அத்தியாயம் 21. பிரிந்தவர் கூடுதல்

     சுப்பையா பிள்ளையின் மனைவி தாயம்மாளின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. அந்த அம்மாள் இட்ட விருந்தைப்போல், மதுரையும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்கள் ஜன்மத்திலே உண்டதில்லை. இவ்வளவு நல்ல குணமுள்ள தம்பதிக்குத் தங்களால் என்ன பிரதி உபகாரம் செய்ய முடியுமென்று அவர்கள் யோசித்தார்கள். சாப்பாடு முடிந்ததும், விசாலமான தெருத் திண்ணைகளில் பாய்கள் விரிக்கப்பட்டன. பிறகு, வாடகைக்கு வாங்கி வந்த ஒரு காந்த விளக்கின் பிரகாசமான ஒளியில், பாய்களின்மீது அவர்கள் உட்கார்ந்து தாம்பூலம் போட்டுக்கொண்டார்கள். அப்பொழுது, சுப்பையா பிள்ளையின் வீடு ஒரு கல்யாண வீட்டைப்போல் தோன்றிற்று. மதுரையின் வாய் ஒரு நிமிஷங் கூடச் சும்மாயிருக்கவில்லை. அவன் வேடிக்கையாகப் பேசி எல்லோரையும் சிரிக்கச் செய்தான். இவ்வாறு எல்லோரும் உல்லாசமாய்ச் சம்பாஷித்துக் கொண்டிருக்கும்பொழுது, வேலன் மட்டும் விசனமுற்று மௌனமாக இருந்தன். அவ்வப்பொழுது சம்பாஷணையில் புகுந்துகொள்ள முயன்றும், அவனால் முடிய வில்லை. வியாகூலம் அவனைப் பிடுங்கித் தின்றது. இதைக் கவனித்த சுப்பையா பிள்ளை, அவனை மெதுவாகக் கேட்டார்.

     “என்னப்பா வேலு, எதைப்பத்தி யோசித்துக்கொண்டிருக்கிறாய்?”

     “ஒண்ணுமில்லீங்க, சோளனைத் தூக்குப் போட்டுடுவாங்களா?”

     “ஒருநாளும் போடமாட்டார்கள். நீ அதைப் பத்திக் கவலைப் படாதே. அவனுக்கு லேசான தண்டனைதான் விதிப்பார்கள். நியாயாதிபதிக்கு அவனிடத்தில் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு இருக்கிறது. ஏதாவது சாக்கு வைத்து, அவனை விடுதலை செய்தாலும் செய்துவிடுவார்,” என்றார் சுப்பையா பிள்ளை.

     “கடவுள் புண்ணியத்திலே அப்படி ஆயிட்டுதுன்னா, ஏன் சொல்றீங்க! அவன் எவ்வளவு நல்லவன் தெரியுங்களா? குடியாலே அல்ல கெட்டுப் போனான்! இன்னக்கி, கோர்ட்டுக்கு வாராட்டி அவனை யாரு அடிக்கிறாங்க. என்னை உட்டிருப்பாங்களா?”

     “ஆ, விடாமலென்ன? ஓ சரி, போனது போச்சு; பழங்கதையை எல்லாம் எடுக்காதே. இது நிஜமாக உனக்கு ஒரு கண்டந்தான். சாமி புண்ணியத்தில் தப்பினாய். இனிமே உனக்கு நல்ல சுகந்தான். பெரிய பயித்தியமாய் இருக்காயே! உனக்காக வள்ளி எப்படிக் காத்திருப்பாள்! அதைக் கொஞ்சம் யோசித்துப் பாரு,” என்று சுப்பையா பிள்ளை தமாஷாகச் சொன்னார்.

     வேலனுடைய முகத்தில் சிரிப்பு அரும்பியது.

     “ஊம், இன்னும் ஒருநாள் தானே? நாளையன்னிக்கி வள்ளி எதிர்கொண்டு அழைக்கமாட்டா?” என்று தாயம்மாள், பரிகாசம் செய்தாள்.

     “நாளனிக்கா! அதுவரையிலும் என்னத்துக்குங்க? நாளைப் பொளுதோடே ஊடு போயிடமாட்டோம்.”

     இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். வேலனுக்குச் சிறிது வெட்கம் உண்டாய்விட்டது.

     “வள்ளி பேச்சு இல்லீங்க, நான் சொன்னது. ஊருக்குப் போவ அவ்வளவு நேரம் பிடிக்காதுன்னேன்,” என்று வேலன், புன் சிரிப்பை மறைக்க மாட்டாமல் சொன்னான்.

     “அதுலே என்ன தப்பு? நீ கட்டிக்கப்போற பொண்ணு மேலே உனக்குப் பிரியம் இருக்கத்தானே வேணும்?” என்று தாயம்மாள், குறும்புத்தனமாகச் சொன்னாள்.

     “அது இருக்கட்டும்; நாளைச் சாயங்காலம் நீ எப்படி ஊர் சேரமுடியும்?”

     “நாங்களெல்லாம் யோசித்தாய் விட்டது. நீ தலை அசைத்தால் போதாது; எந்தவிதமாய்ச் சேருவே? சொல்லு.”

     “இங்கிருந்து நேரா எங்கூருக்கே குதிரைவண்டி வச்சிடுறோம்,” என்றான் வேலன்.

     “அது நடக்கற காரியமா? பொன்மலை போவதற்குள்ளேயே குதிரைகளுக்குப் போதும் போதுமினு ஆயிடுமே. காட்டுப் பாதையா சும்மாவா? அதுக்கு அப்புறம் ஓர் அடி எடுத்து வைத்தால், குதிரை செத்துப்போவாது? நீ நூறு ரூபாய் கொடுத்தாலும், வண்டியைக் கட்டமாட்டார்கள்,” என்றார் சுப்பையா பிள்ளை.

     “பொன்மலையிலிருந்து எங்கூரு பன்னண்டு கல்லு தானுங்களே...”

     “யாரு சொன்னது? பதினாறு மைலுக்கு ஓர் அடி குறைவு இல்லே. எனக்குத் தெரியாதா, வேலு?”

     “இருக்கட்டுமே. பதினாறு கல்லு நடக்கமாட்டம்?”

     மதுரை புன்னகை புரிந்தான்.

     “பொளுதெல்லாம், காலையும் கையையும் மொடக்கிக் கிட்டு வண்டியிலே ஒக்காந்து இருந்திட்டுப் பதினாறு கல்லு நீ நடந்துடுவையா? - உன் உடம்பு இந்த நிலையிலே இருக்கறப்போ, அம்மா சொல்றாப்போல...”

     “ஓகோ! இதெல்லாம் அம்மா செஞ்ச வேலைதான்.”

     “அப்படியே எண்ணிக்கொள். உன் சௌக்கியத்துக்குத் தானே சொல்றேன்?”

     “ஆமாங்க, எனக்குத் தெரியாதுங்களா,” என்றான் வேலன். அவன் பார்வையில் விசுவாசம் ததும்பிற்று.

     “சரி, என் ஏற்பாடு இதுதான்: நீங்கள் மத்தியான்னச் சாப்பாட்டை, பத்து, பதினொண்ணுக்கெல்லாம் முடிச்சுக்கிறது. அப்புறம், ரெண்டு மணி சுமாருக்குக் கொஞ்சம் பலகாரம் எடுத்துக் கொள்றது... பிறகு, குதிரை வண்டிங்களுலே பொன்மலைக்குப் புறப்படறது. மணி ஆறுக்கெல்லாம் அங்கே போயிடலாம். ராத்திரிச் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் கட்டுச்சோறு கட்டித் தருகிறேன்.”

     “இன்னும் அது வேறேயா? ஏது, எங்களைச் சாப்பாட்டு ராமன்களா...”

     தாயம்மாள், கையால் அதட்டி மதுரையை மௌனமாக்கி, மேலே சொன்னாள்: “பொன்மலையிலே உங்கள் ஊர்ப்பக்கம் போகும் வண்டிகள் எப்பொழுதும் இருக்குமாம். அதுவும், நாளைக்குக் கேட்கவேண்டியது இல்லை. நாளைக்குச் செவ்வாய் கிழமை, பொன்மலை சந்தையில்லையா...”

     “உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்குங்க?” என்று வேலன், வாயெல்லாம் பல்லாகச் சொன்னான்.

     “உங்கள் ஊரு வண்டிகளே வந்திருந்தாலும் வந்திருக்கலாம். நல்ல நிலாவுக்கும் அதுக்கும், சுகமாய்ப் பிரயாணம் செய்ய லாமே. கோழி கூப்பிடறதுக்குள்ளே வீடு போய்ச் சேர்ந்திடுவீங்களே. நான் சொல்றது சரியா இல்லையா? சொல்லு.”

     “சரிதானுங்க,” என்று வேலன், மனப்பூர்வமாய் ஆமோதித்தான்.

     மறுநாட் காலையில் மதுரை, வீரப்பன், ஆறுமுகம் மூவரும் சுப்பையா பிள்ளை வீட்டிற்கு வெகு தூரத்தில் சென்று, ஓர் ஆலோசனை செய்தார்கள். விடை பெற்றுக்கொண்டு ஊருக்குப் புறப்படுவதற்கு முன், தங்களுடைய நன்றியறிவுக்கு அறிகுறியாக, சுப்பையா பிள்ளைக்கும் அவருடைய மனைவிக்கும் ஏதாவது மரியாதை செய்யவேண்டுமென்று, அவர்களுக்குத் தோன்றிற்று. எதிர்காலத்தில் அவ்வுத்தமத் தம்பதிக்கு எவ்வளவோ செய்ய வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டிருந்தபோதிலும், தற்காலம் ஒன்றுமே செய்யாமல் போவது, மரியாதைக்கு மிகவும் குறைவென்று, அவர்களுக்குப் பட்டது. இவ்வபிப்பிராயத்தில், ஆறுமுகத்திற்குச் சிறிதேனும் சந்தேகம் இல்லை. வேலனுடைய வழக்கு விஷயமாய்ச் செலவு செய்யக் கொஞ்சம் பணம், ஆறுமுகம் கொண்டு வந்திருந்தான். கடவுள் கிருபையால், ஒரு காசு செலவின்றி எல்லாம் அநுகூலமாய் முடிந்துவிட்டபடியால், அவன் கொணர்ந்த பணம் அப்படியே இருந்தது. இதைக் கொண்டும், இன்னும் கொஞ்சம் ஆளுக்குக் காலும் அரையுமாய்த் தொகுத்தும், தாயம்மாளுக்கு ஒரு நல்ல சேலையும் சுப்பையா பிள்ளைக்கு ஒரு ஜதை பட்டுக்கரை வேஷ்டியும், வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று அவன் யோசனை சொன்னான். மதுரை யும் வீரப்பனும், அதை மனப்பூர்வமாக ஆமோதித்தார்கள். பிறகு, கால்மணி நேரத்திற்கெல்லாம் அவை வாங்கப்பட்டன.

     சுப்பையா பிள்ளைக்கும் தாயம்மாளுக்கும், அவ்வெகுமதிகளைக் கண்டதும் மிகவும் வருத்தம் உண்டாகிவிட்டது. தாயம்மாள், அச்சேலையைக் கையால் தொடக்கூட மாட்டேனென்று சொல்லிவிட்டாள். இது, மதுரை செய்த ‘கிருத்திரிமம்’ என்று, அவள் அவன்மேல் எரிந்துவிழுந்தாள். அதன்மேல், மதுரைக்குக் கோபம் வந்தது. “உங்களுக்கு நெசத்தை ஓணுமின்னா சொல்லி டுறேன். எல்லாத்துக்கும் எம்மேலே தப்புக் கண்டு பிடிக்கறது நாயமா?” என்றான்.

     “அந்த நெஜத்தைத்தான் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேனே,” என்றாள் தாயம்மாள், சலிப்புடன்.

     “இதெல்லாம் ஆறுமுகம் செஞ்ச வேலை. வாணாமுடா, அம்மா கோவிச்சுக்கிட்டாலும் கோவிச்சுப்பாங்கன்னிட்டு, நான் சொன்னேன். அவன் கேட்டால்ல? ஒரு மருவாதியம் பண்ணாத நன்னி கெட்ட தடிப்பிள்ளைங்களாட்டம் ஊரு திரும்பறதான்னிட்டு அல்ல, சண்டைக்கு வந்திட்டான்? நான் என்ன கதையா கட்டுகிறேன்? அவனைத்தான் கேளுங்களேன்.”

     “அவன் சொல்றது உளுமைதானுங்க,” என்றான் ஆறுமுகம் குறுக்கிட்டு: “நீங்க செஞ்ச ஒவகாரத்துக்குப் பர்த்தியா நாங்க பண்ணல்லீங்க. உங்களுக்கு வருத்தம் உண்டாக்கணுமின்னு நாங்க கனவுலேயாவது நெனைப்போமா?”

     “பொபு, ஆறுமுகம்,” என்று மதுரை குறுக்கிட்டான்.

     “வருத்தம் சந்தோசமெல்லாம் உங்களுக்குத்தானா? எங்களுக் கில்லையா? சேலை வேட்டி எங்க சந்தோசத்துக்காவக் கொடுத்தோமேங்காட்டி, உங்க சந்தோசத்துக்காவ இல்லே. நீங்க எங்களுக்கு எது ஓணுமினாலும் செய்யலாம். நாங்க அறியாப் பசங்க தானே! இருந்தாலும், நாங்களும் மனிசங்க இல்லியா? எங்க மனசுலே இருக்கிறதைக் காண்பிச்சுக்கணுமின்னு இருக்காதா? அதுக்காவ, எங்க கையாலே ஆனதைச் சந்தோசமா வாங்கிக் கொடுத்தால் கோவிச்சுக்கிறதா? இது நாயந்தானுங்களா,” என்றான் மதுரை.

     “அம்மாடி! உன்னைப் போலப் பொல்லாத ஆளை நான் பார்த்த தேயில்லை. சரி, வேலுவுக்காக நான் இதை எடுத்துக்கொள்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டு, தாயம்மாள் சேலையை எடுத்துக்கொண்டாள். பிறகு, “சட்டுனு, நல்ல இடத்துலே கலியாணமா கட்டும்,” என்று அவள் வாழ்த்தினாள்.

     “அதைப்பத்தி நீங்க கவலைப்படாதேங்க. சட்டுப்புட்டுனு கண்ணாலத்தை முடிக்க நான் இருக்கேன்,” என்றான் மதுரை. எல் லோரும் கைகொட்டிச் சிரித்தார்கள்.

     விடை பெற்றுக் கொள்ளும் சமயம் வந்தபொழுது, ஒவ்வொருவருடைய மனத்திற்கும் கஷ்டம் ஏற்பட்டது. பார்ப்போர்களுக்கு, அவர்கள் வருஷக்கணக்காகப் பழகினவர்கள்போலக் காணப்பட்டார்கள். பிறகு, அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருப்பதாக வாக்களித்துவிட்டு, மதுரை முதலானோர் வண்டிகளில் ஏறினார்கள்.

     அவர்கள் பொன்மலையை அடைந்தபொழுது, சூரியன் மலை வாயில் விழுந்துகொண்டிருந்தது. அவர்களுடைய கிராமத்திலிருந்தும் சிலர் சந்தைக்கு வந்திருந்தனர். வேலன் விடுதலை ஆனதைப்பற்றி, அவர்கள் பேரானந்தப்பட்டார்கள். பிறகு ஆவலுடன், வழக்கு நடந்த விவரங்களைச் சொல்லும்படி, அவர்கள் மதுரையை வற்புறுத்தினார்கள். ஆனால், தன் ‘அப்பா’வைக் குறித்து வேலன் கேட்ட பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல மட்டும் அவர்களுக்குப் பொறுமையில்லை.

     “இவ்வளவு துன்பப்பட்ட மனிசனுக்கு, ஒடம்பு எப்படி சொகமாயிருக்கும், வேலு?” என்றான் சோலை வாத்தியார்: “ஆனா, இனிமே எல்லாம் சரியாப் போயிடும். இந்தச் சங்கதி கேட்ட உடனே, ஏந்திருச்சி உக்காந்திருக்கமாட்டான்?”

     “நீங்க வளியிலே பிச்சையைக் கண்டீங்களா? - இல்லையே? ஆமாம், நீங்க வண்டியிலே படுத்து இருப்பீங்க; அவனும் ஜம்புலிங்கமுமா ஓடியிருப்பாங்க. சாமி புண்ணியத்துலே நோவு முத்தாமே இருக்கணும்!”

     “அதெல்லாம் ஒண்ணும் இல்லே, வேலு. ஆனா, வள்ளி இல்லாட்டி, வெங்கடாசலம் இதுவரையிலும் பொளச்சு இருக்கமாட்டான்! இந்தச் சங்கதி ஊரெல்லாத்துக்கும் தெரியும். வீரப்பா, உனக்கு நல்ல பேரு சொல்ல, உம் மவள் ஒருத்தி போதுமடா!” என்று சோலை வாத்தியார், வீரப்பனைத் தட்டிக் கொடுத்தான்.

     நல்ல நிலவு இருந்ததால், அஸ்தமித்துச் சிறிது நேரத்திற்கெல்லாமே வண்டிகள் பூட்டப்பட்டன. காலிவண்டிகள் அநேகம் இருந்ததால், ஒவ்வொருவருக்கும் வெகு சௌகரியமாக இடம் கிடைத்தது. வேனிற்காலமாகையால், கூடில்லா வண்டிகளுக்கே கிராக்கி அதிகம் இருந்தது. பகலெல்லாம் மண்டையைப் பிளப்பதுபோல வெயில் அடித்து, இரவில் குளிர்ந்த காற்று வீசவே, உடம்பிற்கு உணர்வும் மனத்திற்குச் சாந்தியும் ஏற்பட்டன. எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. மேகமற்ற வானத்தில், சந்திரன் பால்போல் நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கண்ணெட்டின வரையிலும் ஒரே பச்சை. மாடுகள் அசைந்து அசைந்து அடிமேல் அடி வைத்து நடப்பது, அவர்களுக்குத் தூளியில் போட்டு ஆட்டுவது போலிருந்தது. மனம் பூரித்துச் சிலர் பாடத் தொடங்கினர். ஆனால், பாடும் பாவனையேடு அதிகக் கூச்சலிட்டவன் ஆறுமுகமே. ஏனெனில், அவன் மனத்தைப் பூரித்தது இயற்கை அழகுமட்டுமல்ல; சேர்க்கை வஸ்துவும் ஒன்று இருந்தது. அவன் எப்படியோ யாருக்கும் தெரியாமல், பொன்மலை கள்ளுகடையில் நுழைந்து வந்துவிட்டான்! இவ்விஷயம் தெரிந்தபின், அவன் சிநேகிதர்கள் அழுவதா சிரிப்பதா...?

     நேரம் ஏற ஏறத் தூக்கம் அதிகரித்துப் பாட்டும் பேச்சும் படிப் படியாய்க் குறைந்தன. மற்றும் சிறிது நேரத்திற்கெல்லாம், ‘கடக்கு முடக்கு’ என்று வண்டிச் சக்கரங்கள் சுழலும் ஓசையைத் தவிர, மற்ற எல்லாம் ஒரே நிசப்தமாயிருந்தது.

     விடியற்காலம் இருட்டோடே, போக்கு வண்டிகள் வீரமங்கலத்தை அணுகின. இவ்வண்டிகளில்தான் வேலன் வர வேண்டுமென்பது அலமேலுவுக்கு நன்றாகத் தெரியுமாகையால், பாதி இரவுக்குப் பிறகு, தூக்கம் பிடிக்காமல் அவள் வீட்டிற்குள்ளே இங்குமங்கும் அலைந்துகொண்டிருந்தாள். ஆகையினால், வண்டிச் சத்தம் கேட்டமாத்திரத்தில், அவள் பதறப் பதறத் தெருக்கதைவைத் திறந்து வெளியே ஓடிவந்தாள். குறட்டின் மீது நின்றுகொண்டு, அவள் வண்டிகள் வரும் திசையை நோக்கி, உற்றுப் பார்த்தாள். இரண்டு வண்டிகள் மட்டும் புலப்பட்டன. ஆனால், சங்கிலி ஓசையிலிருந்து, வேறு வண்டிகளும் சற்றுத் தூரத்திற்குப் பின்னால் வருவதாகத் தெரிந்தது. முதல் இரண்டு வண்டிகளும், கிட்டக் கிட்ட வந்து கொண்டேயிருந்தன. அலமேலுவுக்குச் சஞ்சலம் அதிகரித்தது. முதல் வண்டி வீட்டுக்கு எதிரே வந்துவிட்டது! தன் அருமைக் குழந்தையின் பெயர், அவள் நாவில் துடித்தது. ஆனால், அவ்வண்டியும் அதன் பின் வந்ததும், நில்லாமல் ஊர்ந்து கொண்டே சென்றன! அவை அயலூர் வண்டிகள் என்பதில் சந்தேகமில்லை. அவள் ஒரு பெருமூச்சுவிட்டுத் தன் ஏமாற்றத்தைச் சமாளித்துக் கொள்ள முயன்றாள். ஆனால், அவள் இருதயம் இன்னும் சற்று வேகமாக அடித்துக்கொண்டது. விபரீதமான எண்ணங்கள் அவள் மனத்தில் உதிக்கத் தொடங்கின.

     மற்றும் சில வண்டிகள் ஊருக்குள் நுழைந்தன. அவள் கண் களைக் கசக்கிக்கொண்டாள்; நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். ஒரு க்ஷணம்கூட அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை. கைகளைப் பிசைந்துகொண்டும் விரல்களைச் சொடுக்கிக்கொண்டும் அவள், குறட்டை விட்டுக் கீழே தெருவில் இறங்குவதும் மறுபடியும் குறட்டின் மேல் ஏறுவதுமாக இருந்தாள். வண்டிகள் வீட்டிற்குச் சுமார் பத்து கஜ தூரத்தில் வந்து விட்டன. அப்பொழுது, தொடரின் இரண்டாவது வண்டியிலிருந்து ஒருவன் கீழே குதித்தான். அதே சமயத்தில், தன் அருமைப் புதல்வனின் குரலைக் கேட்டு, அவள் ஆனந்த பரவசமாய் ஸ்தம்பம்போல் நின்றாள்.

     “அம்மா! அம்மா!!” என்று கூவிக்கொண்டு, வேலன் அவளிடம் ஓடிவந்தான். அலமேலு அவனைக் கட்டித் தழுவித் தேம்பி தேம்பி அழுதாள். பிறகு, ஒவ்வொருவராக மதுரை முதலானவர்கள் வந்து சேர்ந்தார்கள். வாயைத் திறந்து பேச, வேலனுக்கும் அவன் தாய்க்கும் இரண்டொரு நிமிஷங்கள் பிடித்தன.

     “வாணாம்மா! அளுவாதேம்மா! நான் வந்தப்புறம் ஒனக்கு என்ன கொறவு, நம்ம துன்பமெல்லாம் நீங்கிப் போச்சு. வாணாங்கிறேனே,” என்று தன் தாயை, வேலன் தட்டிக்கொடுத்துச் சாமாதானப்படுத்தினான். பிறகு, “அப்பா முளிச்சிக்கிட்டு இருக்குதா?” என்று கேட்டுக்கொண்டே, அவன் அவளை மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றான். கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், “என் கண்ணே, சோறு தண்ணியில்லாதே உன்னைச் சாவடிச்சிட்டாங்களே! படுபாவிங்க! எலும்பாக்கிட்டாங்களே!” என்று அவள் புலம்பினாள்.

     “ஒடம்பு சரியாவ எத்தினி நாளாவும் அம்மா? வள்ளி தூங்குதா?”

     “ஆ! வள்ளியா? என்னைப் பெத்த அம்மா! என் தங்கமாச்சுதே! அட ராசா! இனிமே அது நம்ம ஊட்டைவிட்டுப் போவாது,” என்று பலவாறு பேசிக்கொண்டு, அவனோடு வெங்கடாசலத்தின் அறைக்குச் சென்றாள். மதுரையும் வீரப்பனும் கூடவே சென் றார்கள்.

     அவ்வறையில் ஒரு மூலையில், ஒரு சின்ன மண்ணெண்ணெய்த் திரிவிளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்துகொண்டு இருந்தது. வெங்கடாசலம் விழித்துக் கொண்டிருந்தபோதிலும், வேறு நினைவோடு கூரையைப் பார்த்தபடி, நகங்களைக் கிள்ளிக் கொண்டு இருந்தான். அரையில் ஒரு கந்தையைத் தவிர, அவன் உடம்பில் வேறு ஆடை ஒன்றும் இல்லை.

     அவன் கால்களும் கைகளும் சூம்பிக் கிடந்தன. பார்ப்பதற்கு, அவன் தன் பிராயத்திற்கு இருபது வருஷங்கள் அதிகமாகக் காணப்பட்டான்.

     “அப்பா! அப்பா!!” என்று வேலன், குனிந்து அன்பு ததும்ப அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

     வெங்கடாசலம் திடுக்கிட்டான். மங்கலடைந்த கண்களை மூடி மூடித் திறந்தான். பிறகு, கண் கொட்டாமல் வேலனை உற்றுப் பார்த்தான். ஆச்சரியமும் ஆனந்தமும் அவன் முகத்தில் உதித்து, இதழ்கள் அசைந்து, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, “வேலு.. ஆ.. வேலு வந்துட்டையா, அப்பா, என் ராசா!” என்று அவன், வேலனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். ஒரு நிமிஷத்துக்கப்புறம், வேலன் மெதுவாக வெங்கடாசலத்தின் கைகளை எடுத்துவிட்டுக் கட்டிலின் மீது அவன் பக்கத்திலே உட்கார்ந்தான். “இனிமே நமக்கு ஒரு தீங்கும் வராது, அப்பா. நம்ம கெட்ட காலமெல்லாம் போச்சு. நெசமாலும் அப்பா, நீ ஒணுமின்னாப் பாரு,” என்றான்.

     “அட கொளந்தே! நீ திரும்பி வந்ததே எனக்குப் போதாதா? எனக்கு வேறே என்ன ஒணுமுடா?” பிறகு, முதன் முதலாக மதுரையையும் வீரப்பனையும் பார்த்துவிட்டு, “வாங்கடா! வாங்கடா!! ஏன் அங்கே நிக்கறீங்க? மதுரை! வீரப்பா! - நீங்க இல்லாட்டி, என் கொளந்தையைக் கண்ணாலே கண்டிருப்பேனா? வாங்கடா! கையைக் கொடுங்கடா,” என்று கெஞ்சினான்.

     “நாங்க வேத்து மனிசங்களா, வெங்கடாசலம்? அதுவும் நாங்க என்னா செஞ்சோம்? எல்லாம் அவன் வேலை. ஆனா, நீ இவ்வளவு இடிஞ்சிடுவேன்னிட்டு நான் நெனைக்கில்லைடா அப்பா!” என்று வெகு உருக்கமாய்ச் சொன்னான் மதுரை.

     “வெங்கடாசலம், வீணா மனசைப் புண்ணாக்கிக் கொள்ளாதே. இன்னியோடு உன் கவலை எல்லாம் தீந்து போச்சின்னிட்டு வச்சுக்கொள்ளு,” என்று வீரப்பனும் சமாதானப்படுத்தினான்: “ஒரு மவனோடு ஒரு மவளும் ஒனக்கு வந்தாச்சுதே. இனிமே, உன் பொறுப்பெல்லாம் அவுங்களுதுதானே? நாலு நாளுலே உன்னை ஆளாக்கிடமாட்டாங்க? இப்படி எலும்பும் தோலுமாவா...”

     உடனே மதுரை, வீரப்பனைக் கடுத்துப் பர்த்தான்; வீரப்பன் தன் குற்றத்தை அறிந்து, பேச்சை அடக்கிக் கொண்டான். அதே சமயத்தில், வள்ளி உள்ளே நுழைந்தாள். அவள் கண்கள், இன்னும் தூக்கக் கலக்கமாகவே இருந்தன. கூந்தலும் கலைந்துபோயிருந்தது. திடீரென்று, அவள் கண்களில் ஒளி வீசிற்று.

     “நீ எப்போ வந்தே?” என்று ஆனந்த பரவசத்தோடு, அவள் வேலனைக் கேட்டாள்; பிறகு, கண்கொட்டாமல் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

     “இப்போதான். என்ன இப்படி இலச்சிப்போனையே!”

     “நானா? உன் கண்ணும் மூக்கும் இல்லாட்டி, உன்னைக் கண்டுக்கவே முடியாதே!” என்று அவள், அவன்மேல் வைத்த கண்களை அகற்றாமலே சொன்னாள். இருந்தாற்போலிருந்து, அவள் இதழ்கள் துடித்துக் கண்கள் கலங்கின. பிறகு, துக்கத்தைப் பொறுக்க முடியாமல் அவள் வெளியே சென்றாள். வேலனும் பின் தொடர்ந்தான். தனிமையாய் வந்ததும், வள்ளி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள். வேலன், அவளைத் தட்டிக்கொடுத்து நல்ல வார்த்தைகளைச் சொல்லித் தன் மனப்பூர்வமான அன்பைப் பல விதங்களிலும் விளக்கிக் காட்டி ஆறுதல் செய்தான். ஒருவாறு அவளுடைய அழுகை ஓய்ந்ததாயினும், தேம்புதல் மட்டும் நிற்கவில்லை. பேசமுயன்றால் மறுபடியும் அழுகை வந்துவிடும் போலிருந்ததால், அவள் வாயைத் திறவாமல் வேலனைப் பார்த்த வண்ணம் நின்றாள். அக்காதலர்களின் கண்கள், நாவிலும் பதின்மடங்கு தெளிவாகப் பேசிக்கொண்டன. சில நிமிஷங்களுக் கெல்லாம், வள்ளி கஷ்டத்துடன் சமாளித்துக்கொண்டு, “நல்லா இருக்காது; நான் போறேன்,” என்று சொல்லிவிட்டுச் சமையல் அறைப் பக்கம் சென்றாள். வேலனும் தன் ‘அப்பா’வினிடம் போனான். பிறகு மதுரை, வீட்டிற்குப் போய் மனைவி மக்களைப் பார்த்து வருவதாக விடை பெற்றுக்கொண்டான். வேலனும் வீரப்பனும், வெங்கடாசலத்தின் கட்டில்மீது தலைக்கொரு புறமாய் உட்கார்ந்து, தங்கள் அனுபவங்களைச் சொல்லிவந்தார்கள். வெங்கடாசலம் ஆச்சரியத்தோடு அவற்றைக் கேட்டுவந்தான்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22