4

     ஆண்டுக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ காற்று தவிர எதுவும் உட்புகாத காட்டுப் பகுதிக்குச் சென்று, மனித சஞ்சாரங்களை மறந்து, ஒருத்தர் தனது கடந்த கால நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் மனதுக்குக் கொண்டுவந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனுபவம் முக்கியமல்ல... அனுபவத்தில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வதே முக்கியம் என்பார்கள்.

     இந்த மாதிரியான பொன்மொழிகளோ அல்லது அனுபவப் பரிசீலனையோ செய்தாக வேண்டும் என்பதோ அலங்காரிக்குத் தெரியாது... ஆனாலும், அந்தப் பருத்திக் காட்டிற்குள் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்... ஆகாயத்தை மறைக்கும் அடர்த்தியான புளியந்தோப்பிற்கு கிழக்கே உள்ள பருத்திக் காட்டில் அவள் முன் கையைத் தொடையில் ஊன்றி, மோவாயை உள்ளங்கையில் போட்டுத் தனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டிருந்தாாள். விடலைப் பெண்கள் போல் வெடித்து நின்ற பருத்திச் செடிகள்... வாழ்வுக்கு முடிவுரை கூறும் நிலையில் இருப்போரின் கணக்கை காட்டுவதுபோல், பருத்திச் செடி இலைகளிலும், வாய்க்காலோரம் இருந்த ஆமணக்குச் செடிகளிலும் சிதறுண்டு கிடந்த பருத்தி இலைகள்... சவலைக் குழந்தைகளைப் போல குறும்பல்களைக் கழித்துக் கொண்டிருந்த சரல் கேட்டு செவ்விளனித் தென்னைகள்... அவள் உடம்பை வருடிக் கொடுத்த அகத்திக்கீரைச் செடிகள்... அவளுக்கு இதமான மெத்தை விரிப்பு இருக்கையைக் கொடுத்த பசும்புல் பரப்பு...

     அலங்காரி அனைத்தையும் மறந்து தனக்குள்ளே தன்னைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்படித் தேடித்தேடித் தான் தேட வேண்டியது அவசியமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. உடன் பிறந்து கொல்லும் நோய் மாதிரி, அவள் அம்மா, ஒரு பணக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். முப்பது வயது வித்தியாசம். மனைவியை அடிதடி மூலம் மட்டுமே ஆண்மையை நிரூபிக்க நினைத்தவர் கிழட்டு அப்பா. ஆண்மைக் குறைவாலும், வயது முதிர்ச்சியாலும் இளம் மனைவியைச் சந்தேகப்பட்டவர்... கெட்ட பேர் வாங்குறதே வாங்குறோம்... கெட்டுப்போயே வாங்குவோம் என்று திடப்பட்ட தாய்க்காரி, அவளுக்கும் அவளது ஆசை நாயகர்களுக்கும், பெற்ற மகளான தானே காவல் காக்க வேண்டிய கொடுமை...

     இத்தகைய சம்போவ சம்பவங்களைக் காணும்போதும், அம்மா தன்மீது பாயும் போதும், ஏதாவது ஒரு இடத்தில் ஒளிந்து பீடி குடித்த அனுபவங்கள்... அப்பன்காரனே ஒரு நாள் அவளைக் கையும் களவுமாய்ப் பிடித்து, தெருவுக்கு இழுத்து வந்து, அவளை உதை உதை என்று உதைத்து, அவள் துண்டுப் பீடியை ஊராருக்குக் காட்டி, அவள் மனசைத் துண்டு போட்ட சிறுமை... பீடியை விட்டவளுக்கு, அம்மாவின் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போதும், அப்பாவின் கொடுமையான செயல்களின் போதும், யாரோ தன் தலையை வருடிக் கொடுப்பது போன்ற கற்பனை... எவனோ ஒருத்தன் தன்னை மடியில் போட்டு, உச்சிமோந்து, தட்டிக் கொடுத்து, ஆதரவு கொடுப்பது போன்ற அறியாப் பருவத்தின் புரியாத சிந்தனைகள்...

     கோபம் வரும்போதோ... வருத்தம் வரும்போதோ பீடி பிடிப்பது போல், மதுபானம் அருந்துவதுபோல், இவளுக்கு அத்தகைய சந்தர்ப்பங்களில் பாலுணர்வுக் கற்பனையே ஒரு ‘போதை’ ஆகிவிட்டது. அம்மா, கன்னத்தைக் கிள்ளிய வலியிலும், உறவுப் பிணியில் துடிக்கும் போதும், எவனோ ஒருத்தன் - ஒரு ராஜபுத்திரன் அவள் கன்னத்தை வருடிக் கொடுப்பது போன்ற எண்ணம். இப்படி மூச்சு விடுவது எப்படி இயல்போ, அப்படி எவனோ ஒருத்தன் அவளுக்குச் செய்கிற கற்பனைக் காதல் சிகிச்சை இயல்பாகிவிட்டது. புகை பிடிப்பவனுக்கு இன்ன சிகரெட் என்று இருக்கலாம்... இவளுக்கோ இன்னவன் என்று இல்லை. ஒரு கொடுமையான அனுபவத்திற்கு முன்னால் எந்த வாலிபனைப் பார்த்திருப்பாளோ அவனே, அவளது சேவகன்... அவனே அவளது ராஜபுத்திரன்... இப்படிப்பட்ட விபரீதக் கற்பனையால், பலரிடம் சிக்கிய பிறகு, எவனையும் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இப்போதுகூட அவள், தன் உடல்வாகில் ஏதோ கோளாறு என்று எண்ணி, கண்டவனை எல்லாம் போட்டுக் கதவைச் சாத்துவதாக நினைக்கிறாள்... அவள் பிரச்சினை உடலைப் பற்றியது அல்ல... மனதைப் பற்றியது என்று புரியாதவள்... காலில் உள்ள புண்ணுக்குத் தொடையில் நெறிக்கட்டுவது போல், காயங்கள் பாலுணர்வு நெறியாகப்படுத்துறது என்பதை யார் சொல்வது?

     அலங்காளி, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இப்போது அவளுக்குத் தேவை ஒரு ஆண்... அது, அவள் கணவனாக இருந்தாலும் கவலை இல்லை. எழுந்து நின்ற அலங்காரி, மேற்கே உள்ள புளியந்தோப்பை ஊருருவிப் பார்த்தாள். கிழக்கே உள்ள கரும்புத் தோட்டத்தை ஏறிட்டுப் பார்த்தாள். வடக்கே பனங்காடு... தெற்கே பஸ் ரோடு, அவளுக்குத் தெரிந்த - அவளைத் தொட்ட காஞ்சானைக் காணோம்... எலி டாக்டரைக் காணோம்... மிளகுவத்தல் வியாபாரியைக் காணோம்... பீடி ஏஜெண்ட் பால் பாண்டியைக் காணோம்... எவன் மடியும் எட்டவில்லை... எவன் கையும் தலையைக் கோதிவிட இல்லை...

     அலங்காரிக்குப் பாலுணர்வுப் பாசாங்கு ஏக்கம், பழிவாங்கும் எண்ணமாக மாற்றமெடுத்தது. ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் பழனிச்சாமி, அவர் தம்பி மனைவி பேச்சியம்மாவை ஏவி விட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் பொண்டாட்டி பாக்கியம், கொழுந்தன் பொண்டாட்டி திட்டுறது சரி என்பதுபோல் மோர் கொடுக்காமல் அலட்சியப்படுத்தினாள்... திருமலைப் பயலோ, ஒரு வார்த்தை தட்டிக் கேட்கவில்லை. கரும் பட்டையான் பயல்களில் ஒருத்தன்கூட, அப்போதைக்காவது அனாதரவாய் நின்ற தன்மேல் கருணை காட்டவில்லை. சொக்காரப் பயல்களான செம்பட்டையான்களோ கேட்கப் போவதில்லை... இதே கேள்வியைப் பேச்சியம்மா, காஞ்சான் பொண்டாட்டியை கேட்டிருந்தாலோ, தன்னுடைய இன்னொரு மச்சானின் மகளான தாயம்மாவைக் கேட்டிருந்தாலோ, இந்நேரம் கொலை கொலையாய் விழுந்திருக்கும்... என்னைக் கேட்டால் யாரும் கேட்க மாட்டாங்க... நானேதான் கேட்கணும்... ஒத்தைக்கு ஒத்தையாய்... அதுவும் ஒரு பொம்புளை எப்படிக் கேட்க முடியும்... பழனிச்சாமிக்கு சோடியாக முடியுமா... பேச்சியம்மாவுக்கு நான் எதிரியாகிற தகுதி... எனக்கு இருக்குதா... ஒரே ஒருத்தர் கிட்டதான் முறையிட முடியும்... ஆறுதல் சொல்ல அவரால் மட்டுமே முடியும்... மலையாள மந்திரவாதி மகளைக் கற்பழித்து, அப்புறம் காவு வாங்கி இசக்கியாக்கினாரே, சுடலை மாடசாமி... அவர் தன்னையும் கற்பழிக்கட்டும்... காவாக்கட்டும்... ஆனால் கரும்பட்டையான் குடும்பத்த பழிவாங்க வேண்டும்... ஒருத்தியையாவது என்னைப் போல் ஆக்க வேண்டும்... அவர் ஆக்கிக் காட்டவேண்டும்...

     அலங்காரி சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்தாள்... கண்களை மூடியபடி, வில்லுப் பாட்டாளி பாடிய பாடலை, மனதுக்குள் பாடினாள்.

     “தூக்கி வைக்கும் கால்களுக்கு... சுடலைக்கு
     துத்திப்பூவு சல்லடமாம்,

     எடுத்து வைக்கும் கால்களுக்கு... சுடலைக்கு
     எருக்கலம்பூ சல்லடமாம்...

     சல்லடமும் குல்லாயுமாய்... சுடலையே
     சங்கடத்தை போக்க வாரும்...”

     ஒப்பாரிபோல், பாடி முடித்த அலங்காரி சத்தம் போட்டே வரம் கேட்டாள்.

     “சுடலைமாடா... சுடலைமாடா... திக்கில்லாத எனக்கு நீதான் தெய்வமடா... கரும்பட்டையான் குடும்பத்த நான் பழிவாங்கி ஆகணும்... உன்மூலம் நானோ, என் மூலம் நீயோ ஒருத்திய காவு வாங்கி... இசக்கியாக்கணும்... அப்படி நீ ஆக்குனால்... சந்தையில விற்கதுக்காவ வளக்குற என் கிடாவை ஒனக்கு வெட்டுறேன். ஒரு பானை பொங்கல் படைக்கேன்... எள்ளு புண்ணாக்கு... ஏராளம் வைக்கேன்... நீயே கதி... நீயே அடைக்கலம்...”

     அலங்காரி சுடலை மாடனைத் தியானித்தபடி, கைகால்களை ஆட்டாமல், அசைக்காமல் அப்படியே இருந்தாள்... வெட்டரிவாள், குறுக்குத்தடி, குல்லாய் ஆகியவற்றுடன் கூடிய சுடலைமாட சாமியைக் கும்பிட்டபடியே, கரும்பட்டையான் குடும்பத்தைத் திட்டினாள். அப்போது...

     அவள் தோளை யாரோ தொடுவது போலிருந்தது... காஞ்சானோ, எலி டாக்டரோ என்று கண் விழித்தாள்... கோலவடிவு...! அவள் தோளைத் தொட்டபடி குனிந்து நின்றாள்... பிறகு, அந்த தோளையே பற்றுக்கோலாகப் பிடித்து கீழே உட்கார்ந்து விம்மினாள். அலங்காரியைக் கட்டிப் பிடித்து அழுதாள்.

     “ஒங்கள பேச்சியம்மா சித்தி... அப்படிப் பேசுனதுல... எனக்கு சம்மதமில்ல... அத்தே... எல்லாம் என்னால வந்ததுன்னு நினைக்கும் போது, மனசு கேட்க மாட்டேன்குது... அத்தே... ஒங்கள எல்லாருமா... நாயப் பேசுனது மாதிரி பேசிட்டாவுளே... அத்தே... என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அத்தே...”

     அலங்காரி கோலவடிவை ஒரு கணம் பார்த்துவிட்டு, மறுகணம் ஆகாயத்தை நோக்கி, கையெடுத்துக் கும்பிட்டாள்.

     “என்னை எதுக்கு அத்தை கும்பிடுதிய... எங்க சித்தியும் சந்திராவும் ஒங்கள பேசியிருக்கப் பேச்சுக்கு... நான்தான் அத்தே... ஒங்க காலுல விழுந்து புரளணும்... லேசா சிரிங்க அத்தை... நீங்க சிரிக்கணும்... சிரிச்சே ஆகணும்... என்னை அப்பிடி கும்பிடாதிங்க... அத்தே... ஒங்கள இப்போ பார்த்தபிறவுதான்... அதுவும் அந்தச் சிரிப்போடு பார்த்த பிறவுதான்... மனசு லேசாகுது அத்த...”

     அலங்காரி கோலவடிவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் வளர்க்கும் பலிகிடாவை அணைப்பாளே அப்படி! பிறகு அவள் மனத்தைத் தட்டிக் கொடுத்துப் பேசினாள்.

     “ஒன்னை இப்போ பார்க்கும்போது அத்தைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா... நீ ஒருத்தி இந்த சனத்துல சொன்ன ஆறுதல்... ஒரு கோடி பேரு சொன்னதுக்குச் சமம்... நீ இப்பிடி... ஆறுதல் சொல்லுறதுக்காகவே இந்த அத்தய எல்லாரும் திட்டணும் போல தோணுது...”

     “வேண்டாம் அத்த... நீங்க தூக்குப் போட்டுச் சாவியளோ இல்ல... கிணத்துல விழுந்து உயிர மாப்பியளோன்னு பயந்து வந்தேன்.”

     “இந்தக் கிணத்துல விழணுமுன்னுதான் வந்தேன்... நீ மட்டும் வராவிட்டால் விழுந்திருப்பேன்...”

     “அப்படில்லாம் செய்திடாதிய... அத்த, பாவம்... துளசிங்கம் மச்சான் சாதாரணமா பேகனதுக்கு எங்கண்ணாச்சி நல்லா திட்டிட்டான். அவரு கிட்டயும் என்னைத் தப்பா நினைக்கப்படாதுன்னு சொல்லிடுங்க... அத்தே... அப்போ நான் போறேன் அத்தே...”

     “ஏன் இப்டிப் பயப்படுறே... அத்தக்கிட்ட நிற்கிறதுக்குப் பயமா...”

     “ஆயிரந்தான் இருந்தாலும் இப்போதைக்கு நீங்க எங்க குடும்பத்துக்கு சண்டைக்காரி... ஒங்ககிட்ட பேச வந்தது தெரிஞ்சா எங்கண்ணாச்சி என்னை வெட்டிப் போட்டுடுவான்... அதுக்காவ எங்கப்பா அண்ணாச்சிய அடிக்கப் போவாரு - அவரு, வெட்டுறதுக்கு அண்ணாச்சி என் உடம்புல இடம் வைக்கிலியேன்னு...”

     “பரவாயில்லியே... நல்ல பேசுறியே...”

     “சரி... நான் வாறேன் அத்த...”

     கோலவடிவு எழுந்தாள்... அவளை வழியனுப்புவதற்காக அலங்காரியும், எழுந்தாள்... அப்படி எழும்போது துளசிங்கம் வடக்குப் பக்கமாக உள்ள பனங்காட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

     அலங்காரி மனத்தில் ஒரு பழியுணர்வு... ஆனாலும் மனசு கேட்கவில்லை. பேச்சியம்மா திட்டும்போது, எதிர்ப்பது மாதிரி பேசியவள், ஒரு பாவமும் அறியாத அப்பாவி... இப்போ நான் கலங்குறதைப் பாத்துட்டு கலங்குறவள்... ‘இந்த பச்ச மழலையப் போய்... ஏன் கூடாது... படுகளத்துல ஒப்பாரி கூடாது... அதோட... இவளை... நான் ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணல... துளசிங்கம் கூட சேர்த்து வச்சி... பேச்சி தலய மொட்டையடிக்கப் போறேன்... பழனிச்சாமிய... படுத்த படுக்கையாக்கப் போறேன்... எவளும்... சந்தர்ப்பம் கிடைச்சால் ஓடிப் போறவள்தான்னு நிரூபிக்கப் போறேன்... இதனால... இந்த கோலத்தோட வாழ்க்க பாதிக்காது... துளசிங்கம் என்ன மட்டமா... கரும்பட்டையான் வகையறான்னா கற்புக்கரசின்னு பய மவளுவ... மார் தட்டுறவளே... அப்படி தட்டுற கையத்தான் தடுக்கப் போறேன்... அதோட... இது சுடலைமாடன்... உத்தரவு...”

     அலங்காரி பழியைச் சுடலைமீது போட்டுவிட்டு, கோலவடிவை, தனது ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு “ஒரு விஷயம்... ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் உட்காரு” என்றாள். கோலவடிவு உட்கார்ந்தபோது, அலங்காரி, தலையைச் சொறிகிற சாக்கில், துளசிங்கத்தை அருகே வரும்படி சைகை செய்தாள்... அவனும் அந்தக் கையாட்டத்தைக் கண்டவன்போல் நடையை ஓட்டமாக்கி வந்தான்.

     பச்சைநிற வெட்டுக்கிளி ஒன்று தத்தித் தத்திக் குதித்து, அலங்காரியின் பாதத்திற்குள் சிக்கியது. வேலிக்காத்தான் பூ ஒன்றை, ஒரு ஓணான் கடித்துக் கீழே போட்டது... காகம் ஒன்று தங்கரளிச் செடியில் ஏறிய அணிலின் குஞ்சைக் கொத்திவிட்டுப் போய்விட்டது... வேதனை தாளாத அந்த அணில் மூக்கில் ரத்தம் சொட்ட அங்குமிங்குமாய்த் துடித்தது.

     அலங்காரி கோலவடிவை ஒட்டினாற்போல் உட்கார்ந்திருந்தாள். ஐந்தாறு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி எடுத்து, அவற்றை வலது புறங்கையில் வைத்து, அப்படியே கையை மாற்றிக் கற்களை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தாள். அவள் ஏதோ பெரிய விஷயத்தைச் சொல்லப் போவதாக நினைத்த கோலவடிவு அவசர அவசரமாய்க் கேட்டாள்.

     “எத்த, ஏதோ சொல்லணுமுன்னு சொன்னியே...”

     “அத மறந்துட்டேன் பாரு... ஏம்மா கோலம்... என் படிப்ப பத்தாவதோட முடிச்சுட்டே...? நீதான் பள்ளிக்கூடத்துலயே பஸ்ட்ல வந்தியாம்.”

     “அந்த அநியாயத்த ஏன் அத்த கேட்கிறிய... பத்தாவது வகுப்புல எல்லா பாடத்துலயும் நான்தான் பஸ்ட்... பிளஸ்டூவுல சேரப் போனேன்... கோணச் சத்திரத்துல பள்ளிக்கூடம் இருக்கதால அப்பாவும் சரின்னுட்டாரு... ஆனால் எங்கம்மா வயசுப் பொண்ணுக்கு படிப்பு வேண்டான்னுட்டாள். பேச்சியம்மா சித்தியும் ஒத்துப் பாடிட்டாள்...”

     “அவளுக்கு அவள் மகள் சந்திரா படிக்காமப் போனதால நீயும் படிக்கக்கூடாதுன்னு நல்லெண்ணம் வந்திருக்கு...”

     “என்ன எழவோ... அப்போ என்கூட படிச்சவங்க - இப்போ காலேஜ்ல பி.ஏ., பிஎஸ்ஸி. படிக்கிறாவ... அவளுவளப் பார்க்கும் போதுல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்னுது... அம்மாவ திட்டித் தீர்த்துடணும் போல வருது.”

     “அம்மாவோ... அப்பாவோ... ஒருத்தி தன்னோட வாழ்க்கையை தான்தான் அமைச்சுக்கிடணும்...”

     “நான் வர்றேன் அத்த... வீட்ல தேடுனாலும் தேடுவாங்க...”

     “குறையும் கேட்டுட்டுப் போம்மா... அத்த சொல்றேன்னு தப்பா நினைக்காத... நீ வயல் வரப்புக்கு போகாத பொண்ணு... ஒனக்கு ஒங்க வயலு முழுதும் எங்க இருக்குதுன்னு தெரியாதுதான்... அப்படிப் பட்ட நீ விவசாயிக்கு வாழ்க்கப்பட்டியானால்... அவன் எவ்வளவுதான் பணக்காரனாய் இருந்தாலும் வயல் வேலைக்குப் போயாகணும்... அதே புருஷன் கடை கண்ணி வச்சிருக்கவனாயும் நாடுநகர் சுத்தப் பார்த்தவனாயும் இருந்தால் முற்றத்து வெயிலுகூட முதுகுல படாம வாழலாம்.”

     “எங்கப்பாவுக்கு இதுல்லாம் தெரியாமலா இருக்கும்...? நான் வாறேன் அத்த...”

     “செத்தே இரும்மா... எதுல குறை வச்சாலும் புத்தியில மட்டும் குற்றம் குறை வைக்கப்படாது... ஒங்கப்பா ஒன்னை நல்ல இடத்துல வைக்க ஆசைப்படுவார்தான்... ஆனால் நல்ல இடம் என்கிறத தீர்மானிக்கிறதுலதான் கோளாறு வாரதுண்டு... மொத்தத்துல... இந்த அத்த விரும்புறது ஒனக்கு புருஷனா வாரவன் வேட்டி சட்டையே போடப்படாது...”

     “என்னத்த நீங்க...”

     “பேண்ட் சட்டை போட்டவனாய் இருக்கணுமுன்னு சொல்ல வந்தேன்... சிரிப்பப் பாரு... நீ சிரிக்கும்போது தாமரைப்பூ விரிஞ்சது மாதிரி இருக்குது. சரி புறப்படு... ஒனக்கும் நேரமாயிட்டு... என்ன காலடிச் சத்தம்? யார் வாரது...”

     “துளசிங்கம் மச்சான் வாரார்... அவர் கிட்ட எங்கண்ணா தப்பா நடந்ததுக்கு நான் ரொம்ப ரொம்ப வருத்தப்படுறதாய் சொல்லுங்க அத்தே...”

     “இதோ அவனே வந்துட்டான்... நீ சொல்லு... என்ன துளசிங்கம் கோலத்த அப்படிக் பாக்கே...”

     “இந்தப் பொண்ணு இங்க எதுக்காக வந்தாள், இழுத்த சண்டை போதாதுன்னா...”

     “நான் வாறேன் அத்த...”

     “ஒரு நிமிஷம்மா... ஏண்டா துளசிங்கம்... ஒனக்கு ஏன் தராதரம் தெரிய மாட்டேக்கு...? பாவம் கோலவடிவு... ஆலமரத்துச் சண்டைக்காவ ரொம்ப வருத்தப்படுறாள்... ஒன்னை அவங்க அண்ணாச்சி அப்படித் திட்டுனதுக்கு துடியாய் துடிக்காள்... நீ என்னடான்னா அவள் மனசு புரியாம எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்துற...”

     “ஆனால் அந்த நெருப்ப வச்சது கோலவடிவுதானே...”

     “சரி அப்படியே வச்சுக்க... இப்போ பத்தவச்சங்களே நெருப்பு அணைக்கும்போது... நீ எண்ணெய ஊத்துனால் எப்டி... பாவம் கோலம்... ஒன் மனசு உடஞ்சு போனதுக்காவ ஆளே உடஞ்சுட்டாள்...”

     “நீ இட்டுக்கட்டிப் பேசுனாலும் பேசுவே... சித்தி... கோலவடிவே சொன்னாத்தான் நான் நம்புவேன்...”

     “சரிப்பா, நீ என்னை நம்பாண்டாம்... ஒன் மாமா மகளே சொல்லுவாள்... கோலவடிவு ஒன்னத்தான்... நான் சொன்னது நிசமுன்னு ஒரு வார்த்த சொல்லிட்டு அப்டியே ஓடு... ஒனக்கும் நேரமாகுது பாரு...”

     “ரொம்பவும் பிகு பண்ணாத... கோலம்... சித்தி சொல்லுறது நிசமான்னு சொல்லு. அடடே என் இப்டி வெட்கப்படுற... சரி என்னை நேருக்கு நேராய் பாரு... நானே ஒன் முகத்துல இருந்து தெரிஞ்சுக்கிறேன்...”

     கோலவடிவு, கண்களைக் கீழே போட்டு மேலே நிமிர்த்தினாள்... துளசிங்கம் அரைவட்டமாகத் தோன்றினான்... உடனே துளசிங்கம், “சொல்லு... சொல்லு...” என்றான். அப்படியும் அவள் திரும்பவில்லை... உடனே சலிப்போடு, “சரி... நீ சொல்லவும் வேண்டாம்... நான் கேக்கவும் வேண்டாம்... நான் வாறேன் சித்தி... இப்போ உரமூட்டை வார நேரம்” என்றான்.

     கோலவடிவு அவன் போய்விடக்கூடாதே என்பது போல், தலையை நிமித்தினாள். அவனை நேருக்கு நேராய் பார்த்துவிட்டு முகத்தை இரு கைகளினாலும் மூடி, மறைத்துக் கொண்டாள். பிறகு விரல்களை அகலமாக்கி அவற்றின் இடைவெளிக்கு இடையே அவனைப் பார்த்தாள். இலைதழை மாதிரியான சட்டை... ராணுவ வீரர்கள் போடுவது மாதிரி... இரண்டு பைகள்... தோள்பட்டையில் இருந்து மார்வு வரைக்கும் பச்சை நிறப் பட்டை... தங்க நிறத்திலான பித்தான்கள்... இறுக்கமான பேண்ட்... சிமெண்ட் கலர் பளபளக்கும் பெல்ட்... கண்ணைக் கூச வைக்கும் கடிகாரம்...

     அலங்காரி உற்சாகப்படுத்தினாள்.

     “ஒன் மச்சான் கிட்டே சொல்லேன்... கோலம், இல்லாட்டி என்னை பொய் சொல்லியா நெனச்சுடப் போறான்...”

     கோலவடிவு அத்தையைப் பார்ப்பதுபோல், அவளது மச்சான் மகனைப் பார்த்தாள். பிறகு குழந்தைகள் எழுத்துக்கூட்டி ஒப்பிப்பது போல் ஒப்பித்தாள்.

     “அ...த்...தை... நி...ச...ம்...”

     “அத்தை நிசம்தான். ஆனால் அவங்க பேசுவது...”

     “நி...ச...ம்...”

     “இப்பத்தான் தமிழே கத்துக்கிறியா...?”

     “போடா... போடா... பொக்கி... அவள ரொம்பத்தான் கேலி செய்யுறே...”

     “ஆனால் நான் நிசமாவே சொல்லுதேன் சித்தி. திருமலை என்ன நெருங்கும்போது அவனை ஒரே போடாய் போட்டிருப்பேன்... ஆனால் தற்செயலாய் இவள் முகத்தைப் பார்த்தேன்... சரி... நாம செத்தாலும்... பரவாயில்ல... இவள் அண்ணா, சாவப்படாதுன்னு அப்படியே நின்னேன்... இல்லாட்டா பந்தாடியிருப்பேன்...”

     கோலவடிவு அவனை நன்றியுடன் பார்த்தாள். ஆனாலும் சவடாலாக இப்போது தைரியப்பட்டும் பேசினாள்.

     “பந்தாடுறதுக்கு எங்கண்ணா கையில என்ன வளையலா போட்டிருக்காரு...?”

     “பாத்தியா சித்தி... அவளுக்கு வார கோபத்த...”

     “கரும்பட்டியான் குடும்ப ரத்தமாச்சே... சும்மாவா...”

     “நீ சொல்றதும் சரிதான் சித்தி... திருமலை அரிவாளோடும், நான் கல்லோடயும் நிற்கும்போது இவள் அண்ணா தலையைத்தான் மறச்சாள்... என்னைப் பத்திக் கவலப்படல...”

     கோலவடிவு மென்று விழுங்கிப் பேசினாள்...

     “அண்ணா தலய மறச்சி... அரிவாளையும் மறச்சுட்டா... அதுல ஒங்க மச்சான் மவனுக்கும் லாபந்தான அத்த...”

     “சரியாச் சொன்னே...”

     “ஆனால் ஒன்னுடா... துளசிங்கம், நம்ம கோலவடிவு ஆயிரத்துல... ஒருத்திடா. அவளவள் வாயில கெட்ட வார்த்தைகளை சுமந்துகிட்டுத் திரியும்போது இவள் வாயில தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்த வராதுடா...”

     “பழகிப் பாத்தாத்தான் தெரியும்...”

     “போடா போக்கிரி... கோலவடிவு கோலவடிவுதான்... கொஞ்ச நேரத்துக்கு முன்னால இவள் வீட்லயே இவள் கண்ணு முன்னாலேயே இவளோட சித்தப்பா பொண்டாட்டி பேச்சியம்மா என்னை அவன் கிட்டே போனே... இவன்கிட்டே போனேன்னு கண்டபடி திட்டிட்டா...”

     “ஒனக்கு மூள இருக்குதா சித்தி... ஒரு வார்த்த எனக்கு சொல்லி அனுப்ப வேண்டியதுதான? அவள் கொண்டைய தலையில் இருந்து எடுத்திருக்க மாட்டேன்...”

     “நீயுல்லாம் இப்படி முரடனாய் இருந்து எப்படித்தான் குப்ப கொட்டப் போறியோ... மனுஷனுக்கு பொறுமை வேணுண்டா... எப்பவுமே... சொல்லுறத ஒருத்தர் பதட்டப்படாமல் முழுசா கேட்டுட்டு அப்புறமாத்தான் பதில் சொல்லணும். பாதி கேட்ட உடனே பதில் சொல்லுறது அரை கிணறு தாண்டுறது மாதிரி... பேச்சியம்மா பேசுன ஏச்சுல நான் ஆத்துல விழலாமா... குளத்துல விழலாமான்னு அழுதுகிட்டே வந்து இங்கே உட்கார்ந்தேன்... என் ராசாத்தி எனக்கு ஆறுதல் சொல்றதுக்காவ இங்கே ஒடி வந்தாள்... எவள்டா இப்டி வருவாள்... பாலைப் பாக்கதா... பால் காய்ச்ச பானையப் பாக்கதா... என் ராசாத்தி... ஒனக்காவ... நானும், இவனும் எவ்வளவு அவமானத்த வேணுமுன்னாலும் தாங்கிப்போம்...”

     அலங்காரி கோலவடிவைக் கட்டிப்பிடித்து நான்கைந்து தடவை முத்தமிட்டாள். பிறகு “ஏண்டா நான் அவளை கொஞ்சுறத நீ பார்க்கே... அவளை நான் முத்தமிட்டா ஒனக்கென்னடா” என்றாள் குறும்பாக...

     “நான் வாறேன் அத்த... வாறேன்.”

     “மச்சான்னு சொல்லு... இல்லாட்டா துளசிங்கமுன்னு சொல்லு...”

     “துளசிங்கம் மச்சான்னு சொல்லுவாள்...”

     கோலவடிவு எதும் பேசாமல் நின்ற இடத்துலயே நின்றாள். அலங்காரி கோலத்தின் தலையை வருடிவிட்டபடியே சொன்னாள்.

     “அத்தையும் ஒன் கூடவே வாறேன்... ஒரு நிமிஷம் நில்லு... இதோ வந்துட்டேன்...”

     அலங்காரி எங்கேயோ ஒதுங்கப் போவதுபோல் போனாள். கோலவடிவும் துளசிங்கமும் தனித்து நின்றார்கள்.