41

     மேகலை வேட்டி சட்டையோடு, சுயம்புவானான்.

     சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கருவேலங்காட்டைத் தன்னை விழுங்கப் போவதுபோல் பயந்த அதே சுயம்பு, இப்போது அந்தக் காட்டையே விழுங்கப் போவதுபோல் பார்த்தான். அந்தக்காடு அவனை விழுங்கக்கூடிய வகையிலும் இல்லை. பாதிப் பொட்டல். கருவேல மரங்களின் வம்சாவழிகள் ஆங்காங்கே சிறுபான்மையாகக் கிடந்தன. ஆகாய நிலா பாதியாகி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்தக் காட்டைக் கண்போல் காத்த வாட்ச்மேன் வீரபாண்டியை விட்டு வைத்திருக் கிறார்களோ அல்லது அவனையும் மரமாய் வெட்டி மண்ணில் சாய்த்தார்களோ...

     சுயசிந்தனையிலிருந்து வெளிப்பட்ட சுயம்பு, அருகே நின்ற வெள்ளைக் காரில் வெளியே தென்பட்ட வளையல் கைகளைப் பிடித்துக்கொண்டு கீழே குனிந்து ஏதோ சொன்னான். திறக்கப்படப்போன, பின் கதவை இவனே வலுக்கட்டாயமாகச் சாத்திவிட்டு அந்தக் கார் திரும்புவது வரைக்கும் நின்றான். அது ஓடாமல் தயங்கித் தயங்கி நடந்தபோது, இவன் ஓடிப்போய் ஏதோ சொல்ல, அது ஓடத் துவங்கியது.

     சுயம்பு பழைய பாதையிலேயே நடந்தான். ஆதி திராவிட குடியிருப்பு வழியாக நடந்து, செருப்பையும் மீறி, காலில் துளைத்த முள்ளை எடுப்பதற்காக நின்றான். அப்போது இருந்த தொகுப்பு வீடுகளே இப்போது மக்கடித்துக் கிடந்தன. ஆனால் அந்தப் புளியமரக் குடிசைகள் பெருகியிருப்பதுபோல் தோன்றின. சுயம்பு அங்கிருந்து தாவி, அதே மணல்வாரி ஓடை வழியாகப் போய், மேற்குப் பக்கமாய்ச் சுற்றி வளைத்தே நடந்தான்.

     முன்பு மாதிரி பயந்தல்ல. மனதின் நினைவுகளை அசைபோட்டுப் பார்ப்பதற்கு, நடந்தவழியே நல்லதாகப் பட்டது. அதோடு, வீட்டில் என்ன நிலமையோ என்ற பயம். அதை எதிர்கொள்ள ஒரு தயக்கம்.

     சுயம்பு இப்போது வேகித்து நடந்தான். ஆங்காங்கே தோன்றிய புதுப் பணக்கார வீடுகளை பட்டும் படாமலும் பார்த்தபடியே நடந்தான். குடும்பத்துக்கு ஏற்கெனவே ஏற்பட்ட அதிர்ச்சியை, புதுப்பிக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு வேஷத்தையும் மாற்றிக் கொண்டான். கடலூரில் வாங்கிய, வேட்டி சட்டை. ஒருவேளை புடவையோடு போனால் நிராகரிக்கப்படுவோமோ என்ற பயத்தால் வாங்கிப் போட்டது. அதோடு, தன்னைத்தானே இப்போது புரிந்து கொண்டதால், அவனுக்கு அந்த வேட்டி சட்டையும் விகற்பமாகத் தெரியவில்லை. கொண்டைதான் ஒரு மாதிரி தெரிந்தது. பரவாயில்லை. அவன் தாத்தா வைத்திருந்த கொண்டைதான். அடிக்கடி முடியைக் கத்தரித்து, இதற்கென்றே வரும் ‘முடிக்காரனுக்கு’ அப்போதே ஒரு ரூபாய்க்கு விற்பாராம்.

     சுயம்பு வீட்டை நெருங்க நெருங்க வேகப்பட்டான். இப்போது ஒவ்வொரு அடியும் ஒரு கிலோ மீட்டர் துாரமாகத் தோன்றியது. ஓடிப்பார்த்தான். அப்படியும் தூரம் குறையாதது போன்ற உளைச்சல். இன்னும் எவ்வளவு தூரம் என்பதுபோல் ஒரு குத்து மதிப்புப் போட்டான். இன்னும் அவ்வளவு தூரமா என்பதுபோல் ஓடி ஓடி நடந்தான். ஆனாலும் அந்த வேப்பமரத்தடிக்கு வந்தபோது, கால்கள் உடம்புக்கு நங்கூரமாயின. இப்படி துடித்த தான், இவ்வளவு நாளும், எப்படித்தான் இருந்தோம் என்று தன்னைத்தானே வியந்துகொண்டு நடந்தவன், இப்போது அந்த வேப்ப மரத்தடியில் நின்று தனது கேள்விக்கே விடை கண்டது போல் நிலைகுலைந்து வெந்து நின்றான். அந்த வீட்டை ஒன்றையே குறியாக வைத்து புதிய நாகரிகச் சுவடுகள் எதையும் கவனிக்காமல் நடந்தவன், திடீரென்று முடவனானான். அந்த வேப்பமரத்தைத் தோழமையோடு பார்த்தான். கிளைகள் அதிகமாக இல்லை. ஆங்காங்கே வெறும் குச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. அதன் தூர்கூடச் சொத்தை சொத்தையாய் தோன்றியது. பட்டைகள் தொட்ட உடனே கீழே விழுந்தன. ஆனாலும், அது அவனுக்கு ஒரு உயிர்தோழன் மாதிரி உறவாடுவது போலிருந்தது. காற்றில் அவன் தோளில் விழுந்த ஒரு வேப்பம்பழம் அவனைச் சாப்பிடுகிறாயா என்று கேட்டது போலிருந்தது. அவனும், அதைக் குசலம் விசாரிப்பது போல் அதன் அடிவாரத்தைச் செல்லமாகத் தட்டினான். தூரைக் கட்டிப்பிடித்து நின்றான்.

     உடனடியாக, ஒரு நாய்ச் சத்தம். அவனைக் கடித்துக் காயப்படுத்த வந்த பெரிய நாய். அவனுக்கும் லேசாய் பயம் பிடித்தது. அந்த வேப்ப மரத்தில் ஏறலாமா என்றுகூட குதிகாலில் நின்றான். கைகளை மேல் நோக்கி எக்கினான். இதற்குள், வெள்ளையும் சொள்ளையுமான அந்த நாய் அவனைப் பார்த்து வாலை ஆட்டியது. முகத்தைக் குழைத்தது. அதன் வால் வயோதிகத்தில் தானாய் ஆடுவது போலிருந்தது. அவனைப் பொய்க்கடியாகவும் கடித்தது. பத்தாண்டுகளுக்கு முன் இருந்த அதே குட்டி நாய். அவன், அதைக் கண்டுபிடிக்கும் முன்பே அது கண்டுவிட்டது. வீட்டு வாசலை நோக்கி சிரமப்பட்டுக் குறைத்தது. வயோதிகம் அந்தக் குலைச்சலிலேயே தெரிந்தது. அவன் அதன் தலையை வருடிவிட்டபோது அந்த அந்திம நாய், குலைப்பதைக்கூட நிறுத்தியது.

     திடீரென்று முன்வாசல் திறக்கப்படுகிறது. அதில் ஒடுங்கிப்போன ஒரு உருவம். யார் இது... அன்று போல் அக்காவா. இல்லை. அண்ணன். கூடப்பிறந்த அண்ணன்... அய்யோ... இது என்ன கோலம்... கமலைக்கல் மாதிரி இருந்த அண்ணன்... இப்படி ஏன் உருவிழந்து போய்விட்டான். சட்டைக் கம்பு மாதிரி வீரியப்பட்ட அவன் கைகளும் கால்களும் இப்படி ஏன் முருங்கைக் கம்பாய் ஆயின...

     ஆறுமுகப் பாண்டி தம்பியையே பார்த்தான். கையோ காலோ வெட்டுப்படும்போது, சில விநாடிகள் வலியோ, ரத்தமோ தெரியாமல் வெள்ளையாய்த் தெரியுமே, அப்படிப்பட்ட உணர்வற்ற பார்வை. அப்புறம் அதில் பீறிடும் ரத்தம் போன்ற வேகம். பிராணனைப் பிய்த்தெறியும் வலி. பாசவலி,

     அண்ணன், பாட்டரி லைட்டை தூக்கி எறிந்துவிட்டு, தம்பியின் பக்கம் ஓடினான். தம்பி சூட்கேஸைத் தூக்கிப் போட்டுவிட்டு, அண்ணனை நோக்கி ஓடினான். இருவரும் மோதிக்கொண்டார்கள். முட்டிக்கொண்டார்கள். இருவருக்கும் இடையே எந்த சப்தமும் வரவில்லை. ஒட்டிக்கொண்டவர்களைப் பிரிக்க முடியாது என்பது போன்ற நெருக்கம். இடைவெளியே இல்லாத அணைப்பு. காற்றுக்கூட உட்புக முடியாத பாசத் தழுவல், அண்ணன், தம்பியை நிமிர்த்துகிறான். பிறகு அப்படியே அழுது அவன் தலையில் முகம் போட்டு மருவுகிறான். தம்பி, அண்ணனை நிமிர்ந்து பார்க்க முயற்சிக்கிறான். அந்த முயற்சி தோற்று கண்கள் அண்ணனின் மார்பை நனைக்கின்றன. அண்ணன் தம்பிமேல் போட்ட பிடியை விடாமலே புலம்புகிறான்.

     “தம்பி... எங்கள மறந்துட்டியேடா! ஒன்ன எங்கெல்லாமோ தேடினோம்! யாரை மறந்தாலும், இந்த அண்ணனை மறக்கலாமாடா... மறக்கக்கூடிய அண்ணனாடா நான்... என் உடன்பிறப்பே, ஒன் அண்ணி கேட்ட ஒரு சொல்லாலேயே நான் இன்னும் தவிச்சுக்கிட்டிருக்கேன்... ஒரு கோடி சொல்லாலயும் விளக்க முடியாத ஒன் நிலமைய நெனைச்சு எப்படிப் புலம்பறியோ... எங்கெல்லாம் சுத்துனியோ? ஒனக்கு நாங்க செய்த கொடுமையை மறந்துடுடா. அதுக்கு கடவுள் நல்லாவே கூலி கொடுத்துட்டார்டா... அன்றைக்கு என் காலடியிலேயே இருப்பேன்னு சொன்னியே! அப்படிச் சொன்ன என் ஆசத் தம்பியை காலால உதறிட்டேனே, தம்பி... என் உடன்பிறப்பே, பத்தாண்டுக்குப் பிறகு பழையபடி கிடைச்ச என் செல்வமே. ஒன்னை விட மாட்டேண்டா. இனிமேல் விடவே மாட்டேண்டா...”

     முட்டி மோதி அழுத அண்ணனுக்கு, அவனே ஆறுதல் சொல்ல வேண்டியதாயிற்று. இப்போதுதான் அவன் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு எண்ணம் உள்ளோடியது. அந்த அளவிற்கு அண்ணன் அழுதழுது அவனை அழச் செய்யாத நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டான். சுயம்பு தட்டுத் தடுமாறிக் கேட்டான். கேட்கும்போதே அழுகை.

     “வீட்ல... வீட்ல... எல்லாரும்...”

     “வாடா... உள்ள வந்து நீயே பாருடா, யாரும் சாகலை.”

     “அக்கா... அவளோட கலியாணம்.”

     “அவள் மட்டும் நல்லபடியாய் போயிட்டாள். நிம்மதியாய் இருக்காள்.”

     அந்த வாசலில், அன்று போல் இன்று வேறு எவரும் வெளிப்படவில்லை. சுயம்புவுக்கு, அதுவே வேர்த்துக் கொட்ட வைத்தது. அண்ணனை ஆதரவாகப் பிடித்தபடியே வாசலைத் தாண்டி உள்ளே போனான். அந்த இரண்டு பத்தி வீட்டின் திண்ணையில் நார் நாராய் ஒரு உருவம். கட்டிலில் கிடந்தாலும் கட்டில்தான் தெரிந்ததே தவிர, அந்த உருவம் தெரியவில்லை. அதற்கு எதிர்ப்புறம் பாயில் ஒரு உருவம். ஊற வைத்த சேலைபோல், ஒடுங்கிக் கிடந்தது.

     ஆறுமுகப்பாண்டி, மின்விளக்கைப் போட்டான். கட்டிலின் அருகே போய் ‘எப்பா எழுந்திரிங்க... யாரு வந்திருக்கான்னு பாரும்’ என்றான். அதே சத்தத்தில், ‘எம்மா உன்னையுந்தான்’ என்றான். ஆனாலும் அந்த உருவங்கள் அசையவில்லை. பக்கத்துக்கு ஒன்றாக உள்ள இரண்டு அறைக் கதவுகள்தான் திறந்தன. ஒன்றில் மோகனா வெளிப்பட்டாள். இன்னொன்றில் கோமளம். தோள்வரை வளர்ந்த ஒரு பாவாடை தாவணி ஜாக்கெட் பெண்ணைக் காட்டி நின்றாள். அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.

     சுயம்பு அவர்களைப் பார்க்காமல் நார்க்கட்டிலின் பக்கம் குனிந்தான். அப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டான். இதற்குள் தட்டுத்தடுமாறி வந்த அம்மாவின் கழுத்தைத் தோளோடு சேர்த்துப் போட்டுக்கொண்டே ‘எப்பா... எப்பா... நீங்க பெத்த பிள்ள வந்திருக்கேம்பா, ஒங்க பிள்ளைப்பா’ என்று அழுதான்.

     ஆயிரம் ஆயிரம் ஒலி பெருக்கிச் சத்தங்களாலும், மாடுகளின் கத்தலாலும் கோழிகளின் கூவலாலும் தெருச் சண்டைகளின் ஓலங்களாலும் எழுப்ப முடியாத அந்த உருவம், இந்தச் சின்னச் சத்தத்தைக் கேட்டுக் கண்ணைத் திறந்தது. அந்தக் கம்பீரமான முகம், இப்போது பட்டுக் கிடந்தது. வாய் கண்போல் சிறுத்தும், கண்கள் வாய் போல் பெருத்தும் குழிகளாக - பள்ளங்களாகிக் கிடந்தன. ஆனாலும், அந்த உருவத்திற்குள் ஒரு வேகம். உத்திரச் சட்டம் மாதிரியான கைகள் இப்போது ஒரு விரல் தடியில் கிடந்தன. ஆனாலும் அது சுயம்புவின் தோளைப் பற்றுகிறது. அவன் தலையில் போட்டுக்கொள்கிறது. அவன், அதற்குள், அந்த உருவத்தைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைக்கிறான். அந்த உருவம் அவனை நரம்புக் கயிறாய் இழுக்கிறது. ‘என் செல்வமே, என் செல்வமே’ என்று புலம்புகிறது. மேற்கொண்டு பேசமுடியாமல் தலையை ஆட்டுகிறது. உடனே ஆறுமுகப்பாண்டி வந்து அப்பாவைச் சுவரோடுச் சாத்துகிறான். ஆனாலும், அவனை மீறி அந்த உருவத்தின் முகம் சுயம்புவின் முன் கவிழ்கிறது. உமிழ்நீரால் ஒரு முத்தம். கண்ணிரால் மறு முத்தம். இடையிடையே அழுகை ஒலி, அதைத் தடுக்கும் இருமல்கள்.

     சுயம்பு தன் பிடரியில் இன்னொரு முத்தம் கிடைப்பதைப் பார்த்து அப்போதுதான் அம்மாவை உன்னிப்பாய் பார்க்கிறான். அவனால் அலட்சியப் படுத்தப்பட்ட அவன் அம்மா... மதர்ப்போடும் வீராங்கனை போலவும் இருந்த அம்மா, குறுகிப் போயிருக்கிறாள். ஆனாலும் இப்போது அவனை முன்னிலும் அதிகமாய் இறுகப் பற்றுகிறாள். அவன் எலும்புகள் நொறுங்கப் போவதுபோல் இழுத்துப் பிடிக்கிறாள். அவன் கையை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொள்கிறாள். அவன் முதுகில் முகத்தைப் புரட்டுகிறாள். ஈன முனங்கலாய் முனங்குகிறாள். ‘ராசா... ராசா... பாத்தியாடா ஒன் அப்பாவோட கோலத்தை, அண்ணனோட அவலத்தை' என்று மேற்கொண்டு பேசப் போனவளை ஆறுமுகப்பாண்டி ஒரு அதட்டலோடு பார்க்கிறான். அவளைத் தோளோடு தோளாய் சேர்த்துப் பிடித்து அதான் வந்துட்டானே. ராமர்கூட பதினாலு வருஷம் வனவாசம் போகலியா? இதுக்குமேல நாம் அழுதா... அவன் இங்க வந்ததுல் நமக்கு இஷ்டமில்லன்னு அர்த்தம்’ என்று சொல்லிவிட்டு, அம்மாவைத் தரையில் உட்கார வைத்து, வன்னிமரத் தூணில் சாய வைத்தார்.

     கோமளம், சுயம்பு தன் பக்கமாயும் முகம் காட்டி ஒரு அழுகை அழவேண்டும் என்பதுபோல் தனது கண்களைத் துடைக்கிறாள். அடியோடு மாறியவள் இவள்தான். அடியற்றுப் போனவளும் இவள்தான். வட்டமுகம், நீண்டுவிட்டது. கன்னங்கள் குழிகளாகி, மோவாயைத் தனித்துக்காட்டி, ஒருவித பரிதாபத்தையும் பயங்கரத்தையும் ஒரு சேரக் கொடுத்தது. அவள் தன் பக்கத்தில் நின்ற பத்து வயது மகளை, சுயம்பு பக்கம் தள்ளிவிட்டாள். ஆனால் அந்தப் பெண்ணோ முற்றவிட்ட முருங்கைக்காய் மாதிரியான அம்மாவின் கைக்குள் மீண்டும் ஒடுங்குகிறாள். அப்போது ஒரு பதினாறு பதினேழு வயதுப் பயல் உள்ளே இருந்து வருகிறான். ஆறுமுகப்பாண்டியின் முதல் பதிப்பு. அவனைப் போலவே, உருவமும், உள்ளடக்கமும். சுயம்புவை, உன்னிப்பாய்ப் பார்த்தான். மோகனா ஒரு அச்சடி சேலையோடு சின்ன அண்ணனை அமங்கலமாய்ப் பார்த்தாள். அவள் முகத்தில் சிற்சில காய்ப்புக்கள். வாடவிட்ட பூக்களைச் சுமக்கும் வதங்கிய கொடி மாதிரியான தோரணை.

     சுயம்பு அவர்களையும் பார்த்தான். அவர்களும் தனக்குத் தெரியும் என்பதுபோல் தலையாட்டிவிட்டுக் கேட்டான்.

     “அக்காவை... அக்காவை எந்த ஊர்ல கொடுத்திருக்கு? எத்தனை குழந்தை இருக்குது?”

     இப்போது எல்லோரும் சேர்ந்து புலம்புகிறார்கள். ஆறுமுகப்பாண்டி அடக்க முடியாமல் தம்பியைக் கட்டிப் பிடித்து ஓலமிடுகிறார். பிள்ளையார் பேச முடியாமல் விக்குகிறார். வெள்ளையம்மாவின் கை பாதி தலையிலும், பாதி அந்தத் தூணிலும் அடித்துக் கொள்கிறது. மோகனா, தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள். கோமளம் மகளைப் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டே ‘போயிட்டாளே. நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாளே, போகக்கூடாத இடத்துக்குப் போயிட்டாளே’ என்று புலம்புகிறாள். இதுவரை எந்தச் சலனமும் இல்லாமல் நின்ற அந்த விடலைப்பயல் அம்மாவை ஆசுவாசப்படுத்துகிறான்.

     சுயம்பு அவசர அவசரமாய்க் கேட்டான்.

     “எங்கக்கா எங்கே போயிட்டாள்? அய்யோ... சொல்லுங்க! என் உயிரு போகுமுன்னால் சொல்லுங்க!”

     ஆறுமுகப்பாண்டி, நிதானப்படுகிறார். பத்தாண்டு காலத்திற்குப் பிறகு வாராது போல் வந்த மாமணித் தம்பியை அதற்குமேல் அழவிடக்கூடாது என்ற உறுதியுடன் யார் வீட்டிலேயோ யாருக்கோ நடந்ததுபோல் பேசப்போகிறார். முடியவில்லை. இறுதியில் குரலே குற்றுயிராக, வார்த்தைகள் கொலைபட்டு, கொலைபட்டு சுயம்புவிற்கு கொலைவாளாகும்படிச் சொல்கிறார்.

     “நீ போன ஒரு வருஷத்துக்குள்ளேயே தூக்குப் போட்டுச் செத்துட்டாடா! செத்து முடிஞ்சு சிவலோகம் போயிட்டாடா... தம்பி... தம்பி... ஏண்டா பேசமாட்டேங்க... தம்பி... தம்பி... பேசுடா... பேசுடா... ஏடா பெரியவன், சித்தப்பா, நெஞ்சத் தடவி விடுடா. சுக்கை எடுடா... சீக்கிரமா கொண்டு வாடா..."

     சுயம்பு குப்புறக் கிடக்கிறான். மூச்சு முட்டித் தவிக்கிறான். கால்கள் அங்குமிங்குமாய் ஆடின. பிள்ளையார் மகனிடம் வர அல்லாடுகிறார். வெள்ளையம்மா மகன் பக்கம் தவழ்கிறாள். கோமளம் ஒரு சுக்கை எடுத்து தரையில் போட்டு ஒரே கையால் குத்திச் சுக்கல் சுக்கலாக்கி மைத்துனனின் தலையை நிமிர்த்தி வாய்க்குள். கொண்டு போகிறாள். மகன் கொண்டுவந்த தண்ணtரை அவன் வாய்க்குள் ஊற்றுகிறான். ஆறுமுகப்பாண்டி தம்பியை மடியில் கிடத்துகிறார். கட்டிலில் துடிக்கும் அப்பாவைப் பார்த்து அபயம் கொடுக்கும் முருகன் கையைப் போல ஆக்கிக் காட்டுகிறார். மோகனா கொண்டுவந்த இன்னொரு செம்புத் தண்ணிரை எடுத்துத் தம்பியின் முகத்தில் அடிக்கிறார். அவன் லேசாய்க் கண் விழித்தபோது, தம்பியை அம்மாவின் மடியில் போட்டுவிட்டு உள்ளே ஓடுகிறார்.

     அவர் ஓடிய அறைக்குள் தட்டுமுட்டுச் சாமான்கள் கீழே விழும் சத்தம் கேட்கிறது. பூனை பயந்து போய் ‘மியாவ்’ போடுகிறது. அடைகாக்கும் கோழி கூக்குரலிடுகிறது. பத்து நிமிடம் கழித்து வெளியே இருப்பவர்கள், அவரும், மரகதமாய் ஆகப்போகிறாரோ என்று பயந்து உள்ளே போகப் போனபோது, ஆறுமுகப்பாண்டி கையில் ஒரு கசங்கிய தாளோடு வெளியே வந்தார். இதற்குள் அம்மாவின் மடியிலேயே தலையை உருட்டிக்கொண்டிருந்த சுயம்பு மெல்ல எழுந்தான். அண்ணன் அந்தத் தாளை, அவனிடம் நீட்டினார். பிறகு முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு கேவினார்.

     சுயம்பு, அந்தக் காகிதத்தை உற்று உற்றுப் பார்த்தான். எட்டாம் கிளாஸ் எழுத்து... அக்காவின் அதே கையெழுத்து.

     “தம்பி... என் ஆசைத் தம்பியே...

     “இன்னும் கொஞ்ச நேரத்துல... அக்கா சாகப் போறேண்டா... நீ வருவே வருவேன்னு, ஒரு வருஷமா வழி பார்த்து காத்துக் கிடந்தேண்டா... ராத்திரியில் நாய் குலைக்கும் போதெல்லாம்... நீதான் வந்துட்டேன்னு, அக்கா பல தடவ ஓடோடி வந்து கதவத் திறந்தேண்டா... கண் நோகப் பார்த்தேண்டா... நீ வரலியேடா... இன்னைக்கு வராட்டால், நாளைக்கு வருவேன்னு இது வரைக்கும் பிடிச்சு வச்ச மூச்ச இன்னைக்கு ஒரேயடியாய் விடப் போறேண்டா... நானும் செத்து ஆவியாகி ஆகாயத்துல பறந்து உன்னைப் பார்க்க முடியுமான்னு யோசிக்கேண்டா... எனக்கு ஆவின்னு இருந்தால், அது ஒன்னத்தாண்டா சுத்தி வரும்.

     “தம்பி... என் ராசாதி... ராசா... ஒன்ன விரட்டுன இந்த அக்காவ மன்னிச்சுடுடா... சத்தியமாச் சொல்றேண்டா... ஊரு ஒலகத்துல... நான் கலியாணம் நின்ன கவலையில தூக்கு போட்டு செத்ததாய் சொன்னாலும் சொல்லு வாங்க... எலும்பில்லா நாக்கு எப்படி வேணுமுன்னாலும் பேசட்டும். என் மனசு எனக்குத்தான் தெரியும்... என் உடன் பிறப்பே... ஒன்னப் பார்க்க முடியாத ஏக்கத்துல தாண்டா அக்கா சாகப்போறேன்... ஒன்ன நெனைச்ச நெஞ்சுக்கு எந்தக் கலியாணமும் கால்துாசிடா... இப்போ தூக்குக் கயிற எடுக்கப்போற இந்த சமயத்துலகூட நீ எப்பவாவது வருவேன்னு என் மனசுல பட்டால், இந்த உயிரு போகாதுடா... ஆனாலும் நீ வரமாட்டியே... அப்பாவ மாதிரி ஒனக்கும் வைராக்கியம் உண்டே... எப்பவாவது இந்தப் பக்கம் வந்தால்... இந்தத் தாளையே, நானா நினைச்சு வச்சுக்கடா... அக்கா போறேண்டா! ஒன்ன ஆவிரூபத்திலே தேடி வர்றேண்டா!”

     சுயம்பு சூனியமானான். அப்படியே நிலைகுலைந்து கிடந்தான். அண்ணன் முதுகை உலுக்கியதும் அவனுக்கு லேசாய் உணர்வு, கண்ணீரால் நனையப்போன அந்தக் கடிதத்தை அண்ணனிடம் கொடுத்து அதை மடித்துத் தரும்படி சைகை செய்தான். அண்ணன் அந்தக் கடிதத்தை அவன் சொன்னபடியே மடித்து அவன் பைக்குள் போட்ட போது, சுயம்பு அந்தக் கையையும் பையையும் ஒரு சேரப் பிடித்தபடியே அண்ணனின் முழங்கையில், முகம் போட்டு தேய்த்தான்.

     எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக விசும்பினார்கள். பிள்ளையார்தான் தட்டுத் தடுமாறி ‘என் தம்பிய கூப்பிடுங்க. சந்தோஷப்படுவான்...’ என்றார். ஆறுமுகப் பாண்டி, “நீ சேல வேணும்னாலும் கட்டிக்கடா. ஆனால். இனிமேல் நீ என்கூடத்தாண்டா இருக்கணும்...” என்றார். வெள்ளையம்மாள் இப்போது மெலிந்த குரலில் ஒரு விவரம் சொன்னாள்.

     “எப்பா சுயம்பு... ஒங்க அண்ணனும்... மயினியும் நீ போன நாளுல இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுறது இல்லப்பா. அவங்களுக்குள்ள என்ன நடந்துதோ,. ஏது நடந்துதோ. சண்டையுமில்ல. சமாதானமுமில்ல. நேருக்கு நேரா பார்க்கிறதும் இல்ல. நீயாவது புத்தி சொல்லி...”

     கோமளம் அப்படியே உட்கார்ந்து முகத்தைக் கைகளில் மறைத்துக்கொண்டு விம்மினாள். சுயம்புவுக்கோ அக்காவின் தாக்கம் இன்னும் போகவில்லை. ஆனாலும் அண்ணனைக் கேள்வியாய்ப் பார்த்தான். ஆறுமுகப் பாண்டி சலிப்போடு சொன்னார்.

     “சாகும்போது, சங்கரா, சங்கரான்னு சொல்லி என்னடா பிரயோசனம்... ஒடம்புல போட்ட சூட்டை மறந்துடலாம்... ஆனா மனசுல போட்ட சூடு... அந்த சூடு இன்னும் எரிச்சுக்கிட்டுத்தான் இருக்கும்... காதுல ஈட்டி மாதிரி குத்துது... நான் செத்தபிறகு என் நெஞ்சு வெந்தாலும் வேகும். அந்த சொல்லு வேகாதுடா... சரி சரி... இப்போ எதுக்கு அந்தப் பேச்சு... பிள்ளிய தலையெடுத்துட்டால், அதுவே போதும். நம்ம தங்கச்சிய கரையேத்திட்டால், அந்த சந்தோஷம் ஒண்ணே போதும்...”

     ஆறுமுகப்பாண்டி பேசி முடித்ததும், கால் மணி நேரம் கொடுர மெளனம். பிள்ளையாரின் இருமலையும் வெள்ளையம்மாவின் தும்மலையும் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை.

     சுயம்பு அண்ணன் மகனையே நோட்டமிட்டு அவனுக்காகவே மெளனம் கலைத்தான்.

     “நீ என்ன ராசா படிக்கே...”

     “பிளஸ் டு முடிச்சுட்டேன் சித்தப்பா. ஒங்கள மாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன்... இடம் கெடச்சிட்டு. ஒங்கள மாதிரியே மெரிட்ல கிடைச்சது. பணம் கட்ட முடியல. கட்டுறதுக்கும் வசதி இல்ல. ஒங்கள மாதிரியே...”

     “என்ன மாதிரியேன்னு சொன்னே பிச்சுடுவேன் படுவா... நீ நல்லா இருக்கணும்... என்னை மாதிரி ஆகாமல் பெரிய என்ஜினியரா மாறனும், அதுக்கு நான் இருக்கேன். மோகனாவுக்கு மாப்பிள்ள தேடலியா அண்ணாச்சி...”

     “எந்த எடமும் குதிரமாட்டேங்குடா... வயசு வேற ஆயிட்டது. நீ போன துக்கத்துல அவளும் ஒரு வருஷம் பித்துப் பிடிச்சு எதையோ பறிகொடுத்தவள் மாதிரி இருந்தாள். அப்புறம் சரியாயிட்டாள். ஒரு முப்பது வயசு மாப்பிள்ள இருக்கு... நல்ல உத்தியோகம். ஐம்பதாயிரம் ‘சுருள்’ கேக்காங்க. அந்த ரொக்கத்தைக் கொடுத்துட்டா போதும். அக்காளுக்குச் செய்த நகை இருக்கு. வயல் விக்கலாம்னா இந்த வீட்டக் கெடுக்கணும்னே வந்தவள் விடமாட்டேங்கா...”

     “நீயே சொல்லு சுயம்பு... வயல வித்துட்டு எம் பிள்ள தெருவில நிக்கணுமா... ஒருத்தர் வாழறதுக்கு ரெண்டு பேரைக் காவு கொடுக்கணுமா...”

     “பொறுங்க அண்ணி. அப்பாவ... ஏண்ணா இப்படி கவனிக்காம விட்டுட்டே...”

     “வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து உண்டா. சோறு போடும்போதெல்லாம் ‘என் மகன் சுயம்பு சாப்பிட்டானோ இல்லையோ’ன்னு சாப்பாட்டுத் தட்டை எடுத்து வீசுவாரு... அரைப்பட்டினி. முக்கால்பட்டினி, இதனாலய டி.பி. வந்துட்டு. வில்லாததையெல்லாம் வித்துப் பாத்துட்டேன். மருந்தே வேண்டாம்னு சொல்றாரு... நீ வந்துட்ட இல்ல... இனிம சரியாயிடும். ஏதாவது சாப்புடுடா. இந்த வீட்ல எவளும் கேட்கமாட்டாளே...”

     கோமளம், சமையலறைக்குள் போனபோது, சுயம்பு, “நில்லுங்க அண்ணி, இவ்வளவு நடந்த பிறகும் என் வயித்துல எதுவும் இறங்குமா...” என்றான். பிறகு சிறிது இடைவெளி கொடுத்துப் பேசினான்.

     “நாளைக்கு டவுன்ல... ஒன் பேரு என்னடா... மோகனா... சட்டுனு ஞாபகம் வரல... நாளைக்கு நீ என் கூட கோணச்சத்திரத்துக்கு வா... ஒன்பேர்ல பாங்க்ல ஒரு அக்கவுண்ட் போடணும். ‘கோல்ட்’ கார்டு வச்சிருக்கேன்... உன்பேர்ல ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிடுறேன்... அந்த வட்டியில நீ படிக்கணும். மற்ற செலவுக்கு நான் மாதா மாதம் அனுப்புறேன். நீ என் கண்ணு முன்னாலய என்ஜினியராகணும்... அப்புறம் அண்ணாச்சி அப்பாவ நாளைக்கே டவுன்ல ஆஸ்பத்திரியில சேர்க்கணும்... எவ்வளவு செலவானாலும் சரி... மோகனா கலியாணத்துக்கு எவ்வளவு கேட்டாலும் சரின்னு சொல்லுங்க... டெல்லிக்குப் போனதும் பணம் அனுப்பி வைக்கேன். மோகன். இங்க வாடா. என் மருமகளே நீயும் இவனும் இப்படித்தான் தோராயமா இருப்பீங்கன்னு உங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்...”

     பிள்ளையார், இப்போது கொஞ்சம் தெளிவாகப் பேசினார்.

     “நாங்களும் ஒன்ன படாதபாடு படுத்திட்டோம்... அப்புறம் டாக்டருக்கு படிக்கிற பையன் டேவிட் சொன்னப்புறம்தான் எனக்கே புரிஞ்சுது... நீ தனிப் பிறவியாம்... நீ போன வேகத்துலய சேலையக் கட்டிட்டு வந்திருந்தாக்கூட சேர்த்திருப்பேன். நீ எந்தத் திசையில போனேன்னுகூட தெரியாம போச்சே ஒரு லட்டர் போடக்கூடாதாடா? இவ்வளவு பணமும் ஏதுடா...”

     “நான் ஒங்க ரத்தம்பா, கட்டுக்குத்தகைக்கு எடுக்கிற நிலத்து வெள்ளாமையில கால்படிகூட அதிகம் எடுக்காதவருக்குப் பிறந்தவன். ஒரு பைசாகூட தப்பான வழியில சம்பாதிக்கல. இப்போ டேவிட் எங்க இருக்கார். அந்த ஆம்பளப் பசங்க எப்படி இருக்காங்க...”

     “டேவிட் ஆரம்பத்துல வந்தான்... என்னமோ இங்க யாரும் முகம் கொடுத்து பேசுறதில்ல. அந்தப் பயல்களும் ரெண்டு மூணு தடவை வந்தாங்க. அதோட சரி.”

     “மலர் எப்படி இருக்காள் மோகனா...”

     “எவனோ இழுத்துட்டுப் போயி அலக்கழிச்சு பிள்ளையும் வயிறுமா விட்டுட்டான். என்ஜினியர்னு நம்புனாள். புளியமரத்தைப் பிடிச்சேன்னாள். கடைசியல அதுல தூக்குப் போடாம ஓடி வந்துட்டாள்.”

     சுயம்பு எழுந்தான். அக்காள் இருந்த அறையைப் பார்த்து நடந்தான். அந்த அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அந்த இடத்திலேயே பீரோ, தூசி படிந்து கிடந்தது. அக்காளின் படம் வாடிப் போன மாலையோடு தொங்கியது. அவன் தனித்திருக்க, அந்தக் கதவைச் சாத்தப் போனபோது, கோமளமும், மோகனாவும் கைகளைப் பிசைந்தபடி அங்கே வந்தார்கள். அவன் ஒருத்தருக்குப் பேசுவது இன்னொருத்தருக்கு அர்த்தம் புரியாததுபோல், பொதுப்படையாகச் சொன்னான்.

     “கவலைப்படாதீங்க... நீங்க ரெண்டு பேரும் செய்த காரியங்களைப் பற்றி நான் யாருகிட்டயும் மூச்சு விட மாட்டேன். என் மனசுல கூட திருப்பி வரவழைச்சு யோசிக்க மாட்டேன். இப்பவாவது ஒரு உதவி செய்யுங்க. எனக்குத் தாயாகிப்போன என் அக்கா அறையில என்னத் தனியா விடுறீங்களா...”

     சுயம்பு கண்ணிரும் கம்பலையுமாய்க் கதவைச் சாத்தினான்.