உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
20 செம்பட்டையான் சுடலைமாடன் கோவில், நான்கு பக்கமும் மதில் சுவர்களால் மடக்கப்பட்டு நடுப்பக்கம் பெரிய வாசலைக் கொண்டது. ஆனாலும் இந்தக் கோட்டைச் சுவர்களையும் மீறி, கோவிலுக்குள் உள்ளே சாமி பிம்பங்கள் வெளியே நன்றாகவே தெரிந்தன. குள்ளமான மதில் சுவரின் உள்ளேயும், வெளியேயும் வெள்ளையடிக்கப்பட்டு, அந்த சுவர் முழுக்க வெள்ளை சிவப்புக் கோலப்பட்டைகள் செங்குத்தாக மாறி மாறித் தொங்குவது போல் தெரிந்தன. இந்த செவ்வகக் கோவிலுக்குள் மேற்குப் பக்கம் மூன்றடி உயரமான பீடத்தில் சுடலைமாடன் கூம்பு வடிவச் சுவராகக் காட்சி தந்தான். நான்கு பக்கமும் முக்கோணமாய், உச்சியில் சதுரமாக முடிந்த மண் பிம்பம். அந்த மண் வடிவிற்கு வெள்ளையடிக்கப்பட்டு, அந்த வெள்ளையிலேயே விபூதி பூசப்பட்டதால், அது சரியாகத் தெரியவில்லை. ஆனால் சந்தனமும் குங்குமமும் பளிச்சிட்டன. சாமியின் பாதத்தில் பயங்கரமான வெட்டரிவாள். மாடனின் ஆறடி பிம்பத்தின் இரண்டு பக்கமும் வில் மாதிரியாக கம்பு அதில் சர விளக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. மாடனுக்கு அக்கம் பக்கம் நான்கைந்து பிம்பங்கள். வடக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இரண்டு சிறிய கட்டிடங்கள். அவற்றில் ஒன்றில் மாடத்தி. இன்னொன்றில் பத்திரகாளி. இருவரும் சிலை வடிவங்களில் இருக்கிறார்கள். தெற்குப் பக்க மதில் சுவரை ஒட்டி ஏழெட்டுத் தனித்தனியான மண் பிம்பங்கள். சுடலைமாடன் முன்னால் மாடனைச் சித்தரிக்கும் ஒரு படம் இருந்தது. முந்தா நாள் துளசிங்கம் மாடனை நவீனப் படுத்துவதற்காக, தென்காசியில் வாங்கிய படம். இன்றைக்குச் சென்னையில் இருந்து வரும் சினிமா மாஸ்டர்களை வரவேற்கத் தென்காசிக்குப் போயிருக்கும் துளசிங்கம், காளிக்கும் மாடத்திக்கும் போட்டோ படங்கள் வாங்கி வரப்போவதாகச் சொல்லி இருந்தானாம். அந்தக் கோவிலுக்குள் இருபத்தோறு தேவதைகள். சிவபெருமான் தக்கனை அழிப்பதற்காக ஏவிய பூதகணங்கள் என்று வில்லுப்பாட்டாளி வெற்றிக்குமார் ஆடி ஆடிப் பாடுவதைப் பார்க்க அழகாக இருக்கும். இப்போது, சுடலை மாடனின் பங்காளிகளான கோட்டை மாடன், உதிரமாடன், அக்னி மாடன், முத்தாரம்மன், அக்னிபுத்திரன், மயான புத்திரன், பத்திரகாளி, மாடத்தி, கைக்கொண்டான், பேச்சி முதலிய தேவதைகளின் பிம்பங்களில் தூசி தட்டாமலே வெள்ளையடிக்கப் பட்டிருந்தது. கோவிலின் இடைவெளியை இட்டு நிரப்புவது போல் பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. வளைவு வளைவான அலங்காரப் பந்தல். கோவிலுக்கு வெளியேயும் பந்தல். அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே ஒரு சின்ன பிம்பம். ஏதோ ஒரு சாமிப் பெயர். சாமிகளிலும் ஆதிதிராவிட பாகுபாடு உண்டு என்பது மாதிரியான கூரையில்லாத சாமி. மழையில் கரையும் மண்சாமி. அதுக்கு இப்போது தான் பட்டும் படாமலும் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்தக் கோவிலுக்கு வெளியே, செம்பட்டையான்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். இடையிடையே வாண வேடிக்கைகள் ஆகாயத்தில் உலாவின. அந்தச் சத்தம் நிற்கும் போதெல்லாம் செம்பட்டையான்கள் பேசிக் கொண்டார்கள். “ஏல... சாமியாடி... பயலுவளுக்குச் சொல்லு. கரும்பட்டையான் சாமியாடிக் கிழவனால தோரண மலையில எறி சுனையிலே தண்ணி எடுக்க முடியாதுன்னு, அவரு பேரனை ஏற்பாடு பண்ணுறாங்களாம். அதனால நாம உஷாரா இருந்து, அவங்களுக்கு முன்னால மலையிலே ஏறி தண்ணி எடுக்கணும்.” “ஆமா... சினிமாப் படத்த கோவிலுக்குள்ள வைக்கதா... வெளிலயா...” “துளசிங்கம் பார்த்துக்குவான்.” “எல்லாத்தையும் துளசிங்கம் பாத்துக்குவான்னா நாம எதுக்கு.” “நன்றியில்லாமப் பேசாதல. நம்ம துளசிங்கம் ஊருக்கு வந்த பிறகுதான் நமக்கு பேரு.” “நம்ம பலத்துலதான் அவனுக்கும் பேரு.” “ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா.” “நீ பேசாண்டாம். ஆனால் அங்க சாராயம் காய்ச்சுற பயல்களை அம்மன் கொடை முடியுறது வரைக்குமாவது கொஞ்சம் தள்ளிப்போய் காய்ச்சச் சொல்லுப்பா.” “நீ ஒருத்தன். அம்மன் கொடைக்காகவே ஸ்பெஷலா காய்ச்சுதான். அவன அப்புறப்படுத்துனா நம்ம ஆளுவ ஒன்ன அப்புறப்படுத்திடுவானுவ.” வெளிப் பந்தலுக்குள் நடந்த இந்தப் பேச்சுக்கள் கேட்கும் தூரத்திலேயே விழுந்தாலும், எலி டாக்டர் காதுகளில் அவை விழவில்லை. மனிதர் குட்டி போட்ட பூனை மாதிரி பந்தலுக்கு வெளியே அங்குமிங்குமாகச் சுற்றினார். வட்ட வட்டமாகவும், சதுரம் சதுரமாகவும் நீள நீளமாகவும் நடந்தார். யாரிடமாவது புலம்பியாக வேண்டும். எலி டாக்டர் சத்தம் போட்டுக் கத்தினார். “ஏய் அலங்காரி... ஒன்னத்தான் பிள்ள... ஒரு நொடி வந்துட்டுப்போ.” சுடலைமாடன் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் வண்டிப்பாதை ஓரமாக ஆட்டுக் கிடாவுடன் போன அலங்காரி, அவரைப் பார்க்காதது போலவும், கேட்காதது போலவும் போனாள். அவர் இரண்டாவது தடவையாகக் கத்தும்போது, முகத்தைச் சுழித்தபடி நின்றாள். நான் பொம்புள... அங்கென்ன வேலை... எலி டாக்டர், கத்திக் களைத்துவிட்டு, அவளை நோக்கி நடந்தபோது, அலங்காரி அவரைப் பார்த்து நடந்தாள். ஆட்டை ஒரு வாதமடக்கி மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, ஆடியசைந்து நடந்தாள். பின்னர் இருவரும் இணைந்து நடந்தார்கள். அலங்காரி, வெட்கப்பட்டு “சீ முன்னால நடயும் இல்லன்னா. பின்னால நடயும்” என்றாள். எப்படியோ இருவரும் முன்னாலும் பின்னாலுமாகக் கோவில் பக்கம் வந்தார்கள். எலி டாக்டர், பந்தலுக்குள் நின்றவர்களைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டே ஒப்பாரி வைக்காத குறையாக ஊளையிட்டார். “பாரு அலங்காரி. இந்த துளசிங்கம் பயல், செய்யுற அட்டூழியத்த. அம்மன் கொடைக்கு தடிப்பய உரக்கடையில சம்பாதிச்சத விட்டுடுவான் போலுக்கு. வெளிப் பந்தலும் இவன் பொறுப்பாம். சினிமாவும் இவன் பொறுப்பாம். டான்சும் இவன் பொறுப்பாம். இந்த கழிசடைகள பாக்கிறது மட்டும் சொக்காரப் பயலுவ பொறுப்பாம். இதுக்கு மேல செலவளிக்காண்டாமுன்னு நீ கொஞ்சம் அவன் கிட்ட சொல்லு பிள்ள.” “துளசிங்கம் எதுலயாவது பணத்த விட்டா அத வட்டியும் முதலுமா எடுக்குறவன். நாமதான் அவன்கிட்ட யோசனை கேட்கணும். அவனுக்கு சொல்ல வேண்டியதில்ல. சரி போவட்டம். கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்கும் முடிவாயிட்டாமே.” “கேள்விப்பட்டேன். ஆயிரந்தான் நடந்தாலும் எனக்கு மனசு கேட்க மாட்டேங்கு. கிளியை வளத்து பூனைகிட்ட...” “பூனைகிட்ட கிளி போகல. நாயி கிட்ட தேங்காய கொடுக்காவ. அது தானும் தின்னாது. யாரையும் தின்னவும் விடாது.” “இதுல இன்னொரு விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கு. அலங்காரி. காத்துக் கருப்பன் பயலுவ எப்போ நம்ம கோயிலுல மேளச் சத்தம் கேக்குதோ அப்போ நம்ம கோயிலையே ஒடைக்கப் போறதா பேசிக்கிறானுவளாம். எனக்கு கையும் ஓடமாட்டங்கு. காலும் ஓடமாட்டங்கு. அவங்களுக்கு என் மவன் துளசிங்கம் மேலதான் குறி. கரும்பட்டையான்களே சரிக்குச் சரியான ஜோடி. இப்ப அந்தப் பயலுவோட காத்துக் கருப்பனுவளும் ஒண்ணாச் சேர்ந்தா நம்ம கதி, அதோ கதிதான். ஆமா, இப்டிச் செய்தா என்ன?” “எப்படி?” “நம்ம சுடலைமாடன் வழக்கமா. கரும்பட்டையான் காளிகிட்ட உத்திரவு வாங்கப் போவாரு. இந்த வருஷம் பேசாம காத்துக் கருப்பன் மாரியம்மன் கிட்ட உத்தரவு வாங்கச் சொல்லலாமே. இதனால் காத்துக்கருப்பன்கள வளைச்சுப் போட்டுடலாம் பாரு.” “மாடன் மாரிகிட்ட உத்திரவு கேட்க சம்மதிப்பாரா.” “நாம சொல்லுறதைத்தான் மாடன் கேட்கணும். மாடன் சொல்லுறதை நாம கேட்கணுமுன்னு இல்ல. அப்டிக் கேட்டா ஊர்ல ஒரு கிடா ஒரு கோழி உயிரோட இருக்காது. சரி. என் திட்டத்தைப் பற்றி என்ன சொல்லுதே.” “நல்ல திட்டந்தான். அதுக்காவ. அவனுவ காலுல போயி விழணுமான்னு யோசிக்கேன்.” “யோசிச்சு சொல்லு. அதோ பாரு வேணு. துளசிங்கம் பயல் கொடைக்கு சினிமாப் பயலுவள கூட்டிட்டு வாரான். கோணச்சத்திரத்துல ரூம் போட்டு குடிக்கதுக்கு. பிராண்டி போட்டு செறுக்கி மவன், உரக்கடைய ஒரு வழி பண்ணிடுவான். அலங்காரி... அலங்காரி... நீ சொல்லு. இதோட, அவன நிறுத்திக்கிடச் சொல்லு பிள்ள.” “நம்மளால முடியாது சாமி. அவன் கேட்காட்டா எனக்குத்தான் மதிப்புக்குறவு. பிறவு எதையுமே அவன் கிட்டே பேச முடியாது.” “என்ன அலங்காரி. என்கிட்டயே பசப்பற. நீ சொல்லி அவன் கேட்கமாட்டானாக்கும். நீங்க ஒருத்தருக்கு ஒருத்தரா...” எலி டாக்டர் சும்மா இருந்திருக்கலாம். அப்படி இருக்காமல் ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். கண்ணடித்தபடியே சொல்லடித்தார். அதைப் புரிந்து கொள்ள அலங்காரிக்குச் சிறிது நேரமானது. புரியப் புரியப் புலியானாள். அவரிடம் இருந்து பின் வாங்கி நின்று, கத்தினாள். “ஏய் எலி டாக்டர். நீயுல்லாம் ஒரு மனுஷனா?” “என்ன பிள்ள நீ நான்னு...” “நீ சிரிச்ச சிரிப்புக்கும் பேசுன பேச்சுக்கும் ஒன் மூஞ்சில காறித்துப்பணும். இப்படிப் பேசற நீ ஒம்மாவ அம்மான்னு கூட கூப்புடப்படாது. பேச்சுக்கும் ஒரு அளவு வேண்டாமய்யா. நான் பலபேர தொட்டவதான். கெட்டவதான். இல்லங்கல. ஒன் தம்பிய கட்டுன பிறவு ஒழுங்கா இருக்க நெனச்சவதான். அவன் தெம்மாடின்னு தெரிஞ்சதும் ஒரு சிநேகிதம் ஏற்பட்டதும் வாஸ்தவந்தான். இது தெரிஞ்சு நீ குதியாய் குதிச்சே. அப்போ நீ நியாயமா பேசியிருந்தா நானும் அடங்கியிருப்பேன். ஆனால் நீயோ, அவன்கிட்ட போறவள் என்கிட்ட வரப்படாதான்னுதான் ஆடுனே. அந்த ஆட்டத்துல நானும் ஆடிட்டேன். ஆடுறேன். நான் இப்படி ஆனதுக்கு நீயும் ஒரு காரணம். அதுக்காவ இப்டியா பேசுறது. காக்கா காக்காவக் கொத்தி தின்னாது. இப்பவே துளசிங்கத்துக்கிட்ட சொல்லுதேன் பாரு.” “அய்யோ அலங்காரி... நான் ஒன்ன அப்படிச் சொல்லுவனா. இந்த சுடல சத்தியமாச் சொல்லுதேன். நான் அப்டி நினைச்சிருந்தாக் கூட என் கையி விளங்காமப் போவும். காலு நடக்காமப் போவும். சொன்னவன் பழனிச்சாமி தம்பி அருணாசலம். தேவடியா மவன. நானே மிதிக்கப் போறேன். துளசிங்கம் பயல்கிட்ட சொல்லிடாத தாயி. இப்பவே அடிக்காத குறையா நாயப் பேசுறது மாதிரி பேசுறான். ஒரு நல்ல வாக்குக் கொடுத்துட்டுப் போ. அலங்காரி.” அலங்காரி, எதுவும் பேசவில்லை. வேனில் இறங்கியவர்களை ஊமைச் சோகமாய்ப் பார்த்தாள். பத்து பதினைந்து தடியன்கள் இறங்கினார்கள். ஒருவன் கையில் எட்டுக்கால் பூச்சி மாதிரியான வீடியோ காமிரா. ஒருத்தன் தோளில் மிருதங்கம் மாதிரியான சதுரப்பெட்டி. துளசிங்கம் அவர்களைச் சித்திக்கு அறிமுகம் செய்து வைத்தான். “இவங்கெல்லாம் என்னோட சினிமா பிரண்டுங்க... ஏய் தர்மராசா. இங்க வாடா டேய் மவராசா... நீயும் வா... இவங்க கூடவே நீங்க ரெண்டு பேரும் இருக்கணும். என்ன மாஸ்டர் அப்படிப் பார்க்கிய?” “ஓங்க கோவிலுல ரொம்பப் பெரிசா விசேஷம் இருக்கும். வீடியோவில எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமுன்னு சொன்னே. நானும் ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். இங்கே ஒண்ணுமில்லியப்பா... மெட்ராஸே மேலப்பா...” “நாளைக்கு பாத்துட்டு சொல்லுங்க மாஸ்டர். அதுக்கு மறுநாள் கிளைமாக்ஸ். ரெண்டையும் பாருங்க. படமாய் எடுங்க. ஒங்களுக்கு பிடிக்காட்டா அட்வான்ஸ் அப்படியே தந்துடுறேன். அதோட ஒங்கள பிஸுனசுக்காக மட்டும் கூப்பிடல. எங்க விசேஷத்த நீங்களும் பார்க்கணுமுன்னுதான் கூப்பிட்டேன்.” மாஸ்டர் எதுவும் பேசாமல் தோளில் இருந்த காமிராவை எடுத்துத் தர்மராசாவின் தலையில் வைத்தான். தாடிக்காரன் ஒருத்தன், கண்ணும் வாயும் மட்டுமே வெளியே தெரியும். இரண்டு பேர் மொட்டையன்கள். எஞ்சிய பேர் நெட்டையன்கள். ஒருவன் லுங்கி. ஒருத்தன் பைஜாமா. இன்னொருத்தன் டவுசர்காரன். மற்றவர்கள் டைட் பேண்ட். பொம்மைச் சொக்காக்கள். சினிமாக்காரர்களில் ஒருத்தன் விசிலடித்தபடியே பேசினான். “டேய். அதோட பாருடா. ஒரு கிராமத்துக்குட்டி. அருமையான லொக்கேஷன்ல எப்படி அழகாய் நடக்காள் பாரு. பாரதிராஜா பார்த்தா விடமாட்டாரு. அடடே. குட்டி எப்படி பார்க்குது பாரு. மாஸ்டர் காமிராவ ரெடி பண்ணு. மாஸ்டர் இந்த போஸ் பியூட்டிபுல் ஒண்டர்புல். அது பாதர்கிட்ட இப்பவே அட்வான்ஸ் கொடுத்துடலாம். ஷாட் ரெடியா?” எல்லோரும் தொலைவில் போன கோலவடிவையே பார்த்தார்கள். துளசிங்கம் மாஸ்டரிடம் கெஞ்சிக் கூத்தாடி காமிராவை விலக்கினான். இருக்கிற தொல்லை போதாதா. இந்தச் சமயத்துல ஏன் அந்தப் பக்கமாய் போறாள். இவளுக்கும் அக்னி ராசாவுக்கும் கல்யாண்மாமே...? கோலவடிவையே பார்த்த துளசிங்கத்தை அலங்காரி ரசித்துப் பார்த்தாள். இதுவரை தான் செய்யப் போவது நியாயமா என்று நெஞ்சுக்குள் பாதிக்குப் பாதியாய் சிந்தித்த அலங்காரி, அருணாசலந்தான் அப்படிப் பேசினான் என்பதை எலி டாக்டர் மூலம் கேள்விப்பட்ட உடனேயே மனதை கல்லாக்கினாள். இல்லை, அதுவே கல்லானது. “துளசிங்கம் ஒன்கிட்ட தனியா பேசணும். அவசரம், அவசியம். நம்ம பருத்தித் தோட்டம் வரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்.” “என் பிரண்டுங்கள விட்டுட்டு...” “ஒகே. துளசி. போயிட்டு வா. நாங்க கோவிலுல லொகேஷன் பாக்கோம்.” எலி டாக்டர் நடுங்கிப் பார்த்தபோது... அலங்காரி அவருக்கு முருகனைப் போல் அடைக்கலக் கையைக் காட்டிவிட்டு, துளசிங்கத்துடன் நடந்தாள். கோலவடிவோ, சோளத் தோட்டத்திற்குள் ஒவ்வொரு சோளச் செடியையும் விலக்கி விலக்கி பார்த்துப் பார்த்து உள்ளே போனாள். |