உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 இன்று நாச்சப்பன் அதிகாலையிலேயே எழுந்து தோட்டத்திற்குப் புறப்பட்டான். இன்று நல்ல நாளாக இருப்பதால், பருத்தி எடுப்பதற்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தான். இவன் வீட்டை விட்டுப் புறப்படும் போது முத்தாயாளைத் தவிர வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. பொழுது கிளம்புவதற்கு இன்னும் சற்று நேரமிருந்தது. ஆனாலும் கீழ்வானில் செவ்வொளி படர்ந்திருந்தது. ஊர் மந்தையைச் சுற்றிலும் எருக்கலைச் செடிகள் செழிப்பாக ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. மங்கிய சிவப்பும் வெண்மையும் கலந்த எருக்கலைப் பூக்கள் காலைக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஊரைச் சுற்றிலும் துளி இடம் விடாமல் எருக்கலை வளர்ந்திருந்தால் அதன் இடையில் தான் தோட்டங் காடுகளுக்குப் போகும் ஒற்றையடிப்பாதைகள் வளைந்து சென்றன. பாதை ஓரங்களில் பழுப்பு இலைகள் இங்கு மங்கும் சிதறிக் கிடந்தன. ஓணான் முதலிய ஜந்துக்கள் இங்குமங்கும் போகும் போது வறண்ட இலைகள் பட்டு ‘சரக், சரக்’ எனச் சத்தம் உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் வந்ததும், நாச்சப்பன் போர்வையை எடுத்து உருமாலையாகக் கட்டிக் கொண்டான். சில சில எருக்கலை ‘மார்’கள் பாதையோரம் வளைந்து நடந்து போகிறவர்கள் வருபவர்களை தொட்டுக் கொண்டிருக்கும். கொஞ்ச தூரம் சென்று நாச்சப்பன் சடக்கென நின்றான். பிறகு அருகிலிருந்த ஒரு எருக்கலைச் செடியை ஒரு கையால் வளைத்து மற்ற கையால் அதிலிருந்த வெடியாத மொக்கை கையால் நசுக்கினான். முதலில் நசுக்கினது வெடிக்கவில்லை. இரண்டாவது ஒரு மொக்கை நசுக்கினான். அது ‘டப்’பென வெடித்தது. மூன்றாவது நசுக்கினதும் வெடித்தது. அவன் முகத்திலே சிறிது திருப்தி வெளிப்பட்டது. அவன் பார்த்த சகுனம் நன்றாகத்தான் வந்தது. முதலில் வெடிக்கா விட்டாலும் இரண்டாவது, மூன்றாவது வெடித்தது. நினைத்த காரியம் தாமதம் ஆனாலும் பலியாமல் போகாது. இந்த எண்ணம் அவன் மனதில் எழவே சற்று உற்சாகம் அதிகரித்தது. அவன் வேறு ஒன்றைக் குறித்தும் சகுனம் பார்க்கவில்லை. அடுத்த நாள் குப்பண கவுண்டன் பூமி சுவாதீனம் ஆகப் போகிறது. சுவாதீனத்திற்கு முந்தியே பல கதைகள் ஊரில் பரவ ஆரம்பித்தன. ஊரிலே ராமசாமிக் கவுண்டர், குப்பணன் பக்கம் பலமாக இருப்பதாகவும், நாற்பது ஐம்பது ஆட்களை தயாராக கலகத்திற்கு வைத்திருப்பதாகவும் செய்தி எட்டியது. பூமி ஏலத்திற்கு வந்து ரொம்ப நாளான போதிலும் இன்னும் குப்பணன் வசம் தான் பூமி இருந்தது. அந்தப் பூமியைத் தான் கருப்பண கவுண்டர் கிரயத்திற்கு வாங்கியிருந்தார். இனி பூமியை சுவாதீனப் படுத்துவதுதான் பாக்கி. இந்தப் பூமியை வாங்கினால் இவ்வளவு சங்கடங்கள் வரும் என்று தெரிந்திருந்தால் கருப்பண கவுண்டர் பூமியை வாங்கியிருக்கவே மாட்டார். ஆனால் கடன் கொடுத்திருந்தவன், ‘நானாச்சு பூமியை உங்களுக்குச் சுவாதீனப் படுத்திக் கொடுக்க’ என்று தைரியம் கூறவே கருப்பண கவுண்டர் ஏமாந்து போய் இசைந்து கொண்டார். ஆனால் இன்றோ கருப்பண கவுண்டர் தான் ஆள் சேர்த்துக் கொண்டு பூமிக்குள் நுழைய வேண்டியிருந்தது. இவையெல்லாம் நாச்சப்பனுக்கு முன் கூட்டியே தெரியும். ஓரளவு கருப்பண கவுண்டரிடம் நாச்சப்பன் சொல்லியும் இருக்கிறான். என்ன சொல்லி என்ன, இன்று ‘வில்லங்கத்தை’ விலைக்கு வாங்கியது மாதிரி ஆயிற்று. எல்லாம் நாச்சப்பன் தலையில் வந்து விடிந்தது. இவன் தான் இக் காரியங்களை எல்லாம் பார்த்தாக வேண்டும். நாச்சப்பன் தொண்டுப் பட்டிக்குச் சென்று கட்டியிருந்த எருதுகளை ஒரு முறை பார்த்தான். பிறகு தோட்டத்துக் குடிசையில் படுத்திருந்த ஆளை எழுப்பி, “ஏண்டா! மாடுக சும்மா நிண்ணுக்கிட்டிருக்குது. முன்னாலே ஒண்ணயும் காணோம். இன்னும் என்னடா தூக்கம்?” என்றான். படுத்திருந்த ஆள் அவசரமாக எழுந்து அருகிலிருந்த போரை உருவி கட்டியிருந்த மாடுகளுக்குத் தீனி போட்டான். இதற்குள் சூரியன் நன்கு கிளம்பி விட்டான். எங்கும் உதயத்தின் இனிமை வாரித் தெளிக்கப்பட்டிருந்தது. பக்கத்துத் தோட்டங்களில் ஏற்று இறைப்பதாலுண்டாகும் ‘கீறீச் கீறீச்’ என்னும் சப்தத்துடன் பக்ஷி ஜாதிகளின் ஓசையும் கலந்து இயற்கையைத் துயிலெழுப்பின. பருத்திக் காட்டுக்குள் ஆண்களும் பெண்களும் மடியைக் கட்டிக் கொண்டு குனிந்து குனிந்து பருத்தி எடுக்க ஆரம்பித்தனர். பழய சோற்று நேரத்துக்குள் அரைக் காடு பருத்தி எடுத்தாயிற்று. வரப்பின் மேல் உட்கார்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்த நாச்சப்பன் கிணற்றுப் பக்கம் போனான். முத்தாயா இன்று பழய சோறு கொண்டு வருவதைப் பார்த்து நாச்சப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அருகில் வருவதற்கு முன்பே, “ஏது நீயே வந்திட்டயே?” என்றான் நாச்சப்பன். முத்தாயா ஒன்றும் பேசவில்லை. அங்கிருந்த பூவரசு மரத்தடியில் தலையில் கொண்டு வந்த பழய சோற்றுக் கலயத்தை இறக்கி வைத்தாள். அருகில் கிடந்த பலகைக் கல்லை எடுத்து வைத்து மூடினாள். இந்தப் பலகைக்கல் சோறு மூடுவதற்காகவே அங்கே உபயோகப்படுத்தப்படும் கல். அதற்குப் பிறகு தலை சும்மாட்டை உதறி நன்கு மாராப்புக் கட்டிக் கொண்டு நாச்சப்பனைப் பார்த்து, “நீ பல்லு விளக்கீட்டயா?” என்றாள். இதுவரையிலும் வேறு ஒன்றும் பேசாமல் இமை கொட்டாமல் முத்தாயாளையே பார்த்துக் கொண்டிருந்த நாச்சப்பன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, “நாங் கேட்ட கேள்விக்குப் பதிலெக் காணமே!” என்றான். அவன் பேசி முடிப்பதற்குள் முத்தாயா சடக்கென, “ஏ, நா, வரப்படாதா? இல்லாட்டி என்னெக் கண்டா உனக்குப் புடிக்கலயா?” என்றாள். உன்னெ எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குது. ஆனா, உம் பேச்சுத்தா புடிக்க மாட்டிங்குது? ஏ, ரெண்டு நாளா இப்படி எங்கிட்ட வெறுப்பா பேசிக்கிட்டு வாராய்?” “அதுவா? என்னெக் கேட்டா எனக்கென்ன தெரியும்? அத பாரு தெம்பரத்துக் குட்டையிலே குமுஞ்சு, குமுஞ்சு பருத்தி எடுக்கறாளே, ஆண்டிச்சி அவளப் போயிக் கேளு!” என்று பொன்ன பண்டாரம் மனைவியைச் சுட்டிக் காட்டினாள். நாச்சப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. பேச்சைத் தட்டிக் கழிப்பதற்காக இப்படிப் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டான். ஆகையால் உதாசீனமாக, “நா ஒருத்தியையும் போய்க் கேக்கலெ, நீயே கேட்டுக்கோ. பல் எல்லாம் வெளக்கியாச்சு. எங்கே பழய சோத்தை எடு” என்று கூறிவிட்டு கிணற்றுக்குள் இறங்கினான். முத்தாயாளும் வேறு ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே போனாள். நாச்சப்பன் நீர் மட்டத்திற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளையும் நீட்டினான். முத்தாயாள் கலயத்துச் சோற்றை நன்கு கரைத்து அவன் கையில் விட்டாள். நாச்சப்பன் சாப்பிட்டு கையலம்பிக் கொண்டு கிணற்று மேட்டுக்கு வந்து விட்டான். முத்தாயாளும் அவன் பின்னாலேயே வந்து விட்டான். இது நாச்சப்பனுக்குச் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. எப்பவாவது ஒரு நாளைக்கு அதிசயம் போல முத்தாயா சோறு கொண்டு வந்து போட்டால் சீக்கிரத்தில் கிணற்றை விட்டுப் போகமாட்டாள். கலயத்துச் சோறு தீரு முன்பே “நாச்சப்பா, இதுதான் கடைசி வாய். எனக்கு இனி மீனுக்கு வேண்டும்” என்று எச்சரிக்கை செய்து விடுவாள். கலயத்திலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக சோற்றை எடுத்து மீன் குஞ்சுகளுக்குப் போடுவாள். அவைகள் கும்பல் கும்பலாக வந்து சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தமடைவாள். நாச்சப்பனும் அந்த ஆனந்தத்தில் பங்கு எடுத்துக் கொள்வான். கடைசியாக அவள் கலயத்தைக் கழுவிக் கொண்டு வருவதற்கு ரொம்ப நேரமாகும். அப்போது அவள் நாச்சப்பனிடம் கேட்கும் கேள்விகளும், பேச்சும் அவனுக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். ஆனால் இன்றோ அவள் கேள்வி கேட்கவும் இல்லை. இவன் பதில் சொல்லவும் இல்லை. நேரம் ஆக ஆக, நாச்சப்பனுக்கு எப்படியோ இருந்தது. குப்பண கவுண்டன் தோட்டம் சுவாதீனம், பருத்திக் காடு, பருத்தி விலை முதலிய இவைகள் ஒன்றும் அவன் மனதில் இடம் பெறவில்லை. “முத்தாயாள் ஏன் இப்படி இருக்கிறாள்! முத்தாயாள் ஏன் இப்படி இருக்கிறாள்.” என்றே அவன் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. அவளைக் கேட்டு அவள் வாயால் விசயத்தைத் தெரிவது கடினம் என்பது அவனுக்குத் தெரியும். முத்தாயாளுக்கு ஒரு ரகசியமுந் தெரியாது. ஒன்றையும் ஒளித்து வைக்கவும் தெரியாது. எந்த விசயத்தையும் யாரிடமும் கூசாமல் சொல்லி விடுவாள். அப்படிச் சொல்வதால் தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது கெடுதி நேரிடுமோ என்பதொன்றையும் அவள் கவனிக்க மாட்டாள். அவள் மனது வந்தால் எந்த விசயத்தையும் தானாகவே சொல்லிவிடுவாள். ஆனால் பிறர் வற்புறுத்தலுக்குப் பயந்து கொண்டு ஒரு சின்ன விசயத்தைக் கூடச் சொல்ல மாட்டாள். இவைகளெல்லாம் நாச்சப்பனுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவளிடம் வேறு ஒன்றும் கேட்காமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். முத்தாயாள் முந்தானைத் தலைப்பில் முடிந்திருந்த வெற்றிலை பாக்கை அவிழ்த்து அவன் கையில் கொடுத்துவிட்டு நேராகப் பட்டியருகில் சென்றாள். அங்கு தோட்டத்து ஆள் தயாராகப் பால் கறந்து வைத்திருந்தான். முத்தாயாள் பால் சொம்பை வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். நாச்சப்பன் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தோட்டத்துக் ‘கடவை’த் தாண்டும் போது திரும்பிப் பார்த்தாள். திரும்பும் போது சூரிய வெளிச்சம் பட்டு அவள் கண்கள் மின்னியது. நாச்சப்பன் இடத்தை விட்டு அசையவில்லை. அவன் எந்நேரம் அங்கு நின்று கொண்டிருந்தானோ தெரியவில்லை. திடீரென யாரோ பின்னால் முதுகைத் தட்டுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தான். பண்ணயத்தான் வீரப்பன் “ஏனுங்க அப்படி உட்டது உட்டாப்பலே பாக்கறீங்க!” என்று கூறிச் சிரித்தான். நாச்சப்பனும் தான் சிரித்தான். திடீரென அவனால் பேச முடியவில்லை. என்னதான் பேச முடியும்? அவளே பேசாமல் போகும் போது இவனால் எப்படிப் பேச முடியும்? “நாளக்கி குப்பணத் தோட்ட சுவாதீனத்துக்குப் போறம். நம்ம ஆளுக்கு எல்லாம் சொல்லி வெச்சிரு. எல்லாத்துக்கும் தயாராப் போவோணும். அதேங்கற சமயத்திலே ஏதாச்சும் மோசம் போயிடப் போவுது” என்றான். “அதுக்கென்னுங்க வந்திட்டது! அவெ எந்தப் படயெக் கூட்டிக்கிட்டு வந்திடுவானுங்க? நா முன்னாலே போயி நின்னனுனா குப்பண வகயறா கிட்டக்கூட வர மாட்டாங்க!” “அது தெரிஞ்ச சங்கதிதானே! செரி, பருத்தி எடுத்ததும் கூலிப் பருத்தி கொடுத்து அனுப்புச்சுடு. நா கொஞ்சம் காங்கயம் போகோணுமினு ஐயஞ் சொன்னாங்க” என்று கூறிவிட்டு நாச்சப்பன் தோட்டத்தை விட்டுப் புறப்பட்டான். ***** ராமசாமிக் கவுண்டர் வீட்டில் மத்தியான நேரத்தில் ஏதோ இரண்டு பேர் பேச்சுக்கு வராமலிருக்க மாட்டார்கள். வழக்கம் போல இன்று சபை கூடியிருந்தது. சபையிலே இன்று முக்கிய பிரசங்கி பொன்ன பண்டாரம் தான். இன்று யாரோ ஒரு படி கள் இனாமாக வாங்கி ஊற்றி விட்டார்கள் போலிருக்கிறது. பேச்சுக்கு ஒரு கதை சொல்லி வந்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் முக்கியமாக ராமசாமிக் கவுண்டர், அவன் பேச்சில் மூழ்கியிருந்தார். “சாமி, பொம்பளெ மனசெ ஆரும் கண்டு பிடிக்க முடியாதுங்க. அவ என்ன நெனக்கறா என்பது ஒருத்தருக்கும் தெரியாதுங்க. நம்ம கோவில் அய்யருதான் ஒரு கதை சொல்லுவாருங்க” என்று சொல்லி நிறுத்தினான். “அது என்ன கதையடா?” என்று உடனே ராமசாமிக் கவுண்டர் கேட்டார். பொன்ன பண்டாரம் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை எட்டிப் போய் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்தான். பிறகு, “அது எங்கேயோ மறந்து போச்சுங்க. நல்லா நெனப்பில்லீங்க. இருக்கற வரையிலும் சொல்றனுங்க” என்று கூறிக் கதையை ஆரம்பித்தான். “ஒரு ஊரிலே ஒரு குயவன் இருந்தா. அவனுட பொண்டாட்டி ரொம்ப அழகுங்க. அந்த ஊரு மணிகாரனுக்கு அவ பேரிலே அளவு கடந்த ஆசையுங்க. வெகு நாளா அதுக்கு என்னடா வழியின்னு நெனச்சு நெனச்சுப் பாத்தானுங்க. அவனுக்கு ஒரு வழியுந் தெரியிலே. கடைசியா சரி அவளெக் கேட்டுப் பாத்திடலாமுன்னு ஒருநா அவளத் தனியா சந்தித்துக் கேட்டானுங்க. திடீருனு மணியார் இப்படிக் கேக்கவே அவளும் ‘சரி அதுக்கென்னுங்க! எம்புருச ஊரிலே இல்லாத போது ஒரு நாளக்கி சொல்றே’ என்று சொல்லீட்டா. மணியாரனுக்கு ஆசை வந்தாப்பலயே அந்த ஊரு கணக்குப்புள்ளெக்கும் தலையாரிக்கும் அவ மேலே ஆசை உண்டாயிட்டது. அவுங்க கேட்டதுக்கும் இவ இப்படியே பதில் சொல்லீட்டா. அப்பறம் தம் புருஷங்கிட்ட மணியார், கணக்குப்புள்ளே, தலையாரி இவங்க கேட்டது, அதுக்கு இவ பதில் சொன்னது எல்லா சொன்னா. அவனும் இதைக் கேட்டுட்டு நா நாளக்கி தலை மறவா இருந்துக்கிறே. நீ மூணுபேரையும் வரச் சொல்லீடு என்று சொல்லீட்டா. இவளும் அப்படியே ‘இண்ணக்கி ராத்திரிக்கு எம் புருச ஊரிலே இருக்கமாட்டா. நீங்க வாங்க’ன்னு தனித் தனியா கண்டு சொல்லீட்டா. “எப்படா பொழுது உழுவும், உழுவும் என்று காத்துக்கிட்டு இருந்தாங்க. பொழுது போனதும் மணியாரர் அவசரமா குயவன் வீட்டிற்கு வந்தார். அவளும் வெகு பிரியமா ஊட்டுக்குளெ கூட்டிக்கிட்டுப் போயி பாயை விரிச்சு உக்கார வச்சா. அதற்குளெ கணக்குப்புள்ளெ வந்து வெளிக்கதவைத் தட்டினார். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவ, “ஐயோ! இனி நா என்ன செய்வே! எம் புருச பாவி வந்திட்டானே”ன்னு அவசர அவசரமா இங்கு மங்கு பாத்தாள். இதைக் காணக் காண மணியாரருக்கு நடுக்க மெடுத்துக் கொண்டது. ‘அடி பாவி முண்டெ, இப்படி வரச் சொல்லி எம் பேரைக் கெடுத்திட்டயே’ அப்படீன்னு அங்கலாய்த்தார் மணியாரர். ‘சரி பயப்படாதீங்க. பொடக்காழியிலே உருப் பண்ணி வச்சிருக்கிறா எம் புருசெ. நீங்க கோவணத்தைக் கட்டிக்கிட்டு உருவோடொண்ணாப் போயி நிண்ணுக்குங்க. நா சுண்ணாம்பைக் கரச்சு மேலே கொண்டு வந்து ஊத்தீடருனுங்க. அது சித்தெ நேரத்திலே காஞ்சுதுன்னா நீங்களும் உரு மாதிரியே போயிடுவீங்க. எம் புருசனு கவனிக்க மாட்டானுங்க’ன்னு சொல்லி அப்படியே மணியாரனைக் கொண்டு போயி சுண்ணாம்பெக் கரச்சு ஊத்தி நிக்க வச்சிட்டா. அப்புறம் வெளிக் கதவை வந்து திறந்துட்டா. கணக்குப் புள்ளெ ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தவர், அவருக்கு அசாத்தியக் கோபம் வந்திட்டது. அவ அவரச் சாந்தப்படுத்தி பாயிலே உட்கார வச்சா. இதுக்குளே வெளியிலே தலையாரி வந்து கதவைத் தட்ட ஆரம்பிச்சா. கணக்குப் புள்ளெக்கு பயம் புடிச்சுக்கிட்டது. அவரையும் மணியாரரைப் போல செய்து உருவோடு உருவாக் கொண்டு போயி நிறுத்திட்டா. அப்புறம் தலையாரி வந்தா, அவெ உள்லே இருக்கற போது நெசமாவே புருஷ வந்து கதவைத் தட்டினா. தலையாரியையும் அப்படியே செய்து கொண்டு போய் நிறுத்திட்டு கதவைத் திறந்து உட்டாள். “புருசெ ஊட்டுக்குளெ வந்து சாப்பிட்டுட்டு சாவகாசமா பொண்டாட்டியைப் பார்த்து, ‘நா போயிருந்தே, இந்த உருச் செய்யச் சொன்னவங்க வாண்டாமினு சொல்லீட்டாங்க. எனக்கு இந்த உருவுகளைப் பாக்கப் பாக்க வயித்தெரிச்சலா இருக்குது. தடி எடுத்தா இவைகளெ எல்லா ஒடச்சு எறியோணுமி’ன்னா. இதைக் காதுலே கேக்கக் கேக்க இவங்க மூணு பேருக்கு நடுக்க மெடுத்துக்கிட்டது. சுண்ணாம்புத் தண்ணி காஞ்சு நல்லா வெள்ள வெளேறென்னு இருந்தது. பொண்டாட்டி நல்லா இரும்புக் கட்டுப் புடிச்ச தடியாப் பாத்து ஒண்ணு கொண்டு வந்து கொடுத்தா. அவெ தடியெ வாங்கீட்டுப் போயி ஒவ்வொரு உருவா ‘டப்பு டப்பு’னு போட்டா. எத்தனெ அடிவைத்தா தாங்குவாங்க. அடி பொறுக்காம இந்த மூணு மனிச உருக்களும் ஓட ஆரம்பிச்சுது. இதெப் பாத்து அவெ ஊரே திரண்டு வாராப்பலே சத்தம் போட்டானாம். அப்புறம் சனங்க எல்லா வந்து மூணு பேருத்த மானமு போச்சுதுன்னு வையிங்க. நா எதுக்கு சொல்ல வந்தன்னா, பொம்பளெ பாத்து எது வேணுமானாலும் செய்யலாம். அவளால ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். தூர ஏம் போவோணும். நம்ம கருப்பண கவுண்டர் மக முத்தாயாளெ எடுத்துக்கிங்க. அந்தப் பயெ நாச்சப்பெனக் கைக்குளெ போட்டுக்கிட்டு எப்படி காரியத்தைச் சாதிக்குறாங்க. அவெ இல்லாட்டி கருப்பணனுக்கு என்ன தெரியும்? ரண்டு ரண்டும் நாலுங்கக் கூடத் தெரியாது” என்று சொல்லிச் சிரித்தான். இதைக் கேட்க ராமசாமிக் கவுண்டருக்குச் சிறிது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் கூறியதை அவரால் மறுக்க முடியவில்லை. அங்கு கூடி இருந்தவர்கள் யாரும் வாய் திறவாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ மறந்து போன ஒரு விசயம் திரும்பவும் ஞாபகத்திற்கு வந்தது போல அனைவரும் ஆமோதித்தார்கள். ஆனால் யாருக்கும் இதுவரையிலும் இப்படிச் சொல்ல மனம் எழவில்லை. புதிதாக ஒன்றை இட்டுக் கட்டிச் சொல்வதற்கு அஞ்ச வேண்டியதுதானே? ஆனால் யாராவது ஒருவர் தலைப்பு எடுத்துக் கொடுத்து விட்டால் மற்றவர்கள் அந்த வழியில் செல்வதற்கு சௌகரியம் ஏற்பட்டு விடுகிறது. பெரிய தோட்டத்துச் சாமியப்ப கவுண்டர் இதுவரையிலும் கதையை நன்கு ரசித்துக் கொண்டு தான் வந்தார். ஆனால் கடைசியில் பொன்ன பண்டாரம் சொன்னதும் மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் வாய் திறந்து பேச விரும்பினார். ஆனால் என்ன பேசுவது என்பதுதான் அவருக்குத் தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு தம் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “அப்பா, ராமு, இதெல்லாம் நல்லாவா இருக்கும்! கருப்பணெ எப்படியோ போயிட்டுப் போறா. ஆனா, அந்த மாப்புள்ளெயெப் பத்தி கன்னாப்பின்னானு சொல்லலாமா? நாச்சப்பந்தா என்ன? ரம்ப யோக்கியனாச்சே” என்றார். அவரால் இதற்கு மேல் பேச முடியவில்லை. ராமசாமிக் கவுண்டர் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தவர் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ‘கல கல’வெனச் சிரித்தார். பிறகு, “ஐயா, அவெ எனத்தைச் சொல்லீட்டானுங்க! எல்லா உங்க காலமாட்டவே நெனச்சுக்கறீங்களா! இப்பப் பொறக்கறதுக்கு முந்தியே எல்லாந் தெரிஞ்சிக்கிட்டு வந்திடுதுங்க! அந்த எழவு எப்படியோ போயிட்டுப் போகுதுங்க. கோயிலு வேலெயைப் பத்தி எல்லாரும் கம்மிணு இருக்கறீங்களே? அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க!” என்றார். பேச்சு வேறு திக்கில் திரும்பியது. இது பொன்ன பண்டாரத்திற்குத் திருப்தி அளித்தது. சாமியப்ப கவுண்டர் முகத்தைப் பார்த்து இவன் பயந்து போய்விட்டான். எங்கு தன்னை ருசுப்படுத்தச் சொல்லி அம்பலத்திற்கு இழுத்துவிட்டு விடுவாரோ என்று பயந்தான். எப்படியோ ஊருக்குள் இந்தப் பேச்சைப் பரவ விட்டுவிட வேண்டியது என்பதுதான் அவன் எண்ணம். அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு வாக்கில் போன பக்கமெல்லாம் இதைப் பற்றிச் சொல்லாமலிருப்பதில்லை. இம்மாதிரி விசயங்கள் சனங்களிடம் பரவுவது போல வேறு எந்த விசயம் பரவப் போகிறது? இதனால் அவனுக்கு என்ன லாபம்? ஏன் இப்படிச் சொல்கிறான்? தான் செய்து வரும் காரியம் ஒருவருக்கு எத்தகைய தீமையை விளைவிக்கும் என்பதொன்றும் அவன் சிந்திக்கவில்லை. என்னமோ அவன் மனதில் நெடுநாளாகக் கருப்பண கவுண்டர் மேலிருந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டதாகக் கருதினான். அவ்வளவு தான். அங்கு கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். கடைசியாக பொன்ன பண்டாரம் தான் இருந்தான். இப்போது அவனுக்குக் குடி வெறி சற்றுத் தணிந்திருந்தது. ராமசாமிக் கவுண்டர், “ஏண்டா பொன்னா! ஊருக்குளெ ஆரைப் பார்த்தாலும் பேசறாங்களே, இது நெசந்தானா?” என்றார். பொன்னனுக்கு, ஊருக்குள் சனங்கள் எப்படித் தெரிந்து பேசுகிறார்கள் என்பது நன்கு தெரியும். முதல் முதலில் இவன் போட்ட விதை தானே இது! அவனும் சற்றும் பின் வாங்காமல், “இல்லாமலா பேசுவாங்க! இல்லாதது பொறவாதுங்களெ” என்றான். அதற்குமேல் ராமசாமிக் கவுண்டர் வேறு ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. “செரி, எனக்கு நேரமாவுது பேரனைப் பாத்து ரெண்டு நாளாச்சு. நா ராசிபாளையம் போவோணும். நீயும் வாரதுன்னா வா போவலாம்” என்றார். “சரி புறப்படுங்கோ” என்று கூறி பொன்னானும் எழுந்தான். |