உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 5. தைப்பூசம் முசிரியின் தைப்பூசத்திற்கு முந்தின நாள்தான், வீரமங்கலத்திலும் சந்தை. இந்தச் சந்தைக்கு, முசிரியிலிருந்து அநேக பார வண்டிகள் வந்திருந்தன. அவையெல்லாம் அன்றைய தினம் இரவே திருப்பிப் போவதால், வெங்கடாசலத்திற்கும் அவன் சகாக்களுக்கும், கழுகுப்பட்டிப் பிரயாணத்திற்கு நல்ல வசதி ஏற்பட்டது. இரவில் போக்குவண்டிகளோடு சவாரி வண்டியையும் விட்டால், வெயிலின் கொடுமையும் இராது; வண்டி ஓட்ட வேண்டுமென்ற கவலையும் இல்லை. சுகமாகத் தூங்கி விழிக்கும்போது ஊர் வந்து சேரலாம். இவற்றையெல்லாம் உத்தேசித்து, இரவு பொழுதோடு சாப்பிட்டுவிட்டு, வெங்கடாசலத்தின் வீட்டில் அண்ணாமலைத்தாத்தா, வீரப்பன், மதுரை ஆகிய மூவரும் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடாசலம், தன் மாடு மேய்ககும் பையன் ஆண்டியைச் சந்தைக்கு அனுப்பி, வண்டி கட்டும்போது தகவல் சொல்லும்படி கட்டளையிட்டிருந்தான். மதுரைக்குக் காங்கேயம் மாடுகளை ஓட்டுவதில் எப்பொழுதும் ஆசையுண்டு. ஆதலால், தானே வண்டியை ஓட்டுவதாகச் சொன்னான். ஆனால், இதற்கு வெங்கடாசலம் இணங்கவில்லை. முரட்டு மாடுகளாகையால், ஒருவேளையைப்போல் ஒருவேளை நடந்துகொள்ளமாட்டா என்றும், அவைகளைச் சமாளிப்பதற்கு ஆண்டியைக் கட்டாயம் அழைத்துக்கொண்டு போகவேண்டு மென்றும் சொல்லிவிட்டான். சற்று நேரத்திற்கெல்லாம், சந்தைப்பேட்டையிலிருந்து ஆண்டியும் வந்தான். மாடுகள் வண்டியில் பூட்டப்பட்டன. அப்பொழுது அண்ணாமலைத் தாத்தா, லாந்தரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாணியையும் நன்றாகத் தடவிப் பார்த்தான். மற்றவர்களெல்லாம் சிரித்தார்கள். “சிரிக்கமாட்டேங்களா பின்னே? நா உளுந்தாப்படி நீங்கள் உளுந்திருந்தா, அப்போ தெரியும் - நீங்களும் விளணுமின்னு நான் சொல்லல்லே! வருசம் முப்பதாச்சு, இன்னிக்கும் என் இடது தோள்பட்டை ஒரு மாதிரிதான்.” “அது யாரு தப்பு?” என்று மதுரை, மற்றவர்களைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டு கேட்டான். “அட, அது பெரிய கதை. போற போக்கிலே சொல்றேனே. எங்கே, ஒரு கைகுடுங்க பாக்கலாம்,” என்று சொல்லிக்கொண்டே அண்ணாமலைத் தாத்தா, வண்டியில் ஏறப் பிரயத்தனம் செய்தான். வெங்கடாசலமும் மதுரையும் அவனை மெள்ளத் தூக்கி விட்டார்கள். எல்லாரும் வண்டியில் ஏறின பிறகு, அண்ணாமலைத் தாத்தா கோணியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு, கொஞ்சம் முணுமுணுக்கத் தொடங்கினான். “வக்கெல் போட்டது போதாதுபோல் இருக்குதே,” என்றான். “வக்கெலுக்குக் குறவில்லை, தாத்தா. சரியா நெரவாமெ விட்டுட்டான். என்னிடத்துக்கு நீங்க வாங்க, நான் அங்கே வந்திடுறேன்,” என்று மதுரை, மெதுவாக அண்ணாமலைத் தாத்தாவை இடம் மாற்றினான். “இங்கே மெத்தையாட்டம் இருக்குதுடாப்பா,” என்று தாத்தா சந்தோஷப்பட்டான். வண்டியும் செல்லத் தொடங்கிற்று. “சரி, இப்போ, ஒங்க கதையைச் சொல்லுங்க,” என்று மதுரை தூண்டினான். “அது பளயகாலத்துச் சமாச்சாரம். ஆனா வண்டி ஏர்றபோ தெல்லாம் ஞாபகம் வருது. உங்களுக்குப் பில்லூரு கந்தனைத் தெரியுமல்ல? - அட, அதுதான், அந்தக் கிளவன் - எம்பது வயசுக்கு மேல சீரணமாகல்லேன்னிட்டு, ஒரு பெருங்காயம் விக்கிற மலையாளத்தான் கிட்ட மருந்தை வாங்கித் தின்னிட்டு சாவலே?” எல்லாரும் ‘ஊம்’ கொட்டினார்கள். ஆனால், வீரப்பன் மட்டும் வாய் தவறி உளறினான். “தாத்தா ஒரு வயிசுப்பிள்ளை போலத்தான் பேசறாரு.” “ஏய், அப்போ நான் ஒரு வயிசுப்பிள்ளைதான். ஊம்..ஊம்.. மறந்திடதே,” என்று தாத்தா முறைப்பாகச் சொன்னான். “ஏன் இப்போமட்டும் என்ன? எளுபத்தாறுதானே ஆவுது? இல்லை தாத்தா?” என்றான் மதுரை. “ஏது, பங்குனி வந்தா எளுபத்திநாலு முடியுது.” “அப்போ, ஒங்களுக்கும் பில்லுரு கந்தனுக்கும் ஜோடி ஏது - இது கெடக்குது, நீங்க கதையைச் சொல்லுங்க,” என்று சொல்லிக்கொண்டே மதுரை, வீரப்பனை மெள்ளக் கிள்ளினான். தாத்தா மறுபடியும் ஆரம்பித்தான்: “நாங்களெல்லாம் சப்பாணி கலியாணத்துக்குக் கண்டனூரு போய்க்கிட்டு இருந்தோம். எல்லாம் ஆறு ஊட்டுக்காரங்க. எட்டு வண்டி ரொம்பிப்போச்சு. நான் இருந்த வண்டிதான் கடைசி. அதை அந்தப் பில்லூருக் கிளவன் ஓட்டிக்கிட்டு இருந்தன். வண்டியிலே நானும் இன்னும் நாலு அஞ்சுபேரும் இருந்தோம். நல்ல காலம், அதிலே பொம்பிள்ளைங்க யாருமில்லை. கண்டனூர் பாலத்துக்கிட்டே வந்திட்டோம். அந்த எறக்கத்திலே எறங்கப் போறோம். அப்போ, எங்களுக்குப் பொறத்தியிலே ஒரே கூச்சல். அது என்ன எளவோன்னு சும்மா இருந்திட்டோம். அப்பாலே எங்களைத்தான் கூப்பிடுறாங் கோன்னிட்டுத் தெரிஞ்சுது. ‘ஏ கோடி வண்டி! உன் சக்கரம்! உன் சக்கரம்!’ இன்னு காதுலே நல்லாப் பட்டுது. கொஞ்சம் புத்தியிருந்தவனாயிருந்தா, அவன் வண்டியை நிறுத்திட்டு என்னான்னு பாத்திருப்பான். அதுக்குப் பதிலா, அந்த மூளைகெட்டவன் மாட்டு முதுகுலே கையை ஊணிக்கிட்டுத் திரும்பிப் பாத்தான். அந்த மாடு, கூச்சப்பட்டுக்கிட்டுச் சட்டுனு வெலகிக்கிச்சு. எங்க எடது சக்கரம், கடையாணி இல்லாதையே ரொம்ப தூரம் வந்திருக்குது. மாடு சட்டுனு விலகிக்கவே, அது உடனே களண்டு விளுந்திட்டது. கந்தன் கீளே வுளுந்து உருண்டுகிட்டே ஆத்துமணலிலே போய் விளுந்தான். நான் கீளே விளுந்து சக்கரத்துக்கும் ஏர்க்காலுக்கும் நடுவிலே மாட்டிக் கிட்டேன். வண்டியிலே இருந்த கும்பல் எல்லாம் புளிமூட்டை யாட்டம் என்மேலே சாஞ்சிட்டுது. தட்டுக்கிட்டுத் தடுமாறிக்கிட்டு உள்காயம் வெளிகாயத்தோடே நாங்க ஏந்திருச்சி வந்தா, அந்தப் பைத்திகாரப் பய எங்களைப் பாத்து இடி இடின்னு சிரிக்கிறான்!” “அவன் எப்பவும் கொஞ்சம் தமாசுக்காரன்தான்,” என்று வெங் கடாசலம் சிரித்தான். “ஆனால், நம்ம கடையாணிங்க எப்பவும் களண்டு வாராது, தாத்தா. அதுக்கு ரெண்டு பக்கத்திலேயும் வளையம் போட்டிருக்கேன். பாத்தீங்களா?” “பாத்தேன். அது நல்ல உபாயம்,” என்று அண்ணாமலைக் கிழவன் மெச்சிக்கொண்டான். பிறகு படுத்துக்கொள்வதற்கு வழி தேடிக்கொண்டான். யாதோர் இடையூறுமின்றி, அவர்கள் கோழி கூவும் பொழுதே முசிரி வந்து சேர்ந்தார்கள். வண்டியை ஆற்றங்கரையோரம் இருந்த சத்திரத்தின் அருகில் அவிழ்த்து விட்டார்கள். மெள்ள இருட்டுக் கலைந்து கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே அநேகர் ஸ்நானத்திற்கு வந்துவிட்டனர். படித்துறைகள் கும்பல் நிறைந்தே இருந்தன. அங்கே பலர் துணிகளைப் படியில் அடித்துத் துவைக்கிறது, துணிகளைக் கும்முகிறது, அவைகளைத் தண்ணீரில் அலசுகிறது, தேவநாமங்களைச் சொல்லிக்கொண்டு நீரில் முழுகுகிறது, விழுப்பு ஜலத்தை மேலே தெறிக்க வேண்டாமென்று மடியோடிருப்பவர்கள் கத்துவது - எல்லாம் சேர்ந்து ஒரே சந்தடியாயிருந்தன. வேனிற் காலம் ஆரம்பித்துவிட்டபடியால், ஆற்றில் இரு கரையோரங்களில் மட்டும் ஜலம் வேகமாகவும், கலக்கமற்றுச் சுத்தமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அக்கரையில் தண்ணீர் ஓடுவது இக்கரையிலிருந்து காணப்படவில்லை. பார்ப்பதற்கு ஒரே மணற்காடாகத் தோன்றியது. அங்குமிங்கும் சில நாணல் புதர்கள் மட்டும் வளர்ந்திருந்தன. படித்துறைக்குச் சற்று மேல்புறத்தில், ஸ்வாமிகள் வீற்றிருப்பதற்காக மணலில் அநேகம் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. எங்கும் இடுப்பு ஜலத்திற்குமேல் ஆழமில்லாததால், அநேகர் நீரைத் தாண்டி உலர்ந்த மணலில் தாராளமாக உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தனர். வெங்கடாசலமும் அவன் சிநேதிதர்களும் இன்னும் பல்கூடத் தேய்க்காததால், அங்கே ஆசாரத்துடன் ஸ்நானம் செய்துகொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க அவர்களுக்கு இஷ்டமில்லை. ஆதலால், படித்துறைக்குக் கீழ்ப்புறமாக அரைபர்லாங்கு ஆற்றங்கரையோரமே சென்று ஆற்றில் இறங்கினார்கள். அவ்வளவு மேட்டிலிருந்து பள்ளத்திற்கு இறங்கும்போது, அண்ணாமலைத் தாத்தாவைக் குட்டிக்கரணம்போடாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவர்களுக்குப் பெரிய வேலையாயிற்று. தந்த சுத்தி செய்துகொண்டு, குளிர்ந்த நீரோட்டத்தில் ஆனந்தமாக ஸ்நானம் செய்தார்கள். தேகத்திற்குப் புத்துணர்ச்சியும் மனத்திற்கு உற்சாகமும் உள்ளத்திற்கு அளவற்ற சாந்தியும் எவ்வாறு கிடைக்குமென்பது, சுத்த நீரோட்டத்தில் தலை அமிழ்ந்து நீராடுகிறவர்களுக்கே தெரியும். வெங்கடாசலத்திற்கும் அவன் சிநேகிதர்களுக்கும் தண்ணீரை விட்டுக் கிளம்ப இஷ்டமேயில்லை. வெகு நேரம் தேய்த்துக் குளித்தார்கள். பிறகு விபூதியணிந்து, மணற் கரைக்குச் சென்று துணிகளை இறுகப் பிழிந்து காற்றாட உலர்த்திக் கொண்டார்கள். இதற்குள் சூரியோதயமாய்விட்டது. சில்லறை வியாபாரிகள் மணலில் தங்களுடைய கூடாரங்களை அடிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில், பல கிராமங்களிலிருந்து ஸ்வாமிகள் பல்லக்குகளில் மேளவாத்தியங்களுடன் வர ஆரம்பித்தன. பின்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆற்று மணலில், எள்ளுப் போட்டால் எள் விழாதபடி, தேங்காய் உடைப்பவர்களும் சூடம் கொளுத்துகிறவர்களும் சாம்பிராணித் தூபம் போடுகிறவர்களுமாகப் பக்தகோடிகள் கூடிவிட்டார்கள். அண்ணாமலைத் தாத்தா, ஒவ்வொரு பந்தலிலும் புகுந்து ஒவ்வொரு ஸ்வாமியிடத்திலும் அரைமணிக்குக் குறையாமல் தொழுதான். யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை. அவன் தொழுது முடிப்பதற்குள் மணி பத்தாய்விட்டது. வெயிலும் ஏறி விட்டது. வீரப்பனுக்கு எங்கேயாவது நிழலில்போய் உட்கார்ந்தாற் போதும் போல் ஆகிவிட்டது. “என்ன தாத்தா, எல்லாம் கும்பிட்டாச்சா, இன்னும் ஏதாவது பாக்கியிருக்குதா?” என்றான். “நீ அவ்வள ஆத்திரப்படக்கூடாது, வீரப்பா. உனக்கு வேக்கிறதும் நாக்கு வாங்கறதும் பாத்தா, என்னைக் காட்டிலும் உன்னைத் தான் கௌவனின்னு எண்ணிப்பாங்க,” என்றான் அண்ணாமலைத் தாத்தா. “அவனை மட்டும் இல்லை; எங்களைக்கூடத்தான்,” என்றான் மதுரை. “அதுலே சந்தேகமென்ன?” என்று தாத்தா அழுத்தமாகச் சொன்னான். “எத்தினி ஆயிரம்பேரு, பத்து இருபது கல்லு நடந்து வந்திருக்காங்க தெரியுமா இங்கே? பெரிய பூசை ஆகிறவரில்லியும் யாரும் போகமாட்டாங்க. வருசத்துக்கு ஒருநாள். கொஞ்சம் கஷ்டப்பட்டத்தான் என்ன போச்சு? நாம் நிதமா வரப்போகிறோம்? பெரிய பூசை ஆனால், திருவிளாவும் முடிஞ்சாப்போலத்தான்.” “என்ன தாத்தா, தமாசு எல்லாம் ரவைக்குத்தானே?” என்றான் மதுரை. “ஓ. நீங்கெல்லாம் தமாசுதான் பாக்க வந்தீங்களா?” “தமாசு, சாமி இரண்டும் தாத்தா,” என்றான் வெங்கடாசலம். “அது ரெண்டும் எப்பவும் ஒத்துப்போவாது,” என்று தாத்தா கண்டிப்பாய்ச் சொன்னான். “அது எல்லாம் பளய பேச்சு, தாத்தா. தமாசுலே என்ன தப்பு?” “தப்போ தப்பில்லையோ, நான் ஒங்களோட வரமுடியாது. எனக்குத்தான் எளவு, இருட்டினாக் கண்ணுத்தெரியாதே,” என்று மிகக் குறைவுடன் தாத்தா சொன்னான். எல்லாரும் சிரித்தார்கள். “சரி, நான் வண்டியிலேயே படுத்திருக்கேன். நீங்க வேடிக்கை யெல்லாம் பாத்திட்டு வாங்க. ஆனால், சாக்கிரதை! வம்புலே கிம்புலே மாட்டிக்காதெங்கோ,” என்று கண்ணடித்துக்கொண்டு தாத்தா சொன்னான். இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும். மேகமற்ற வானத்தில் பூரண சந்திரன் ஏகாதிபத்தியம் வகித்திருந்தான். ஆற்று மணலில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடிக் களிப்பாகக் காலங்கழித்தனர். அவர்களுக்கு உதவியாகக் குளிர்ந்த தென்றல் வீசிற்று. ஆனால் காலைபோல், கூடினவர்கள் அனைவரும் பக்தர்கள் அல்ல. பல விதமானவர்களும் கலந்திருந்தனர். எங்கே பார்த்தாலும் பஜனைக் கூட்டங்கள்தான். எல்லாம் ஒரே ஆட்டமும் பாட்டமுமாயிருந்தது. இது ஒரு புறம். மற்றொரு புறத்தில், மிட்டாய்க் கடைகளும் பொம்மைக்கடைகளும் பழக்கடைகளும், வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. மூலைக்கு மூலை பலாப்பழச் சுளைகளை விற்றுக்கொண்டிருந்ததால், அவ்விடமெல்லாம் ஒரே பலாப்பழ வாசனையாயிருந்தது. குதிரை, நாற்காலி, தொட்டில் முதலிய இராட்டினங்களும் அங்கங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இரைச்சலுக்குக் குறைவே இல்லை. குழந்தைகளும் சிறுவர்களும் ஊதல்களை வாங்கிக்கொண்டு, காது துளைத்துப் போகும்படி ஊதித்தள்ளினார்கள். இந்தச் சந்தடிக்கு வெகுதூரத்திற்கப்பால் சிலர், கும்பல் கும்பலாக உட்கார்ந்து கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள், சிரிப்பும் பரிகாசமுமாகக் காலம் கழிப்பது நன்கு விளங்கிற்று. அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில், மற்றும் சிலர் இதே காரியத்தில் ஆழ்ந்திருந்தார்கள். ஆனால், அந்த ஆட்டக்காரர்கள் மௌனம் சாதித்துக் கருமமே கண்ணாயிருந்தார்கள். அவர்களுக்குக் குறி வெறும் விளையாட்டல்ல வென்று நன்றாய்ப் புலப்பட்டது. அதற்கேற்றவாறு அவர்கள் நடை உடைகளிலிருந்து, பணத்தின் அருமையை அறியாதவர்களென்றும் தெரிந்தது. வெங்கடாசலமும் அவன் சிநேகிதர்களும் சாவகாசமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, இந்தக் கூட்டத்தண்டையில் வந்தவுடன், ஒரே மனதாய் எல்லாரும் ‘சட்’ என்று நின்றார்கள். ஏனெனில், இருபது வருஷ மாய்க் காணாத குளத்தூர்க் கோவிந்தனை அங்கே கண்டார்கள். காலத்தின் கோளாற்றை யார் அறியக்கூடும்? செல்வப் பெருமை அவனைச் சுற்றி வீசியது. ஆனால் எவ்வளவு தனிகனாய் விட்டபோதிலும், அவன் மேலுதட்டுப் பிளப்பு முன்போலத்தான் காணப்பட்டது. “அவன் உடம்பெல்லாம் நகையா இருக்குதப்பா. அந்தக் கடுக்கன், மோதிரம் எல்லாம் என்ன அப்படி மின்னுதே!” என்றான் வீரப்பன். “அவன் பட்டுத்துணியைப் போட்டிருக்கிற தினுசைப் பாத்தா, அதுலேயே பொறந்து வளந்தாப்போலிருக்குதே,” என்றான் மதுரை, புன்சிரிப்புடன். “இடுப்புத்துணியோடு பினாங்குக்குக் கூலிவேலைக்கு ஓடினாங்கறதை மறந்திடாதே,” என்று வீரப்பன் ஞாபகப் படுத்தினான். “இவனைப்போலே இருக்கிறவனெல்லாம் துட்டுச் சம்பாரிக்கணுமின்னா, அங்கே பணம் தெருவிலே கொட்டிக் கெடக்குதா?” என்று மதுரை, பொறாமையை அடக்கமுடியாமல் சொன்னான். “கங்காணித் தொளிலு அவ்வளவும் பணமில்லை? ஆளுங்களைப் பிடிச்சு ஆடுமாடாட்டம் வேலை வாங்கவேண்டியதுதானே? ஏளப்பட்டவன் வவுத்திலே அடிச்சுத் துட்டைப் பிடுங்கிக்கிறாங்க, பின்னென்னா? சரி, அவன் எப்படிப் பணம் சம்பாதிச்சா நமக்கென்ன? அப்பாவுவைப் பத்தி ஏதாவது சமாசாரம் தெரியுமான்னு கேக்கலாமின்னு எனக்கு - அவுங்க ரெண்டுபேரும் சேந்து பினாங்கு போனாங்க, தெரியுமல்ல?” என்றான் வெங்கடாசலம். மற்றவர்கள் தலையை ஆட்டினார்கள். வெகு காலத்திற்கு முன்னால் அப்பாவு திடீரென்று மறைந்ததும், அதன் பின் அவன் கடன்காரர்கள் செய்த குழப்பமும் அவர்களுக்கு நினைவு வந்தன. அந்நினைவு அவர்களுக்கே விசனத்தை உண்டுபண்ணினதென்றால், வெங்கடாசலத்தைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை. “வேலனுக்கு, நீ சொந்தத் தகப்பன் இல்லேங்கிற சந்தேகம் எப்பவாவது வந்திருக்குமா?” என்று மதுரை கேட்டான். “சொல்றதுக்கில்லை. ஆனால், சொந்தக் கொளந்தையாயிருந்தா மட்டும் இதுக்கு மேலே என்ன பண்ணிடுவோம்? நான்கூட அவ்வளவு இல்லே, எங்க ஊட்டுக்காரி அவனைக் கொஞ்ச நேரம் பாக்காட்டி செத்துப்போவ. வேலுவும் அப்படித்தான். இருந்தாலும், ஊரிலே வாயாடிக் களுதைக எவ்வளவு இருக்கும்; தெரிஞ்சுக்கிட்டு இருந்தாலும் இருப்பான். நாளுக்குநாள் பெரியவன் ஆறான். இப்போ, அதைப்பத்தி என்ன? அவன் உசிரெல்லாம் எங்கமேலே. தெரிஞ்சுக்கிட்டாலும் சட்டை பண்ணமாட்டான் - பொறு. அவங்க ஆட்டம் முடிஞ்சு போச்சுப் போலிருக்குதே,” என்றான் வெங்கடாசலம், அந்தக் கும்பல் கலைவதைப் பார்த்து. “தோக்கறகுக்கு ஒண்ணும் இல்லையாங்காட்டியும்!” என்றான் மதுரை. அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், வெங்கடாசலம் கோவிந்தன் இருக்குமிடத்திற்கு விரைவாகச் சென்றான். கோவிந்தன் எழுந்திருக்காமல் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வெங்கடாசலம் கும்பிட்டான். ஆனால் கோவிந்தன், வெங்கடாசலத்தை உடனே தெரிந்து கொள்ளமுடியவில்லை; மெள்ள மெள்ளத்தான் ஞாபகம் வந்தது. வெங்கடாலம் இன்னான் என்று தெரிந்து கொண்டவுடன், கோவிந்தன் மிகவும் சாதுர்யமாக, தனக்குப் பார்வையும் ஞாபகசக்தியும் குறைந்து விட்டதென்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். இதற்குள் மதுரையும் வீரப்பனும் வந்து சேர்ந்தார்கள். பிறகு அவர்கள் பிற்கால விஷயங்களைப் பற்றியும், சென்ற இருபது வருஷங்களுக்குள் கிராமத்தில் உண்டான மாறுபாடுகளைப் பற்றியும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவிந்தனும், தனக்குத் தங்கப்புதையல் போல் கிடைத்த மலேயா தேசத்தைப் பற்றி, வெகு பெருமையாய்ப் பேசினான். இச்சமயத்தில், வெங்கடாசலம் அப்பாவுவைப் பற்றி விசாரித்தான். “அப்பாவுவா? - யார் அது? - ஓ தெரிந்தது, தெரிந்தது. அந்தத் தும்பலம் ஆள்தானே? உங்களுக்கு ரொம்ப சிநேகிதனென்று சொன்னான். நீங்ககூட அவன் பிள்ளையை வளர்த்து வருகிறீர்களல்ல?” “ஆமாம்,” என்று வெங்கடாசலம் தலையை ஆட்டினான். வாழ்வுக்கு ஏற்றாற்போல் வந்த பேச்சுத் தோரணையைக் கண்டு அவன் வியந்தான். ஒருவேளை பினாங்கில் படிப்புக்கூடக் கற்றுக் கொண்டானோ என்ற சந்தேகமும் வெங்கடாசலத்திற்கு வந்தது. மோவாய்க்கட்டையைத் தடவிக்கொண்டு, கோவிந்தன் மறு படியும் இழுத்தாற்போல் பேசத் தொடங்கினான். “அவன் உருப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. நான் கங்காணியான பிறகு கூட, அவன் வெகுநாள் வரையில் கூலியாகவே உழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அதற்கு அவனேதான் காரணம். அவன் ஒன்றிலும் பட்டும்படாமலும் இருப்பான். மதிகெட்டுப் போய் விட்டதோ என்றுகூட நம்பும்படி இருந்தது - பிரசவமான சில தினங்களுக்கெல்லாம், அவன் பெண்டாட்டிகூட இறந்துவிட்டாளல்ல? (வெங்கடாசலம் தலையை ஆட்டினான்.) இவ்வளவு கஷ்டங்களோடு அவள் சாவும் நேர்ந்தது, அவன் மூளையைக் கலக்கி விட்டதென்று நினைக்கிறேன்,” என்றான் கோவிந்தக் கங்காணி. “இல்லையே. அடிக்கடி கடுதாசி எளுதிக்கிட்டு இருப்பானே. இப்பத்தான், நாலு அஞ்சு வருசமாகப் பேச்சு மூச்சு இல்லாமே இருக்கான். பாவி, செத்தானோ, பொளச்சானோன்னுகூடத் தெரியில்லியே. நாங்க எவ்வளவோ நேசமா, அண்ணன் தம்பிபோல இருந்தோங்க. அவன் சொகமா இருக்கிறான் என்கிற சேதி கேட்டா, அதுவே எனக்கு போதும்,” என்று தன் உருக்கத்தை மறைக்க முடியாமல், வெங்கடாசலம் மனமுருகிச் சொன்னான். “ஆ! இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது! நாலைந்து வருஷங்களுக்குமுன், அவன் மலேயாவைவிட்டுப் போர்னியோ தீவுக்குச் சென்றான். அது ஒரு கதை. அவன் ஒரு டச்சுப் பிரபுவின் கரும்புத்தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தான். அந்த ஐரோப்பியன் மிகவும் நல்லவனாயிருந்தாலும், அவனுக்குப் பொல்லாத முன்கோபம். திட்ட ஆரம்பித்தால் இன்னதுதான் அவன் வாயில் வருமென்பதில்லை. ஒருநாள், கோபவெறியில் ஒரு மேஸ்திரியை வெகு அசிங்கமாகத் திட்டினான். அந்த மேஸ்திரி கொஞ்சம் முரடன். உடனே, இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ஐரோப்பியனைக் குத்தப் போனான். அப்பொழுது, அப்பாவு பக்கத்தில் இருந்தான். உடனே குறுக்கே விழந்து தடுத்தான். டச்சுக்காரன் மேல் விழவேண்டிய குத்து, அப்பாவு தோள்பட்டையில் விழுந்தது. அந்த ஐரோப்பியன் உயிர் தப்பிக்கொண்டான். அப்பாவு ஒரு மாதம் ஆஸ்பத்திரியிலிருந்து பிழைத்து வந்தான். ஆனால், அந்த ஐரோப்பியன் மட்டும் தனக்கு அப்பாவு செய்த உபகாரத்தை மறக்கவில்லை. அவனுக்குப் போர்னியோத் தீவில் லட்சக்கணக்கான ஆஸ்தி இருந்தது. அவனுக்குப் பிள்ளை குட்டியும் இல்லை. அவனுக்குக் கலியாணமே ஆகவில்லை. அவன் அப்பாவுவைத் தன்னுடன் போர்னியோவுக்கு வந்துவிடச் சொன்னான். கஷ்டப்படாமல் சுகமாய் ஜீவனம் செய்வதற்குத் தகுந்த ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொன்னான். அப்பாவு ஒப்புக்கொண்டு, அந்த டச்சுப் பிரபுவோடு போர்னியோவுக்குப் போனான். அவனுக்கு நல்ல காலம் பிறந்தது என்று எல்லோரும் நினைத்தார்கள். அதன்பிறகு அவன் சங்கதியே யாருக்கும் தெரியாது,” என்று கோவிந்தக் கங்காணி சொல்லி முடித்தான். “தலைவிதி எப்படியெல்லாம் பண்ணுது!” என்று வெங்கடாசலம் பெருமூச்சுவிட்டான். “அங்கே போனாதான், கடுதாசி எளுதக் கூடாதா? பொளச்சிருக்கான்னுகூட நெனைக்கிறதுக்கில்லையே!” தங்க டப்பியிலிருந்து பொடி போட்டுக்கொண்டு, கங்காணி சொன்னான்: “அப்படியெல்லாம் ஒன்றும் இராது. அது வேறு விதமாயிருக்கும். அந்த வெள்ளைக்காரன் வேண்டிய பணத்தைக் கொடுத்திருப்பான். கையிலே பணம் ஏறிவிட்டால், எல்லாக் கெட்ட வழக்கங்களும் வருமல்ல. அந்த ஊரோ சொல்ல வேண்டியதில்லை. ஒரு சாமியார் போனாலும் கெட்டுப் போவார். யார் கண்டார்கள்? அந்த ஊர்ப் பெண் ஒருத்தியைக் கட்டிக் கொண்டு இருக்கலாம்,” என்று கண்ணைச் சிமிட்டிச் சொன்னான். “சே.சே! அவன் அப்படியாக்கொத்தவனல்ல - ஆனால், இந்தக் காலத்திலே என்ன வேண்ணா நடக்கும்,” என்று சொல்லிக் கங்காணிக்கு வந்தனமளித்து, வெங்கடாசலம் விடைபெற்றுக் கொண்டான். வெங்கடாசலத்தின் சிரித்த முகத்தில் துயரம் பாய்ந்துவிட்டது. தன் சிநேகிதனுடைய துர்க்கதியிலிருந்து, இல்வாழ்க்கையின் ஆட்ட ஓட்டங்களுக்கு ஏதாவது நிலையுண்டாவென்று அவன் சிந்தித்துக்கொண்டு மௌனமாக நடந்தான். அவன் மனம் படும் கஷ்டத்தை அவன் சிநேகிதர்கள் அறிந்தார்கள். அவர்கள் சம்பாஷணையை மாற்ற முயன்றும் பயன்படவில்லை. பிறகு நேரமாய்விட்டபடியால், தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லி, வெங்கடாசலத்தை அழைத்துக்கொண்டு, அவர்கள் தாங்கள் இறங்கின இடத்திற்குத் திரும்பினார்கள். |