உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 ராமசாமிக் கவுண்டர் வண்டி ஊர்த் தலைவாசலுக்கு வந்துவிட்டது. எதிரில் சற்று தூரத்தில் பிள்ளையார் கோவில் முன் ஏதோ கூட்டமாக இருந்தது தெரிந்தது. தண்ணீர் எடுக்க ஊர்க் கிணற்றுக்கு வந்த பெண்கள் இரண்டொருவர் வெறுங் குடத்துடன் கிணற்று மேட்டு மேல் பேசியபடியே நின்று கொண்டிருந்தார்கள். இவைகளைக் கண்டவுடன் ராமசாமிக் கவுண்டருக்கு என்னவென்று புரியவில்லை. அதற்குள் வண்டியும் பிள்ளையார் கோவில் அருகில் வந்துவிட்டது. ராமசாமிக் கவுண்டர் உடனே வண்டியை அங்கேயே நிறுத்தச் சொல்லிவிட்டு கீழே இறங்கினார். இவர் வண்டியை விட்டு இறங்கியதும் குப்பண கவுண்டன் வண்டி அருகில் ஓடி வந்தான். வேஷ்டியை கோவணம் போட்டு முழங்காலுக்கு மேல் உருட்டிக் கட்டிக் கொண்டிருந்தான். இரு புஜங்களும் முன்னால் விழவருவது போல புடைத்துப் பெருத்திருந்தது. நெஞ்சில் கருகருவென உரோமம் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. அவன் கையிலிருந்த தடியை தோளில் வைத்துக் கொண்டு, “வாங்கண்ணா, நீங்களும் நல்ல சமயத்தில்தா வந்தீங்க!” என்றான். ராமசாமிக் கவுண்டர் குப்பணன் முகத்தை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் சிவந்திருந்தன. ஒரு சமயம் ஏதாவது கோபத்தில் தான் கண்கள் சிவந்திருக்கிறதோ என்னவோ என்று நினைத்தார். ஆனால் அவன் வாய் திறந்து பேசியதும் சாராய நாற்றம் குப்பென வீசியது. இன்று பூமி ஏல தினமென்று தயாராக இருக்கிறான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாக்கி நாலைந்து பேர்களும் நன்கு குடித்திருக்கிறார்கள் என்று அவர்கள் முகத்தைப் பார்த்ததும் கண்டுகொண்டார். இவர்களைச் சுற்றி சில பெரியவர்களும் சிறியவர்களும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதற்குள் ஒரு ஆள் ஓடி வந்து குப்பணன் காதிற்குள் “நாச்சப்பனயும் ஆளுகளையும் கூட்டிக்கிட்டு வர தோட்டத்துக்கு ஆளுப் போயிருக்குதாம்” என்றான். ராமசாமிக் கவுண்டருக்கு ஒன்றும் புரியவில்லை. குப்பணனை அருகில் அழைத்து, “என்ன விசயம்?” என்றார். “ஒண்ணுமில்லீங்க. சும்மா வெறும் வாய்ச் சண்டெ தானுங்க” என்றான். யார் யாருக்கு வாய்ச் சண்டை என்று தெரிந்து கொள்வதற்காக ராமசாமிக் கவுண்டர், குப்பணனை தனியாக அழைத்துக் கொண்டு போய், “குப்பணா, என்ன நடந்தது? ஆரு கிட்டச் சண்டெ? இனிச் சண்டை போட வேண்டியதில்லை. நா கருப்பணங் கிட்டச் சொல்லி எல்லா சரி பண்ணீட்டெ. உன்னெக் கூடிக் கிட்டுப் போறதுக்குத்தா வந்தே” என்றார். குப்பணன் வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு மீசையைத் தடவி விட்டுக் கொண்டு, “அப்படிங்களா? எப்படி முடிச்சீங்க? அவனெ ஒரெ தட்டாத் தட்டி எறிஞ்சிரலாமுன்னு இருந்தனுங்களெ! செரி, இன்னொரு சமயம் பார்த்துக்கலாமுங்க” என்றான். “அடெ, அவெ சும்மா இருக்கிறவனெ நீ ஏம் போயித் தட்டரே? அது கெடக்குது; என்ன சத்தம்?” “அதுங்களா? நா காரத்தாலயே நம்ப ஆளுகளைத் தயார் பண்ணி வெச்சுக்கிட்டு தோட்டத்துப் பக்கம் போலாமுன்னு வந்தனுங்க. எதிரிலே கருப்பண கவுண்ட பயெ, பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தானுங்க. அவனெக் காண எனக்கு வவுத்தெரிச்சலா இருந்ததுங்க. கூட இருந்த நம்ம முத்தப்பங்கிட்டெ, ‘பாரடா இவனல்லா ஆம்பிளெனு வெளிலே திரியறானுங்க. ஊட்டுலெ மட்ட மத்தியானத்திலே பொறந்தவ கள்ள புருசனோட கூத்தாடறா’ என்று சொல்லீட்டனுங்க. என்னெழவோ வாயிலெ வந்ததெச் சொல்லீட்டனுங்க. அப்புறம் ஏண்டா சொன்னமுனு இருந்துதுங்க. அதுக்கு அவெ குதி குதின்னு குதிச்சானுங்க. அடெ போடா, நீ பண்றதைப் பண்ணிக்கன்னு சொன்னனு வைச்சுக்குங்க. அவெ என்னத்தெப் பண்ணிப் போடுவானுங்க? இதுதானுங்க, வேறெ ஒண்ணுமில்லீங்க” என்றான். ராமசாமிக் கவுண்டருக்கு இதைக் கேட்டவுடன் மிகுந்த துக்க மேற்பட்டது. உடம்பு முழுதும் வியர்த்து விட்டது. இனி அடுத்தது என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு ரொம்பச் சிரமப்பட்டார். இந்தப் பழியும் பாவமும் தம்மையே சேரும் என்று எண்ணினார். நினைக்க நினைக்க அவர் உடல் நடுங்கியது. ஊர் முழுக்க இந்த விசயத்தைப் பற்றியே பேசுவது போல இவர் காதில் விழுந்தது. இனி இந்தப் பழிச் சொல்லைத் தடுக்க முடியாதா என்று ஏங்கினார். குப்பண கவுண்டன் சிறிது நேரம் இவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “என்னுங்கண்ணா அப்படிப் பாக்கிறீங்க? முத்தாயாளைப் பத்தி சொல்லீட்டன்னு வருத்தமுங்களா? அதென்னமோ நம்மூட்டுலே அண்ணக்கி ஆண்டி சொல்லிக்கிட்டு இருந்ததெக் கேட்டுக்கிட்டு இருந்தனுங்க. கோவத்திலே வாய்க்கு வந்தபடி பேசீட்டனுங்க. இனி இதுக்கொரு விரோதமா ஆவுதுங்க?” என்று கூறினான். இவ் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அம்பு போல ராமசாமிக் கவுண்டர் இதயத்தைத் துளைத்தது. இந்தப் பேச்சு பிறந்த இடம் தமது வீடு என்றதை நினைக்கவும் அவர் தம்மையே மிகவும் நொந்து கொண்டார். அதைச் சிறிதும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “ஆனா, குப்பணா வா! நாம ராசிபாளையம் போவலாம். கருப்பணனும் அங்குதானிருக்கிறான். இண்ணக்கே ஒரு பைசலுக்கு வந்திடலாம்” என்றார். “செரி, வாங்க போவலாம். அதுக்கு நா வராட்டி என்னுங்க? நீங்களே ஒரு விதமா முடிச்சிருங்களே.” “அடெ, நீ ஒத்துக்க மாட்டாங்கிறதுக்கா நா கூப்பிடறே? எதுக்கும் நீயும் இருந்தா நல்லது பாரு. நா எல்லா பேசியாச்சு. உம் முன்னாலே உட்டு சொல்லீட்டா தீந்தது பாரு! மூவாயிரத்துக்கு நீ கருப்பணனுக்கு எழுதிக் குடுத்திடு. பூமியெ நீயே உழுதுக்கோ, பின்னாலே பணத்தெ கட்டீடு. எப்படி நா சொன்னது?” என்றார். “அதுக்கென்னுங்க? ஆனாப் பூமியெ உட்டுட்டுப் போன்னா, கருப்பண கவுண்டனல்ல, அவுங்க தாத்தா வந்தாலு முடியாதுங்க.” ராமசாமிக் கவுண்டருக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அவர் அவசர அவசரமாக, “குப்பணா வா, வண்டியிலெ ஏறு” என்று சொல்லிக் கொண்டு வண்டியருகில் சென்றார். குப்பணன் வண்டிக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான். ராமசாமிக் கவுண்டரும் வண்டிக்குள் ஏறுவதற்கு ஒரு காலை எடுத்துப் படி மீது வைத்தவர் வண்டியில் ஏறாமல் குப்பணனைப் பார்த்து, “இரு குப்பணா, நா நாச்சப்பெ இருக்கறானான்னு பாத்திட்டு வாறேன்” என்று இறங்கினார். “அண்ணா, அதுக்கு நீங்க போகாட்டி என்னுங்க? ஆராச்சும் பசங்களெப் போகச் சொன்னாப் போகுதுங்க?” ராமசாமிக் கவுண்டருக்கு நாச்சப்பனைப் பார்க்காமல் ராசிபாளையம் போவது தப்பு என்று பட்டது. குப்பணனுக்கும் கருப்பண கவுண்டன் மகனுக்கும் நடந்த வாய்ச் சண்டை இதற்குள் நாச்சப்பன் காதிற்கும் எட்டியிருக்கும். இதைக் கேட்டுக் கொண்டு அவன் சும்மாயிருக்க மாட்டான். யார் தான் இருப்பார்கள்? அவசியம் கலகத்திற்கு வந்தே தீருவான். குப்பணன் ராசிபாளையம் போய்விட்டாலும் வீட்டிலிருக்கும் குப்பணன் ஆட்களுக்கும் நாச்சப்பனுக்கும் கலகம் நடந்தே தீரும் என்று எண்ணினார். ஆகையால் நாச்சப்பனை நேரில் சந்தித்து சமாதானம் செய்து விட்டால் தேவலாம் என்று கருதினார். குப்பணன் கூறியதற்கு ஒன்றும் பதில் அளிக்காமல் ராமசாமிக் கவுண்டர் நேராக கருப்பண கவுண்டர் வீட்டிற்குப் போனார். இன்று வீட்டிற்குள் நுழைவதற்கு அவர் மனம் ஏனோ நாணியது. முத்தாயாள் எங்கு எதிர்ப்பட்டு விடுவாளோ என்று பயந்தார். வெளி வாசலைக் கடந்து கொண்டு உள் ஆசாரத்திற்குள் சென்றார். அங்கு போனதும் இவர் கண்ட காட்சி இவருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. ஆசாரத் திண்ணையில் நாச்சப்பன் உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். வாசலில் பத்து பதினைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கருப்பண கவுண்டன் மகன் தூணோடு சாய்ந்த படியே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவர் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. நாச்சப்பன் எழுதிக் கொண்டிருந்த கடிதத்தை ஒருவனிடம் கொடுத்து, “இதைக் கொண்டு போய் கள்ளுக்கடைக்காரனிடம் கொடுத்து விடு” என்றான். ராமசாமிக் கவுண்டருக்கு உடனே விசயம் விளங்கிவிட்டது. இந்த ஆட்களுக்கு கள்ளுக் கடைக்குச் சீட்டு கொடுத்து விடுகிறான் என்பதை தெரிந்து கொண்டார். நல்ல சமயத்தில் தாம் வந்ததற்காகச் சந்தோசப்பட்டார். வாசற்படியோரத்தில் செருப்பை கழட்டி விட்டு விட்டு, “ஏது ரொம்பக் கூட்டமா இருக்கறாப்பலெ இருக்குதா?” என்று கூறிக்கொண்டு வந்தார். ராமசாமிக் கவுண்டரைப் பார்த்தவுடன் நாச்சப்பன் திண்ணையை விட்டுக் கீழிறங்கி, “வாங்க மாமா!” என்று கேட்டான். ராமசாமிக் கவுண்டர் எப்போதும் நாச்சப்பனை கேலி பேசுவார். ஆகையால் அவர் வழக்கம் போல், “ஏண்டாப்பா, ராத்திரிக்கு எந்தப் பட்டிக்குப் போலாமுனு இத்தென ஆளுகளை கூட்டி வச்சுக்கிட்டு யோசனெ பண்றெ?” என்றார். “ராத்திரியிலே அல்லுங்க, பகலில் தானுங்க!” என்றான். “போவீங்க போவீங்க, போகாமையா இருப்பீங்க? அடெ நீ எப்ப அப்பனு வந்தே” என்று கருப்பண கவுண்டர் மகனைப் பார்த்துக் கேட்டார். “நா இப்பத்தானுங்க வந்தே?” “ஏது ரொம்ப நாளாப் போயி நிண்ணுக்கிட்டயா? விருந்து கிருந்து பலமா?” “அதேங் கேக்கறீங்க?” என்றான். அதற்குள் நாச்சப்பன், “ஏனுங்க மாமா! நீங்க ராசிபாளையம் போயிருக்காண்ணாங்களா? எப்போ வந்தீங்க?” என்றான். “அக்காப் பாத்தியா? வந்த சங்கதியெச் சொல்ல மறந்திட்டனே! குப்பணெ பூமி எல்லா ஒரு வழியாப் பைசலாயிட்டது. அதுக்குத்தா உங்கட்டச் சொல்லீட்டு உன்னெயுங் கூட்டிக்கிட்டுப் போலாமுனு வந்தெ” என்றார். உடனே நாச்சப்பன் மிகுந்த ஆத்திரத்துடன், “அது இனிப் பைசலுக் கீசைலு ஒண்ணு நடக்காதுங்க. பைசலுப் பண்றவங்க பண்ணீட்டுப் போக வேண்டியது தானுங்க!” என்றான். ராமசாமிக் கவுண்டர் சிரித்துக் கொண்டு, “நாச்சப்பா, இன்னும் சிறு பிள்ளத்தனம் போகிலயே! குப்பணெ என்னமோ காரத்தாலெ சத்தம் போட்டான்னு தானே சொல்றெ. அடெ, அது கெடக்குது போ. தீயின்னு சொன்னா வாயெச் சுட்டா போடும்? என்னமோ பைத்தியகாரனாட்டப் பேசறியே?” என்றார். நாச்சப்பன் முகம் கறுத்து விட்டது. இம்மாதிரி விசயங்களைப் பற்றி அவனால் தர்க்கிக்க முடியது. மனதில் என்ன நினைத்தாலும் அதை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அவன் வேறு யாராவதாயிருந்தால் பேசி இருக்கவே மாட்டான். வந்தவர் ராமசாமிக் கவுண்டராகப் போகவே வேறு வழியில்லாமல் பேச வேண்டியதாயிற்று. அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “அதென்னுங்க மாமா நீங்களெ இப்படிச் சொல்றீங்க? அவெ சொன்ன பேச்சுத் தெரியுமுங்களா? அதெக் கேட்டதிலிருந்து ரத்த மெல்லாங் கொதிக்குதுங்க” என்றான். “அடெ, சுத்த மடயனா இருக்கறயே? என்னமோ வாயிலெ வந்ததை கோபத்திலே சொன்னா, அதுக்கெல்லாம் அர்த்தம் கண்டு புடிச்சுக்கிட்டு இருப்பாங்களா? முத்தாயாளையும் உன்னெயும் ஆருக்குத் தெரியாது? பூமி விசயம்தா பைசலாயிட்டதே. இனி அவனயே உங்கிட்டத் தப்புக் கேக்கச் சொல்றம் வா.” “மாமா, நீங்கென்னமோ சொல்றீங்க. ஆனா மனசு பதறுதுங்களெ?” என்றான். “செரி, கெடக்குது. பேசாமெ வா” என்று கூறி அவன் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தார். வெளியே வந்த சமயம் வாடைக் காற்று மழை அறிகுறியைச் சுமந்து வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை கொட்டலாம்! அல்லது மழையே துளிக்கூட வராமல் குளிர்காற்றுடன், சருகு சத்தை அலையுண்டதோடு நின்று போகலாம். அதெல்லாம் யார் கண்டது? ஆனால், மனித குணத்தைப் பற்றி அவ்விதம் சொல்லலாமா? இதயத்திலே எழுந்த ஒரு சிறு பொறி அனற் சூறையுடன் பெரு நெருப்பாக மாறுவதுதானே சகஜமாக இருக்கிறது. மனத்தின் ஆழத்திலே இத்தனை நாளாகத் தெரியாமல் மறைந்து புதையுண்டு கிடக்கும் ஆசாபாசங்கள் ஒரு நொடியில் எரிமலையைப் போல் குபீரெனக் கிளம்புவது விந்தையிலும் விந்தை அல்லவா? நெஞ்சத்தில் ஆயிரம் நினைவுகள் சுழித்துக் கொண்டிருந்தாலும், அப்போது தம் கண் எதிரே கண்ட காட்சி ராமசாமிக் கவுண்டரை சிரிக்கச் செய்தது. இந்தப் பிரபஞ்சமே வரப் போகிற பெரு மழையை எதிர்பார்த்துத் தான் நின்றது. இயற்கைத் தாய் இதயம் பூரித்து அதை எதிர்பார்த்தாளா இல்லையா என்பதை நம்மால் சொல்ல முடியாது! ஆனால் “கிடு கிடு” என்று நடுங்கிக் கொண்டு கையில் இருக்கும் கோல் தட்டுத் தடுமாற மாரக்காள் நடந்து, இல்லை ஓடி வருகிறாளே, அவளுக்கு மட்டும் அசாத்தியப் பயமாக இருந்தது! பாவம், அந்த மழைக்குப் பயந்தவள் அப்போது அவள் ஒருத்தியேதான்! மாரக்காளுடைய போக்கை நினைக்கவும், சற்று முன் சிறு குழந்தை வில்லக்காய் பொறுக்க தந்திரமாக அவள் தாட்டி விட்டதை எண்ணவும் ராமசாமிக் கவுண்டர் தனக்குத்தானே ‘சிரி சிரி’ என்று சிரித்தார். ராமசாமிக் கவுண்டர், ராசிபாளையத்துக்குப் புறப்பட்ட போது வெயில் அவ்வளவு உறைப்பாக இல்லை. இருந்த போதிலும், இந்தக் கிழ வயதிலும் மாரக்காள் ஓடி ஓடி வில்லக்காய் பொறுக்கும் விந்தையை மர நிழலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தார். மாரக்காளுக்கு தள்ளாத வயதிலும் ‘உஷ்ணம்’ அதிகமாம்! தானாக அவள் கண்டுபிடித்த இயற்கை வைத்தியம் இது! வில்லக்காய் அரைத்து தேய்த்தால் தலைக்கு குளிர்ச்சியாம். இதற்காக சிறு குழந்தைகளை அந்த மரத்தடியில் விளையாடாமல் பண்ண - காய்களைத் தனக்கு முன் எடுத்துக் கொண்டு ஓடி விடாமல் பார்த்துக் கொள்ள - ஒரு தந்திரம் செய்தாள். எப்போதோ ரொம்ப நாளைக்கு முன் மரத்தடியில் மார்போடு சிதைந்த ஒரு பிள்ளையார் கிடந்தார். அதைச் செய்த சிற்பி எவனோ? என்ன காரணத்தால் பிள்ளையாருக்கு அக்கதி நேர்ந்ததோ? ஆனால், மாரக்காள் கண்டு பிடித்த காரணம் தான் முக்கியமானது! அந்த ஊர் ஆதியில் சீரும் சிறப்புமாக இருந்ததாம். “நம்ம ஊருக் கதையைக் கேளுங்க” என்று மாரக்காள் இந்த அறுபது வருச காலமாக எத்தனையோ பேரிடம் சொல்லி இருக்கிறாள். சீரும் சிறப்புமாக இருந்த அந்த ஊருக்கு எட்டுத் திக்கிலும் தெய்வங்கள் காவல் இருந்ததாம். பிள்ளையார் கிழக்குத் திக்கைக் கவனித்து வந்தாராம். பரங்கியர் பட்டாளம் ஒரு நாள் திடீரென்று ஊருக்குள் நுழைய ஆரம்பித்ததாம். பிள்ளையார் வாகன சகிதம் ‘தயார்’ ஆனார். ஆனால், ஒரு பரங்கி, கையில் பிடித்திருந்த பெரிய வாளினால் பெரிய போடாகப் போட்டு விட்டானாம். உடனே பிள்ளையார் சாபத்தால் அவன் கண் போய்விட்டதாம். கண் போய்த்தான் என்ன பண்ணுவது! இடுப்பிழந்து பிள்ளையாரும் அங்கேயே சாய்ந்து விட்டார். இதைச் சொல்லிவிட்டு, இந்த மரத்திலிருந்து முதலில் விழுகிற பழத்தை, வயசான மாரக்காளைத் தவிர, வேறு எந்தக் குழந்தை குட்டி தொட்டாலும், அவைகளுக்கும் அந்தப் பரங்கிக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்று கிழவி பயமுறுத்தி வைத்திருந்தாள். ஆகையால், மரத்தடியில் விளையாடப் போகும் குழந்தைகள் கூட மாரக்காள் வருகையை எதிர்பார்த்திருக்கும் நிலையை அவள் உண்டாக்கி விட்டாள். ராமசாமிக் கவுண்டரைப் போல் இருக்கிறவர்கள் பொழுது போகாவிட்டால் மாரக்காள் மிரட்டுகளை எண்ணிச் சிரிப்பார்கள். இப்போதும் கவுண்டருக்குச் சிரிப்புத்தான் வந்தது. வானத்திலே ‘திடும், திடும்’ ‘கிடும், கிடும்’ என்று எழும் பேரிடிகளும் சிரிப்பது போலவே இருந்தது. எங்கும், எதுவும் அவர் உள்ளத்தில் சிரிப்பின் பேரலைகளையே சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. பண்ட மேய்க்கிற பையன்கள் வெகு வேகமாக பண்டம்பாடிகளை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடக்க மாட்டாத ‘சண்டி’ எறுமைகள் வாலைப் பிடித்து முறுக்கும் போது மட்டும் அந்தப் பையன்கள் ‘குஷி’யாகச் சத்தம் போட்டு தெம்மாங்கு இசைக்க ஆரம்பிப்பார்கள். செம்புழுதிப் படலம் வான மண்டலத்தையே தொட்டுப் பிடிப்பது போல் கவிந்தது. ராமசாமிக் கவுண்டருக்கு எவ்வளவோ எண்ணங்கள் உள்ளத்தில் குவிந்தெழுந்தது. இந்தப் போட்டி, பொறாமை பகைமை மட்டும் உலகில் இல்லாமல் இருந்தால் என்ன? பசி, தாகத்தைப் போல் அணுவோடு அணுவாக அவைகளும் தேகத்தில் கலந்து தான் இருக்கிறதா? அப்பப்பா! அடுத்த கணம் என்ன நிகழப் போகிறது என்பது தெரியாவிட்டாலும் மனசு ஏன் தான் இப்படி பாதரசம் போல் தத்தளிக்கிறதோ அதோ காற்றில் கிளைகள் ஊசலாடுகின்றன. சற்று நேரத்திற்கு முன் இருந்த அமைதி அடியோடு குலைந்து விட்டது. ஆனாலும், இந்த சலனம், நிச்சயம் சாந்தி அடையத் தான் போகிறது. அது போலவே, சஞ்சலத்துக்கும் ஒரு எல்லை உண்டா? அதன் முடிவு இன்பமாயிருக்கட்டும் அல்லது துன்பமாக இருக்கட்டும். எப்போதும் ஒரு முடிவு உண்டல்லவா! ராமசாமிக் கவுண்டர் இன்னும் என்னவெல்லாமோ நினைத்தார். இருந்த போதிலும் ஒரு தெளிவான நிலைமைக்கு அவர் நெஞ்சம் வரவில்லை. ஏன் இந்தச் சலிப்பும், அயர்வும்? ஏனோ கண் கூசும் போல் இருந்தது. வெளியேயும், ஒரே பயங்கர நடனம். அக்கம் பக்கம் எங்குமே அவர் தேடும் ‘வஸ்து’வைக் காணவில்லைப் போல் இருந்தது! என்ன அதிசயம் இது! இல்லாத ஒன்றையா அவர் தேடுகிறார்? பார்க்கப் போனால் அவர் ஒன்றையும் ஆராயவில்லையே? இந்தப் பொல்லாத மனசு அல்லவா அவரை என்னெல்லாமோ செய்து கொண்டிருக்கிறது! பாவம் இன்றைக்குப் போல் கவுண்டர் ஒரு நாளும் சித்திரவதை பட்டதில்லை. உண்மையில் கத்தி வாள் ஒன்றும் தேகத்தை அவ்வளவு வதை பண்ணுவதில்லை. இந்தச் சொல் இருக்கிறதே, அப்பப்பா, சொல் செய்கிற மந்திர சக்தியை, அது தரும் வேதனையை, எந்தக் கூரிய ஆயுதம் தான் தந்து விடும்? |