உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
39 கூத்தாண்டவர் கோயிலுக்கு, முன்னாலும் பின்னாலும், சராசரி மனிதர்களுக்குக் கூத்தாகிப் போனவர்களின் கூட்டமயம். சந்தனக் காப்பிட்ட கூத்தாண்டவர் சிலை, சிறிது தொலைவில் அலை அலையாய் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. அந்தக் கடலிரைச்சல் காதில் பட்டு, கவனம் கலைந்து, கூத்தாண்டவர் திடுக்கிட்டுப் பார்ப்பது போன்ற கண்கள். பீடத்திற்குக் கீழே கிருஷ்ணன், அலியாய் உருவெடுத்து அரவானிடம் கழுத்தை நீட்டும் படம். இதற்கு அருகே பசியடங்காக் காளியின் கோர சொரூபப் படம். அந்தச் சின்னக் கருவறைக்குள், ஒரே புகை மயம், தேங்காய்த் தண்ணிர் குட்டைபோல் பெருகியிருந்தது. அந்தக் கோவிலுக்குப் பின்பக்கம் ஒரே மாதிரியான குடிசை வீடுகள். அவற்றின் திண்ணைகள் கூட மேடு பள்ளமில்லாமல் இடையிடையே வாய்களைக் காட்டிக் கொண்டிருப்பது போன்று தோன்றின. ஒவ்வொரு திண்ணையிலும், நான்கைந்து அலிகள். ஊர் ஊராய், மொழி மொழியாய், கூடியிருந்தார்கள். நாதியற்றது போல், சாதியற்ற சனங்கள். ஒருத்தி புருவத்திற்கு மை தீட்டிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி, மேக்கப் செட்டிலுள்ள கண்ணாடியைச் சார்த்தி வைத்துவிட்டு, அழகு பார்த்தாள். இன்னொருத்தி வேடிக்கை பார்த்த விடலைப் பயல்களை துரத்திவிட்டு, பாவாடைமேல் படர்ந்த வாயில் புடவையைக் கழட்டிவிட்டு, பட்டுப் புடவையைக் கட்டிக்கப் போனாள். கொண்டைக் குருவிகளைப் போன்ற சத்தம். பூணிக்குருவி மாதிரியான சிணுங்கல்கள். சிலருக்குப் பற்கள் மட்டுமே வெள்ளை. சிலருக்கு முழி மட்டுமே கருப்பு. தூக்கணாங்குருவிக் கூடுகள் மாதிரி கொண்டைகள். அவற்றில் அரளிப் பூக்களிலிருந்து அத்தனை பூக்களும் சவகாசம் செய்தன. அந்தக் கோவிலுக்கு முன்னால், கற்பூரங்கள் திட்டுத் திட்டாய் ஏற்றப்பட்டு, காட்டுத் தீயாய்ப் பற்றி எரிந்தன. பல அலிகள் கருப்பட்டியை விட, பெரிய பெரிய கற்பூரக் கட்டிகளைப் போட்டார்கள். பேச்சைக் குறைக்காத உருமி மேளம். அலிகள் அல்லாதோர், அந்தக் குப்பத்து மக்கள், தேங்காய் பழத்தட்டுக்களோடு கூடி நின்றார்கள். அக்கம் பக்கத்து அற்புதப் பிறவிகளைக் கூவாகத்தில் பார்ப்பது போல் பார்க்காமல், தங்களில் ஒருவர் போல் பார்த்தார்கள். சிலருக்கு உறவுமற்ற பகையுமற்ற சூன்யப் பார்வை. கூத்தாண்டவர் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம், பெரிய பெரிய கற்கள் கோணல் மாணலாகக் கிடந்தன. அவற்றிற்கு இடையே சதுரம் சதுரமான மணல் திட்டு. அங்கே அக்கம்பக்கத்து அலிகளின் ஜமா. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு சண்டை. அந்த இருவருக்காக, கட்சி பிரிந்து கையை நீட்டி நீட்டி, தட்டித் தட்டி ஆளுக்கு ஆள் பேச்சு. ஜமாத் தலைவி சுந்தரம்மா, அவர்கள் கத்தி அடங்கட்டும் என்பது போல் விட்டுப்பிடித்தாள். அந்தச் சமயத்தில் ஒரு வெள்ளைக்கார். கடலில் போகும் படகு போல் வந்து நின்றது. அதன் முன்பக்க, பின்பக்க கதவுகளிலிருந்து, ஆறுபேர் சிநேகிதமாய்ச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். மேகலை, வெளிர் மஞ்சள் பட்டுச் சேலையால் தலையை மறைத்த முக்காட்டை எடுத்தாள். நீலிமா, ஒரு அசத்தலான பார்வையோடு நின்றாள். லட்சுமியும், குஞ்சம்மாவும், மேகலை பக்கமே நின்று கொண்ட போது, இது வரை கடலையே பார்த்திராத மார்கரெட்டும், பகுச்சார் தேவியும் சிறிது ஓடிப்போய் ஆர்ப்பரிக்கும் கடலையே அங்குமிங்குமாய் துள்ளித் துள்ளிப் பார்த்தார்கள். கீழே உட்கார்ந்திருந்த அலிப் பெண்கள் அந்த அறுவரையும் மேலாய் பார்த்தார்கள். அவர்கள் கழுத்தில் மின்னிய நகைகளின், கண்கூச்சத்தையும் மறந்து அதிசயித்துப் பார்த்தனர். நிச்சயமாய் அது ‘கவரிங்’ இல்லை என்பதைக் கண்டறிந்ததும், அவர்களைக் கையாட்டிக் கூப்பிட்டார்கள். விவகாரம் பேசுவதற்கு, தான் ஆயத்தம் செய்தபோது, சேலாக்கள் கார்க்காரிகளைப் பார்ப்பதில் ஜமாத் தலைவிக்கு சிறிது எரிச்சல். ஆனாலும், தன்னை அறியாமலே எழுந்து நீலிமா பக்கம் போனாள். ஏதோ பேசினாள். உடனே அவள் - இடுப்பில் கைதட்டி, “மேகலை மே போலோ” என்று அவளைச் சுட்டிக் காட்டினாள். ஜமாத் தலைவியான சுந்தரம்மா, தனது குண்டுச்சட்டி உடம்பை ஆட்டியபடியே கேட்டாள். “அப் கிதர் ஹை...” “தமிழிலேயே பேசுங்க. நானும் தமிழ் நாட்டுக்காரிதான்... படித்ததும் பக்கத்துலதான்...” மேகலை மேற்கொண்டும் பேசாமல் அப்படியே நின்றாள். சுந்தரம்மாவும் புரிந்துகொண்டாள். ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் ஒவ்வொரு சோகம். அதை இடம் பொருள் ஏவல் தெரியாமல் கொட்ட முடியாது. அவள், நீலிமாவின் கையையும் மேகலையின் கையையும் ஒரு சேரப் பிடித்துக் கூட்டிப் போனாள். கீழே காய்ந்து கிடந்த மரத்தைக் காட்டி உட்காரச் சொன்னாள். பிறகு அது அவர்களுக்குச் சரிப்படாது என்பதுபோல் ‘பக்கியடிக்காத’ ஒரு பாறாங்கல்லைக் காட்டினாள். அவர்களோ தரையிலேயே உட்கார்ந்தார்கள். குஞ்சம்மாவிடம் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த லட்சுமி அங்கே ஓடிவந்து மோவாயை இடித்து இடித்துச் சொன்னாள். “நாங்களும் பார்த்தாலும் பாத்தோம்மா... இப்படி ஒரு நிலமைய பார்க்கலம்மா... கடலூர்ல ஈயடிக்கிற பயல்கூட லாட்ஜ்ல ரூம் கிடையாதுன்னு நக்கலாய் சொல்றான். ரூம் இல்லன்னா இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு ஏன் நக்கல், இளிப்பு, எளக்காரம்... எங்க டெல்லியாயிருந்தால், பீஸ் பீஸா ‘கவாப்’ செய்திருப்போம். இல்லன்னா ஜோடு பிஞ்சிருக்கும்...” ஒரு மோகன முகக்காரி சலிப்போடு பதிலளித்தாள். “நீங்க வேற. அப்படியே ரூம் கிடைச்சாலும், நடு ராத்திரியில போலீஸ்காரன் வந்து கதவத் தட்டுவான். கஞ்சா எவ்வளவு வச்சிருக்கேன்னு கன்னத்தில அறைவான். மதுரையில நான் பட்டபாடு...” மேகலை, ஜமாத் தலைவியின் பக்கமாய் நெருங்கிப் போய் உட்கார்ந்து கொண்டாள். எதிரில் யாரோ ஒருத்தன் லுங்கியும் பனியனுமாய், பிட்டத்தைக் குலுக்கிக் கொண்டே அன்னநடை போட்டான். சந்தேகம் கேட்டாள். “நம்ம இனம் மாதிரி தெரியுது. ஆனால் நம்மையும் கண்டுக்காமல் சேலயும் கட்டிக்காமலே திரியுது.” “அது எனக்குத் தெருஞ்சவள்தான். சொந்த வீட்லய இருக்காள்: அங்கங்க சமையல் வேலைக்குப் போயிட்டு அண்ணன் வீட்டுக்கு போயிடும்... குடும்பத்துலயும், யாரும் கட்டுப்படுத்தல. இது மாதிரி படிதாண்டா பத்தினி மாதிரியும் இருக்காளுக. காய்கறி வித்துப் பிழைக்கிறாளுக. இந்தக் கடலூர்ல கூட ஒருத்தன் அஞ்சு நாள் சைக்கிள் விட்டான். அந்த அஞ்சு நாளும் ஆடிப்பாடுறதுக்கு நம்மள மாதிரி ஜீவன்கள் வந்தாளுங்க. ஆனாலும், ஒன்னை மாதிரி என்ன மாதிரி, வீட்ட விட்டு தொரத்தப்பட்டு அலங்கோலமா ஆனவங்கதான் மெஜாரிட்டி. நீ என்ன நினைக்கே...” மேகலை, குடும்பத்தை நினைத்தாள். மணியார்டர் பணம் திரும்பி வந்ததையும் நினைத்தாள். என்னையும் வீட்டோடு வைத்திருந்தால், எப்படி இருந்திருக்கும்... இயல்பான அவளது உள்ளத்தின் இளக்கம் திரவ நிலையிலிருந்து, திடப் பொருளானது. தனக்குள்ளேயே ஏதேதோ முனங்கிக் கொண்டாள். இதற்குள், லட்சுமி, ‘ஒன்றைத்’ தேடிப் பிடித்துச் செல்லம் செல்லமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள். குஞ்சம்மாவுக்கு, ஒரு மலையாள அலி கிடைத்தாள். மார்க்ரெட்டும் பகுச்சார்தேவியும், இன்னும் கடல் பக்கமிருந்து திரும்பவில்லை. நீலிமா பெங்காலியில் உரத்துக் கத்தினாள். அப்படியாவது எந்த வங்காளிக்காரியும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும் என்பது போல். பிறகு தனது தோல்வியை வெற்றியாக்கும் வகையில் சிறிது தொலைவில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மொழியறியாப் பெண்களுடன் விழியால் பேசினாள். அப்புறம் டோலக்கின் டொக் டொக். அவர்களின் டக்... டக்... எல்லோருடைய கவனமும் மேகலையை விட்டு விட்டுப் புதுக்கதாநாயகியான நீலிமாவின் ரொட்டி மாவு முகம் நோக்கிப் போனபோது, அவளை விட இன்னொன்று அதிகமாகக் கவர்ந்தது. அரவான் சாமியின் மரத்தலை வைக்கப்பட்ட கோயில் தேர், மேள தாளத்துடனும், வாணவேடிக்கையுடனும் வந்துகொண்டிருந்தது. இங்கிருந்த அலிகளைப் போல் பல மடங்கு அலிக்கூட்டம், தேருக்கு முன்னாலும் பின்னாலும் ஆடிப்பாடி வந்தனர். கரகாட்டம், காவடியாட்டம், பிரேக் டான்ஸ். நீலிமா பக்கத்திலிருந் தவள்களை விட்டு விட்டு அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து டோலக்கைத் தட்ட விட்டாள். இதற்குள், அரவான் என்றும் அழைக்கப்படும் கூத்தாண்டவரின் தேர் கோவிலுக்கு எதிரே வந்தபோது, உள்ளூர் மேளம் விலகி, செட்டு மேளம் அதிர்ந்தது. நாதஸ்வரம் உச்சத்திற்குப் போனது. கற்பூர ஒளி வட்டத்தோடு கீழே இறக்கப்பட்ட அரவான் தலைக்குத் தயாராய் வைக்கப்பட்ட மரக்கால்கள், மரக்கைகள் உட்பட அத்தனை உறுப்புக்களும் பொருத்தப்பட்டன. அவருக்கு மடிசார் வேட்டியும், மஞ்சள் கலர் சட்டையும் உடுத்தப்பட்டன. மரக்கையில் ஒரு இரும்பு திரிசூலம் பொறுத்தப்பட்டது. அவர் உள்ளே கருவறைக்குக் கொண்டு போகப் பட்டார். அங்கே இருந்து ஒரே ஒரு கருப்புப் பூசாரி நூற்றுக்கணக்கான மஞ்சள் துண்டுக் கயிறுகளோடு வெளியே வந்தார். கீழே உட்கார்ந்து அவரும் நான்கைந்து சேலா பூசாரிகளும் கயிறுகளில் மஞ்சள் துண்டுகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். உடனே அவள்கள் நாலா பக்கமும் இருந்து குவிந்தார்கள். சின்னக் கருவறைக்குள் இடம் போதவில்லை. இதற்குள் உள்ளூர் மீனவ தர்மகர்த்தாக்கள் ஒவ்வொருத்தியையும் அவள் மினுக்கத்திற்கு ஏற்ப குரல் போட்டார்கள். நகைக்காரிகளுக்கு ஒரு யாசக சத்தம். பட்டுப் புடவைக்காரிக்கு ஒரு தடவல், வாயில் புடவைக்கு ஒரு அதட்டல். கூரைப்புடவைக்கு ஒரு குத்து. நூற்றுக்கணக்கான மொந்தைப் பூக்கள் ஆயிரக்கணக்கான கோணத்தில் சுயமாய் ஆடுவது போன்ற தோற்றம். ஆயிரமாயிரம் மனிதத் தலைகள், ஒரே ஒரு உருவம் பெற்றது போன்ற நெரிசல்; ஆனாலும் எப்படியோ வரிசை விரிவானது. உள்ளேயும் ஒரு பூஜாரி. புகை மூட்டத்திற்குள் புகைந்து போனவர். கருவறைக்குள் வந்த அலிகளுக்கு, மஞ்சள் துண்டு கொண்ட மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டார். உள்ளே தாலி போட்டவள்கள் வெளியே நின்ற வெறுங்கழுத்துகளை ஏளனமாய்ப் பார்த்தன. சிறிது ஒதுங்கி நின்ற மேகலையைச் சுட்டிக்காட்டி, ஜமாத்தலைவி சுந்தரம்மா மூத்த தர்மகர்த்தா ஒருவரிடம் ஏதோ சொன்னாள். அவள், கார் வைத்திருப்பதை வார்த்தையாலும் சொல்லி, இரண்டு கைகளையும் ஸ்டியரிங் மாதிரி வைத்து அங்கேயே கார் ஒட்டுவது போலக் காட்டி, படம் போட்டுக் கதை சொல்வதுபோல் சொன்னாள். உடனே அந்த தர்மகர்த்தா மேகலைமீது ஒரு வி.ஐ.பி. பார்வை போட்டார். நாற்பது வயது சுந்தரம்மாவே, பெண்ணுக்குத் தோழியாக உள்ளே போனாள். உருண்டு திரண்ட கம்பத்து ஆண்டவராய் உள்ள உற்சவமூர்த்தி கூத்தாண்டவரையும் அதே மாதிரி கற்சிலையாய் ஆனவரையும் அவள் உற்றுப்பார்த்தாள். அப்போது பூசாரி, தேங்காய் உடைத்த கையோடு, அவள் கழுத்தை லேசாய் வளைத்து தாலி கட்டினார். பட்டுப் புடவையோடும், பகட்டும் நகைகளோடும் தோன்றிய அவள், வித்தியாசப்பட்டவள் என்பதை உணர்ந்ததுபோல் மூன்று முடிச்சுக்களையும் ஆற அமர முழுமையாகவும் வித்தியாசமாகவும் கட்டினார். பிறகு சுந்தரம்மாவுக்கு ஒப்புக்குக் கட்டுவதுபோல் ஒரு இழுப்பு இழுத்தால் அவிழ்ந்துவிடுவது மாதிரி, தாலி, கருவறையிலிருந்து வெளியே வந்த மேகலை, கூத்தாண்டவரையே வெறித்துப் பார்த்தாள். அங்கே, அதே மர உருவம் மனிதனாகிறது. கையில் பிடித்துள்ள சூலாயுதம் ஸ்டெதாஸ்கோப்பாகிறது. டேவிட். அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். மேகலை கழுத்தில் தொங்கிய மஞ்சள் துண்டு தாலியை,கண்களுக்குக் கொண்டு போய் ஒற்றிக் கொண்டாள். மனதிற்குள் டேவிட், டேவிட் என்றாள். அவளை ஆச்சரியமாய் பார்த்த சுந்தரம்மாவிடம் பட்டும் படாமலும் கேட்டாள். “கடலூர்ல டேவிட்டுன்னு யாராவது டாக்டர் இருக்காங்களா?” “டேவிட்டோ எட்வர்டோ. பிள்ள கழிக்கறதுல ஒன்னாம் நம்பர்.” “நான் சொல்றவரு நல்ல மனுஷன்.” “எங்க பார்த்தாலும் டாக்டரு... டாக்டர் ஜனத்தொகை பெருத்துப் போச்சு. யார் கண்டா டேவிட்டை” “சரி, இதுக்குமேல என்ன நடக்கும்?" “எல்லாருக்கும் தாலி கட்டுன பிறகு கூத்தாண்டவர் புறப்படுவார். நாமும் நம்ம புருஷன் பின்னால ஆடிப் பாடணும். அப்புறம் அவரை காளிக்கு பலி கொடுப்பாங்க. நாம் தாலியறுக்கணும். இவ்வளவும் முடிய நாளைக்கு பகல் பன்னிரண்டு மணி ஆயிடும். நீ இப்பத்தான் மொதல் தடவை வாறியா?” “ஆமாம்.” “அரவான் சாமி கதை தெரியுமா?” “ஒரு காரியம் செய்யலாமா? காரு ரெடியா இருக்குது. கடலூர ஒரு சுற்றுச் சுற்றிட்டு சிதம்பரத்துக்கும் போயிட்டு வந்துடுவோமா.” “நாம் போறதுக்குள்ள கோயிலை மூடிடுவாங்களே!” “கோயில மூடலாம். ஆனால், கோபுரத்தை மூட முடியுமா? எட்டி நின்று பார்த்துட்டால், அதுவே எனக்கு பெரிசு.” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|