உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 ‘குளத்தடி’ வயல், வசதியுள்ள குடும்பத்தின் மூத்த குழந்தை மாதிரி; குளத்தின் பெரிய வாய்க்காலில் உருண்டோடும் நீரைக் கிளை வாய்க்கால் மூலம் உள்வாங்கி செழித்துக் கொழித்த நிலம். அந்த குளத்தின் முக்கிய கால்வாயின் தண்ணிர் முதலில் இந்த வயலில் பாய்ந்தாக வேண்டிய இடத்தில் உள்ள இடம். தங்க விதைகளை விதைத்ததுபோல் நெற்பயிர்கள் கதிர் சூல்களோடு பொன்மயமாய் மின்னி, தள்ளாடித் தள்ளாடி ஆடின. அந்த கர்ப்பிணிப் பெண்களுக்குத் தென்னை மரங்கள் காவல் காத்தன. ஆமணக்குச் செடிகள் சாமரம் வீசின. வயல் ஓரமாய் உள்ள கிணற்றில் பம்ப் செட்டில் இருந்து தண்ணிர் பாளம் பாளமாய்ப் பாய்ந்தது, ஒளி வெள்ளம் போன்ற முழுவீச்சு குட்டி அருவி ஒன்று கொட்டிக் கொட்டிக் கமலைக் கிடங்கைக் கடலாக்கிக் கொண்டிருந்தது. சேலை, பாவாடைகளைத் துவைத்து முடித்துச் சரல் மேட்டில் உலர்த்திவிட்டு, முகமெங்கும் மஞ்சளும், உடலெங்கும் சோப்புமாய் நின்ற கோலவடிவு, பின்னலை அவிழ்த்துப் பின்புறமாய்க் கையைக் கொண்டு போய்த் தலைமுடியை தட்டிவிட்டு, தகரக்குழாய் வழியாகப் பாய்ந்த தண்ணிருக்குள் தலையைக் கொடுத்தாள். அப்படியே மல்லாந்து கிணத்துச் சுவரில் சாய்ந்தபடி கால்களை நீட்டி, கைகளைப் பரப்பி மேலே இருந்து கொட்டிய நீரைச் சிணுங்கிச் சிணுங்கி அதைக் கடிப்பது போல் கடித்து, வாய்க்குள் வந்த நீரைச் செல்லஞ் செல்லமாய்க் கொப்பளித்து, கடலலை போல், வேக வேகமாய்ப் பாய்ந்த நீர், தன் மேனியில் பட்டு, பூப்பூவாய்ச் சிதறுவதை ரசித்தபடியே குளித்துக் கொண்டிருந்தபோது... கோலவடிவு, ஆள் அரவம் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினாள். அந்த அச்சத்தைக் காட்டுவதுபோல் ஊசியாய் ஒன்றான உதடுகள், சிவப்புச் சிப்பியாய் மலர்ந்தன. அலங்காரி, தோளில் புடவைகளை முதுகுப் பக்கமும், மார்புப் பக்கமும் தொங்கப்போட்டு வலது கையில் கலர் கலராக ஜாக்கெட்டுக்களையும், வெள்ளைப் பாவாடைகளையும், ஈரஞ் சொட்டச் சொட்ட இடுப்போடு சேர்த்து அணைத்தபடி, கோலவடிவின் மேல் ஒரு ஈரப் பார்வையை வீசியபடி கேட்டாள். “ஒன்ன மாதிரி பெரிய இடத்துப் பொண்ணுவ இப்டிப் பட்டப் பகலுல பப்ளிக்கா குளிச்சா நல்லதாம்மா...” “போங்கத்த... பொல்லாத பெரிய இடம்... பெரிய இடமுன்னு நம்மள நாமே சின்ன இடத்துல பூட்டிக்கது தப்பு...” “அப்போ அத்தைய மாதிரி குளத்துல வந்து குளிக்கது...” “குற்றாலத்து பெரிய அருவில குளிச்சாச்சு... ஐந்தருவில ஆடியாச்சு. நம்ம குளத்துல நீச்சல் அடிச்சாச்சு. ஆனால் எங்க பம்பு செட்டு தண்ணில தலையைக் கொடுக்கிற சுகம் வேற எதுலயும் வர்ல அத்தே... நீங்களும் ஒரு தடவ இதுல குளிச்சுப் பார்த்தா தெரியும்...” “எல்லா வயலுலயும் குளத்துத் தண்ணி பாயுது... அதனால பம்ப் செட்டுக்கு வேலயில்ல. ஒங்க கிணத்துல அதுவும் குளத்தடிக் கிணத்துல இப்டி பம்ப்செட்ட போட்டு தண்ணிய கொட்ட வச்சால் பார்க்கவங்க என்ன நெனப்பாங்க...” “அது அவங்க கண்ணோட கோளாறு...” “ஒங்க அண்ணாச்சி திருமலை பார்த்தாமுன்னால்...” “எங்கண்ணாச்சி கோபம் வச்சிருக்கிற மனசுல குணத்தையும் வச்சிருக்கவன்... அவன்தான் அப்பாவுக்குத் தெரியாம பம்ப் செட் சாவியைக் கொடுத்தான்...” “ஒன்பாடு லக்கிதான்...” கோலவடிவு குளித்து முடித்துவிட்டு, கீழே தொங்கிய முந்தானைச் சேலையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு, அதை வைத்தே தலையைத் தேய்த்துவிட்டு பம்ப் செட்டு அறைக்குள் போனாள். கால்மணி நேரம் கழித்து, மாம்பழ டிசைன் போட்ட புடவையோடும், மஞ்சள் கலர் ஜாக்கெட்டோடும் வெளி வந்தாள். “ஒங்கள ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா அத்த...” “அப்படில்லாம் இல்ல... இந்த அழகுக் கோலத்த கண்ணுல பார்க்கதுக்கு எவ்வளவு நேரமுன்னாலும் கால நிறுத்தி வைக்கலாம்.” “நல்லாத்தான் பேசுறிய...” “ஆமா... ஒன் சேலையில ஈரம் தெரியல...” “எப்டித் தெரியும்... வண்ணான் வெளுத்த புடவை... எனக்கு ஈரப் புடவையோட ஊரு வழியா நடக்கதுக்கு ஒரு மாதிரி இருக்கும்... துணி அப்படியே உடம்பு முழுசும் ஒட்டி சீ... அதனாலதான் குளிக்க வரும்போதெல்லாம் கூடவே ஒரு சேலயக் கொண்டு வந்துடுறது...” கோலவடிவு, குளிக்கும்போது உடுத்த சேலையை, ரெண்டு தப்புத் தப்பிவிட்டு அதை சால் மேட்டில், ‘காயப்’ போட்டுவிட்டு, அதே மேட்டில் காய்ந்து கொண்டிருந்த துணிமணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து, அடுக்கிக் கொண்டிருந்தபோது, அலங்காரி அத்தை அங்கேயே, பூடகமாய்க் கேட்டாள். “மேலத் தெருவுல காத்துக் கருப்பன் குடும்பத்தச் சேர்ந்த அக்கினி ராசாவப்பத்தி நீ என்ன நெனக்கே...” “ராமையா மாமா மகன்தானே... நல்லவனாச்சே... தானுண்டு... தன் வயலுண்டுன்னு இருக்கிறவன்... வம்பு தும்பு கிடையாதவன்னு அப்பா சொல்லுவார்... எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதாம்...” “ஓங்கப்பா சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்... பரவாயில்ல... ஒனக்குக் பிடிச்சவனே புருஷனா அமையுறதுல எனக்கு சந்தோஷம்...” “என்ன அத்த சொல்லுதிய...” “ஒன்னை அக்கினி ராசாவுக்கு கட்டி வைக்கறதா... ஒரு பேச்சு... அடிபடுது... அவங்களே ஒன்னைத் தரச் சொல்லி கேட்டாங்களாம்...” “அய்யய்யோ... எங்கப்பா சம்மதிக்க மாட்டாரு... அவரு சம்மதிச்சாலும், நான் சம்மதிக்க மாட்டேன்...” “என்ன கோலம்... அலங்கோலமாய் பேசுற... நீதான் அவனை நல்லவன்னு சொன்னே... கெட்ட பழக்கம் இல்லாதவன்னு சொன்னே...” “நல்லவங்களா இருக்கிறவங்களை எல்லாம் ஒருத்தி விரும்பணுமுன்னு இல்ல. கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கதுல சந்தோஷந்தான்... ஆனால் அதுவே நல்ல பழக்கமா ஆயிடாது...” “அப்போ நல்ல பழக்கமுன்னா எதுதான்...” “நாலுபேர் கிட்ட கலகலப்பா பேசணும்... அதுவோ வெத்துப் பேச்சாவப்படாது... சிரிக்கச் சிரிக்கப் பேசணும்... அதேசமயம் சிரிப்பாய் சிரிக்கும்படியாய் உளறப்படாது... கிண்டலா பேசணும்... அதுவே இளக்காரமா ஆயிடப்படாது... நாலு நாடு சுத்தியிருக்கணும்... அதேசமயம் நம்ம ஊர மறக்கவும் படாது... வம்புச் சண்டைக்குப் போகாத சாதுவா இருக்கணும்... அதேசமயம் வந்த சண்டைக்கும் பயந்து போகாத வீரம் இருக்கணும்... மினுக்கி மினுக்கி உடுக்கவும் படாது... அதேசமயம் உடம்புல ஒண்ணுமே இல்லாதது மாதிரி இந்த அக்னி ராசா போல வேட்டிய தார்ப்பாச்சு காய்ப்பு பிடிச்ச முட்டுக் காலுகள காட்டப்படாது... நல்லவனா இருக்கணும்... ஆனால் அப்பாவியாய் இருக்கப்படாது.” “எம்மாடி, என்னமா பேசுறே... நான் ஒன்ன ஊமைன்னு நெனச்சேன்... ஒன் நெஞ்சில இத்தனை சங்கதியளும் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாது... நீ சொல்ற தகுதியெல்லாம் எங்க மச்சான் மகன் துளசிங்கத்துட்டதான் இருக்குது...” “நான் யாரையும் குறிப்பாச் சொல்லல. ஒருத்தரைப் பார்க்கும் போது அப்படிப் பார்த்தவங்க மனசுல பயத்தையும் தரப்படாது... பாவமா இருக்கேன்னு பாக்கவங்க நினைக்கறது மாதிரியும் இருக்கப்படாது... அக்னி ராசாவப் பார்க்கும்போது பாவமாத்தான் தெரியும்...” “எங்க துளசிங்கத்தைப் பாக்க பயம் வருமோ...” “சீ... அப்டில்லாம் இல்ல... எத்த... இந்த கல்யாணப் பேச்சப் பற்றி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க... எனக்குப் பயமா இருக்கு... நல்லவன் என்கிற ஒரே காரணத்துக்காவ அப்பா அவனை என் தலையில கட்டப்படாது...” “ஒன் நிலம எனக்குப் புரியதும்மா... பொண்டாட்டிகிட்ட ஒருத்தர் ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கப்படாது... போக்கிரியா இருக்கணும்... போக்கிரின்னு அத்தை எந்த அர்த்தத்துல சொல்லுதேன்னு புரியுதா... அடடே... வெட்கத்தப் பாரு... நீ புத்திசாலி... நான்தான் முட்டாள்... ஏமாந்துட்டேன் ஒரேயடியாய்...” “யார்கிட்டே...” “வேறு யார் கிட்டே... என் புருஷன் கிட்டதான்... வெட்டாம்பட்டில விளையாட்டுத்தனமா திரிஞ்சு கடைசில... வினையாயிட்டேன்... கட்டிக்க வந்த வெளியூர் பயலுகள உள்ளூர் பயலுவ கலச்சி விட்டுட்டாங்க... கடைசில எங்கம்மா, ‘இவள் கல்யாணமாவாமலே கிழவியாய் ஆயிடுவா போலிருக்கே. குருடோ, செவிடோ. நொண்டியோ, முடமோ எவனயாவது ஒருத்தன இழுத்துட்டு ஓடிப்போனாக்கூட சந்தோஷப்படுவே’ன்னு என் காதுபடவே இன்னொரு கிழவிகிட்டச் சொன்னாள். அந்தச் சமயம் பார்த்து இந்த ஆணுல அழகு மன்னன் அர்ச்சுன ராசதுரை... அதான் என் வீட்டுப் பேக்கன் கத்தரிக்காய் விற்க வந்தாரு... ஒனக்கு அக்னி ராசா எப்டித் தெரியுதோ அப்டித்தான் இந்த சீமையிலேயே இல்லாத சாமி... எனக்கு பாவமாகத் தெரிஞ்சது... சும்மா சொல்லப்படாது... என்னை சைக்கிள்ல தூக்கிட்டு வந்த அளவுக்கு நல்ல மனுஷன்தான்... ஆனால் கட்டிக் காக்கத் தெரியாத தெம்மாடி... சரியான டப்பா... பாவம் பாத்து பாவப்பட்டேன்... பாவியாவே ஆயிட்டேன்... எனக்கு வந்த நிலம ஒனக்கு வரப்படாது...” கோலவடிவிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கையில் மடித்து வைத்த துணிகள் கீழே விழுந்து மண்ணை அப்பின. அலங்காரி, அவற்றை வாங்கி மீண்டும் தண்ணிரில் நனைத்துப் பிழிந்தாள். அவற்றைத் தோளில் போட்டபடியே, ஒவ்வொன்றாய் எடுத்து உதறினாள். அப்போது குளத்துக் கரையைப் பார்த்து விட்டாள். “எப்பாவு... துளசிங்கம்... இங்க வாடா...” “நீ வாட... உடனே வா...” “எப்பவுமே அவசரம்... இங்க வாடா...” கோலவடிவுக்கு அத்தையின் குரல் வலுத்தும், துளசிங்கம் குரல் சிறுத்தும் கேட்டன. வேறொரு சமயமாக இருந்தால், “ஆம்புள இங்கே எதுக்கு” என்றிருப்பாள். இப்போது ஒருவேளை அக்னி ராசாவுக்குக் கழுத்தை நீட்ட வேண்டியதிருக்குமோ என்று கழுத்தோடு சேர்த்துத் தலை சுழல நின்ற கோலவடிவு, அப்படியும் பேசவில்லை, இப்படியும் பேசவில்லை. துளசிங்கம் உருண்டோடி வருவதுபோல் ஓடோடி வந்தான். அவளருகே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றபடியே, ஒரு வரியின் கால்புள்ளி, அரைப்புள்ளி மாதிரி மூச்சு வாங்கிப் பேசப் போனான். வழக்கம் போல் அலங்காரி, முந்திப் பேசினாள். “ஒன்ன நான்தான் கடிச்சு தின்னுவனா... இல்ல... இந்தக் கோலவடிவுதான் கடிச்சுத் தின்னுடுவாளா... ஏண்டா இப்டி வரமாட்டேன்னே...” “தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்குது... இப்பவே மெட்ராஸ் போறேன்... சிமெண்ட் கம்பெனி ஏஜெண்ட்களோட கூட்டம் நடக்குது... ஒன்கிட்ட சொல்லாமப் போக முடியுமா... அதுக்கு வரதுக்கு பத்து நாளு ஆகும்... ஒன் வீட்டுக்குப் போனேன்... நீ குளிக்கிற மதகுக்கு வந்தேன்... சித்தியப் பார்க்காமல் போகப் போறேமேன்னு கவலையோட கரையில நடந்தால் ஒன் குரல் கேட்குது... இதோ சிமெண்ட் கடையில சாமி கும்பிட்ட குங்குமம்... சீக்கிரமா... வாங்கு... நேரமில்ல...” “ரெயிலுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே... ஏன் இப்டி பட்டையில போட்ட நண்டு மாதிரி துடிக்கே...?” “ரெயிலுக்கு நேரம் இருந்தாலும் திருமலை இங்க வாரதுக்கு அதிக நேரம் இல்ல. ‘என் வயலுக்குள்ள ஒனக்கென்னடா வேலை... என் தங்கச்சி நிற்கான்னு தானே போனே’ன்னு வம்புக்கு வருவான்...” “ஒன்னை மாதிரி அவனும் முன்கோபி... ஒன்னை மாதிரி அவனும் நல்லவன்... சரி... சரி... குங்குமத்த தா...” “நான் மட்டும் வச்சிக்கிட்டா எப்படி...? அவளுக்கும் கொடு... நீயே அவள் நெற்றில வைடா...” “ஒனக்கு வேற வேல இல்ல... வேற வினயே வேண்டாம்...” “நாலு நாடு சுத்தியும் கடைசில ஒன் சட்டாம்பட்டி புத்தி ஒன்னவிட்டுப் போக மாட்டேங்கே... கொளுந்தியா நெற்றியில குங்குமம் வச்சால் என்ன தப்பு... ஒன்னைவிட வயசுல சின்னவள்... அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்... அவளை வாழ்த்துற மாதிரிதான் உன்னை வைக்கச் சொல்லுதேன்...” துளசிங்கம் கோலவடிவைப் ஏறிட்டுப் பார்த்தான்... அவளோ, தரையில் பெருவிரலை வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தாள். எப்படிப்பட்ட பாட்டாக இருந்தாலும், அது சினிமாப் பாட்டாக வந்துவிட்டால் போதும் என்று நினைக்கும் கவிஞனைப் போல, பிரசுரமாவதாய் இருந்தால் எவ்வளவு மோசமாகவும் எழுதத் தயாராகும் எழுத்தாளியைப் போல, அலங்காரி தான் நடத்த நினைத்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் தன்னைத்தானே பிரமிப்பாய் பார்த்தபடி, பெருமிதமாய் நின்றாள்... இப்போது அவளுக்குக் கோல வடிவு, துளசிங்கம், பேச்சியம்மா, முதலிய ஆட்களைப் பற்றிய எண்ணமே இல்லை. ஒரு மொழியின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அவற்றை மனதுக்குள் சேகரித்து விட்டு மறந்து விடுவோமே, அப்படி ஆண்டவன் எழுதும் தலையெழுத்துப் போல், தானும் தன்னாலேயே அழிக்க முடியாத ஒரு எழுத்தைத் தலையெழுத்துக்கு மேல், தலையாய எழுத்தால் எழுத முடியும் என்ற பெருமிதத்தில் கோலவடிவை உற்றுப் பார்த்தாள்... அன்று ஆலமரத்தடியில் அவள் எதிர்த்துப் பேசியதுபோல், ஒருவேளை இன்றும் எதிர்த்துப் பேசலாம் ஒன்று ஓரளவு பயந்தவளுக்கு, கோலவடிவின் மெளனம் மனதைக் கொடி கட்டிப் பறக்கச் செய்தது... கோலவடிவின் முதுகைப் பிடித்து, துளசிங்கம் பக்கமாகத் தள்ளி விட்டபடியே பேசினாள். “இதுல யோசிக்கதுக்கு என்ன இருக்கு கோலம்...? குளிச்சிட்டு லட்சுமி மாதிரி தெரியுற ஒன் முகத்துல குங்குமம் வச்சால், நீ மகாலட்சுமி மாதிரி தெரிவே... துளசிங்கம் காத்திருக்கான் பாரு... ஆயிரத்தெட்டு வேலைய விட்டுட்டு ஒனக்காவ நிக்கான் பாரு... நீ நிமுத்துனாதான அவன் குங்குமம் வைக்க முடியும்... காலங்காத்தால எதை வேணுமுன்னாலும் வேண்டாமுன்னு சொல்லலாம்... குங்குமத்த அப்டித் தட்டலாமா... சும்மாத்தான் வைக்கப்போறான்... தலய நிமுத்து கோலம்...” கோலவடிவு கோடு போட்டுக் கொண்டிருந்த பெருவிரல் சுழற்சியை நிறுத்தாமல், மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தாள்... ‘குங்குமம் வைக்கிறது நல்லதுதான்... ஆனால் இவர்... இவரு எப்டி வைக்கலாம்... எப்டி என்னைத் தொடவிடலாம்... விடப்படாது... கூடவே கூடாது... பாவம் தப்பா நெனப்பாரோ... தப்பா நெனப்பாரேன்னு தப்பு செய்ய முடியுமா...? வேணுமுன்னா அவரு கைபடாமல் வைக்க முடியுமுன்னா வைக்கட்டும்... அதெப்டி முடியும்... இதை அத்தை சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கே... சி நேருக்கு நேரா... அவரு ஒன்னும் வைக்கப்படாதுன்னு எப்டிச் சொல்றதாம்... தயவு தாட்சண்யமுன்னு ஒன்று இருக்குதுல்லா... அவரு குங்குமம் வைக்கிறதால வேற அர்த்தம் எப்டி வரும்... வரவே வராது... வரவிடவும் படாது... அதுக்காக ஒரு ஆம்புள அதுவும் வாலிபன் ஒரு பொம்புளைக்கு அதுவும் சின்னஞ்சிறுசுக்கு... சீ...’ துளசிங்கத்திற்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது... சற்று அவசரம் வந்தது... அந்த இரண்டும் கலக்கப் பேசினான்... “எனக்கு நேரமாவுது சித்தி... நீயே அவளுக்கு வச்சிவிடு... நான் வாறேன் சித்தி...” கோலவடிவு அவனை அவசர அவசரமாக ஏறிட்டுப் பார்த்தாள்... பார்த்த விழிகளை முகத்தைத் தாவிப் பார்த்தபடியே நின்றன.. அலங்காரி அந்தச் சூழ்நிலையைச் சொல்லிக் காட்டினாள். “ஒனக்கு மூளையே கிடையாதுடா... ஒரு பொண்ணோட கண்ணசைவில இருந்தே அவளோட மனசைப் புரிஞ்சுக்கத் தெரியல... அதுவும் சரிதான். முன்னப்பின்ன எந்த பெண்ணோடவும் பழகியிருந்தால் தானே ஒனக்குத் தெரியும்... நீதான் ஏகப் பொண்ணு விரதனாச்சே... சரிப்பா... நம்ம கோலவடிவு என்கிற நெனப்புல... அவள் நல்லா இருக்கணும் என்கிற எண்ணத்துல வைடா... குங்குமத்த வைடா கூறுகெட்ட குப்பா...” இடது உள்ளங்கையில் ஆலிலைமேல் இருந்த குங்குமத்தை, ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்து எடுத்து, அவன் கரம் கோலவடிவின் நெற்றியில் போகப் போனபோது அவள் சிரித்துக் கொண்டே குனிந்தாள். சிணுங்கிக் கொண்டே பின்வாங்கினாள். அலங்காரி அவள் முதுகைப் பிடித்து நகர்த்தி, மோவாயைச் சற்று தூக்கி விட்டுவிட்டுக் கையை எடுத்தாள். அந்த முகம் உயராமலும், தாழாமலும் இருந்ததில் அவன் சந்தோஷப்பட்டபோது... துளசிங்கம் வலது கையில் நான்கு விரல்களைக் கோலவடிவின் தலையில் பரப்பிக் கொண்டு பெருவிரலால், அவள் நெற்றியை அழுத்தினான்... அந்தக் குங்குமப் பதிவை வட்டமாய்ப் பிரசுரிப்பது போல், பெருவிரலை அவள் நெற்றிப் பொட்டில் லேசாக சுழலவிட்டு, கரத்தை எடுத்தான். உடனே அலங்காரி குலவையிட்டாள். எங்கேயோ பார்த்த காகம் எழுந்து பறந்தோடும்படி வாய்க்குள் நாக்கை மணியடிப்பதுபோல் சுற்றிவிட்டு, “இனிமே கோலவடிவுக்கு நல்ல காலம்தான்” என்று சொல்லி லேசாய் நிறுத்திவிட்டு, “கோலம் இனிமேல் யார்கிட்ட வாழ்க்கைப்பட்டாலும் அது நல்லாவே அமையும்” என்றாள் எச்சரிக்கையாக. கோலவடிவு, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள்... கரையில் யாரையும் காணோம்... கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணோம்... அவரு என்ன தொட்டத... ஏய் அவரு எங்கே தொட்டாரு... குங்குமம் வச்சாரு... பூசாரி வைக்கது மாதிரி... அவ்வளவுதான்... சரி போவட்டும்... நல்ல வேள... யாரும் பாக்கல... குங்குமம் வச்சதும் நல்லவேள... யாரும் பாக்காததும் நல்லவேள... கோலவடிவு ஆடாது அசையாது சிரித்து நின்றாள்... மீண்டும் பெருவிரலால் தரை கிழித்து கவிழ்ந்த தலையில் நிமிர முயன்ற கண்களை அரைவட்டம் போடவைத்து, குங்குமம் வைத்தவனை சூட்சமச் சிரிப்போடு பார்த்தாள். அலங்காரி விளக்கினாள். “ஏய் மவனே... துளசிங்கம்... என் மருமகள்... என் ராசாத்திக்கு இந்த குங்குமம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாருடா... ஒரேடியாய் சிமிண்டு உரமுன்னு அலையாதடா... அழக ரசிக்கவும் பழகிக்கடா... என் ராசாத்திக்கு குங்குமம் நெருப்பு நிலா மாதிரி இருக்கதப் பாரு... குங்குமத்துக்கு மத்தில வெத்து இடம் இருந்தா அது விளங்காதுன்னு அர்த்தம்... நம்ம கோலத்துக்கு முழுசா இருக்கு... அதிர்ஷ்டக்காரி... பாருடா... எப்டி இருக்குன்னு...” “நீயே பார்த்துக்கிட்டு இரு... எனக்கு ரயிலுக்கு நேரமாயிட்டு... நான் வாறேன்...” கோலவடிவு தலையை நிமிர்த்தியபோது, துளசிங்கம் கிணற்றைத் தாண்டி போய் வாய்க்கால் பக்கம் போய்விட்டான். அவளுக்குக் கோபம்... போறேன்னு என்கிட்ட சொல்லலியே... சித்தி போறேன்னு சொல்லாம போறேன்னு பொதுப்படையாச் சொன்னதுல இருந்து அவரு எனக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கார்னு அர்த்தம்... அய்யய்யோ நான் என்னெல்லாமோ நினைக்கேனே... ஏதோ முகத்த நிமுத்துனேன்... ஏதோ குங்குமம் வச்சார். அதோட சரி... அதுக்கு மேல... அர்த்தப் படுத்துதல்... அது... தப்பு... தப்பு... அலங்காரிக்கு கொஞ்சம் பயம் வந்தது... கோலவடிவை, ஒரு பக்கமாய் சாய்த்து பிடித்து அணைத்தபடியே கெஞ்சுவதுபோல் கேட்டாள். “வீட்ல குங்குமம் வச்சத சொல்லுவியோ... எப்பா... என் ராசாத்தி எப்படி இருக்காள்...? இப்ப தான் பிறந்த குழந்தை மாதிரி... இந்த ஊரு நாகரீகம் இல்லாதது பாரு... நல்லுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் பாராதது பாரு... அதனால்தான் சொன்னே... சொல்லமாட்டல்லா...” அலங்காரி, அவள் முகத்தை நிமிர்த்தப் போனபோது, கோலவடிவு அவள் பிடியில் இருந்து திமிறி, விலகி, நின்று கொண்டாள்... குங்குமம் அழிஞ்சுடப்படாதே... கலையுறது சகசந்தான்; ஆனால் காலங்காத்தாலயே கலையப்படாதே... பம்ப் செட்டில் தண்ணிர் பீறிட்டுப் பாய்ந்தது... ஸ்விட்சை ஆப் செய்யப் போன கோலவடிவு, சரல் மேட்டில் கிடந்த மூங்கில் கழியை எடுத்து, தூர நின்றபடியே ஸ்விட்சை நிறுத்தினாள்... இல்லையானால், தண்ணிருக்குப் பக்கத்துல போயி, அது நெத்தில தெறிச்சு குங்குமம் கரைஞ்சு... சீ... கரையத்தான் செய்யும்... ஆனால் மத்தில கரைஞ்சு வட்டக்கோடு போட்டது மாதிரி இருக்க அபசகுனமுன்னு அத்த சொல்றாளே... அதுக்காகத்தான் வேற எதுக்காகவும் இல்ல... ஆமா... இல்ல... இல்ல... இல்லவே இல்லை... அலங்காரி, இந்தச் சமயம் பார்த்து, தனது தோளில் கிடந்த புடவையை எடுத்து, உதறினாள்... அதிலிருந்த தண்ணிர் கோலவடிவின் முகத்தல் தெறித்தது... கோலம் ஆடிப்போய்விட்டாள்... குங்குமம் கரைந்திருக்குமோ, அத்தைகிட்ட கேட்போமா? வேண்டாம்... முகத்த நிமுத்துவோம்... அழிஞ்சிருந்தா அத்தயே சொல்லுவாளே... குங்குமம் வைக்கும்போது நாலு விரலால தலையை எப்டி தட்டுனாரு... தட்டலடி தட்டல... ஒனக்கு தட்டுனது மாதிரி தெரிஞ்சுது... அவரு ஒண்ணும் தட்டல... கோலவடிவு அலங்காரிக்கு முன்னால் போய் நின்றாள். முகத்தை நிமிர்த்திக் காட்டினாள். அவளோ தன் பணி அப்போதைக்கு முடிந்து விட்ட திருப்தியில், உதறிய சேலையை வளைத்து இடது கையில் குறுக்காய்ப் போட்டபடி இப்போது பாவாடையை உதறினாள். அத்தையிடமிருந்து துள்ளிக் குதித்த கோலவடிவு கையோடு கண்ணாடி கொண்டு வராததுக்காக வருந்தினாள். பிறகு ஒரு யுக்தி வந்த மகிழ்ச்சியில் கமலைக் கிடக்கில் குனிந்து பார்த்தாள். அதில் தங்கி நின்ற நீரில், அவள் முகம் தெரிந்தது. குங்குமத்தோடு... இடையிடையே வட்ட வட்ட சின்னச் சின்ன கண்ணாடி பதிச்ச புடவ அதை வாங்கணும்... கோணச்சத்திரத்துல கிடைக்காதே... மெட்ராஸ்ல துளசிங்கம் மச்சானை வாங்கி... அடியே கோலம்... ஒனக்கு கொழுப்பு ஜாஸ்திடி... “நாம போவோமா ராசாத்தி... ஒன் மச்சான் வச்ச குங்குமம் ஒனக்கு எப்டி ஜொலிக்குது தெரியுமா... யாரு கிட்டயும் விளையாட்டுப் போல சொல்லிடமாட்டியே... அடி என் மல்லிகப்பூவே... ஒன்னப்பத்தி எனக்குத் தெரியாதா... ஆனாலும் சும்மா கேட்டேன்...” கோலவடிவும், அலங்காரியும் இணைந்து நடந்தார்கள். வாய்க்கால் வரப்பிற்கு வந்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். கோலம் கண்ணில் படர்ந்த முடியை ஒதுக்கினாள். பிறகு பயந்தவள் போல், ஒதுக்கிய கரத்தை உற்றுப் பார்த்தாள். அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தாள் கையில் குங்குமம் தெரியல. முடியை ஒதுக்குற வேகத்துல நல்ல வேள கையி குங்குமத்துக் கிட்ட போகல... ஒருவேளை மேல் பக்கமா உச்சந்தலைக்குப் போய் இருக்குமோ... இருக்காது... இருக்காது... எப்படிப்பட்ட குங்குமம் இது... அய்யய்யோ... அவரு வச்சார்னு சொல்லல... கலப்புல்லாத குங்குமமுன்னு சொல்ல வந்தேன்... அவ்வளவுதான்... அவ்வளவேதான்... இருவரும் கரையில் ஏறினார்கள். காற்றில், கோலவடிவின் தலைமுடி, சரியாக நெற்றியில், அந்தக் குங்குமப் பொட்டின் மேல் விழுந்தது... முடியைத் தொட்டால் குங்குமம் போயிடும்... தொடாட்டா ஒருவேள முடியே கலச்சிடப்படாதே... அத்தை கிட்டே சொல்லி அந்த முடிய பதமா எடுக்கச் சொல்லுவோமா... சீ... தப்பு... தப்பில்ல... சரிதான்... ஆனால் அத்தை தப்பா நினைக்கப்படாது... குங்குமத்துக்கே இப்படி குதிக்காளேன்னு நெனச்சிடப்படாது... கோலவடிவு, குங்குமமாய்ச் சிரித்தபடி, அலங்காரிக்கு இணையாக நடந்தவள், சற்றே பின்னடைந்தாள்; தலையை அங்குமிங்குமாய் ஆட்டி, நெற்றியில் பட்ட முடியை தலைக்குக் கொண்டு போக சர்க்கஸ் செய்து பார்த்தாள்... இதனால், மேலும் ஒரு கற்றைத் தலைமுடி நெற்றியில் வந்து விழுந்ததுதான் மிச்சம்... இணையாக நடந்து கோலவடிவு, எங்கே என்பது போல அலங்காரி திரும்பிப் பார்த்தாள்... அவளையும் பார்த்தாள்... அவளுக்குப் பின்னால் அக்னி ராசாவின் தந்தை ராமையாவையும் பார்த்தாள்... பின்னர் நின்ற இடத்தில் நின்றபடியே பேசினாள். “கோலம்... அதோ ஒன்னக் கட்டிக்கப் போறதா பேச்சு அடிபடுற அக்கினி ராசாவோட அப்பா ராமையா... வாராரு... நான் நைஸாாப் பேசி... ஊசாட்டம் பாக்கேன்... நீ வீட்டுக்குப் போ...” “அத்த கல்யாணம் நடக்கப்படாது...” “அத்தை எதுக்கு இருக்கேன்... நீ தைரியமாய் வீட்டுக்குப் போ...” கோலவடிவு முன்னேறினாள். காலில் முள்பட்டிருப்பது போல், ஒரு காலைத் தூக்க முடியாமல் தூக்கி அதை இடுப்போடு சேர்த்து இணைத்தபடியே நின்ற அலங்காரி, ராமையா வந்ததும் காலைக் கிழே போட்டாள். கூனையைத் தலையில் சுமந்து, அகத்திக் கீரையைக் கையில் பிடித்தபடியே வந்த ராமையாவிடம் பேச்சுக் கொடுத்தாள். இந்த ராமையா மச்சான் யாருடனும் பேச மாட்டார். பெண்ணென்றால் காத தூரம் ஒடுவார். ஆனால் அவருக்கும் இந்த அலங்காரியிடம் ஒரு சின்னச் சபலம். “வயலுக்கு போயிட்டா வாரீரு மச்சான்...” “பாத்தா எப்டிப் பிள்ள தெரியுது...” “மைனர் மாதிரி தெரியுது... போவட்டும்... என் மகன் அக்கினி ராசாவுக்கு எப்போ கல்யாணத்த வைக்கப் போறிரு...” “இந்த ஆவணில முடிச்சுடணும்... ஏதாவது துப்பு இருந்தா சொல்லு...” “இடுப்புல புள்ளய வச்சுட்டு எங்கெல்லாமோ தேடுனாளாம்... பழனிச்சாமி அண்ணாச்சி மகள் கோலவடிவு எதுக்கு இருக்காள்...?” “ஆமாம். அதுவும் நல்ல யோசனைதான்... ஆனால் அவள் பத்து படிச்சியிருக்காள்... இந்தப் பயமவனுக்கு கையெழுத்துப் போடவே வராது.” “வாராண்டாம்... எதுக்கு வரணும்... இந்தக் காலத்துல பொம்புள எண்ணிக்க கூடிப்போச்சு... அதனால காலேஜ் படிச்ச பொண்ணு கூட கார் டிரைவர கட்டுறாள்... சாண் பிள்ள ஆனாலும்... ஆண்பிள்ள ஆண்பிள்ளதான்... ஒங்க குடும்பம் பெரிய குடும்பம்... கோலவடிவுதான் அதக் கட்டிக் காப்பாத்த முடியும்...” “இந்த நெனப்பு எனக்கு வராமப் போயிட்டு பாரு... இனிமேல் என் மகன் அக்னிராசாதான் மாப்பிள்ள... கோலவடிவுதான் பொண்ணு...” அலங்காரி அதை ஆமோதிப்பவள் போல் இப்போதும் குலவையிட்டாள் - செத்த வீட்டில் சங்கு ஊதுவது மாதிரி... |