உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
37 கங்காதேவியை நான்கைந்துபேர் கைத்தாங்கலாக நடத்தி வந்தார்கள். அவர்களில் இரண்டுபேர் சராசரி மனிதர்கள். அவர்களின் தோளில் கைபோட்டபடி அவர்களையே ஊன்றுகோலாகப் பயன்படுத்திக் கொண்டு, நொண்டியடித்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மேகலை துடித்துப் போய்விட்டாள். அவள் முகத்தில் சிராய்ப்புகள். கால் பாதங்களில் ரத்தம் தோய்ந்த சதைச் செதில்கள். முட்டிக்கைகள் வீங்கிப் போயிருந்தன. தலைமுடி அலங்கோலமாகக் கிடந்தது. மேகலை அப்படியே எழுந்து அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘எம்மா... எம்மா’ என்று போட்ட கூச்சலில், லட்சுமி, நீலிமா, குஞ்சம்மா உட்பட அனைவருமே ஓடி வந்துவிட்டார்கள். கங்காதேவி, அவளைப் பார்த்து மெல்லச் சிரித்து அவளை மார்போடு அனைத்துக்கொண்டாள். இதுவே ஒரு உந்து சக்தியாக, மேகலை ஒப்பாரி போலவே ஓலமிட்டாள். “எம்மா நான் துரதிர்ஷ்டம் பிடிச்ச பொண்ணும்மா. அக்காமேல உயிரையே வெச்சிருந்தேன். அவள் கல்யாணம் நின்னு போச்சு. பச்சையம்மா மேல பாசம் வச்சேன். அவள் போலீசுல படாதபாடு பட்டாள். நீங்களும் என்ன எப்போ தத்து எடுத்தீங்களோ அப்பவே இப்படி ஆயிட்டீங்க... நான் இங்க இருக்கப்படாதும்மா... போயிடுறேன்... போயிடுறேன்...” முண்டியடித்த மேகலையை நீலிமாவும் குஞ்சம்மாவும் பிடித்துக் கொண்டபோது, கங்காதேவி மேகலையை பெருமிதமாகப் பார்த்து, அவள் தலையைக் கோதிவிட்டபடியே பேசினாள். “என்ன மேகல். இப்படிப் பேசுற... நீ மட்டும் எனக்குக் கிடைக்காட்டால், நான் உயிரோட திரும்பியிருக்க மாட்டேன். அன்னை இந்திராவைப் பார்க்கவந்த கூட்ட நெரிசல்லருந்து மீளாமல், என்ன நானே சாகடிச்சிருப்பேன். என்னைப் பெறாமல் பெத்த தாய் போயிட்டாலும் நான் பெறாமல் பெத்த மகள் கிடைச்சுட்டாள்னு என்னை நானே ஆறுதல் படுத்துறேன். நீ மட்டும் போயிட்டால், நான் மட்டும் இங்க இருப்பனா... ஒரு வேளை உனக்கு என்கூட இருக்க இஷ்டம் இல்லியா...” மேகலை இருக்கிறது என்பதுபோல் லேசாய் தலையை ஆட்டியபோது, நீலிமா, அந்தத் தலையைப் பிடித்து மேலும் கீழுமாய் பலமாய் ஆட்டிவிட்டாள். கங்காதேவி, எல்லோரையும் ஒரு பறவைப் பார்வையாய் பார்த்துவிட்டு லேசாய் சிரித்தபடியே சொன்னாள். “இந்த ரெண்டு நாளுலயே, என் மகளையும் உங்களையும் பார்க்காமல், என்னால இருக்க முடியல. செத்துப்போனால் எப்படித்தான் இருப்பேனோ...” மேகலை, அப்படிப் பேசக்கூடாது என்பதுபோல் அம்மாவின் வாயைப் பொத்தினாள். பிறகு அவள் பாதங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அழப் போனாள். கங்கா தேவி அவள் கண்களைத் துடைத்து விட்டபடியே பேசினாள். “நீ அழுகுறதுக்காக பிறக்கலடி, மகளே. நீ வாழ வைக்க வந்தவள். ஒரு அப்பாவி சர்தார்ஜிய நீ காப்பாத்துன விதத்தைக் கேள்விப்பட்டேன் மகளே. இதுக்காக நான் ரொம்ப ரொம்ப பெருமைப்படறேன்... மகளே. அந்த சர்தார்ஜி எங்க இருக்கார்? சரி சரி இருக்கட்டும், வெளில வரவேண்டாம்னு சொல்லுங்க. பேய் கொண்ட ஜனங்கள். வேலி பயிரை மேயுது. பயிறு நஞ்சை துப்புது... கவலைப்படாத என் மகளே! நீ முழுசா பக்குவப்படுறது வரைக்கும், இந்த அம்மாவுக்குக் கல்லைத் தூக்கிப் போட்டாலும் சாவு வராது. ஏண்டி உங்களத்தான், என்னையும் என் பொண்ணையும், கொஞ்சநேரம் தனியா இருக்க விடுறீங்களா...” கூட்டம், மெல்ல மெல்ல கரைந்தது. ‘வெந்நீர் வெச்சு ஒத்தடம் போடட்டுமா...’ என்று கேட்ட லட்சுமியையும், கங்காதேவி கண்களால் போகச் சொல்லிவிட்டாள். பிறகு மேகலையின் தோளைப் பற்றியபடியே கட்டிலில் உட்கார்ந்தாள். மேகலை கீழே இருந்தபடியே அவளை அண்ணாந்து பார்த்தாள். ஒருவரின் அருகாமை, இன்னொருவருக்கு சுகம் கொடுத்திருக்க வேண்டும். பேச்சற்ற பெரும் சுகத்தில், ஒருவரையொருவர் ஈர்த்தபடியே இருந்தார்கள். பிறகு கங்காதேவி வழியெங்கும் தான் கண்ட கோரக் காட்சிகளை, மனிதர் உயிரை மனிதர் பறித்த கொடுரக் காட்சிகளை விவரித்தாள். “எதிரும் புதிருமா வருகிற ரெண்டு நாய்கள்ல ஒரு நாய் கடிக்கப் போகுதுன்னு வச்சுக்கோ, அப்போ... எதிர்ல வருகிற நாய் பதிலுக்குக் குலைக்காம வாலை பின்னங்கால்களுக்குள்ள சொருகிக்கிட்டா, கடிக்கப் போற ரெளடி நாய் அதைக் கடிக்காது. ஆனால் மனுஷன் அப்படியா...? கும்பிடக் கும்பிட வெட்டுறானம்மா... எந்தக் காலுல சரணாகதியா விழுறானோ அந்தக் காலாலயே விழுந்தவன் தலைய மிதிக்கானம்மா... மனுஷனை மிருகம்னு சொல்றது தப்பும்மா.. மிருகங்கள் ரொம்ப நல்லதும்மா...” மேகலை, அந்தப் பகுதியில் தான் கண்ட காட்சிகளை விவரித்தாள். இருவரும் கண்ணிரும் கம்பலையுமாக ஒருவர் முகத்தை ஒருவர் துடைத்தபோது நான்கைந்து அலிகள் அவர்களுக்கு முன்னால் வந்து கும்பிடு போட்டார்கள். “நாங்க போபாலுல இருந்து வாரோம். முர்கே மாதாவுக்கு ஒரு கோவில் கட்டுற விஷயமா...” “ஆமா. உங்க லெட்டர் கிடைச்சது... கோவில் கட்ட எவ்வளவு செலவாகும்...” மேகலை அவசர அவசரமாய்க் குறுக்கிட்டாள். “எம்மா... முர்கே மாதாவுக்கு கோவில் கட்டட்டும். வேண்டான்னு சொல்லல. ஆனால் அந்தக் கோவிலோட கோவிலா, நம்மள மாதிரி பிறப்பெடுத்து சூடுபட்டவங்களுக்கும், தெருவுல தூக்கியெறியப்பட்டவங்களுக்கும் ஒரு சத்திரமும் சேர்த்து கட்டணும்னு சொல்லுங்கம்மா...” “என் ராசாத்தி. இந்தத்திட்டம் எனக்கு வரல பாரு. சரி அப்புறமா இவங்ககிட்ட பேசி மொத்தம் எவ்வளவு ஆகுன்னு கணக்கு பாரு... பாதிச் செலவ நாம குடுத்துடலாம்...” “சரிம்மா. பாதில பாதிய இப்ப குடுப்போம். அப்புறம் வேலை எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சு மீதியை அப்புறம் கொடுக்கலாம்... தப்பா பேசிட்டேனாம்மா...” “இல்லடி என் செல்லப் பொண்ணு... தெக்கத்திப் பொண்ணுங்களே புத்திசாலிங்கதான்...” போபால், அலிகள் போய்விட்டார்கள். மத்தியானம் கணக்கோடு வருவதாக சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். இதற்குள் மேகலை, அம்மாவின் காயங்களை தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டாள். பிறகு “உங்களமாதிரி பெரிய மனசு உள்ளவங்களையும் கடவுள் இப்படி படச்சிட்டாரே” என்று தாபத்தோடு சொன்னாள். கங்காதேவி அவள் கைகளை எடுத்துத் தன தோளில் போட்டுக்கொண்டே உபன்யாசம் செய்வது போல ஒப்பித்தாள். “மேகல்... உடம்புல ஊனம் உள்ளவர்களுக்கு இயற்கை நஷ்ட ஈடா ஒரு அசாத்திய சக்திய கொடுக்குது. ஹெலன் ஹெல்லரே இதுக்கு ஒரு உதாரணம். பைபிளில் கூட ஒரு வாசகம் உண்டு... தேவகுமாரன் உலக பாவங்களைச் சுமந்தது மாதிரி, அவர் வழியில் மானுடத்தின் பாவங்களைச் சுமக்கக் கடவுள் திடமான, நம்பிக்கைக்குரிய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிலுவையைச் சுமக்கச் சொல்லிக் கொடுக்கிறாராம். இது பொய்யா இருந்தாலும், இதுலயும் ஒரு உண்மை இருக்கு. முடம், செவிடு, குருடு போன்ற ஊனம் கடவுள் கொடுத்த சிலுவை என்றால், முழுக்க முழுக்க அலித்தன்மை கொண்ட நாம் சுமக்கிற சிலுவை ஏசுநாதர் சுமந்ததை விடப் பெரிய சிலுவை. பிறக்கும்பேதே மரித்து அந்த மரிப்பிலிருந்து எழுந்தவர்கள் நாம். அதனால நம்மள பற்றி நாமே இரக்கப்பட வேண்டாம்!” “உங்களால எப்படியம்மா இப்படிப் பேச முடியுது...?” “யாரையும் வியந்து பார்க்காதே! நான் இப்படிப் பேசுறது நீ நினைக்கிறது மாதிரி பெரிசல்ல. நம் முன்னோர்கள், நமக்காக எழுதி வைச்சிருக்கிற புத்தகங்களைப் படித்தால். அறிவு தானாய் பெருகும். பட்டறிவை அதில் கலந்தால், அதுவே போகப் போக ஞானம் ஆகும். எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். இன்னைக்கும் நாளைக்குமான உதவி அல்ல. என் வாழ்நாள் வரைக்குமான உதவி...” “அதுக்குத்தானம்மா நான் இருக்கேன்.” “தினமும் காலையில் ஒரு மணி நேரம்... மாலையில் ஒரு மணி நேரம் நான் சொல்ற புத்தகங்களை நீ படிச்சுக் காட்டணும் செய்வியா...?” “எங்க ஊருல ஒரு பழமொழிம்மா. கரும்பு தின்ன கூலியான்னு...” “அப்படிச் சொல்லு என் ராசாத்தி. காலைல இந்த சமூகத்தை தராசில் நிறுத்த கார்ல்மார்க்சோட சிந்தனைய எளிய முறையில் விளக்கும் கட்டுரைகளைப் படிச்சுக் காட்டணும், மாலையில் பகவத்கீதை, இல்லன்னா பைபிள். இப்படி என்னோட ஆயுள் பரியந்தம் வரைக்கும் நீ படிச்சுக் காட்டணும்.” “இப்பவே ஆரம்பிக்கலாமா அம்மா...” “வேண்டாம்மா. முதல்ல அந்த சர்தார்ஜிய போய் பார்ப்போம். ஆயிரம் புத்தகப் படிப்பைவிட ஒரு மனிதாபிமானம் உயர்ந்தது. இதை நான் புத்தகத்திலதான் படிச்சேன். ஆனால் நீயோ அதைச் செயலில் காட்டிட்டே. இந்த வீட்டுக்கு இனிமேல் நீ இளவரசி அல்ல, அசல் மகாராணி! இனிமேல் நான் நிம்மதியா சாவேன்.” “கடைசியில சொன்ன வார்த்த இனிமேல், உங்க வாயில இருந்து வரக்கூடாதும்மா...” “யார் சொன்னது? ஒரு தாய் பால் குடிக்கும் குழந்தையை ஒரு மார்பகத்திலிருந்து இன்னொரு மார்பகத்திற்கு மாற்றும்போது உள்ள இடைவெளிதான் மரணமுன்னு டாகூர் சொன்னார். மரண பயத்தை விடுகிறவர்களிடம்தான், வாழ்க்கை சிநேகிதமாய் சிரிக்கும்.” மேகலை, கங்காதேவியை ஆகாயமும் பூமியுமாய் ஆனவள் போல் பார்த்தாள். ஆணென்றோ, பெண்ணென்றோ, அலியென்றோ கூறமுடியாத ஒரு அருள்வடிவாய் கண்டாள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|