உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
15 உச்ச வெயில், உச்சியைப் பிளந்த நேரம். சுயம்பு, பாண்ட் சட்டை போட மறுத்துவிட்டான். அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்தார்கள். ஆறுமுகப் பாண்டிக்கும், அவன் மனைவிக்கும் இதில் இஷ்டமில்லை. பூவம்மா மீதும் ஒரு நம்பிக்கையில்லை. ஆனாலும் நன்மை வராது போனாலும் தீமை வராது என்ற அனுமானம். மரகதம், ஒரு தூக்குப் பையில், புடவை ஜாக்கெட், பாடி, பாவாடை வகையறாக்களை நிரப்பி, அவற்றிற்குமேல் வளையல்களைத் திணித்து, தம்பியிடம் நீட்டினாள். ‘பிளஸ்-ஒன்’ மோகனா என்னம்மா இதெல்லாம் என்று அம்மா தோளில் முகம் போட்டுச் சிணுங்கினாள். அவளோ, முற்றத்தில் எல்லாவற்றையும் மேற்பார்த்த பூவம்மா மயினியிடம் ஒரு சந்தேகம் கேட்டாள். “மயினி. இந்த மாதிரி சேலத் துணிகள படைச்சிட்டு நாமளேதான உடுக்கிறது வழக்கம்.” “தேவதைகளுக்கு நேருற துணிமணிகளை நாம எடுத்து உடுத்தலாம். ஆனால் இது பேய்க்கு வைக்கிறது. தீட்டுக் கழிக்கறது மாதிரி...” “கூட யாரையாவது அனுப்பலாமா... இவன் அங்கயும் வீட்ல போட்ட கூத்து மாதிரி...” “கவலையே வேண்டாம். சீதாலட்சுமி வெலகிட்டாள். ஆனாலும் சட்டம் பேசுற பய மவள், கூட யாராவது போனால், அந்த ஆளைப் பிடிச்சுக்கிட்டு, திருப்பிக் கேட்டால், ‘சுயம்ப விட்டுப் போன்னுதானே வாக்குக் கேட்டிய. அப்படின்னு சொல்லிடுவா... அதனால, என் மருமவன் தானாப் போயிட்டு தானா வரட்டும். வாங்கய்யா மருமவனே...” சுயம்பு, சொல்லப் பொறுக்காமல், அத்தை அருகே போனான். பூவம்மா இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்து அவனுக்குத் திருநீறு இட்டாள். இன்னொரு இடுப்பில் இருந்த குங்குமச் சிமிழை எடுத்தபோது, “சரியா நெற்றிப் பொட்டுல வையுங்க அத்தை” என்று சுயம்புவே சொல்லிக் கொடுத்தான். பிள்ளையார் திட்டப்போன வாயைக் கட்டிப் போட்டார். சுயம்பு புறப்பட்டான். அண்ணிக்காரியால் தாங்க முடியவில்லை. “சூட்கேஸை சுமந்துட்டு காலேஜுக்கு போகிற கையில தூக்குப் பையும் அதுவுமா... சே!” மருமகளை அத்திப்பூப் போல் பாசமாய்ப் பார்த்த மாமியார் வெள்ளையம்மா, அவள் தலைக்கு மேலே உள்ள ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அதே வைக்கப்படப்பு பக்கத்தில் கொழுந்தன் பெண்டாட்டியின் நடமாட்டம். “பூனக்கண்ணி... பார்க்கிற பார்வையைப் பாரு... முதல் தடவ. நான் பெத்த பிள்ளை காலேஜுக்குப் போகும் போதும், வேணுமுன்னே குறுக்கே வந்தாள். எல்லாம் வெளங்காம போயிட்டு... சுயம்பு. கொஞ்சம் தண்ணிரை குடிச்சுட்டுப் போ!” சுயம்புவுக்கு, அண்ணன் மகன் தண்ணிர் கொண்டு வந்தான். அதைக் குடித்துவிட்டு, அவன் புறப்படப் போனபோது, பூவம்மா மயினி, மார்பைத் தட்டி, சுயம்புவுக்குத் தைரியம் சொல்வது போல் எல்லோருக்கும் சொன்னாள். “திரும்பிப் பாராம போயிட்டு, திரும்பிப் பாராம வரணும் என் மருமவனே. மாரியாத்தா இப்ப என்கிட்ட இருந்து ஒங்கிட்ட வாராள். சீதாலட்சுமியும் நீங்க கொடுக்கிறத வாங்கிக்கிட அங்க தயாரா இருக்காள், ஏடா கூடம் செய்ய மாட்டியளே...” சுயம்பு, பலமாகத் தலையாட்டிவிட்டு, வாசலைத் தாண்டினான். அவர்கள் சொல்லிக் கொடுத்ததுபோல் ஊர் வழியாகப் போகாமல், இரண்டு பக்கமும் வரிசை வரிசையாய் நீளவாக்கில் உள்ள குடிசை வீடுகளின் இடுக்கு வழியாய் நடந்தான். அநத்க் காலத்து வழக்கப்படி, ‘மூணே முக்கால் பிடி’ இடைவெளியோடு கட்டப்பட்ட மண் சுவர்கள். அந்த இடுக்கு வழியாய்ச் சென்றவன், ‘வண்ணாக்குடி’ வழியாய்ப் பருத்திக் காட்டைத் தாண்டி, கருவேல மரக்காட்டிற்குக் கிழக்குப் பக்கம் போய் விட்டான். அங்கேதான், சீதாலட்சுமியக்கா சமாதி இருக்குது. “தம்பி தம்பி” என்று அவனையே வளைய வந்தவள் பட்டறைச் சட்டம்போல் பரந்த உடம்பும், விரிந்த முகமும் கொண்டவள். திடீரென்று இறந்துவிட்டாள். ஐந்தாண்டு காலம், குழந்தைப் பேறு இல்லாமல் கிடந்தவள் இந்த சீதாலட்சுமி, முதலாண்டு முடிந்தவுடனேயே, மாமியார்க்காரி, அவளைச் சொல்லுக்குச் சொல், “மலடி... மலடி...” என்றாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருந்த கணவன் முத்துவும், காலப் போக்கில் “மலடி... மலடி...” என்பான். ஒருநாள், சீதாலட்சுமியும் துடித்துப்போய், நீரு மலடா இருக்கறதால தான் நானும் பூக்காமல். காய்க்காமல் இருக்கேன். என்று சொல்லி விட்டாள். உடனே அந்தப் புருஷப்பயல், அப்போ நீ கல்யாணத்துக்கு முன்னாலயே கள்ளப் பிள்ளை கழிச்சிருக்கே என்று சாடியிருக்கான். அடுத்த இரண்டு மணி நேரத்தில், சீதாலட்சுமி இறந்துவிட்டாள். தற்கொலை என்பது குடும்பக் கட்சி, கொலை என்பது அந்த குடும்பத்திற்கு வேண்டாதவர்களின் கட்சி. அவள் செத்தாலும், இந்தப் பேச்சு இன்னும் சாகவில்லை. சுயம்புவுக்கு அவளை நினைக்க நினைக்க, பரிதாபம் ஏற்பட்டது. டேவிட்டும், தன்னை அப்படி ஒதுக்கி விடலாமோ என்று பயமும் ஏற்பட்டது. சுயம்பு, முக்கால்வாசி தூரம் போய்விட்டான். கீழே கை நழுவி விழுந்த தூக்குப் பையை எடுக்கக் குனிந்தான். நூல் சேலைதான். ஆனாலும், டேவிட் கழுத்துக்கு இரு பக்கமும், தொங்கியதே, அதே மாதிரி வெளிர் மஞ்சள் நிறம். வெள்ளை வெள்ளையான வளையல்கள். மோடாத்துணி, பாவாடை, பாடி, சீதாலட்சுமி அந்த ஆடைகளைப் பார்ப்பாளே தவிர, உடுக்கமாட்டாள் என்ற அனுமானத்தில் ஜாக்கெட்டுக்குப் பட்டன்கள் இல்லை. பாடிக்குக் கொக்கி தைக்கப்படவில்லை. நீளவாக்கிலும் அகல வாக்கிலும் மடிக்கப்பட்டு, ஓரடி நீளத்திற்கும் அரையடி அகலத்திற்கும் அதே அளவு கன பரிமானத்திற்கும் உட்பட்டுத் தோன்றிய அந்தச் சேலையை, அதிசயத்தோடு பார்த்தான். அவனுக்கும் போன ஆசை புது வீச்சோடு திரும்பி வந்தது. யோசித்தான். ஆனால் புடவையை போனவாரம் கட்டுனது மாதிரி கட்டப்படாது. எப்படிக் கட்டலாம். இந்த மலரு வரவே இல்லை. பதில் லெட்டர் கொடுக்கலைன்னு கோபம். எவள் கிட்ட கேட்கலாம்...? சொல்லி வைத்ததுபோல், அவன் எதிரே மூன்று பெண்கள் தொலைதுார குளத்துப் பக்கத்திலிருந்து, தரையிறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, துவைத்த துணி மணிகளை மார்பு வரைக்கும் கட்டிய புடவைக்கு மேல் அங்குமிங்குமாய் மடித்துப் போட்டிருந்தாள். இன்னொருத்தி, ஈரப்புடவையைக் கட்டிக்கொண்டு முந்தானையை மட்டும் விரித்துக் காயப்போட்டுக் கொண்டு வந்தாள். மற்றொருத்தி இவள்கள் மத்தியில் ஒரு கதாநாயகி, இஸ்திரி போட்ட புடவை ஜாக்கெட், அசத்தலான பார்வை. கொத்தும் கண்கள், குமிழியில்லாக் கன்னம். உருண்ட முகம். கையில் பிளாஸ்டிக் கூடை. அவை முழுக்க ஈரத்துணிகள். அந்த மூன்று பெண்களும், செஞ்சிவப்பு வெட்டுக் கிளிகள் மாதிரியான பூக்களைச் சுமக்கும் துவரம் பருப்புப் பயிர்கள் பளிச்சிடும் தோட்ட வரப்பின் வழியாய், ஊருக்கு அருகே உள்ள கரிசல் காட்டுப் பக்கமாக வந்தார்கள். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. பெண்வாசனை கண்டு, அவர்களைப் பார்த்து ஓடினான். அவர்களே திடுக்கிட்டு நின்றுவிட்டு, அப்புறம் நடக்கும்படி ஓடினான். இதற்குள் சிரித்துக்கொண்டு நின்ற அவனை, பிளாஸ்டிக் கூடையில் ஈரத்துணிகளைப் பிடித்துக்கொண்டு இஸ்திரி துணிகளைக் கட்டியிருந்த சந்திரா, அவன் கையிலிருக்கும் தூக்குப் பைக்கு வெளியே, அதன் நாக்குப்போல் துருத்திய புடவையைப் பார்த்தபடியே, கோபம் கோபமாகக் கேட்டாள். “செத்துப்போன எங்க அண்ணியையும் எங்க குடும்பத்தையும் கேவலப்படுத்தணும்னு திட்டம் போட்டிருக்கீங்க இல்லியா... அதுவும் இந்தக் காலத்துல இப்படி ஒரு மூடத்தனம். வைக்கிறதா இருந்தா ஒன் பாட்டி சமாதில வைக்க வேண்டியதுதானே!” இன்னொருத்தி இடை மறித்தாள். “இவனுவ குடும்பத்துக்கு அப்போ சமாதி கட்டக்கூட வக்கு ஏது?” சுயம்புவிற்கு அந்த சந்தர்ப்பத்தில் எதுவும் பிடிபட வில்லை. சூதுவாதில்லாமல் கேட்டான். பையிலிருந்த சேலையைத் தூக்கிக் காட்டிக் கேட்டான். “இந்தச் சேலையை எப்படிக் கட்டணும்னு சொல்லிக் கொடுக்கிறயா சந்திரா...!” அந்த மூவரும் அவன் கிண்டல் செய்கிறானோ என்று திடுக்கிட்டார்கள். அதற்குள் அவன், புடவையைப் பேண்டுக்கு மேல் சுற்றி, எப்படி கொசுவம் வைக்க வேண்டும் என்பது புரியாமல் அவர்களைப் பார்த்தான். அதே அந்த சந்திராவுக்கு, இப்போது மூளையில் ஒரு மின் பொறி. அதை இடியாக இடிக்க விரும்பினாள். காற்று வாக்கில் வந்த பேச்சு, உறுதிப்படுவது போலிருந்தது. அவனைப் பார்த்தப் பல்லைக் கடித்தவள், இப்போது பல்லைக் காட்டிப் பேசினாள். “மொதல்ல அந்தப் பூவரச மரம் பக்கமாப் போயி, பாவாடை ஜாக்கெட்ட போட்டுட்டு வாங்க... புடவை கட்டுறதப் பத்தி நான் சொல்லித் தாரேன்!” சுயம்பு, அந்தப் பூவரசுப் பக்கமாகப் போனான். இதற்குள் துணிமணிகளை உடம்பு முழுவதும் பாம்புப் பிடாரி மாதிரி போட்டிருந்த எளியவளான சூரியா, சந்திராவை அதட்டினாள். முப்பது வயதுக்காரி.... பண்ணைச் சேவகம். “எம்மாளு சந்திரா. நீ செய்யுறது ஒனக்கே அடுக்காது! அவன் நட்டுக் கழண்டு நிக்கான். இப்படியா ஒருத்தனக் கேவலப்படுத்தறது. பழுத்த ஓலை விழும் போது பச்சை ஓலை சிரிச்சுதாம்...” “இவனும். இவன் குடும்பமும் சேர்ந்து எங்க அண்ணி ஏதோ இவனை ஆட்டிப் பிடிச்சு புடவை கேக்குறான்னு கேவலப்படுத்தலாமா... இதுமட்டும் ஒனக்கு உறைக்காக்கும். உனக்கு இஷ்டமில்லன்னா யார் நிக்கச் சொன்னது... போயேன்...” “போகாம ஒன் வீட்டுக்கா வரப்போறேன்...!” அந்த எளியவள் ஓட்டமும் நடையுமாய் ஊரைப் பார்த்துப் போனாள். இதற்குள், சுயம்பு ‘பாவாடையும் ஜம்பருமாய்’ அந்த எஞ்சிய பெண்கள் முன்னால் வந்து நின்றான். சந்திரா அவனிடமிருந்து புடவையை வாங்கி, அதை எப்படிக் கட்ட வேண்டுமென்று சொல்லப் போனாள். இதற்குள் பக்கத்தில் நின்றவள் சுயம்புவைப் பார்த்துப் பயந்துவிட்டாள். இந்த சந்திராவிற்கும் ஒரு அதிர்ச்சி. ஒருவேளை அண்ணியே இவனைப் பிடித்திருப்பாளோ என்ற சந்தேகம். ஆனாலும் அவளுக்கு இதில் நம்பிக்கை இல்லை. எவனோ, ஒருத்தனைக் காதலித்து அந்தப் பேச்சு வீட்டில் அடிபட்டபோது, ‘அவனைப் பார்த்திருந்தால், என் கண்ணு குருடாப் போயிடும்’னு கூசாமல் பொய் சொல்லி யாரும் கேட்காமலே கற்பூரத்தை ஏற்றி அணைத்தவள் இந்த சந்திரா. கற்பூரம்தான் அணைந்ததே தவிர, இவளோ, இவள் காதலோ அணையவில்லை. இதனாலேயே, இவள் நாத்திகவாதி ஆகி விட்டவள். சுயம்பு, அவசரம் தாங்க முடியாமல் புடவையை நீட்டினான். அவள் அதை வாங்கிக்கொண்டே, உடம்பில் சுற்றவிட்டாள். “இந்தா பாரு சுயம்பு. சேலைல இந்த முனையை இப்படிப் பிரிச்சு தொப்புளுக்கு மேல சொருகணும்... அப்புறம் இந்த மாதிரி புடவைய வலது பக்கமா இடுப்பச் சுற்றி ரெண்டு தடவ சுத்தணும்... சுத்தியாச்சா. நல்லாப் பாரு... இன்னும் மிச்சம் இருக்கிற இந்தத் துணிய, லூசா விட்டு, தோளுல போடணும். போட்டாச்சா. இதோ. இந்த மாதிரி லூசா இருக்கிற துணியை சுருக்குப் பை மாதிரி மடக்கணும். மடக்கு மடக்கா மடக்கியாச்சா. இதுதான் கொசுவம். இதையும் தொப்புளுக்கு மேல இப்படிச் சொருகணும். எங்க உடுத்திக் காட்டு பார்க்கலாம்...” சுயம்பு, அவளிடமிருந்து அந்தப் புடவையை பயபக்தியோடு பார்த்து, பலவந்தமாகப் பறித்தான். அவள் சொன்னதுபோலவே, ஒரு சொருகு. இரண்டு சுற்று. அவள், திருத்தம் கொடுத்தாள். “முந்தாணி அவ்வளவு வேண்டாம்... ஆ... இப்ப சரி தான். அந்த லூசா இருக்க துணியச் சுருக்குங்க... சபாஷ். இதுதான் பொம்பளைக்கு லட்சணம். நீ பொம்பளை மாதிரியே ஆகிட்டே...” “பொம்பள மாதிரி என்ன தாயி... நான் பொம்பளையேதான்.” சுயம்பு, வளையல்களைக் குலுக்கிக் காட்டினான். “கொலுசும் இருந்தா நல்லா இருக்கும். ஒன் கொலுசக் கொஞ்சம் தாரியாடி” என்று கேட்டபோது, சும்மா நின்றவள் பயந்தாள். புடவை டீச்சர், திருப்திப்பட்டாள். பிறகு பல்லைக் கடித்து முகத்தை கோரமாக்கியபடியே சொன்னாள். “சரி... எங்க போகணுமோ... போ... நாங்க வீட்டுக்குப் போறோம்!” சந்திரா, அப்படியும் போக மனமில்லாமல், சுயம்புவை ரசித்துக் கொண்டும், ஓடப்போன சித்தப்பா மகளைப் பிடித்துக் கொண்டும் நின்றாள். அப்போது... பிள்ளையாரும், ஆறுமுகப் பாண்டியும், ஒருவர் பின்னால் ஒருவர் ஓடிவர, அவர்கள் பின்னால் ஒருவரை ஒருவர் துரத்துவதுபோல் மரகதம், வெள்ளையம்மாள், அலறி அடித்து ஓடி வந்தார்கள். சிறிது இடைவெளி கொடுத்து, பூவம்மா வேப்பிலைக் கொத்தோடு ஓடிவந்தாள். ஊருக்குள் போன ‘எளியவள்’ சூரியா ஒவ்வொரு வீடாக விஷயத்தை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். முதல் செய்தி பிள்ளையார் வீட்டுக்குத்தான்... மரகதம் துணுக்குற்று நின்ற சந்திராவை முடியைப் பிடித்துக் கீழே தள்ளினாள். அந்த முடியின் பிடியை விடாமலே, அவளை அங்குமிங்குமாய் இழுத்தாள். அப்படியும் ஆவேசம் தணியாத காளியாய், அவளைத் தூக்கி நிறுத்தி, முகத்தில் காறிக் காறித்துப்பினாள். அவளை மல்லாக்கத் தள்ளிவிட்டு, மறுபடியும் முடியைப் பிடித்து, இழுத்து, புடவை கட்டிய தம்பியின் பக்கம் தள்ளிவிட்டு, ஆவேசம் குறையாமல் ஆணையிட்டாள். “என்னடி, நெனச்சுக்கிட்டே... ஒருத்தன் லேசா கெட்டுப் போயிட்டால், அவன ஒரேயடியாக் கெடுத்துட ணுமா. இப்ப அவன் காலத் தொட்டுக் கும்பிட்டு அவன் கட்டியிருக்கிற புடவைய உரிந்து... நல்லா மடிச்சுத் தரணும். இல்லாட்டால் நீ இந்த இடத்துல இருந்து, ஒரு அடி நகர முடியாது...” “நீங்க மட்டும் எங்க அண்ணிய கேவலமாக்கலாமா. அவங்க இவன பேயாய் பிடிச்சிருக்கறதாயும், ஒங்ககிட்ட புடவை யாசகம் கேட்டதாயும் எப்படி கேவலப் படுத்தலாம்? இவன்கிட்ட துணிகளைக் கொடுத்து, எப்படி அனுப்பலாம். ஒருத்தி செத்த பிறகும், அவளை பழைய படியும் சாகடிக்கணுமா...” மரகதத்திற்கு, மனம் கேட்கவில்லை. அவள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் உள்ளது. சுயம்புவுக்கு ஒரு நீதி, சீதாலட்சுமிக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாது. கைகளைப் பிசைந்தாள். அப்போது, தாய்க்காரி வெள்ளையம்மா ஒரு உண்மையைக் கண்டுபிடித்தது போல் கீழே குனிந்தாள். குனிந்தபடியே ஒன்றுவிட்ட நாத்தினார் பூவம்மாமீது மண்ணை வாரி வாரி வீசினாள். இப்போது அவள் உடம்பே மண் நிறமானது. வெள்ளையம்மாவின் கை இப்படி இயங்கிக் கொண்டிருக்கும்போதே, வாயும் இயங்கியது. “அடுத்துக் கெடுத்தவளே! குடியக் கெடுத்தவளே! ஒம்புத்தியக் காட்டிட்டியேடி! இந்தப் பாவி மனுஷன் கிட்ட இருந்த பகைக்கு, பழி வாங்கிட்டியேடி சண்டாளி! இங்கயும் சொல்லிக் கொடுத்து, அங்கயும் சொல்லிக் கொடுத்து, எங்கள கேவலப்படுத்திட்டியேடி! நீ உருப்படுவியாடி! ஒன் வீட்டிலயும் இப்படி ஒண்னு முடியாதா...? கைகேயி கூனி! நீலி!” பூவம்மா, வெள்ளையம்மா போட்ட மண் துகள்களை மாரியாத்தா போட்ட அம்மைபோல் நினைத்துக்கொண்டு வேப்பிலையை வைத்து தடவிவிட்டாள் பதட்டமாக, பிறகு அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி ஆகாயத்தைப் பார்த்து கையை ஓங்கி ஓங்கி அரற்றினாள். “அடி மாரியாத்தா! என்ன ஏமாத்திட்டியேடி... நீ உருப்படுவியாடி! எல்லாருக்கும் செய்யறது மாதிரிதானே என் மருமவப் பிள்ளைக்கும் செய்தேன்! இந்த ஆந்தைக் கண்ணி சொல்றது மாதிரி நான் நடந்திருந்தால், கண்ணு அவிஞ்சு திண்ணையில கிடப்பேன்! மாரியாத்தா! என் கூடப்பிறந்த பிறப்புக்கே ரெண்டகம் செய்திட்டியேடி! தம்பி! பிள்ளையார்! நீயும் நம்புறியாடா..?” பிள்ளையார் பித்துப் பிடித்து நின்றபோது, ஊரிலிருந்து பெருங்கூட்டம் ஓடி வந்தது. அதில் சீதாலட்சுமி வாழ்க்கைப்பட்ட குடும்பத்து ஆட்களே அதிகம். பிள்ளையார் வீடு மேலத் தெரு என்பதால், அவரது பங்காளிகள், இனிமேல்தான் வரவேண்டும். சந்திரா, தனது பங்காளிக் கூட்டத்தைப் பார்த்த பிறகு, அது வரு முன்னாலேயே, அங்கே ஓடிப்போய், கத்தினாள். கதறினாள். பிறகு கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மரகதம் மேல் எரியப் போனாள். யாரோ அவள் கையையும் கல்லையும் சேர்த்துப் பிடித்தார்கள். சீதா லட்சுமியின் கணவன். முத்துக்குமார் சிங்கம் புலிகளை எச்சரிக்கை செய்யும் கொம்பன் யானைபோல், கூட்டத்திலிருந்து தனிப்பட்டு முன்னால் வந்தான். மரகதத்தைப் பார்த்து, தன்னம்பிக்கைக் குரலில் கேட்டான். “ஏய் மரகதம்! ஒன்னையும் இழுத்துப் போட்டு அடிக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்.” ஆளுக்கு ஆள் பேசினார்கள். “என்னப்பா நீ.பொம்பளப் புள்ளிய சண்டையில அடிப்பேன் பிடிப்பேன் என்கிறே! அட, விடப்பா, பஞ்சாயத்து வைக்கலாம்!” “பஞ்சாயத்துக்குப் போக நாங்க எளியவங்க இல்ல. நூறு தலைக் கட்டோட இருக்கவங்க... இந்த மரகதத்தை விடப்போறதா இல்ல!” முத்துக்குமாரை, அவன் பங்காளிகளே இழுத்துப் பிடித்தபோது, அவன் வீரனானான். ஆறுமுகப்பாண்டி, அவன் மோவாயைப் பிடித்துக் கெஞ்சினான். பிள்ளையார் அழுத்தம் திருத்தமாய் சவாலிட்டார். “எங்களுல யாரையாவது தொட்டுப் பாரு பார்க்கலாம்...!” பூவம்மா ஆகாயத்தைப் பார்த்து கை தழுவிக் கும்பிட்டாள். “குத்துப்பழி வெட்டுப் பழி வரப்போவுதே.என் சின்னத் தம்பி பெண்டாட்டி, அந்த பூனக்கண்ணி, கோள் சொன்னதை, நான் சொன்னதா நினைக்காளே! மாரியாத்தா! நீ உண்மையச் சொல்லுடி! இல்லாட்டா. நீயும் பொய்யி! இந்த வேப்பிலைக் கொத்தும் பொய்யி...!” பிள்ளையாரின் தம்பி பெண்டாட்டியும், பூனைக் கண்ணியுமான ருக்மணி அப்படிப்பட்ட பட்டத்தைக் கொடுத்த தன் பெரிய்யா மகன் பெண்டாட்டி பூவம்மாவை விளாசித் தள்ளினாள். “எவடி பூனைக்கண்ணி! கோள் சொல்லிச் சொல்லியே குடியக் கெடுப்பாளே. என் மச்சானும், மச்சான் பெண்டாட்டியும் ஆகாதுதான். ஆனால் சுயம்பு, நான் இடுப்புல எடுத்து வளர்த்த பிள்ளையடி. முழுத்த ஆம்புளப்பயல லேசா மூளை குழம்பியிருக்கான்னு அந்த சாக்குல என் பிள்ளய இப்படி ஆக்கலாமாடி! பாவி! நீயும் வேட்டிகட்டி, கிராப் வச்சு, சட்டை போடுற காலம் வரும்டி வராட்டா நான் ஒருத்தனுக்கு முந்தாணி விரிச்சவள் இல்லடி!” இதற்குள், பொம்பளைகள் பேசக்கூடாது என்று ஆம்பளைகள் கத்தினார்கள். கூட்டம் லேசாய் அடங்கிய போது, அப்போது ‘செத்துப்போன’ சீதாலட்சுமிக்கும், கல்யாணத்திற்குப் பிறகே, வயிறு ஒடுங்கிப் போன பேச்சியம்மாவிற்கும், தாலிகள் போட்ட முத்துக்குமார் திமிறித் திமிறிப் பேசினான். “என் பெண்டாட்டி சீதாலட்சுமிய அவமானப் படுத்துனதுக்கு பிள்ளையார் மாமா, இங்கேயே பதில் சொல்லணும்! இல்லாட்டா அவர நகர விடமாட்டேன்!” “அட விடுடே... கிராமத்துப் பழக்கம். இப்படிச் செய்தாலாவது மகனுக்கு புத்தி தெளியாதான்னு பெத்தவங்களுக்கு ஒரு ஆசைதான். விட்டுத்தள்ளுப்பா!” “சரி, விடுடே... இந்தக் காலத்துலயும், வெள்ளையம்மா பாட்டியும் வாழத்தானே செய்யுறாக, பாட்டி மண்டையப் போடுறது வரைக்கும் இந்த மாதிரி தீட்டுக் கழிக்கறதும் இருக்கத்தான் செய்யும்!” “ஏய் பேராண்டி! நேத்து என்கிட்ட திருநீறு வாங்கி நெத்தியில் பூசிக்கிட்டு, சீட்டு விளையாடி ஜெயிச்சத மறந்துடாதடா... நான் மண்டையப் போட்டால், ஒனக்கு ‘வெட்டுச்சீட்டே’ கிடைக்காதுடா...” கூட்டம் லேசாய் சிரித்தது. ஆறுமுகப் பாண்டியும், அவன் மனைவி கோமளமும், மரகதம் பக்கம் போய் அவளை நாயே பேயே என்று திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் முத்துக்குமார்தான் விட்டுக் கொடுக்கவில்லை. “எம் பெண்டாட்டிய கேவலப்படுத்துணவங்கள நான் கேவலப்படுத்தாமல் விடமாட்டேன்!” பிள்ளையாரால் பேசாமலிருக்க முடியவில்லை. “பெண்டாட்டிமேல ரொம்பத்தான் ஆசை வச்சிருக்கே... அதனாலதான் அவள் சுடுகாட்டுக்குப் போன மறுமாசமே சந்நியாசி ஆயிட்டே!” “ஏய் பிள்ளையாரு மாமா! இப்படிப் பேசுனா உம்மீது நான் கை வைக்கவேண்டியது வரும்!” “ஏல... நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவன்னா எங்க அண்ணன் மேல கை வச்சுப் பாரு!” புல்லுக்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு, மனைவி சொன்ன விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையார் தம்பி சண்முகம், அந்தக் கட்டை கீழே போட்டுவிட்டு தார்ப்பாய்ந்தார். அவரது மனைவி பூனைக்கண்ணி பிறந்ததும் முத்துக்குமார் குடும்பம் என்பதால், பாதிப்பேர் சும்மா இருந்தார்கள். மீதிப்பேர் யோசித்தார்கள். இதற்குள் உள்ளூர் அரசியல்வாதிகளான ஓரம் கட்டப்பட்ட, ஊர்க்கிழடுகள் தங்களது பொற் காலத்தை மீண்டும் நிலைநாட்டப் பார்த்தன. அவர்கள் சார்பில், எண்பது வயது ராமசாமி பேசினார். “விடுங்கடா... விடுங்கடா... சல்லிப் பயல்களா! சந்திரா அப்படிச் செய்ததும் தப்பு! மரகதம் அதுக்கு அவள அடிச்சதும் தப்பு: ரெண்டு தப்பும் சரிக்குச் சரி...” “அப்போ என் பெண்டாட்டியை அசிங்கப் படுத்துனது...” “எவண்டா இவன்... நீயும் பிள்ளையார் அம்மா, ‘வடிவத்தை’ ஒன்ன பேயா பிடிச்சு ஆட்டுறதா, ஊர் முழுக்க தமுக்கடி! பிள்ளையார் கேட்டால், அவனை மரத்துல கட்டி வைக்கோம்!” “அந்தப் பேயி காலாவதி ஆயிருக்குமே...” “எந்தப் பயமவன் விசிலடிச்சு குறுக்கே பேசுறது... கட்டி வச்சு, தோலை உரிச்சுடுவேன்.நான் சொல்றத நல்லாக் கேளுங்கடா... மரகதம் வெளியூர்ல வாழப்போற பொண்ணு! அவள் தம்பியப்பத்தி மட்டும் கலியாணத்தில் யாரும் மூச்சு விடப்படாது! இதேமாதிரி முத்துக்குமாருக்கு, முப்பது வயசே முடியலே... இனிமேல்தான் கொலை போடப்போற வாழை... அவன்தான் சீதாலட்சுமியைக் கொலை செய்தான்னு எந்தப் பயலும் போலீசுக்கு மொட்டைப் பெட்டிஷன் போடப்படாது!" இருதரப்பும், கப்சிப் ஆனது. பிள்ளையார் பேச்சற்றார். முத்துக்குமார் மூச்சற்றான். ராமசாமிக் கிழவர், வெள்ளை முலாம் பூசப்பட்டது போன்ற இரும்புப் பற்கள் தெரிய குதர்க்கமாகக் கள்ளச் சிரிப்பாய் சிரித்தார். இப்படி பஞ்சாயத்து பேசி எத்தனை வருடமாச்சு...! கலையப்போன கூட்டத்தைக் கண்டிப்புப் பார்வையோடு பார்த்து, அவர் மற்றொரு தீர்ப்பையும் வழங்கினார். “இந்த சுயம்பு பயலை கூப்பிடுங்கடா... முட்டாப்பய மவனுக்கு பேரு வச்சதே நான். அவனை சபையில வெச்சு ரெண்டு வார்த்தையாவது பேசிக் கண்டிக்கணும்...” எல்லோரும் கண்போட்டுத் தேடினார்கள். சுயம்பு இல்லை. வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|