5

     அலங்காரியின் வீடு நிசமாகவே சின்ன வீடுதான். அதேசமயம் செட்டான வீடு. கிழக்குப் பக்கம் ஊராட்சி ஒன்றிய காண்டிராக்டர் ஒருவரின் இரண்டு மாடிக் கட்டிடச் சுவரே இவள் வீட்டுக்கு அரண் மாதிரி. தெற்குப் பக்கத்தில் பாதியளவு சமையல்கட்டும், மீதியில் மாட்டுத் தொழுவமும். மேற்குப் பக்கம் இவளே ஒரு காம்பவுண்ட் சுவரை ஆளுயுரத்திற்குக் கட்டிவிட்டாள். எலி வளை மாதிரி வெளியே தெரிந்தாலும், உள்ளே போகப் போக உறுதியாக இருக்கும் விசாலமான வீடு. அந்த வீட்டுக்குள் எலி வளைவுக்குள் வருவது மாதிரிதான் ஒடுசலான வாசல் வழியாய் வரவேண்டும். இதர வீடுகளைப் போல் இல்லாமல், அந்தத் தெருக் கதவும் சாத்தப்பட்டே இருக்கும்.

     அலங்காரி குளிப்பாட்டிய தலைமுடியைக் கோதிவிட்டபடியே, துளசிங்கத்தைப் பார்த்துக் கண்சிமிட்டியபடியே கேட்டாள்.

     “கோலவடிவ என்னடா பண்ணுனே... அப்டி தலைதெறிக்க ஒடுறாள்...”

     “சனியனுக்கு ரம்பன்னு நெனப்பு... பேச வாயெடுக்கதுக்கு முன்னாலயே ஒடிட்டாள்... நான் பாம்பாயிலயும், மெட்ராஸ்லயும் பாக்காத பொண்ணுவளா... தொட்டா... தொட்டவன் கை கறுப்பா இருந்தாலும் சிவக்கும்... அப்டி சிவப்பு பொண்ணுங்கள ஆயிரக் கணக்குல பாத்தாச்சு...”

     “ஒரு தாயி கிட்ட பேசுற பேச்சாடா இது... நான் ஒன் அப்பா கூடப் பிறந்த சித்தப்பாவோட பொண்டாட்டிடா. பெத்த தாய்க்குச் சமமானவடா...”

     துளசிங்கம் அந்த ‘தார்சாவில்’ நாற்காலியில் உட்கார்ந்து, பனை மரத்து தூணைப் பிடித்தபடியே, உள்ளே பனை நார்க்கட்டிலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த சித்தப்பா சீமைச்சாமியையே பார்த்தான். நோஞ்சான் உடம்பு... குச்சிக் கால்... குச்சிக் கை... அலங்காரிச் சித்தியின் ஒரு காலளவுக்கு அவர் உடம்பு. அவரையே பார்த்த துளசிங்கம் சித்தியைக் கூர்மையாகப் பார்த்தான். அவள் மீது கோபமும் வந்தது... கூடவே பரிதாபமும் வந்தது... கூர்மைப் பார்வையை விலக்கி, லேசாய் சிரித்தான்... அவளும் அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டவள் போல், அவன் கண்களைத் தவிர்த்து முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள். தாய்க்காரி, எந்த மகனுக்கும் எவளையும் பிடித்துக் கொடுக்க மாட்டாள்... கண்டிப்பாளே தவிர, காதல் பாதை வகுக்கமாட்டாள்... அதற்கு அலங்காரி சித்தி மாதிரி பல அனுபவங்களும், அலங்கோலங்களும் தேவை...

     அலங்காரி முழுசும் நனைந்த தைரியசாலியானாலும், அந்தச் சமயத்தில் துளசிங்கத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. முகத்தை அவன் பக்கமாய் திருப்பாமலே விளக்கமளித்தாள்.

     “நம்ம தோட்டத்துப் பக்கமா சட்டம் பேசுற ரஞ்சிதம் வந்துகிட்டு இருக்காள். அதப் பார்த்துட்டுத்தான் கோலவடிவு ஓடியிருப்பாள். அவள விட்டுப் பிடிச்சா சரியாகிவிடும்...”

     “அவளை விட்டும் பிடிக்காண்டாம்... விடாமலும் பிடிக்காண்டாம்... சரி நான் வரட்டுமா...”

     “வந்ததும் வராததுமா புறப்படுறே... கோலவடிவைப் பத்தி சித்திக்கிட்ட கேட்க வந்தியோன்னு நினைச்சேன்...”

     “நீ வேற... இந்தச் சித்தி முகத்த ஒரு நாளைக்கு பாக்காட்டால் எனக்கு என்னமோ மாதிரி இருக்கும். இன்னைக்கு சிமெண்டுக்கு தனிக்கடை போடுறேன்... ஒன் தரிசனம் இல்லாம போட்டா நல்லா இருக்குமா...”

     “நீயாவது இந்த சித்திக்கிட்ட பெத்த பிள்ளை மாதிரி நடக்கியப்பா... அதுவும் பெத்த மவளே போன பிறவு...”

     “நான் எப்பவும் ஒன்கிட்ட நல்லாத்தான் இருப்பேன் சித்தி. பம்பாயிலயும் சென்னையிலயும் பல எக்ஸ்டிரா பெண்களைப் பார்த்தவன் நான். நான் ஒண்னும் ‘அதை’ பெரிசா எடுத்துக்கிறது இல்ல... இப்டி எப்படியோ இருந்த பல பெண்ணுங்க... இப்போ தங்கள மாத்திக்கிட்டு பேரும் புகழுமா இருக்காளுவ. அதனால நாமும் நம்மள மாத்திக்கிடணும்...”

     அலங்காரி வாயடைத்து நின்றபோது, கதவு தட்டப்பட்டது. துளசிங்கம் கதவைத் திறப்பதற்காக நடக்கப்போனான். அவள் அவன் கையைப் பிடித்துத் தடுத்த படியே உள்ளே முகம் நோக்கி கத்தினாள்...

     “ஒம்மத்தான் யோவ்... தூங்குமூஞ்சி... பண்டாரம்... என் பிள்ள நிக்கான்... இல்லன்னா நல்லா கேட்பேன்... எந்திரும்... யாரோ வாசல் கதவ தட்டுறது காதுல விழல... துப்புக்கெட்ட மனுஷன்... எழுந்துருமே...”

     அந்தத் ‘தட்டுக்கெட்ட’ மனுஷன் எழுந்திருக்கவில்லை. உடனே அலங்காரி ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்... சீமைச்சாமி முகத்தில் விழுந்த நீர் மூக்குக்குள் போக, அலறியடித்து எழுந்தார். அலங்காரி, அவர் முதுகைப் பிடித்து, வெளிக்கதவின் திசை நோக்கித் தள்ளினாள்... அவரும், அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தால், அவள் ஆணையை நிறை வேற்ற நேரமாகும் என்று நினைத்தவர் போல் வேட்டியைக் கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டே ஓடினார்... கதவைத் திறக்கும்போது மட்டும் வேட்டிச் சுருக்கத்தை இடது கையில் பிடித்துக் கொண்டார்.

     உள்ளே வந்த எலி டாக்டர், மகன் துளசிங்கத்தை எதிர்பார்க்க வில்லை. தலைக்கும், கழுத்துக்கும் வித்தியாசம் காணமுடியாத தோற்றம்... வேட்டிக் கரையை, இரண்டு கால்களுக்கும் மத்தியில் நெருங்கோடாய் வைத்துக் கொள்வதில் சமர்த்தர். தன்னைத் தானே வாரிக் கொள்ளும் தலைமுடி...

     வெளிக்கதவில் இருந்து நூறடி தூரம் நடந்து தார்சாவுக்கு வந்த எலி டாக்டர், சாக்குப் போக்காய் பேசினார்.

     “ஒன்ன எங்கெல்லாம் தேடுறதுடா... உரக்கடைய வேலக்காரப் பயலுவ கிட்ட விட்டுட்டு வந்தா... கடைதான் உருப்படுமா... நீதான் உருப்படுவியா.”

     “ஒம்ம சோலிக் கழுதயப் பார்த்துட்டு சும்மா கிடயும்... கடையை எப்டிப் பாக்கணுமுன்னு எனக்குத் தெரியும்... பெரிசா கடை கொடுத்துட்டவர் மாதிரி பேசுறாரு... புத்தி கெட்ட மனுஷங்க... மகன் புதுசா ஒரு கடை திறக்கானேன்னு ஒரு நெனப்பு கிடையாது. கடைப் பக்கம் போவோமுன்னு ஒரு எண்ணம் வர்ல... அப்பாவாம் அப்பா... பெரிய அப்பா...”

     துளசிங்கம் வேகமாக வெளியேறினான்... எதிரே வந்த கோழியைக் காலால் எத்தியபடியே போனான்... அலங்காரிக்கு மனம் கோணியது. முகம் கோணியது... அந்தச் சமயம் பார்த்து, வந்த கணவனிடம் கோபத்தைக் காட்டினாள்.

     “புத்தி கெட்ட மனுஷா... கதவ ஏன் தாழி மாதிரி திறந்து வச்சுட்டு வாறீரு... நல்லா பூட்டும்...”

     சீமைச்சாமி இன்னும் வேட்டியைக் கட்டாமலே கதவைத் தாழிட்டுவிட்டு, மனைவி இருந்த பக்கம் ஓடிவந்து, ஈரம்பட்ட முகத்தை, இரண்டு தோள்களிலும் வைத்துத் தேய்த்தபடியே எலி டாக்டர் முகத்துக்கு எதிராக நின்று வேஷ்டியைக் கட்டப் போனார்... டாக்டர் கத்தினார்...

     “ஒனக்கு மூளை இருக்காடா... முட்டப்பயலே... ஒதுக்குப்புறமா போயி வேட்டிய கட்டேமுல... புத்திகெட்ட பயல...”

     “இது புத்தி சரியா இருந்தா நான் ஏன் சீரழியுறேன்.”

     “என்ன அலங்காரி... ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது...”

     “என் பேச்சு எப்பவுமே ஒரு மாதிரிதான். யாரு கதவத் தட்டுறது... யோவ் தட்டுக் கெட்ட மனுஷா... கதவத் திறந்துட்டு பூட்டும்... அப்டியே தோட்டத்துக்குப் போயி ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்...”

     “கதவப் பூட்டிட்டு எப்டி வெளில போறது...”

     “என் தலையெழுத்து... எழுதாக்குறைக்கு அழுதா முடியாது... சரி வாரவரு கதவப் பாத்துக்குவாரு... நீரு போயித் தொலையும்...”

     சீமைச்சாமி திறந்துவிட்ட கதவு வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார் காஞ்சான்... எலி டாக்டரைப் பார்த்துத் திடுக்கிட வில்லையானாலும், சங்கடப்பட்டார். எல்லாருக்குமே ‘ரகசியமாய்’ தெரிந்த விஷயங்களை பகிரங்கமாச் சொல்ல முடியுமா என்ன... காஞ்சான் தார்சாவுக்கு வந்து, பெஞ்சில் எலி டாக்டர் பக்கத்தில் உட்கார்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வெளியேற்றுவதில் ஈடுபட்டார்கள்.

     “சிமெண்ட் கடை போடப்போறேன்... அப்பாவக் காணுமேன்னு ஒன் மவன் துளசிங்கம் ஊரு பூராவும் ஒன்னைத் தேடிக்கிட்டு இருக்கான். நீ இங்க வந்து ஜம்முன்னு இருக்கே...”

     “இன்னக்கி வயலுல நடுவைன்னு சொன்னே... வேலையாட்கள மேல் பாக்கதுக்காவ போகாண்டாமா... நீ போகாட்டால் திருட்டுப் பய பிள்ளிய சரியா நடாது... நாத்து தண்ணிலயே முங்கிப் போகும்...”

     “இந்த வயசுக்கு மேல நம்மால வேல பாக்க முடியாது... பயலுவ எதுக்கு இருக்கான். கவனிச்சுக்கு வாங்க...”

     “ஒன்னை கவனிச்சுட்டுத்தான் இருக்காங்க...”

     “தன்னை மெச்சிக்கிட்டாம் தவிட்டுக் கொழுக்கட்டை... ஈயத்தைப் பார்த்து இழிச்சுதாம் பித்தள...”

     அவர்கள் பேசுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அலங்காரி, அவர்களில் அப்போதைக்கு எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை... துளசிங்கம் சொல்ல வேண்டியதச் சூட்சகமாகச் சொல்லிவிட்டான்... எவரைப் பகைத்தாலும் அவனைப் பகைக்கப்படாது... இந்த மனுஷனை அவன் கண்ணுமுன்னால் கடைசில காட்டினால்தான் சித்தி திருந்திட்டாள்னு நினைக் காட்டாலும், திருந்தி வாரான்னு நினைப்பான்...

     அலங்காரி சாமர்த்தியமாகப் பேசினாள்...

     “மச்சான் நம்ம பையன் சிமெண்ட் கடை போடுறாமுல்லா... நீரு பெத்தப்பன்... கற்பூரம் ஏத்தும்போது நிக்காண்டாமா...”

     “நீயும் சொந்தச் சித்திதானே... நீயும் வா...”

     “நான் வரத்தயார்... ஆனால் ஒம்ம பொண்டாட்டி... சரியான தாடகையாச்சே... நான் அங்க வந்தால் ஆடமாட்டாள்? ஒமக்கும் அவளத் தட்டிக் கேட்க துப்பு கிடையாது...”

     எலி டாக்டர் புரிந்து கொண்டார். புறப்பட்டார். இன்னும் அங்கே இருந்தால் பெண்டாட்டியைப் பற்றி என்னவெல்லாமோ பேசுவாள். ‘கடைசில இந்தக் காஞ்சான் பயலவிட நான் கழிவாய் போயிட்டேனே...’

     தெருக்கதவை நோக்கி நடந்த எலி டாக்டர், காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினார், காஞ்சானை சந்தோஷமாகக் கேட்டார்.

     “நீயும் என் மகன் உரக் கடைக்கு வாரதுல சந்தோஷம்...”

     “நான் அதுக்கு வர்ல... ஒன்னை அனுப்பிட்டு கதவைப் பூட்டுறதுக்கு வந்தேன்...”

     எலி டாக்டரை அனுப்பிவிட்டு கதவையும் தாழிட்டு விட்டு, மீண்டும் அலங்காளியிடம் வந்த காஞ்சான் பல்லை இளித்தார்... அலங்காரி, அவரை, ஏற இறங்கப் பார்த்தாள்... “ஏய் காஞ்சான்! அந்த ஆலமரத்தடி விஷயத்துல என்னை என்னமாப் பேசுனே... மறந்துட்டேன்னா நெனச்சே... தாய் பிள்ளையா இருக்க ஒங்களா நானா கெடுக்கேன்? இரு... இரு...”

     வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு ஏற்கனவே முன்னேறிய அனுபவத்தில் ஒவ்வொருவருக்கும் தனக்கு என்று ஒரு வழியமைத்துக் கொள்வார்களே, அதுபோல், அலங்காரியோ தனக்கென்று இருவேறு தனிப்பார்வைகளை வகுத்திருந்தாள்... தலையை லேசாய்ச் சாய்த்து உதடுகளை முத்தமிடப் போவதுபோல் குவித்து, தலை முடியைத் தோள் வழியாக மார்பிலே போட்டுக் கொண்டு கண்களை அகலமாக்கி, இப்போதுதான் புதுசாய்ப் பார்ப்பது போலவும் பார்ப்பாள்... அப்படிப் பார்த்தால் அது படுக்கையறைப் பார்வை என்று பொருள்... இல்லையானால், கழுத்தை முன்னால் நீட்டி கண்களை இடுக்கி, இடுப்பு மேல் கைபோட்டு பார்ப்பாள். இது இளக்காரப் பார்வை...

     அலங்காரி இப்போது இரண்டாவது ரகப் பார்வையில் நின்றபடி, காஞ்சானுக்கு ஆணையிட்டாள்.

     “மொதல்ல... தெருக்கதவ நல்லா திறந்து வச்சுட்டு வாரும்...”

     “ஏன் பிள்ள... புதுப் பேச்சு...”

     “நான் புலி போல நம்பற மனுஷன்... எலிபோல ஆகும்போது... நானும் மாறித்தான் ஆகணும்... சரி... சரி... கதவத் திறவும்... ஒம்ம என் புருஷனோட பெரியப்பா மவன்னுதான் இப்போ பேசுறேன்... ‘அது’ன்னு நினைச்சுப் பேசல. நீரு கதவைத் திறக்கியரா நான் திறக்கட்டுமா... கையை விடும்...”

     “ஒனக்காவ ஆசையோட திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். மெட்ராஸ் போயிருக்கிற இசக்கிப் பயகிட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவ வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்...”

     “என்னை என்ன தாசின்னு நினைச்சிரா... அப்படி நெனச்சா இப்பவே இடத்தைக் காலி பண்ணும்... எங்க அக்கா அதான் ஒம்ம பெண்டாட்டி எப்போ ஒரு காலத்தில் ‘காஞ்சானுக்கு என்னைக் கட்டி வச்சிட்டாங்கன்னு பட்டி தொட்டி பதினாறுக்கும் கேட்கும் படியா தமுக்கடிச்சாள்னு கேள்விப்பட்டனோ, அந்த பரிதாபத்துலதான் ஒம்ம மேல ஆச வச்சது... காசு பணத்த நினைச்சில்ல...”

     “நான் அப்படிச் சொன்னனா... அந்தச் செறுக்கி எனக்கு கொடுத்த சூட்டுக்கு நீதான் மருந்துன்னு எனக்குத் தெரியாதா...”

     “எங்கக்கா சொன்னது சரிதான்னு நினைக்கேன்... நீருதான் ஒம்ம புத்தியக் காட்டிட்டியரே... பேசாம போவும்... எங்க தாயா பிள்ளையா பழகுதியரோ... அங்க போவும்... ஒம்ம ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம்... சரி... சரி... கதவத் திறக்கணும்... கைய விடும்... வண்ணார் செய்தது தண்ணியோடயாம்... இந்த அலங்காரி அன்பும் அப்படித்தான்...”

     “சரி... இப்போ உள்ளே வா... அப்புறம் விவரமாய் பேசலாம்...”

     “மொதல்ல எல்லாத்தையும் விவரமா பேசியாகணும்...”

     “விவரமாத்தான் சொல்லித் தொலையேன்...”

     “பச்சப் பிள்ள புரியாது... அந்த ஆலமரத்தடியில என்ன சொன்னிரு...? அதயும் அந்த திருமலைப் பயல் முன்னால... செம்பட்டையான் குடும்பமும், கரும்பட்டையான் குடும்பமும் தாயாப் பிள்ளியா பழகுற குடும்பங்க... ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாதன்னு... இந்த வாய்தானே சொல்லிச்சு... இப்போ ஏன்... அது இப்டி இளிக்குது...”

     “பயித்தியாரப் பய மகளா இருக்கியே... நான் எதுக்குச் சொன்னேன்னு யோசித்துப் பாத்தியா... ஒனக்கும், எனக்கும் இஸ்க்கு, தொஸ்க்கு இருக்குமுன்னு ஊரில ஒரு சந்தேகம்... அப்டில்லாம் கிடையாது என்கிறத சொல்லாமச் சொல்லுறது மாதிரிதான் நான் அப்டிச் பேசுனேன்... வேற அர்த்தத்தில இல்ல...”

     “ஒமக்கென்ன... கொஞ்சுறதுக்கு ஒரு இடம்... குலைக்கிறதுக்கு ஒரு இடம்... கடைசியில எனக்குத்தான் யாருமில்ல...”

     “ஒன்மேல ஒரு தூசிபட பொறுப்பேனா...”

     “நிசந்தான்... தூசிபட சம்மதிக்க மாட்டியரு... ஏன்னா... அந்தச் சாக்குல தூசியத் தட்டுறது மாதிரி என்னத் தட்டலாம் பாரும்... கடைசில ஒம்மால நான்தான் அவமானப்பட்டேன்...”

     “விஷயம் சொல்லு... கண்ணு... என் ராசாத்தி இல்ல...”

     “பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... ஒமக்கென்ன, அந்த ஆலமரத்தடில அப்டிப் பேசிப்பிட்டீரு. என்னை நீரே அப்பிடிப் பேசிட்டாதாலே யாரு வேணுமுன்னாலும் எப்படி வேணுமுன்னாலும் ஏசலாமுன்னு ஆயிப் போச்சு... நான் பழனிச்சாமி அண்ணாச்சி... சீ... எவன் அண்ணாச்சி... பழனிச்சாமி வீட்டு வழியா சிவனேன்னு போய்க்கிட்டு இருக்கேன்... பேச்சியம்மா புருஷன், வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சு ஏதோ கேட்கப் போனான்... அதுக்குள்ள அவன் பெண்டாட்டி பேச்சி என்னை அவன்கூட போனவள், இவன்கூட போனவள், அவளே... இவளேன்னு கண்டபடி திட்டிட்டா...”

     “செறுக்கிய கொண்டச் சிரைக்கணும்... இவள் மட்டும் கல்யாணம் ஆவுறதுக்கு முன்னால யோக்கியமா? நீ அவள் நாக்கைப் பிடுங்குறது மாதிரி கேட்டிருக்கணும்...”

     “நான் அப்டிக் கேட்டிருந்தால் அங்கேயே என்னை ஒரே நொறுக்காய் நொறுக்கியிருப்பாங்க... நீரும் அங்க வந்து நான்தான் ரெண்டு குடும்பத்தையும் துண்டு போடுறதாச் சொல்லியிருப்பியரு... ஒம்மால நான் பட்ட அவமானம் போதுமுய்யா...”

     “என் ரத்தம் எப்டிக் கொதிக்குது தெரியுமா... பழனிச்சாமி மச்சான் தட்டிக் கேட்கலியா...”

     “சரியான ஆள். கிள்ளி மனுஷன்... பேச்சியம்மாவையும் கிள்ளி விட்டு, என்னையும் தாலாட்டுற மாதிரிப் பேசுறாரு... கடைசில ஒம்மப் பார்த்து அறைக்குள்ளதான் ஆசையோட வெட்கப்பட்டேன்னா... இப்போ அம்பலத்துலயும் வெட்கப்பட வேண்டியதாப் போச்சு... என்ன பேச்சை பேசிட்டா...”

     “இருக்கட்டும்... இருக்கட்டும்... அவள ஒன் காலுல விழ வைக்கேன்...”

     “அந்தக் குடும்பமே என் காலுல விழத்தான் போவுது... ஆனால் ஒம்மால இல்ல... நம்ம குலதெய்வம் சுடலமாட சாமியால...”

     “என்ன பிள்ள உளறுற...”

     “அது கிடக்கட்டும்... நம்ம சுடலைக்கு எப்போ கொடை கொடுக்கோம்...”

     “தெரியாதது மாதிரி கேட்கிறீயே... ஆடிக் கடைசி வெள்ளியில...”

     “அத மொதல் வெள்ளியில கொடுத்தா என்ன...”

     “அது முடியாதே... கரும்பட்டையான் குலதெய்வம் காளியம்மனுக்கு முதல் வெள்ளியில வழக்கமாக கொடுக்காங்க...”

     “அவங்க வழக்கம் கிடக்கட்டும்... அந்த வழக்கத்த ஒடச்சி... நம்ம மாடனுக்கு ஏன் முதல் வெள்ளியில கொடுக்கப்படாது... ஏதும் சட்டமா... தர்மமா...”

     “கொடுக்கக்கூடாதுன்னு இல்ல... பரம்பர பரம்பரையாய் வருகிற வழக்கம்...”

     “அப்போ... குடுமி வச்சாங்க... இப்போ இருக்கா... அப்போ நாட்டாண்மைன்னு தனி அந்தஸ்து தனிப்பங்கு இருந்துது... இப்போ இருக்கா... பரம்பரை பரம்பரையாய் ஒரு அடிமைப் பழக்கத்த மாத்தப் படாதுன்னு சட்டமா...”

     “தாயா பிள்ளையா பழகிட்டோம்...”

     “நாமதான் தாயா பழகுறோம்... அவங்க ஒண்ணும் பிள்ளையா பழகல... அப்படி நினைச்சா என்னை இப்டி பேசியிருப்பாளா...”

     “ஒன் கோபமும் நியாயமும் புரியது... அதோட காளியம்மான் தாய். சுடலை அவளோட பிள்ளை... அம்மாவுக்கு விசேஷம் முதல்ல... நடக்கதுதானே முறை...”

     “பிள்ளை தலையெடுத்தால் தாய் ஒதுங்கிக்கணும்... இதுவரைக்கும் பையத்தியாரங்களாய் இருந்த செம்பட்டையான் கூட்டம் ஒதுங்கணும்...”

     “சரி அவங்ககிட்டே பேசிப் பார்ப்போம்... இப்போ உள்ளே வா...”

     அலங்காரி, இப்போது முதலாவது பார்வையை வீசினாள். தலை முடியை பின்னால் தோள்வழியாய் போட்டு, கண்களை அகலப்படுத்தி, வாயைக் குவித்து, காஞ்சான் தோளிலே செல்லமாக கைபோட்டு, அவர் காதைப் பிடித்துத் திருகியபடியே உபதேசித்தாள்,

     “இந்த ஊர்ல அவங்க குடும்பந்தே உசத்தின்னு அந்த கரும் பட்டையான் பயலுவளுக்கு ஒரு நெனப்பு... வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல கூட பழனிச்சாமி தான் தலைவருன்னு இப்பவே பேசுறாங்க... நாம் நம்ம துளசிங்கத்தையும் யோசிச்சுப் பாருங்கன்னு சொல்றதுக்குக்கூட வக்கில்லாம இருக்கோம்... ஊர்ல குளத்து மீன் பங்காகட்டும், வழக்கு வம்பு விவகாரமாகட்டும், கரும்பட்டையான் குடும்பம்தான் முன்னால நிக்குது... அதுவும் நெஞ்ச நிமிர்த்தி நிகருல்லன்னு நெனப்புல... இதுக்குல்லாம் காரணம் அவங்க குலதெய்வத்துக்கு முதல்ல அம்மன் கொடை கொடுக்கிறதாலதான் நாமே நம்ம தெய்வத்தை பின்னால நினைக்கதாலதான் இப்டிக் கிடக்கோம்... இந்த வழக்கத்தை மாத்துனாத்தான் அவங்க திமிறு அடங்கும்... ‘காஞ்சான் பயல நீ வச்சுக்கிட்டு இருக்கது எனக்குத் தெரியாதாடி’ன்னு பேச்சி என்னப் பார்த்து ஒரு பேச்சுப் பேசிட்டாள்... நீரு பயலாம்... அதுவும் காஞ்சான் பயலாம்... சுப்பிரமணியன்னு நெசப் பேரச் சொல்லுறது? பயலாம்... காஞ்சான் பயலாம்...”

     “நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குது... அந்தப் பயலுவளும் நம்மள தெம்மாடின்னுதான் நெனக்காங்க... இல்லாட்டா இந்தக் குடும்பத்துக்கே பெரிய மனுஷனான என்னை அப்படி பேசியிருக்கமாட்டாள்... சரி... இப்போ என்ன செய்யனுமுன்னு சொல்லுதே...”

     “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு என் புருஷன் கேணையன் கேள்வி கேட்டது மாதிரி இருக்கு... இந்த ஆடி மாத முதல் வெள்ளில நம்ம மாடனுக்கு கொடை கொடுக்கணும்... என்ன சொல்லுதீரு...”

     “பரம்பர பழக்கத்தை மாத்தப்படாதுன்னு கரும்பட்டையான் பயலுவ தகராறுக்கு வந்தால்...”

     “இதோ என் கையில பத்து வளையல் கிடக்குது... நம்ம குடும்பத்து பொம்பிளய கிட்ட போனால் நூறு வளையல் சேரும்... செம்பட்டையான் ஒவ்வொருத்தனும் இதைப் போட்டுக்கங்க... வேட்டியைத் தூக்கி முந்தானையாப் போட்டுக்கங்க...”

     “சரிப்பா... அவங்க அம்மனுக்கு முதல் வெள்ளில கொடை கொடுத்தாலும் நம்ம மாடனுக்கும் முதல் வெள்ளிய கொடை... நீ உள்ளே வா...”

     “சவடால் பேச்சில இருக்கப்படாது... இது நீரு மட்டும் செய்யுற காரியமில்ல... ஆடி பிறக்க இன்னும் பதினைந்து நாள்தான் இருக்குது... இப்பவே போய் நம்ம குடும்பத்து ஆட்கள முடிச்சுட்டு வாரும்... அப்படி முடிச்சிட்டியரு... எலி டாக்டர, கிட்டவே சேக்கமாட்டேன்... இல்லாட்டா வேற மாதிரி... சரி புறப்படும்... இந்தக் கிணத்துத் தண்ணி இங்கதான் இருக்கும்...”

     அலங்காரி காஞ்சானின் கையைப் பிடித்து இழுத்து, கதவருகே கொண்டு வந்து, கதவைத் திறந்தாள். தெருவுக்கு வந்த காஞ்சான் ஏமாற்றத்தை ஆவேசமாக மாற்றிக் கொண்டு நடை போட்டார்.