8

     சட்டாம்பட்டியின் முகப்பில் உள்ள முருகன் கோவில், ஊருக்கு வருகிறவர்களும், போகிறவர்களும் இந்தக் கோவிலைப் பார்க்காமல் போக முடியாது. அவ்வளவு கம்பீரமான கோவில். கோபுரக் கோவிலாக இல்லையென்றாலும், அழகு, கம்பீரம், வீரம், நளினம் கொண்ட கலவையில் தோய்ந்தெடுத்தது போன்ற முருகன்சிலை. கையில் தண்டத்தோடு தனித்திருக்கும் முருகன், தனிச்சிலை. அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலமாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கோவிலுக்கு எல்லோரும் வருவார்கள் என்றாலும், இதன் பராமரிப்பு சட்டாம்பட்டி சைவப் பிள்ளைகளின் பொறுப்பில்தான் உள்ளது. சில மாதங்களாக கோவிலை ஊரே எடுத்துக் கொள்ள வேண்டும் - என்று பேச்சு. அப்போதானே கோயில் நிலத்த ஊர்ப் பெரிய மனிதர்களும் அமுக்கலாம். பெரிய மனிதர்கள் சூட்சகமாகச் சொன்னதை, சின்ன மனிதர்கள் இப்போது ஊரெங்கும் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

     ரஞ்சிதம் கோவிலுக்குள் மயில் சிலைக்கு அப்பால் உள்ள கல் தூணில் சாய்ந்தபடியே அந்த ஆண்டிச் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு தட்டு. அதே பீடித்தட்டு. ஆனால் இப்போது பீடிகளோ, இலைகளோ இல்லை. முல்லைப்பூ மாலை, சுருள் சுருளாய்ப் பாம்புபோல் மடித்து வைக்கப்பட்டிருந்தது. கதம்பம் கண்ணுக்கினிய தோற்றத்துடன் முல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தது. சிவப்பு, வெள்ளை ரோஜாக்கள் தனித்தனியாகத் தட்டிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டின் எஞ்சிய பகுதியில், மருவு மருக்கொழுந்து, எலுமிச்சம் பழங்கள். இன்னொரு சின்னத் தட்டில் ஜரிகைக் காகிதக் கற்பூரத் துண்டுகள், ஊதுபத்திகள். இப்போதைக்கு அந்தப் பூ விற்பனைக்கு அவள் ஒருத்திதான் ஏகபோக முதலாளி. தொழிலாளிகளாய்ப் போராட்டம் துவங்கி, முதலாளியாய் முடிந்து போனவள். திருமலை அவளைப் பார்த்து திடுக்கிட்டுக் கேட்டான்.

     “என்ன ரஞ்சிதம் இப்டி பண்ணிட்டே? பரவாயில்ல. பீடியைவிட பூவைத் தொடுறது நல்லதுதான். ஆனாலும் இப்படித் தனி ஆளாய் போனபிறகும், எப்பவும் குளிச்சது மாதிரியே, ஒன்னால எப்படித்தான் இருக்க முடியுமோ. ஒன்னை மாதிரி ‘சுத்தம்’ எவளாலயும் முடியாது ரஞ்சிதம்”

     “நான் சுத்தமாய் இருக்கதுதான் ஒங்களுக்குப் பெரிசா தெரியது. பீடி ஏசெண்ட் பால்பாண்டி அசுத்தமாய் பேசினது, ஒரு விஷயமாகப் படல... என்ன...”

     “நானும் கேள்விப்பட்டேன் ரஞ்சி...”

     “ரஞ்சிதம்...”

     “கேள்விப்பட்டேன் ரஞ்சிதம். அந்தப் பய ஒன்னை ரொம்ப அவமானமாப் பேசிட்டானாமே. அலங்காரிய வச்சிக்கிட்டு இருக்கவன்... அந்தப் பன்னாடைப் பயல்கிட்டே கெட்ட வார்த்தைய தவிர வேற எதையும் எதிர்பார்க்க முடியாது. சரி... விட்டுத் தள்ளு, கழுதய...”

     “கழுதய விட்டுத் தள்ளிடலாம். ஆனால் ஒரு வயசுக்கு வந்த பெண்ண, அதுவும் ஊருல மைனாரிட்டி சாதில இருக்கிற என்னை வாடி போடின்னும் தாசின்னும் பேசுவதை எப்டி விட முடியும்...”

     “அவன் கிடக்கான்...”

     “ஓங்க தங்கை கோலவடிவ சும்மா கதாநாயகின்னு சொன்னதுக்கே என்ன குதி குதிச்சீங்க. ஆனால் என்னை அவன் அவமானமாய் பேசுவதை சாதாரணமாய் எடுத்துக்கிட்டிங்க. என்ன பிரண்டு நீங்க...?”

     “சரிம்மா, தப்புதான்... என்ன நடந்ததுன்னு சொல்லு...?”

     “சொல்லுதேன்... ஓங்க கிட்டே சொல்லி, எதுவும் ஆகப் போறதுல்லே. யார்கிட்டயாவது ஒருத்தர் கிட்டே சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போலிருக்கு. அதனால சொல்லுதேன். அப்ப ஒங்களுக்கும் துளசிங்கத்துக்கும் ஏற்பட்ட சண்டையில நீங்க என்னை ரயில்வே கேட்டுல வச்சு சினிமாவுக்குக் கூப்புட்டதை காரணமா வச்சு, அதை சொல்லப் போறதாய் மிரட்டி, என்னையறியாமலே எப்டி விவகாரத்தை தீர்த்து வச்சேனோ அப்படி நீங்களும் ஒங்கள அறியாமல்...”

     “சட்டு புட்டுன்னு சொல்லேன்...”

     “பார்த்தீங்களா நான் பேசுறதை நீங்க காது கொடுத்து கேட்கிறதையே எனக்கு உபகாரம் செய்ததாய் நினைக்கீங்க.”

     “தப்புத்தாம்மா... தப்புத்தான். தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்.”

     “நான் பீடி ஏசெண்டுகிட்ட எங்களோட குறையச் சொன்னேன். உடனே அவரு நான், என் சாதிப் புத்தியக் காட்டிட்டதா சொன்னாரு. நான் அவரு, அவரோட வர்க்க புத்திய...”

     “அப்படின்னா...”

     “அது ஒங்களுக்கும் புரியாது... ஆனாலும் சொல்லுதேன். அவரு தன்னை முதலாளியா அனுமானிச்சு, அதுக்குரிய முதலாளியத்துவ புத்தியக் காட்டுறார்னு சொல்லுறதுக்காவ சாதிப் புத்தின்னு அவரு சொன்னதும், நீங்கதான் காட்டுறீங்கன்னு சொன்னேன். அந்த ஆசாமி, ரொம்பக் கெட்டிக்காரன். உடனே அவன் ஒங்க சாதி முழுசயுமே குற்றம் சொல்லுறதாய் விஷயத்தை திரிச்சி விஷமாக்கிட்டான். சக தோழிகளுக்கு சாதிவெறிய வேற ஊட்டிட்டாரு. அவள்களும், ரஞ்சிதம் நீ எது வேணுமுன்னாலும் பேசியிருக்கலாம். ஆனால் எங்க சாதிய மட்டமாப் பேசியிருக்கப்படாதுன்னு என்னையே திட்டிட்டு, என்னை தனியா நிற்க வச்சுட்டு உள்ளே போயிட்டாளுவ. பீடி ஏசெண்டு இன்னுந் திட்டினான்... செருக்கியாம்... தேவடியாளாம்... ஊருல நான் இருக்க முடியாதுன்னு சொன்னான். என்னால தட்டத்தான் மாத்த முடிஞ்சுதே தவிர அநியாயத்த மாத்த முடியல...”

     “இதை கேட்டதுக்கே என் ரத்தம் இப்படிக் கொதிக்குது. ஆனால் நீ எப்படி இப்டி சிரிச்சுக்கிட்டே பேச முடியுது.”

     “அப்படிக் கேளுங்க... இதைவிட மோசமான அர்த்தத்துல பேசப்பபட்ட நாகரிகமான வார்த்தைகள கேட்டுப் பழக்கமுன்னு அர்த்தம். ஒங்களுக்கே தெரியும் நாங்க சைவப் பிள்ள மாருங்க...”

     “அதனாலதான் என் தமிழ் ஓங்க தமிழைவிட வித்தியாசமா இருக்குதுல்லா...?”

     “தமிழ் ஒன்னுதான்... கொச்சையா பேசுறோம். அந்தக் கொச்சையுல ஒங்கது முழுப் பச்சை... எங்கது பாதிப்பச்சை... அதை விடுங்க... எங்காட்கள் டவுனுக்குப் போயிட்டாங்க. பிளஸ்டு படிச்ச என்னை, மெட்ராஸ்ல வேலை பார்க்கிற அண்ணன் கூப்பிட்டான். காலேஜ்ல படிக்க வைக்கப் போறார்னு போனேன். சமையல்காரியாய் வேலை கொடுத்தார். அண்ணி சாடை மாடையாய் திட்டி, நேரடியாதிட்டி, எதிர்வீட்டு கிறுக்கன் ஒருத்தனோட காரணமில்லாம சம்பந்தப்படுத்தி, கடைசில நானே இங்கே வரும்படியாய் செய்துட்டாள். அண்ணா ஒப்புக்கு பணம் அனுப்புறார். உப்புக்காவது உதவுது...”

     “நீயே மெட்ராஸ்ல வேலை தேடி இருக்கலாமே...”

     “பார்வேட் கம்யூனிட்டின்னு பிறந்துட்ட கிராமத்துப் பெண்ணு எனக்கு சலுகை கிடையாதே. பொதுவா மேல் சாதியில் இருக்கிற பிராமணர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுறதாய் கதை வருது. நாவல் வருது. டிவியில் நாடகம் வருது. அவங்கள மாதிரியே நாங்களும் ஒரு காலத்துல ஆச்சாரமாய் இருந்தவங்க. இப்போ மேல்சாதி முத்திரையோட மோசமா கஷ்டப்படுறோம். பிராமணர்களுக்காவது நாடு முழுதும் சொல்லிக்க அவங்க சாதி எல்லா மொழிலயும் மாகாணத்துலயும் இருக்குது. எங்க சாதி அப்படி இல்ல... இந்த பிரச்சினையை எடுத்துச் சொல்லவும் நாதியில்ல...”

     “கடைசில ஒனக்கும் சாதிப் பத்து இருக்கத்தான் செய்யுது...”

     “எதால பாதிக்கப்படுறோமோ. அதுமேல ஒரு சிந்தன வரது இயற்கை. சாதியால பாதிக்கப்படும் போது நான் சாதிக்காரியாய் ஆயிடுறேன். பீடித் தொழிலாளிப் பெண்ணாய் பாதிக்கப்படும்போது, ஒரு தொழிலாளி பெண்ணாய் இல்ல, ஒரு தொழிலாளியாய் மாறிடுறேன். சாதிக்கட்டை விட்டு, சாதியற்ற மனித சாதி கட்டுக்குள்ளே போகிறதுக்கு முயற்சி செய்யுறேன். இதனால்தான் பீடி ஏசெண்ட திட்டுனதுக்கு சம்மதிச்ச தோழிகள் மேல கோபம் வரலை. குட்டாம்பட்டில ‘கண்ணாடிக்காரர்’ பீடி சுத்தும் பெண்களுக்கு சங்கம் வச்சுருக்கது மாதிரி நானும் வைக்கத்தான் போறேன்.”

     “அய்யய்யோ சங்கமா...”

     “என் ஊர்ல. உருப்படாத பயல்க எல்லாம் உதவாக்கரை சினிமாப் பயல்களுக்கு சங்கம் வைக்கும்போது, நான் ஏன் வைக்கப்படாது.”

     “அப்படின்னா நீ பழையபடியும் அங்கே போய் பீடி சுத்தணும்...”

     “நான் தயார். ஆனால் இப்போதைக்கு சாதி மயக்கத்துல இருக்கும் தோழிகள் அந்த மயக்கம் கலைஞ்சதும். அவங்க என்னை கூப்பிட வேண்டியதில்ல. நானே போய்ச் சேருவேன்.”

     “ஒன் கஷ்டத்தை கேட்கிறதுக்கு மனசுக்கு கஷ்டமாய் இருக்கு. நான் உயிரோட இருக்கது வரைக்கும் நீ சிரமப்படக்கூடாது. இந்தா நூறு ரூபாய். ஒன்மேல தான் சதா எனக்கு நெனப்பு ரஞ்சிதம். நீ இல்லாமல் என்னால வாழ முடியாது ரஞ்சி. அட கடவுளே... எப்ப பார்த்தாலும் ஒன் முகந்தான் கண்ணு முன்னால நிக்குது. இந்த ரூபாய் என் அன்பு காணிக்கை. நான் இருக்கிற வரைக்கும் நீ கவலைப்படக்கூடாது... கஷ்டப்படக்கூடாது...”

     “அதாவது நீங்க என்னை ‘வைப்பாட்டியாய்’ வச்சுக்குவீங்க... காலமெல்லாம்...”

     “என்ன ரஞ்சிதம்... நான் ஒன்னை அப்படி நினைச்சுப் பார்க்கவே முடியாது. ஏதோ ஒரு அன்பு... காதலுன்னு வச்சுக்கயேன்... நீ என் ஆயுசுவரைக்கும் துணையாய் இருக்கணுமுன்னு ஏதோ ஒரு ஆசை.”

     “மொதல்ல, ஏதோ என்கிற வார்த்தைய எடுங்க. நான் ஆயுள் வரைக்கும் ஒங்களுக்கு துணையாய் இருக்கத் தயார். நீங்க ரயில்வே கேட்ல கேட்டதை அதனாலதான் பெரிசா எடுத்துக்கலே. ஒங்களை நானும் விரும்புறேன்... நேசிக்கிறேன்...”

     “நான் கொடுத்து வச்சவன்...”

     “முதல்ல என் தோளில இருக்கிற கைய எடுங்க. அதுக்கு முன்னால நான் சொல்றதைச் செய்யுங்க. இதோ இருக்கு மஞ்சள்துண்டு. இதோ இருக்கு மந்திரிக்கிறதுக்காக நான் விற்கிற கயிறு. இந்த கயித்துல. மஞ்சள் துண்டைக் கட்டி, இந்த முருகன் சாட்சியாய் என் கழுத்துல கட்டுங்க. உடனே என்னை ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க. ஒங்க அப்பாகிட்ட ஒங்களால பேச முடியாட்டாலும் நானே பேசிக்கிறேன்.”

     “அதெப்படி... திடுதிப்புன்னு யோசிக்காமல்...?”

     “என்னை எப்படி யோசித்து விரும்பலியோ. அப்படி யோசிக்காம தாலியக் கட்டுங்க... காதலிக்கதுக்கு யோசிக்கப்படாது. கல்யாணத்துக்கு மட்டும் யோசிக்கணுமா. ஒங்கள மாதிரிதான் நம்ம நாட்ல, பல காதலர்கள் காதலிகள். காதல் என்பது வாழ்க்கைக்காக போடப்பட்ட வழி. இந்த பிரதான வழியில் குறுக்கு வழிகள், தற்கொலை வழிகள், கொலை வழிகள்னு பல கிளை வழிகள் இருக்கு. இவற்றை விட்டுட்டு பிரதான வழியில் போனால் தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும். இல்லன்னா சுமக்கணும். எல்லாப் பெண்களும், தங்களோட காதல் வெளிப்பாட்டைக் காட்டுறதுக்கு முன்னால, இப்போ நான் ஒங்ககிட்ட கேட்கிற கேள்வியை கேட்டிருந்தால் ஒன்னு காதலே வந்திருக்காது. இல்லன்னா தோல்வி என்பதே வந்திருக்காது. இந்த பிரதான வழியில் தெரிகிற வாழ்க்கை வீட்டைப் பார்த்தால், கிளை வழிகளில் இருக்கிற கிணறோ, குளமோ, குட்டையோ, கத்தியோ, கம்போ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நான் இல்லாமல் ஓங்களால் வாழ முடியாதுன்னா, இதோ என் கழுத்து. நான் கழுத்துக்கு முதலிடம் கொடுக்கிறவள். கன்னத்துக்கு இரண்டாவது இடம்... என்ன சம்மதமா... எனக்குச் சம்மதம்...”

     திருமலை தடுமாறிப் போனான். அந்த ஆடிக்காற்றிலும் அவன் உடம்பு வியர்த்தது. அவனால் நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எதையுமே விஞ்ஞான பூர்வமாய் சிந்திக்கும்போது அது தன்னையே தனக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. அந்த அடையாளம் சில சமயம் பிடிப்பதில்லை. பிடிபடுவதும் இல்லை.

     திருமலை ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல், ரஞ்சிதத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினான். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும், பிடறியையும் துடைத்தபடி நடந்தான். காலில்பட்ட ஒரு டப்பாவை தூக்கியெறிந்தான். கண்ணில் பட்ட ஒரு நாயை கல்லால் அடித்தான். எதிரே குசலம் விசாரிக்க வந்தவர்களைக் குற்றவாளிகள் போல் பார்த்தபடி நடந்தான். இந்தத் துளசிங்கம் எப்டி குதிக்கான். அவனை மாதிரி நாமும் குதிக்கணுமுன்னால், ஒரு கடை போடணுமுன்னும், அதுக்காக முருகன், அப்பா மனசுக்குள்ளே போகணுமுன்னும் முருகன் கிட்டே போனால், அந்த சண்டாளப் பயல் அவனை மாதிரியே என்னை ஆக்கிட்டான்.

     திருமலை, குரோதங் குரோதமாய் பார்த்து, கோபங் கோபமாய் நடந்து, துளசிங்கம் கடை முன்னால் வந்து நின்றான், ஆங்காரமாக, ஆவேசமாக. அங்கே நின்ற ஒரு சிறுவன் காதில் எதையோ சொன்னான். அந்தச் சிறுவன் அந்தக் கடைக்குப் போய், மீண்டும் திரும்பி வந்து திருமலையிடம் ஒப்பித்தான்.

     “ஒமக்கு சிமெண்டு கொடுக்க மாட்டாராம். துளசிங்கம் அண்ணாச்சியே சொல்லிட்டார். கடைன்னா எல்லாருக்கும் பொதுதான...? ஒமக்கு மட்டும் எப்டி இல்லன்னு சொல்லலாம் மச்சான்...?”

     திருமலை அந்தச் சிறுவனைப் பிடித்து தள்ளியபடியே தலையாட்டினான். பிறகு, துளசிங்கம் கடையை நோக்கி, அழுத்தம் திருத்தமாக நடந்தான்.