3

     கருப்பண கவுண்டர் இன்று தோட்டத்துப் பக்கமே போகவில்லை. ஏன், இரண்டு மூன்று நாளாகவே தான் போகவில்லை. கள்ளுக்கடை ஏலம் முதலியன வந்து ஊரில் சரியாக இருப்பதற்கில்லாததுதான் இதற்குக் காரணம். இல்லாவிட்டால் தோட்டத்தை மறந்திருக்க மாட்டார்.

     இரவு சாப்பிட்டுவிட்டு நாச்சப்பனைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டார். சுள்ளி வலசுக்குத் தென்புறத்தில் தான் அவருடைய தோட்டம். இந்தத் தோட்டம் முதலில் ராமசாமிக் கவுண்டருடையதாயிருந்தது. இதை விற்பதில்லை என்று ராமசாமிக் கவுண்டர் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால், கடன் தலைக்கு மீறி விடவே மாரியப்பனின் வற்புறுத்தலின் பேரில் கடைசியாக விற்க நேர்ந்தது. ராமசாமிக் கவுண்டர் சில சமயங்களில் இதை நினைத்துக் கொண்டு உள்ளூற வருத்தப்படுவதுண்டு. பரம்பரைச் சொத்து தமது காலத்தில் கை நழுவுவது என்றால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்.

     மாசி நிலா ஆகாயத்தில் கால் வீசிக் கொண்டிருந்தது. அதனுடைய கிரணங்கள் படாத இடமேயில்லை. எப்போதும் கருப்பண கவுண்டருக்கு நிலா வெளிச்சத்தில் நடப்பது ரொம்ப பிடித்தமான விசயம். பகலில் கூட எங்கும் அவர் வண்டியில் போகும் வழக்கம் கிடையாது. பிறந்ததிலிருந்து வண்டி சவாரி செய்திருந்தால் அல்லவா அந்த வழக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்போது அவர் வைத்திருக்கும் சவாரி வண்டிக்கு ஈடாக அந்தப் பக்கத்திலேயே யாரிடத்திலும் கிடையாது. சுள்ளி வலசிலிருந்து கீரனூருக்கு வருவதற்குக் கூட, அந்த அரை மைலுக்கும் வண்டி இல்லாமல் புறப்பட மாட்டார். ஆனால் இந்த வண்டிச் சவாரியில் உண்மையில் அவர் மனம் சந்தோசம் அனுபவித்ததே கிடையாது. வண்டிச் சத்தத்தைக் கேட்டதுமே ‘கருப்பண கவுண்டர் வந்து விட்டார்’ என்று சனங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான் வண்டி வைத்திருக்கிறார். அவர் தலையில் உருமாலைக் கட்டு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் சனங்கள் என்னமோ கள்ளுக் குடம் எடுத்து தலைசொட்டை ஆகியிருப்பதை மறைப்பதற்காகத்தான் அக்கட்டு கட்டியிருக்கிறார் என்று சொல்லுவார்கள். கருப்பண கவுண்டர் உண்மையில் கள்ளுக் குடம் எடுத்த போது வாழ்க்கையில் அனுபவித்த சுகம் ஒன்றும் இப்போது இல்லை. இப்போது சொத்து இருக்கிறது, சுகம் இருக்கிறது. எதில் தான் குறைச்சல்? என்னவோ அவர் மனம் இந்த வாழ்க்கையில் நிம்மதி அடையவில்லை. ஊருக்குள் அவர் தான் முதற் புள்ளி. அதனால் என்ன? இன்னும் ராமசாமிக் கவுண்டர் சொன்னால் தானே யாரும் கேட்கிறார்கள். பள்ளுப் பறை பதினெட்டுச் சாதியும் அவரிடம் தானே மதிப்பு வைக்கிறார்கள். அப்படித்தான் கருப்பண கவுண்டர் கொடுக்கல் வாங்கலில் ஏதாவது கஞ்சத்தனம் உண்டா! பின் ஏன் இப்படி? கருப்பண கவுண்டர் சொத்து சம்பாதித்து விட்டார் என்ற பொறாமையா? இருக்கலாம், யார் கண்டார்கள்?

     இப்போது கருப்பண கவுண்டர் தமது அந்தஸ்து எவ்வளவு இருக்கிறது என்று பரீட்சை செய்வதிலேயே கவனம் செலுத்தினார். இல்லாவிட்டால் தமது தோட்டத்து ஆட்களே போதாதா தட்டுப் போர் போடுவதற்கு! பார்க்கலாமே என்று ஊரில் நாலைந்து பேருக்கு புதுப்போர் போட வரும்படி சொல்லியிருந்தார். அதற்காகத்தான் ஊரிலிருந்து வந்த களைப்பைக் கூடக் கவனியாமல் தோட்டத்துக்குப் புறப்பட்டார்.

     கருப்பண கவுண்டர் தோட்டத்துக்கு வரும்போது நிலா உச்சிக்கு வந்திருந்தது. இவர் சொல்லிவிட்டிருந்த ஆட்களெல்லாம் வந்து தட்டுப் போர் போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைக் காணக் கருப்பண கவுண்டருக்கு சந்தோசமாயிருந்தது. “ஏப்பா, எல்லாரும் நேரத்திலேயே வந்துட்டீங்களா? தட்டு நவுப்பா இருக்குதா? வெவுரியோடப் போட்டாக் கூட நல்லா பனிப்பதமா இருக்கும்! பொழுது கெளம்பறதுகுள்ளே போட்டுடலாம்! கெடக்குது போரும் பாதிக்கு மேலே ஏறிட்டது! யாரு, அது கெழக்காலத் தோட்டத்து முத்தண்ணனா?”

     “ஏனுங்க மாமா? நாந்தானுங்க!” என்றான் முத்தண்ணன்.

     “இந்த வருசம் பருத்தி எவ்வளவப்பா ஆச்சு?”

     “அதேங் கேக்கறீங்க! பட்டந் தவறிப் போட்டு எல்லாம் சிறு காயாப் போச்சுங்க. ஏனுங்க மாமா, இந்த வருசம் கள்ளுக்கடை எத்தனை ரூவாய்க்குப் போச்சுங்க?”

     “அதெல்லாம் ரொம்பக் கம்மிதான்.”

     “எத்தனை தான் சொல்லுங்களே! இந்த வருசம் ராமசாமிக் கவுண்டர் கூட ஏலத்துக்கு வந்திருந்தாங்களா!”

     “இருபத்தஞ்சு கோயிலுக் கட்டி சாமியை எடுத்து நெறவேத்தறதுக்கு வரோணுமில்ல!”

     “அப்ப, இந்த வருசத்திலே கோயிலுக் கட்டி ஆயிடுமிங்களா?”

     “அதென்னமோ?”

     “உங்களுக்குத் தெரியாதுங்களா? என்னமோ தெரியாத வங்களாட்டச் சொல்றீங்களே? நீங்க இல்லாமெ கிராமத்துக்குளெ என்ன நடந்திடுமிங்க?”

     இதைக் கேட்க கருப்பண கவுண்டருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவர் முத்தணனிடம் என்னவோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அவன், “ஏனுங்க மாமா, நேத்து, ஆண்டிப்பயெ மணியாரங்கிட்டப் போயி என்னமோ அரைக்கிப் போட்டு வந்துட்டன்னு சொல்லிக்கிட்டுத் திரியறானுங்களே. அது என்னுங்க?” என்றான்.

     “என்ன சொல்லிட்டு வந்தானாம்? எனக்கொண்ணும் தெரியாதே? ஏண்டா நாச்சப்பா, என்னடா உனக்கேதாச்சும் தெரியுமா?” என்றார்.

     “அவ்வளவு ஒண்ணும் நல்லாத் தெரியாதுங்க. என்னமோ போயி அண்ணக்கி நீங்க சத்தம் போட்டதெச் சொல்லி இருப்பாம் போலிருக்குது. நம்ம ராமசாமிக் கவுண்டர் தான் ரொம்ப மேல் போட்டுக்கிட்டு பேசினதா சமாசாரம் வந்திருக்குது. ஆனா, இதைச் சும்மா உடப்படாதுங்க” என்றான்.

     “சரி இருக்கட்டும். என்னமா இருந்தாலும் வந்துடுது” என்று கூறினார் கருப்பண கவுண்டர். பிறகு ஏனோ அங்கிருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் மனதில் எத்தனையோ எண்ணங்கள் உதித்தன. இந்த ராமசாமிக் கவுண்டன் உள்ளூருக்குள் சத்துரு மாதிரி இருந்து கொண்டு எடுத்ததிற் கெல்லாம் இடைஞ்சல் பண்ணிக் கொண்டு வருகிறானே என்று மிகுந்த கோபமடைந்தார். முத்தண்ணனிடம் பொன்ன பண்டாரம் விஷயமாக மேலும் கேட்க அவர் விரும்பவில்லை. அவன் மணியாரரிடம் போன உடனேயே இவருக்குத் தகவல் வந்துவிட்டது. அவன் அங்கு போய் என்ன சொல்லியிருப்பான். அதற்கு அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதெல்லாம் கருப்பண கவுண்டருக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர் அங்கிருந்து உடனே வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார்.

     அடுத்த நாள் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு நேராகக் கீரனூருக்குப் புறப்பட்டார். இன்று ஏனோ வண்டியைக் கூட மறந்துவிட்டார். ஆனால், நாச்சப்பன் மட்டும் அவர் எங்கு போனாலும் வராமல் இருக்க மாட்டான். நாச்சப்பன் ரொம்ப நாளாக கருப்பண கவுண்டரிடம் கையாளாக இருக்கிறான். கள்ளுக்கடை வரவு செலவுக் கணக்கு எல்லாம் நாச்சப்பன் தான் பார்த்துக் கொள்வான். ரொம்ப நாளைக்கு முன்பு பஞ்சம் பிழைப்பதற்காக நாச்சப்பன் குடும்பம் மேற்குச் சீமைக்குப் போனது. அங்கு நாச்சப்பனுடன் கூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. வேர்க்கடலை வெட்டு முடிந்த பிறகு ஏதோ கூலி வேலை செய்து நாச்சப்பன் தகப்பன் பொள்ளாச்சியிலேயே காலத்தைக் கடத்தி வந்தான். ஆனால், சிறு வயதில் நாச்சப்பனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தான். நாச்சப்பன் நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது தாய் தந்தையர் இருவரும் காலராவில் ஒரே நாளில் காலமானார்கள். பையனுக்கு வேறு திக்கில்லை. கொஞ்ச நாள் இங்குமங்கும் சுற்றித் திரிந்துவிட்டு எப்படியோ வழி தெரிந்து சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தான். கருப்பண கவுண்டர், பையன் கொஞ்சம் புத்திசாலியாக இருக்கவே தம்மிடமே வைத்துக் கொண்டார். அவருக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் தான். இப்போது குடும்ப வரவு செலவு முழுதும் நாச்சப்பன் தான். இவனுக்குத் துணையாக கருப்பண கவுண்டர் மூத்த மகள் முத்தக்காள் வீட்டுக் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொள்வான். முத்தக்காள் சிறு வயதிலேயே கணவனைப் பறி கொடுத்துவிட்டு தகப்பன் வீட்டிற்கே வந்துவிட்டாள். அவள் வந்தது இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவோ சௌகரியமாகத்தான் போயிற்று. நாச்சப்பணும், முத்தக்காளும் வைத்ததுதான் சட்டம். கருப்பண கவுண்டர் மகன் செல்லப்பன் ஒன்றும் தெரியாதவன். மாடு போலப் பாடுபடச் சோறு தின்னத்தான் தெரியும்.

     கீரனூர் சுப்பராயன் கடைக்கு முன் நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கருப்பண கவுண்டர் அங்கு சென்றதும் அங்கிருந்தவர்கள் அவரை வரவேற்றுக், கடை திண்ணைக்கு சென்று உட்கார்ந்தார்கள். அதற்குள் மணியகாரர் வண்டியும் வந்து கடை வாசலில் நின்றது. வண்டியிலிருந்து மணியகாரரும், ராமசாமிக் கவுண்டரும் இறங்கினார்கள். முதலில் மணியகாரரைக் கருப்பண் கவுண்டர், “வாங்கண்ணா!” என்று கேட்டார். ராமசாமிக் கவுண்டர் முகத்தைப் பார்க்கவே அவருக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “நீங்களும் நேத்து அப்படியே ராசி பாளையமே போயிட்டீங்களா? நா நீங்க வருவீங்களோ என்னமோண்ணு வெகு நேரமட்டும் வண்டியிலே காத்துக்கிட்டு இருந்தேன்” என்றார்.

     “ஆமா, மாப்பிளே வண்டியிலே அப்படியே போயி மாரியப்பனைப் பாத்து வரலாமுண்ணு போயிட்டேன். அவெ நேத்துத்தான் வந்தான்னு வண்டிக்காரெ சொன்னான். பாத்தும் ரொம்ப நாளாச்சு. அவந்தான் மாமனார் ஊடே கெதியின்னு போயிட்டானே!”

     “சின்ன வயசிலே எல்லாரும் அப்படித்தானுங்க! சரி, அது இருக்கட்டுங்க, இந்த வருசம் எப்படி, யாராச்சும் எடுத்துக்கிறீங்களா? நா கள்ளுக் கடையை உட்றலாமுன்னு பாக்கரே” என்றார் கருப்பண கவுண்டர். உண்மையிலேயே இப்போது கள்ளுக்கடை வியாபாரம் அவருக்குக் கசப்பாகத் தானிருந்தது. கள்ளுக்கடைக்காரர் என்ற பெயரை மறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால், ராமசாமிக் கவுண்டர் அப்படி நினைக்கவில்லை. இவன் இஷ்டமில்லை என்று சொல்வது உண்மையில் இஷ்டமில்லாமல் போய் அல்ல. குறைந்த தொகைக்கு கிடைக்கட்டுமென்று இந்தத் தந்திரம் செய்கிறான் என்று நினைத்துக் கொண்டார். ஆகையால், நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, “ஆனாச் செரி, உட்றதுன்னா உட்டுடுங்க. ஆரோ தேவைப் பட்டவங்க எடுத்துக் கிட்டு போறாங்க” என்றார்.

     மணியகாரருக்கு இது பிடிக்கவில்லை. ஆகையால், “நீங்க சும்மா இருங்க, அவுங்க இந்த வருசம் உடறதுக்கு ஆகாதுங்க. மேலைக்கு வேணுமின்னா ஆரோ என்னமோ பண்ணீட்டுப் போறாங்க” என்றார்.

     ராமசாமிக் கவுண்டருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், அதற்குள் கருப்பண கவுண்டரே, “நான் சர்க்கார் கிஸ்துக்கு மேலே பத்து ரூபாய் தான் கொடுப்பனுங்க. சும்மா அதிகமாச் சொல்லிட்டு அப்புறம் பின்னுக்குப் போகக் கூடாதுங்க பாருங்க. அதுக்கு மேலே ஆராவது கொடுக்கறதுன்னா அவுங்களுக்கே கொடுத்திடுங்க” என்றார்.

     “எப்படிங்க மாப்புளே இருக்குது பேச்சு? சாமிக்கு கொடுக்கறது தானே. இத்தனை வருசமா லாபம் சம்பாதிச்சதை ஆராச்சு வாண்டா முன்னாங்களா? உனக்கெ இது தெரியோணும். எனக்கு அப்பவே தெரியும், கருப்பணன் காசின்னா உசிரை உட்டுடுவானே” என்ரார் ராமசாமிக் கவுண்டர்.

     “காசுக்கு உசிரை உடறவன் யாருங்கரது ஊரிலே கேட்டுப் பாருங்க, சொல்லுவாங்க. சும்மா குருட்டாம் போக்கிலெ பேசாதீங்க” என்றார் கருப்பண கவுண்டர்.

     இதற்குள் மணியகாரர் இடைமறித்து, “எப்படியோ ஆகுது. அதுக்குள்ளே நீங்க ஏ வீணாப் பேசிக்கறீங்க? சரி நேரமாவுது, எப்படியோ நீங்க கொடுத்ததைக் கொடுங்க. ஆனா போன வருச நட்டத்தையும் இதிலே எடுத்திடலாமுன்னு நெனச்சுக்காதீங்க” என்று சொல்லிச் சிரித்தார்.

     கருப்பண கவுண்டருக்கு ஒரு நொடியில் விஷயம் விளங்கி விட்டது. ராமசாமிக் கவுண்டர் போக்கு ஒன்றும் அவருக்குப் புரியவில்லை. இந்த மனிதன் ஏன் இப்படி எடுத்ததிற்கெல்லாம் நம்மிடம் துவேஷம் கொள்ள வேண்டும். உண்மையில் பார்க்கப் போனால் ராமசாமிக் கவுண்டன் ஒன்றும் அப்படிக் கெட்டவனல்லவே. ரொம்ப இரக்க சுபாவமுள்ளவனாச்சே. ஆனால், நம்மிடம் மட்டும் ஏன் இப்படி கொடூரமாக நடந்து கொள்ள வேண்டும்? அவருடைய தோட்டத்தை வாங்கியதாலா? நான் வாங்காவிட்டால் வேறு யாராவது வாங்கியிருக்கிறார்கள். அப்படித்தான் நான் என்ன மோசம் செய்தா வாங்கிவிட்டேன். இவைகளை எல்லாம் நினைக்க நினைக்க கருப்பண கவுண்டருக்கு ஆச்சரியமாக இருந்தது.

     மணியகாரர் வண்டியில் சென்று ஏறிக் கொண்டார். “சரி, நான் போயிட்டு வாரனுங்க. எங்கே நம்மூர்ப் பக்கமே நீங்க வாரதைக் காணமா?” என்று கூறிவிட்டு மணியகாரர் சென்று விட்டார்.

     கருப்பண கவுண்டரும் எழுந்து, “நீங்களும் வாரிங்களா? நேரமாகிலயா?” என்றார்.

     “இல்லை, நீ போப்பா; எனக்கு கொஞ்சம் சோலியிருக்குது” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

*****

     “மாரியப்பா!” என்ற குரலைக் கேட்டதும் அவன் திரும்பிப் பார்த்தான். முத்தக்காள் தண்ணீர்க் குடத்துடன் பின்னால் வந்து கொண்டிருந்தாள். இன்று அதிகாலையிலே குளித்திருப்பாள் போலிருக்கிறது. கூந்தலைக் கொண்டை போடாமல் கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். முந்தானைத் தலைப்பை சும்மாடு கூட்டி தலையில் குடம் வைத்திருந்தாள். இடது கைதான் குடத்தைப் பிடித்திருந்தது. வலது கையை வீசி ஒய்யாரமாக நடந்து வந்தாள். குடத்து ஜலம் தளும்பியதில் இரண்டொரு சொட்டுத் தெரித்து முத்துப் போலக் கன்னத்தில் வீற்றிருந்தது. மாரியப்பன் அவளைப் பார்த்ததும் புன்சிரிப்புடன், “ஏது முத்தாயா, நீ தண்ணிக்கு வந்தது?” என்றான்.

     “ஏன் நான் வரக்கூடாதா?”

     “இல்லை, பண்ணயத்தாள் இருப்பானே என்று கேட்டேன்.”

     “இண்ணக்கி எங்கேயோ அவனெக் காணம்; ஐயெ இண்ணக்கி மலைக்குப் போறாங்க. அதனாலே நேரத்திலே எந்திருச்சி நானே எல்லாம் பண்ணினே.”

     “அட, இண்ணக்கி அமாவாசையா? அது கூடத் தெரியலப் பாரு!”

     “உனக்கு எங்கப்பா தெரியும்! பாக்கலா, நீயே சொல்லுவீண்ணு பாத்தே. எனக்குத் தெரியாதுன்னு இருக்கறயா?”

     “என்ன தெரியும்?”

     “இப்ப உனக்கு என்னதான் தெரியப் போகுது? நெலத்துலே நடக்கறது கூடத்தான் தெரியாது.”

     “விசயத்தை சொல்லாமே, சும்மா என்னென்னமோ பேசறயே!”

     இருவரும் பேசிக் கொண்டே ஊர்த் தலைவாசல் வரையிலும் வந்து விட்டார்கள். முத்தாயா ஒன்றும் சொல்லாமல் தன் வீடு நோக்கிப் போவதைப் பார்த்த மாரியப்பன், “முத்தாயா, இங்க பாரு, சொல்லமாட்டாயா? என்ன விசயம்?” என்றான்.

     முத்தாயா அங்கேயே நின்று கொண்டு சிறிது நேரம் மாரியப்பன் முகத்தையே பார்த்தாள். பிறகு சிரித்துக் கொண்டு, “இண்ணக்கி, ஐயங்கூட, செல்லாயாளைப் பாக்கறதுன்னா வரச் சொன்னாங்க. வண்டி அந்தத் தடத்திலே தான மலைக்குப் போவுது?” என்றாள்.

     மாரியப்பன் கலகலவெனச் சிரித்தான். “இது தானா? நான் என்னடாப்பான்னு பாத்தேன்” என்றான்.

     “கொழந்தை உன்னயாட்டம் இருக்குதா? அவளாட்டவா? செல்லாயா நல்லாத்தான இருக்கறா?”

     “நல்லாத்தா இருக்கறா, வண்டி போறபொது சொல்லச் சொல்லு. நானும் இப்பவே போவோணும்.”

     “செரி” என்று சொல்லிவிட்டு முத்தாயா வீட்டிற்குச் சென்று விட்டாள்.

     ராமசாமிக் கவுண்டருக்குப் பேரன் பிறந்ததால் அளவற்ற ஆனந்தம் கொண்டார். சங்கதி தெரிந்த உடனே கோவில் ஐயர் வீட்டிற்குச் சென்று ஜாதகக் குறிப்பு எல்லாம் தயார் செய்துவிட்டார். இன்று காலையில் மாரியப்பனைக் காணவும் அவருக்குத் தலைகால் புரியவில்லை. தம் மனைவியிடம் சென்று பையனுக்கு காப்பி போட்டுக் கொடு என்று உத்தரவிட்டார். மாரியப்பன் இங்கு இருக்கும் போது வீட்டில் எப்போதும் காபிப்பொடி சர்க்கரை இருக்கும். ஆனால், மாரியப்பன் ராசிபாளையத்திலேயே இருப்பதால் இப்போது வீட்டில் காபியை நினைப்பாரே கிடையாது. எப்போதோ வாங்கி வந்த காப்பிப் பொடி மட்டும் கொஞ்சம் தகர டப்பாவில் ஒட்டிக் கொண்டிருந்தது. தாயார் காப்பிக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு மகனிடம் வந்து குழந்தையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், ராமசாமிக் கவுண்டரோ அடிக்கடி காபி ஆயிற்றா என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

     “மாரீப்பா!” என்று கூப்பிட்டுக் கொண்டு கருப்பண கவுண்டர் நடவைக்குள் நுழைந்தார். எதிர்பாராத விதமாக கருப்பண கவுண்டரைப் பார்க்கவே, ராமசாமிக் கவுண்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கு இவன் எங்கு வந்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். மாரியப்பன் உடனே அவசர அவசரமாக எழுந்து, “வாங்க உக்காருங்க” என்றான்.

     ஒரு நொடியில் கருப்பண கவுண்டர் விஷயத்தைத் தெரிந்து கொண்டார். முதலில் நாம் இங்கு வந்ததே பிசகு என்று நினைத்தார். இருந்தாலும் அவர் ஒருவாறு தம்மைச் சமாளித்துக் கொண்டு “வண்டி பூட்டியாய் விட்டது. நீயும் ராசிபாளையம் வராமுன்னு சொன்னயாம்? வாரயா போலாம்” என்றார்.

     “இதபாருங்க வந்துட்டேன்” என்று கூறிவிட்டு, “ஏம்மா, காபி ஆயிட்டுதா?” என்றான்.

     “காபி ஆச்சு. ஆனா கருப்பட்டி போட்டா குடிப்பயா? சக்கரை இல்லயே?” என்றாள்.

     “சக்கரை இல்லாட்டிப் போவுது, கொண்டா?” என்றான் மாரியப்பன்.

     அதற்குள் கருப்பண கவுண்டர், “ஏப்பனு, எங்க ஊட்லே வந்து குடிக்கலாம் வா. மேவரத்துக் கொட்டம் புதுசா கட்டினதுக் கப்புறம் நீ ஊட்டுப் பக்கமே வரலயே! வா, அப்படியே குடிச்சுட்டுப் போலாம்” என்றார்.

     ராமசாமிக் கவுண்டருக்கு இது வயிற்றெரிச்சலாக இருந்தது. புது வீடு கட்டிவிட்டானாம். அதை பெருமை அடிக்க வந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டு “ஏப்பா நீ இப்பவே போகோணுமா?” என்றார்.

     மாரியப்பன் வேறு ஒன்றும் போகாமல், “ஆமாம் போயிட்டு நாளக்கி வாரேன். சும்மா வந்துட்டுப் போலாமுன்னு வந்தேன்” என்று கூறிவிட்டு எழுந்து கருப்பண கவுண்டர் பின்னால் சென்றான்.

     ராமசாமிக் கவுண்டரோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.



பனித்துளி : 1 2 3 4 5 6 7 8 9 10