிடக்கேன்... ஆடுறேன்னு வேற சொல்லுதியரு... என்னைப் பார்த்தா ஆட்டக்காரி மாதிரியா இருக்குது... ஒம்ம அக்காவப் போய் ஆடச் சொல்லும்... ஒம்ம தங்கச்சியப் போயி ஆடச் சொல்லும்... இல்லன்னா இந்த மூளி அலங்காரி மூதேவி சண்டாளியப் போய் ஆடச்சொல்லும்... நான் எதுக்கு ஆடணும்...”

     “நீ ஆடாண்டாம்... ஆடுனாலும் அசிங்கமாத்தான் இருக்கும்...”

     “இதோ பாரு... துளசிங்கம்... இதுக்கு மேல பேசினே... எனக்குக் கெட்ட கோபம் வரும்...”

     “நீ சின்னப் பொண்ணாச்சேன்னு பாக்கேன். இல்லன்னா என்னை, நீ நான்னு பேசுறதுக்கு நடக்குற சங்கதியே வேற... என்ன நடந்து போச்சுன்னு இப்டி குதிக்கே.”

     “எங்கக்காவ எப்படி சினிமாக் கதாநாயகின்னு சொல்லலாம்...? சும்மா கண்டபடி பேசுறதுக்கு திறந்து கெடக்கோ...”

     “சரி, எங்க சித்தி சொன்னதையே நான் திருப்பிச் சொல்லுறேன்... இதோ இருக்காளே... இந்தக் கோலவடிவு, சினிமாவுல வார கதாநாயகி மாதிரியா இருக்காள்...? தமிழுக்குத் தமிழ் கதாநாயகி மாதிரியும், இந்திக்கு இந்தி கதாநாயகி மாதிரியும் இருக்காள்... சரி... சொல்லிட்டேன். இப்போ என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கோ...”

     “ஏய் கோலவடிவு... எக்கா... ஒன்னத்தான்... எழுந்திரு... இப்பவே நம்ம குடும்பத்துக்காரங்ககிட்ட சொல்லுவோம்... எழுந்திரு... என் குத்துக்கல்லு மாதிரி இருக்கே...”

     “நீயே நான் சொன்னதைப் போய் சொல்லுறியா... இல்ல... நானே ஒன் குடும்பத்துக்காரன்கிட்ட வந்து சொல்லணுமா... இன்னொரு தடவை வேணுமுன்னா சொல்லுறேன்... நல்லா கேட்டுக்க... இந்த கோலவடிவு...”

     “எக்கா... எக்கா எழுந்திரு... இவன ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்... நீ இப்போ எழுந்திருக்காட்டால், இந்த துளசிங்கம் சொன்னதல்லாம் ஒனக்குச் சரின்னு அர்த்தம்...”

     கோலவடிவு பயந்து போயும், பதறிப் போயும் எழுந்தாள். அத்தனைப் பெண்களும் பரபரப்பானார்கள். சிலர் எழுந்து விட்டார்கள். ஏதோ சொல்லப் போனார்கள். அதற்குள் கோலவடிவின் கையை இழுத்துக்கொண்டு போகப் போன சந்திரா சட்டென்று நின்றாள். கிழக்குத் திசையையே பார்த்தபடி நின்றாள். அவள் பார்த்த திசையை அனைவரும் பார்த்தார்கள். பயந்து பார்த்தார்கள். படபடப்பாய் பார்த்தார்கள். அங்கிருந்து -

     திருமலை வந்து கொண்டிருந்தான். தோளிலே மண்வெட்டி கிடந்தது. அதன் இரும்பு வாய் அவன் தோளைப் பற்றிக் கிடக்க, கம்புக் கணை அவன் கையோடு கையாய்த் தொங்கியது. இடது கையில் ஒரு வெட்டரிவாள். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். செம்மண் நிறம். சுட்ட செங்கல் லாவகம் வெட்டரிவாளுக்கும் அவன் கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மண்வெட்டி கணைக்கும் அவன் கைக்கும் வேறுபாடு தோன்றவில்லை. எல்லாப் பெண்களும் நடுங்கினார்கள். முத்தம்மா சந்திராவைக் கெஞ்சினாள்.

     “ஏய் சந்திரா... நீ நல்லா இருப்ப... கோலவடிவு அண்ணாச்சி கிட்ட சொல்லாத. விளையாட்டு விளையாட்டாவே இருக்கட்டும். வினையாயிடப்படாது... இல்லன்னா குத்துப்பழி வெட்டுப்பழி வரும்... கோலவடிவு... நீயாவது இந்த குறுமுட்ட பொண்ணுகிட்ட சொல்லு...”

     கோலவடிவும் சந்திராவைச் சமாதானம் செய்யப்போனாள். ஆனால் அதற்குள் சந்திரா முந்திக் கொண்டாள். கைகளை ஆட்டி ஆட்டி காட்டுக் கத்தலாய் கத்தினாள்.

     “எண்ணே... எண்ணே... சீக்கிரமா வா... இந்த துளசிங்கம் எங்கள அவமானமாய் பேசுறான்... சீக்கிரமா வாண்ணா...”

     திருமலை வேகவேகமாய் ஓடி வந்தான். துளசிங்கமும் அவனைச் சந்திக்க தயாராய் இருப்பதுபோல், கைகளை மார்பில் மடித்துப் போட்டு, வீறாப்பாய் நின்றான். பெண்களோ, “எய்யோ... எய்யோ...’ என்று புலம்பினார்கள்... அந்தப் புலம்பல் திருமலைக்கும் அந்த இடத்திற்கும் இடைவெளி குறையக் குறைய வலுத்தது... அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய், ஆலமரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் அஞ்சிப் பறந்தன... அவை எழுந்த வேகத்தில் அந்த ஆலமரத்தின் உச்சிக் கொம்புகள் ஆட்டம் கண்டதுபோல் ஆடின... திருமலையும் நெருங்கிவிட்டான். துளசிங்கமும் தயாராகிவிட்டான்.

     வேகமாக நடந்து வந்த திருமலை அந்தப் பெண்களின் கூச்சலாலும், சந்திராவின் கைவீச்சு பலமாக ஓங்கியதாலும், ஓட்டமாக வந்தான். மூச்சிழுப்பைக் கட்டுப்படுத்துவது போலவும், அதை வெளிக்காட்டாதது போலவும், ஆல விழுதைப் பிடித்தபடி, பிறகு அதன் நுனியைக் கையில் சுருட்டி வைத்தபடி, எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். எதிரே கையைக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி, அலட்சியமாய் நிற்பதாய்க் காட்டிக் கொண்ட துளசிங்கத்திடம் குசலம் விசாரிக்கப் போனான்.

     அப்போது...

     சந்திரா, பெரியப்பா மகனைப் பார்த்து, நடந்ததைச் சொல்லப் போனாள். கோலவடிவு அங்கே நிற்கப் பிடிக்காததுபோல், சற்றுத் தனியாய்ப் போய்நின்று கொண்டாள். அவசர அவசரமாகச் சொல்லப்போன சந்திராவின் கையை ஒருத்தி பிடித்தபடியே, “ஏதோ கோபம்... பாவம்... பழி... ஒரு கொலயோ, ரெண்டு கொலயோ விழுறதுக்கு பொறுப்பாளி ஆலாத” என்றாள். உடனே சந்திராவுக்கு ஒரு சந்தேகம். தான் சொல்லப் போவதோ, அல்லது கிரகித்துக் கொண்டதோ தப்பாக இருக்கலாம் என்ற நினைப்பு... ஆகையால் அவள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதுபோல் உதட்டைக் கடித்தபோது சஸ்பென்ஸ் தாங்கமுடியாத திருமலை அவளை அதட்டினான்.

     “என்ன நடந்ததுன்னு சொல்லுழா... ஏமுழா... பயப்படுறே... நான் இருக்கும்போது, நீ எதற்குப் பயப்படணும்... சும்மாச் சொல்லு...”

     சந்திரா இப்போது தனக்குப் பயமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே சொல்லப் போனாள். இதற்குள் அலங்காரி, முந்திக் கொண்டு பேசினாள்.

     “மம்பெட்டிய கீழே போட்டுட்டு உட்காறேன் மணி... வயலுக்கு காலயிலயே போயிட்டியோ...”

     “எமுழா சந்திரா... சொல்லேமுழா...”

     “நானே சொல்லுதேன் ராசா... எங்க மச்சான் மவன் துளசிங்கம், அவனைத்தான் ஒனக்குத் தெரியுமே... சினிமா கிறுக்கன்னு... ஏதோ ஒரு சினிமாப்படம் எடுக்கப் போறதைச் சொன்னான். உடனே நான்... இந்த அத்ததான், நம்ம கோலவடிவு கதாநாயகியாய் நடிக்கணுமுன்னு சொன்னேன். ஒன் தங்கச்சி எனக்கு மருமவள் முறையாச்சே என்கிற உரிமையில சொல்லிப் புட்டேன்... அப்படிச் சொன்னது அத்தைக்கு இப்போகூட தப்பாத் தெரியல... தப்புன்னா தப்புன்னு சொல்லு... இனிமேல் சொல்ல மாட்டேன்... நேத்து ஒங்க வீட்டுக்கு நாலைஞ்சு வெள்ளச் சட்டைக்காரங்க வந்திருக்காங்களே... யாரு ராசா அவங்க... பழனிச்சாமி அண்ணாச்சிய விலக்குத் தீர்த்து விவகாரம் பேச கூப்புட்டாங்களா... ஒங்கப்பா வழக்காளியா இருக்கதுல இந்த ஊரே பெருமப்படுது ராசா... உட்காறேன்...”

     சந்திராவால் பொறுக்க முடியவில்லை. முட்டாளாகிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. சுய மரியாதைக்கு வில்லங்கம் ஏற்பட்டிருப்பது போன்ற அவமானம். அண்ணனிடம் கோபங் கோபமாய்ப் பேசத் துவங்கி, பிறகு அந்தப் பேச்சை அழுதழுது முடித்தாள்.

     “நம்பாத அண்ணா... நம்பாத... அலங்காரி அத்த மழுப்புறாள்... சரி அவதான் புத்தியக் காட்டிட்டான்னா இந்த, துளசிங்கம் என்ன சொன்னான் தெரியுமா? நம்ம கோலவடிவு தமிழுக்கு தமிழ் கதாநாயகியாயும், இந்திக்கு இந்திக் கதாநாயகியாயும் இருக்காளாம். நான் தட்டிக் கேட்ட பிறகும் திமுறுல சொல்றான் அண்ணா...”

     திருமலை வெட்டரிவாள் கையோடும், மண்வெட்டித் தோளோடும் துளசிங்கம் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். அவனோ, இவன் ஒரு தூசி என்பது போல், அலட்டிக்காமல் நின்றான். இப்போது இருந்த பெண்கள் கூட எழுந்து விட்டார்கள். சிலர் இருவருக்கும் இடையே போய் நிற்கப் போனார்கள். பிறகு, திருமலை கவிழ்த்திப் பிடித்த வெட்டரிவாளை நிமிர்த்திப் பிடிப்பதைப் பார்த்துவிட்டு, நடுங்கிப்போய் நின்றார்கள். ஒருத்தி ஊரில் போய்ச் சொல்லலாம் என்பதுபோல் இன்னொருத்தியைப் பிடித்திழுத்தாள்.

     துளசிங்கத்தை நெருங்கிய திருமலை, போர்ப்பரணி பாடினான்.

     “ஒன் மனசுல. என்னடா நெனப்பு...?”

     “அனாவசியமாய் பேசாதடா... ஒன்னால ஆனதைப் பாருடா...”

     “என் தங்கச்சிய அவமானமாப் பேசுனதுமில்லாம திமுறா ஒனக்கு...”

     “பாசத்துக்கு அடிமையாகிறவன் பைத்தியக்காரன்... ஒனக்குப் பதில் சொல்லி என்னை அவமானப்படுத்த நான் விரும்பல... ஒன்னால ஆனதைப் பாரு... முதல் அடி ஒன் அடியாவே இருக்கட்டும்...”

     திருமலைக்கு அவன் மூளை ஆணையிடாமல், கையில் இருந்த அரிவாள் ஆணையிடத் துவங்கியது. அவன் வலது கையால் அரிவாளைத் தூக்கிப் பிடித்து, இடது கையில் துளசிங்கத்தின் தோளைத் தொடப்போனான். துளசிங்கம் சற்றே விலகி, சினிமாப் பாணியில் சட்டையைக் கழட்டி, அதை திருமலையில் முகத்தில் வீசி, அரிவாளை மறைத்து, அவனை திசையறியாமல், திக்கு முக்காடாய் செய்யப்போனான். இதற்குள், அலங்காரி, திருமலைக்கு முன்னால் வந்து அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மற்றப் பெண்களும், அந்தச் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளியை இட்டு நிரப்பினார்கள். கோலவடிவு, அழப்போனாள். அங்கே ஓடிப்போய் அண்ணனைத் தடுக்கப் போனாள். ஆனால் ‘பயமில்லாத’ சந்திரா, வடிவை புல்லுக்கட்டைப் பிடிப்பதுபோல் தூக்கிப் பிடித்தாள். அலங்காரி, கும்பிட்ட கையை நிமிர்த்தாமலே, திருமலையிடம் கெஞ்சினாள்.

     “சாமி சத்தியமாய் சொல்லுதேன்... ராசா... இந்த துளசிங்கம் பயல்... அத்தை மகளாச்சேன்னு சொம்மா விளையாட்டுக்குத்தான் சொன்னான்... இந்தச் சந்திராவால இப்டி வினையாகுமுன்னு நெனச்சா... அவன் சொல்லியிருக்கவே மாட்டான்... அத்தப் பெண்ண கிண்டலா பேசுறது... மாமா மவனுவ எல்லாரும் செய்யுறதுதான... மணி... இதுக்குப் போயி...”

     “இந்தப் பயலோட அப்பா... எனக்கு மாமா மொறதான் வேணும்... இதனால் இவன் தங்கச்சி புஷ்பமும், எனக்கு மாமா பொண்ணுதான்... அதுக்குன்னு அவளப் போயி... நான் தூக்கிட்டு வரட்டுமா... இல்ல வயலு வரப்புக்கு போவும்போது, நானே அவளோட இடையில கையப் போட்டு டான்ஸ் ஆடலாமா... எதுக்கும் ஒரு வரைமுறை இருக்குல்லா...”

     “துளசிங்கத்துக்காவ நான் மன்னாப்பு கேட்டுக்கிறேன்... ராசா... கொஞ்சம் பின்னால போப்பா...”

     அலங்காரி திருமலையைச் செல்லமாகப் பின்னுக்குத் தள்ளினபோது, துளசிங்கம் சிறிது முன்னுக்கு வந்து சூளுரைத்தான்.

     “நீ ஏன் சித்தி மன்னிப்புக் கேக்கே... இந்தாப்பா... திருமலை... ஒன்னால என்ன செய்ய முடியுமோ... அதச் செய்... நாம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல ஒண்ணாப் படிச்சோமேன்னு சும்மா இருக்கேன்... இல்லாட்டா இந்நேரம்...”

     “ஓகோ... அய்யா... என்னை புண்ணியத்துக்குத்தான் விட்டு வச்சிருக்கியோ... அதையும் பாத்துடலாம்...”

     அலங்காரியால் ஒரளவு சமாதானப்பட்டுத் தணிந்த திருமலை, இப்போது அனல் கட்டையில் பிடித்த தீ போல் பீறிட்டு, அவளை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டுவிட்டு துளசிங்கத்தை நெருங்கினான். அரிவாள் கையில் இருந்தாலும், அதனால் அவனை வெட்டத் தயங்கினான் திருமலை. துளசிங்கம் தொலைவில் சென்று, ஒரு பெரிய கருங்கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான். இவன் அவன் கழுத்துக்கும், அவன் இவன் தலைக்கும் ஒருவரை ஒருவர் நெருங்காமலே குறி வைத்தார்கள். எல்லாப் பெண்களும், “எம்மோ... எம்மோ” என்று கூக்குரலிட்டு அந்த இருவரையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள், காகங்கள் கத்தின. குருவிகள் கீச்கீச் என்றன... சந்திராவுக்கும், பயமெடுத்துக் கைகால் உதறியது. அந்தச் சமயத்தில், சந்திராவின் பிடியில் இருந்த கோலவடிவு அவளை உதறிவிட்டு ஓடி வந்தாள். பெண்கள் வட்டத்தில் இரண்டு பெண்களை இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டபடியே, அண்ணனுக்கு அரணாக நிற்பதுபோல், அவன் பக்கமாகத் திரும்பினாள். அப்படியும், அவன் தலை மறையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடி, அண்ணனின் தலையில் தனது கையைப் பரப்பி மறைத்தாள். துளசிங்கத்தை அலங்காரி பிடித்துக் கொண்டாள்... அவன் கையையும், அது பிடித்த கல்லையும் கீழே இழுத்தாள்.

     முத்தம்மா, ரெண்டு குடும்பங்களையும் சேராதவள். ஆகையால், தான் பேசுவதே நியாயம் என்று நம்பி, அடித் தொண்டையில் குரலிட்டாள்.

     “திருமலை அண்ணாச்சி... நீ நடந்ததை தீர விசாரிக்காம அடிக்கப் போறதும் தப்பு. துளசிங்கம்... அண்ணாச்சி... நீ நடந்ததைச் சொல்லாததும் தப்பு... எல்லாத்தையும் விட பெரிய தப்பு... இந்தப் பக்கம் ஆம்புளையள இருக்க விடுறது...”

     அலங்காரியும் அரசியல்வாதியானாள்.

     “ரெண்டு பேருமே மாமா மச்சான்... ஒண்ணுக்குள்ள ஒண்ணு... கண்ணுக்குள்ள கண்ணு... ஒரு கண்ணு இன்னொரு கண்ணை முறைச்சா எப்டி... ஒரு கையி இன்னொரு கைய அடிச்சா எப்டி... ஒரு காலு... இன்னொரு கால உதச்சா எப்டி...”

     அலங்காரி இப்படியே பேசிக் கொண்டே போயிருப்பாள்... ஆனால், சந்திராவால் பொறுக்க முடியவில்லை... கோலவடிவக்காவை, அலங்காரி அப்படி விமர்சனம் செய்ததையும், துளசிங்கம் அப்படி அந்த விமர்சனத்திற்கு அழுத்தம் செய்ததையும், திருமலை தப்பு என்று ஏற்றுக் கொண்டு சண்டைக்குப் போனதால், தான் தப்பாகச் சொல்லவில்லை என்று சந்திரா நினைத்தாள். அதோடு திருமலை அண்ணன், துளசிங்கத்தை அடிக்காமல் போய் விடுவானோ என்ற சந்தேகம். அவன் துளசிங்கத்தைச் ஜெயித்தால்தான், தான் அலங்காரியைத் தோற்கடித்ததற்குச் சமம் என்று நினைத்தாள். இத்துடன் அவள் உடம்பில் ஓடிய இயல்பான கரும்பட்டையான் ரத்தம் கொதித்தது. கொஞ்ச நஞ்ச அமைதியை குரோதச் சூறாவளியாய் மாற்றப் போனாள்.

     “எண்ணா... நான்தான் பெரிய வீராதிவீரன்னு இவனுக்கு நெனப்பு... இந்த ஊரில எவனை வேணுமுன்னாலும் என்கிட்டே வரச் சொல்லுன்னு சவடால் அடிக்கான்...”

     திருமலை துளசிங்கத்தை மீண்டும் பகையாக்கிப் பார்த்தான். அவள் அப்படிச் சொன்னது, இவனையே சவாலுக்குக் கூப்பிடுவது போல் தோன்றியது... அரிவாளை எடுத்துக் கீழே எறிந்தான்... மண்வெட்டியைத் தூக்கிக் கீழே போட்டான்... வெற்றுடம்புடன் துளசிங்கத்தை முறைத்தபடியே சவாலிட்டான்.

     “சினிமாவுல ஒருத்தன வீரனாக காட்டுறதுக்காவ... இருபது பேரை தெம்மாடியாய் காட்டிக் காட்டி, சினிமாக்காரனுவ நம்மை நாட்டையே கெடுத்துப்புட்டானுவ... இந்த இடம் சினிமா எடுக்கிற இடம் இல்ல... எங்க கரும்பட்டையான் வம்சத்து மூதாதையர் இளவட்டக் கல்லு தூக்குன இடம்... சிலம்பாடுன பூமி... வாறியா... ஒத்தைக்கு ஒத்தையா போட்டுப் பார்க்கலாம்...”

     “சரி... போட்டுப் பாத்துடலாம்... சினிமாவுல சண்டை கத்துக் கிட்டதால சொல்லல... எங்க செம்பட்டையான் குடும்பத்து ரத்தம் இந்த உடம்புல ஓடுறதால... சொல்லுறேன்... எப்போ வச்சுக்கலாம்... எந்தக் கிழமையில வச்சுக்கலாம்...”

     “எப்போ என்ன எப்போ... இப்போ வச்சுக்கலாம்... நாளும் கிழமையும் பேடிப் பயலுக்குத்தான்...”

     “யாருடா பேடி..."

     “வேறயாரு... நீதான்...”

     இருவரும் மீண்டும் மோதப் போனார்கள். இதற்கிடையே ஒரு இளம்பெண் ஓடோடி வந்தாள். அருகே இருந்த பருத்திக் காட்டில் இருந்து பாய்ந்து வந்தாள். திருமலையின் முன்னால் போய் நின்று, “ஒரு அடி நகர்ந்திரு... அப்புறம் தெரியும் சேதி” என்று எச்சரித்தாள்.

     எல்லோரும், ‘வாராதது போல்’ வந்த அந்தப் பெண்ணையே பார்த்தார்கள். மாம்பழச் சிவப்பு. தக்காளி நிறப் புடவை. நாகப்பழக் கண்கள். அழுத்தம் திருத்தமான பார்வை. அனாவசியமான தோரணை, துள்ளும் கன்றுக்குட்டி மாதிரியான லாவகம், தன்னை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது போன்ற குறுஞ்சிரிப்பு... அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது, கண்கள் ஊஞ்சலாட, கம்மல்கள் வெளிச்சம்போட, இன்னதென்று சொல்ல முடியாத அதே சமயம் எல்லோராலும் இனங்காணக்கூடிய கவர்ச்சிக்காரி; பீடித் தட்டை குழந்தையைச் சுமப்பதுபோல் இடுப்பில் வைத்து பிடித்தபடி ஒயிலாக நின்றாள்.

     அவளையே பார்த்த பெண்கள், அந்த நேரத்திற்குள் அந்தத் தடியன்கள் இருவரும் ஏதாவது செய்துவிடப்படாதே என்பதுபோல், அவர்களையும் பார்த்தார்கள். அவன்களோ, இவள்கள் தங்களைப் பார்த்தால்தான் சண்டை வரும் என்பதுபோல், முன் வைத்த கால்களை பின் வாங்காமல், அதே சமயம் உடம்புகளைப் பின்னிழுத்தபடி நின்றார்கள். திருமலை, பத்திரகாளி வந்ததும் கோபம் தணிந்த வீரபத்திர சாமி போல, துளசிங்கத்தை முறைத்த கண்களை, அவள் மேல் போட்டபடியே பேசினான்.

     “நீ இதுல தலையிடாதே ரஞ்சிதம்... இந்தப் பய என் தங்கச்சி கோலவடிவ அவமானமாய் பேசியிருக்கான்...”

     “அப்டி என்ன பேசிட்டார்...”

     “என் தங்கச்சி சினிமாவுல கதாநாயகியாய் நடிக்கலாமாம். தமிழுக்கு தமிழ் கதாநாயகியாம். இங்கிலீசுக்கு இங்கிலீசு கதாநாயகியாம்...”

     “எண்ணே... இங்லீஸ்னு சொல்லல... இந்தின்னு சொன்னான்...”

     “ஒரு வயசுப் பொண்ணுகிட்ட பேசற பேச்சா இது... இவன நான் விடப் போறதில்ல... நீ பேசாம அந்தப் பக்கமா போ...”

     “பொட்டப்பிள்ளியள கிண்டல் பண்ணுறவன விடப்படாதுன்னா, ஒம்மையும் விடப்படாது.”

     “நீ என்னே சொல்லுறே...”

     “நீரே... நெனச்சிப் பாரும்.”

     “டேய் துளசிங்கம்... இந்த ரஞ்சிதம் அடுத்த சாதிப் பொண்ணா இருந்தாலும் நியாயம் பேசுறவள். அவள் முகத்துக்காவத்தான் நான் ஒன்னை விட்டு வைக்கேன்...”

     “இதே வார்த்தைய நானும் சொன்னதா நெனச்சுக்க...”

     “ஆனால் இனும ஒரு தடவ என் தங்கச்சியப் பத்தி அப்டிப் பேசினே... ஒன்னை விடப்போறதில்ல...”

     “எவண்டா இவன் கிறுக்கன்... ஊருல எனக்கு என்ன வேற வேல வெட்டி இல்லியா...”

     “சரி இதோட பேச்சை விடுங்க... மகனே துளசிங்கம் பழையபடி உட்காரு... மருமவனே திருமல... நீயும் உட்காரு... எப்பாடா எனக்கு இப்பதான் போன உயிரு திரும்ப வந்தது... ஏய் பொண்ணு ரஞ்சிதம், அது என்ன பிள்ள, ‘நீரே நெனச்சிப் பாரும்’.”

     “யார்கிட்ட சொன்னாலும் ஒங்ககிட்ட சொல்லுவேனா...”

     “சரி. லேசா விடுகதை மாதிரிச் சொல்லு...”

     “எம்மாடி நான் ஊரச் சொன்னால் பேரக் கண்டுபிடிப்பீக... பேரச் சொன்னால் ஊரைக் கண்டு பிடிப்பீக... பொல்லாத ஆளாச்சே நீங்க...”

     “சும்மா பவுசு பண்ணாம சொல்லும்மா...”

     “என்னைக்குமே கைய மூடி வச்சாத்தான் மரியாதி... திறந்து காட்டினா வெறுங்கையுன்னு ஆயிடும்...”

     “எப்பா நீ கஷாயம் தட்டுற உரலையே கஷாயம் போட்டு குடிக்கிறவளாச்சே."

     “குடிக்கிறதுன்னதும் ஞாபகம் வந்துட்டு... ஏய்யா துளசி... திருமலை... பெரிய வீராதிவீரங்க மாதிரி துள்ளுறிய... பட்டப்பகலுலே பட்டச்சாராயம் காய்ச்சி ஊரைக் கெடுக்கிறான் அந்த பெருமாள் சாமி... அவனைத் தட்டிக் கேட்கப்படாதா...”

     “எங்க சாதி ஆம்புளைய அவன் இவன்னு பேசப்படாது...”

     “ஒங்க சாதியா இருந்தாலும், எங்க சாதியா இருந்தாலும்... எவன் காய்ச்சினாலும் குடி... குடியக் கெடுக்குமுல்லா... ஒங்க சாதி... எங்க சாதின்னு மனுஷங்களில இருக்கு... ஆனால் மனுஷனாய் இல்லாத இந்த பெருமாள்சாமி காய்ச்சுற கருவேலம்பட்டையில சாதி இல்ல... யார் எக்கேடு கெட்டாலும் தான் மட்டும் சம்பாதிக்கணும்... என்கிற சாதிதான் இருக்குது...”

     எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தை வியந்து பார்த்தார்கள். ஆணவம் இல்லாத தன்னம்பிக்கை... பிச்சைக்காரத்தனம் இல்லாத அடக்கம்... வாயாடி என்றோ ஊமை என்றோ சொல்ல முடியாத அளவிற்கு வரம்புகட்டி நிற்பவள்... அத்தனை பெண்களும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். கோலவடிவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்... ஆனால் சந்திரா அலங்காரியிடம் தோற்றுப் போனதாக நினைத்தாள். இந்த ரஞ்சிதத்தை ஜெயித்து, அந்தத் தோல்வியைச் சரிகட்டப் போவதுபோல் கேட்டாள்.

     “எம்மாளு... ரஞ்சிதம்... எங்கண்ணாச்சிய தட்டிக் கேட்டது மாதிரி துளசிங்கம் மச்சானை ஏன் தட்டிக் கேக்கலே... எங்கண்ணாச்சின்னா இளக்காரமா...”

     “நீயே அவரத் தடுத்திருக்கணும்... நீ செய்ய வேண்டியதத்தான் நான் செய்தேன்.”

     “இவளா... இவள்... சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுப்பா... நம்ம ரஞ்சிதம் மட்டும் வராட்டா... குத்துப்பழி வெட்டுப்பழி வந்திருக்கும்... ஒனக்கென்ன... டவுன்ல ஆஸ்பத்திரியில அண்ணன் கிடந்தா... அவரப் பார்க்கிற சாக்குல டவுனுக்குப் போகலாமுன்னு நெனச்சிருப்பே... ஆனாலும் இந்த வயசுல இந்தப் புத்தி ஆவாதும்மா... மருமவனே திருமல... அத்தை சுத்தன பீடியக் குடிச்சுப் பாரேன்...”

     அலங்காரி ‘பேலன்ஸ்’ செய்து பேசியதால்... திருமலை சும்மாவே நின்றான். துளசிங்கம் அங்கிருந்து, தான் முதலில் போனால் அது தோல்வியாகும் என்று அவனே ஒரு அனுமானம் போட்டுக் கொண்டவன் போல், அங்கேயே நின்றான். அண்ணாச்சி, அலங்காரியைத் தட்டிக் கேட்காததில் ஆத்திரப்பட்ட சந்திரா, எழுந்தாள். “இனுமே நீங்களும் வேண்டாம்... ஒங்க வாடையும் வேண்டாம்” என்று சொன்னபடியே பீடித்தட்டைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். பிறகு, திரும்பி வந்து, கோலவடிவின் கையைப் பிடித்துத் தூக்கினாள். அவள் அங்கிருந்து போக விரும்பாதவள் போல், சந்திராவின் கையைப் பிடித்துக் கீழே உட்காரும்படி இழுத்தாள். உடனே சந்திரா, “ஒனக்காவ நான் சண்டை போட்டு எனக்குத்தான் கெட்டப்பேரு... உனக்கும் கதாநாயகியா நடிக்க ஆச” என்று சொன்னபடியே ஓடினாள். சிறிது நேரம் அங்கிருந்த கோலவடிவு, அப்படி ஒரு ஆசை தனக்கில்லை என்பதைக் காட்டும் வகையில், “ஏய் சந்திரா... சந்திரா... நில்லுழா” என்று கத்தியபடியே ஓடினாள்.

     காகங்கள் மீண்டும் அந்த ஆலில் அமர்ந்தன. சிட்டுக் குருவிகள் பண்ணையாட்கள் போல், காகங்களிடம் இருந்து சிறிது மரியாதையான இடைவெளியில் உட்கார்ந்தன. ஒரு அணில், சிட்டுக் குருவியை இடம் கேட்டுத் துரத்தியது. ஒரு காகம், அந்த அணிலை இரை கேட்டுத் துரத்தியது. ஆனாலும் எந்தப் பறவைக் கொலையும் விழவில்லை. பெண்கள் மத்தியில் மீண்டும் முனகல் பாட்டுக்கள். துளசிங்கமும், திருமலையும் அந்த பெண்கள் கூட்டத்தின் துவாரக பாலகர்கள் போல் நின்றார்கள். ரஞ்சிதம், முத்தம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்குப் பீடி சுற்றிப் போட்டாள்.

     இந்தச் சமயத்தில், பீடி இலையையும் தூளையும் இழந்த தாயம்மாவும், காஞ்சானும் அங்கே ஓடி வந்தார்கள். இந்தக் காஞ்சானுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவர் உடம்பில் சட்டை மாட்டி எவரும் பார்த்ததில்லை. ஒரு துண்டு மட்டும் தோளில் கிடக்கும். அதுவும் கைக்குட்டை மாதிரியான துண்டு. இப்படிச் சட்டை இல்லாமல் வெயில்பட்டு, அவர் கறுத்த உடம்பு, சூரிய ஒளியைப் பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொண்டதால், அவர் உடம்பு காய்ந்த கருவ மரம் போல் காட்சி காட்டும். அவருக்குக் கையளவுகூட வயிறு கிடையாது... முன்பக்கமும், பின்பக்கமும் ஒரே பக்கம் என்பது போன்ற ‘ஒட்டியான’ வயிறு. போதாக் குறைக்கு உடம்பு லேசாய்க் கூன் போட்டு உள்வாங்கி இருக்கும். இதனால் இவரை, ஊரில் காஞ்சான் என்பார்கள். ஆனாலும் இந்த மனிதர் வக்கணையில்தான், காஞ்சான், வசதியில் ஏகப்பட்டவர்.

     தாயம்மா, காஞ்சானுக்கு எதிப்புறமாய் நின்றபடியே முறையிட்டாள்.

     “பாருங்க... இவர் மகன்தான் என் பீடித்தட்ட தட்டி விட்டுட்டுப் போனான். இலைக்கும் தூளுக்கும் காசு கேட்டா... என்னென்னவோ பேசுறார்.”

     “எனக்கு கறிவேப்புல மாதிரி இருக்க ஒரே ஒரு பயலயும் ஆல மரத்துல இருந்து கீழே தள்ளிப் போட்டதுமில்லாம காசு கேட்குறியோ... காசு... இப்ப என் பையனுக்கு வருமப்பிடி மாதிரி வந்துட்டு... வைத்தியர் கிட்ட காட்டணும்... தாயம்மாகிட்ட காசு வாங்கித் தாறியளா... இல்ல நானே வசூலிச்சுக்கட்டுமா...”

     தாயம்மா புலம்பினாள்.

     “பாருங்க இந்த மனுஷன் பேசுற அநியாயத்த... நான் சட்டம் பேசறேன்னு ஏற்கனவே பீடி ஏஜெண்ட் துரைச்சாமி எனக்கு நாள் பார்த்துக்கிட்டு இருக்கான். இப்போ கொடுத்த இலைக்கும் தூளுக்கும் பீடி போடாட்டா. அப்புறம் பீடிய சுத்த முடியாமப் பண்ணிடுவான்...”

     “இப்போ என் பயல் கால் பிசகியோ... கை பிசகியோ... கட்டுலுல கிடக்கான், அதுக்கு அவளை பதில் சொல்லச் சொல்லுங்க... அஞ்சு பத்து ரூபாயாவது வேணும்...”

     அலங்காரி விலக்குத் தீர்த்தாள்.

     “மச்சான் அப்படிச் சொல்லப்படாது. அவளுக்கு ஏதாவது கொடுக்கணும்...”

     “அப்போ என் பையன் ஒத்தக் கையி பிசகி கிடக்கானே.”

     “பிசகுன கைய ஒடிச்சிடும்... சரியாப் போயிடும்...”

     “ஆளப் பாரும்... ஆமா... மாமா... ஒம்மா கல்யாணத்துலயாவது சட்டை போட்டுட்டுப் போனீரா...”

     துளசிங்கம் முதலாவதாகவும், திருமலை இரண்டாவதாகவும் காஞ்சானைக் கிண்டல் செய்ததைக் கேட்ட ரஞ்சிதம் கருத்துத் தெரிவித்தாள்.

     “இனிமேல் நீங்க ரெண்டுபேரும் இப்டித்தான் பொதுக் காரியத்துல ஒண்ணா நிக்கணும்... தாயம்மாவுக்கு அவருகிட்ட ஏதாவது வாங்கிக் கொடுங்க... இனிமேலாவது சண்டையை விடுங்க... சரி அவரு கிட்ட வசூலிச்சு...”

     காஞ்சான் வசூல் பேச்சை மாற்ற நினைத்துப் பேசினார்.

     “ஏன்... இவனுகளுக்குள்ள என்ன ஆச்சு...”

     ரஞ்சிதம் எவ்வளவோ, கண்ணடித்துப் பார்த்தும், வாடாப்பூ கேட்கவில்லை. காஞ்சானிடம், நடந்ததை அப்படியே ஒப்பித்தாள். தாயம்மாவுக்கு நஷ்டஈடு கொடுக்கும்படி சொன்ன அலங்காரி மீது கோபப்பட காஞ்சான், சும்மாக் கிடந்த சங்கை, ஊதிக் கெடுத்தார். பேச்சை திசை திருப்பியதுமாச்சு... அலங்காரிக்கு பதிலடி கொடுத்தது போலவும் ஆச்சு...

     “எம்மா... அலங்காரி... எங்க செம்பட்டையான் குடும்பமும்... இவங்க கரும்பட்டையான் குடும்பமும் தாயா பிள்ளியா இருக்கது... ஒனக்குப் பிடிக்கலியா ஒன் சோலிக் கழுதய பாத்துட்டு இருக்க வேண்டியதுதான... ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாத தாயி... சரி... நான் வாறேன்... என் மவனுக்கு ஒத்தக் கையி...”

     அலங்காரியின் முகம் சுண்டியது... மனதுக்குள் படிந்த நிழல் கண்ணுக்குள் இருளானது. கையில் இருந்த பீடி இலையை, கோபங் கோபமாய் கிழித்துப் போட்டாள்.