கடம்பர்கோயில் உலா

     இந்நூல் சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பர் கோயிலென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது. இதனை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை.

சித்திவிநாயகர் காப்பு

வெண்பா

பொன்மருவு தென்கடம்பைப் பூரணவி லாசருலா
நன்மதுரமாகவே நவிற்றவே - என்மனத்து
வஞ்சத் திருப்பதஞ்செய் மைந்து றுசித் திக்களிற்றின்
கஞ்சத் திருப்பதமே காப்பு.

அவையடக்கம்

நன்னிலஞ்சே றாக்கிடினு நன்குமகிழ் வார்முனியார்
செந்நெல்விளை வெய்துஞ் சிறப்புடையோர் - இந்நிலத்தில்
என்சொலிக ழார்புலவோ ரீசனுலா வென்றுகொள்வார்
புன்சொலனார் கொள்வார் பொருள்.

நூல்

கலிவெண்பா

இறைவன் பெருமை

சீர்கொண்ட சத்தி சிவமா யருள் புரியும்
பார்கொண்ட சோதிப் பசுபதியாய் - ஏர்கொண்ட 1

அண்டமா யண்டத்தி னப்பாலா யிப்பாலாய்ப்
பிண்டமாய்ப் பல்லுயிரின் பேதமாய்ப் - பண்டை 2

அருவா யுருவா யருவுருவ மொன்றாய்
மருவாய் மலரின் வடிவாய்ப் - பெருவாழ்வாய் 3

எல்லா வுயிர்களுக்கு மின்பம் புண்ர்த்திவைக்கும்
வல்லான் கருணை மகாதேவன் - தொல்லைமுது 4

தல விசேடம்

வானோர் துதிக்க மறைமுழங்க வானோரும்
ஏனோரும் வந்துபணிந் தேத்தெடுப்பத் - தேனாரும் 5

வெள்ளி வரையின்மிசை வீற்றிருப்பப் பூங்கமலத்
துள்ளிருப் போனன் புடன்பணிந்து - வள்ளலே 6

அன்பருன்னாற் பெற்ற வழியாப் பெரும்பதவிக்
கென்பதவி சொல்லி னினையாமோ - மின்பருதி 7

ஒக்குமோ வென்றுற் றுணர்ந்தே னருவருத்து
மிக்க சிருட்டி விரத்தியுற்றேன் - இக்கணமே 8

முத்திப் பதத்தின் முறையுரைக்க வேண்டுமென
அத்த னகைத்தங் கருள்செய்வான் - பித்தொழிந்து 9

வந்தனையே முன்னாண் மறந்தனையே யஞ்சலினிச்
சிந்தனையென் கேளாய் திசைமுகனே - பந்தமற்றோர் 10

இம்மை மறுமையென்ப தெல்லா மறிந்தறிவால்
தம்மையறிந் தெம்மையன்றே தாமறிவார் - செம்மைமனப் 11

பக்குவத்த னல்லையினும் பாரிடத்தின் மேலான
தெக்கண காசியெனுஞ் சீர்பொருந்தும் - மிக்க 12

கடம்பவன மொன்றுளது கண்டாலு முள்ள
மடம்பவநந் தக்கதியும் வாய்க்கும் - இடம்பெரிதாம் 13

அத்தலத்தி னீசென் றரியதவஞ் செய்தக்காற்
கைத்தலத்தி னெல்லிக் கனியெனவே - முத்தி 14

நெறியு நெறிக்கு நிலையான நந்தம்
குறியு மறிவாய் குறித்தங் - குறுதியென 15

வேதன் பணிந்தெழுந்து மேவுபொன்னி நீராடி
மாதவங்கள் செய்து மகமியற்றி - நாதன் 16

அருள்பெற் றணிநகரு மாலயமுஞ் செய்து
மருளகற்று சித்திரையின் மன்னும் - திருவிழாக் 17

கண்டழியாப் பேறுபெற்ற காரணத்தி னாற்கொண்ட
தண்டலை யென்னுந் தனிப்பெயரும் - கொண்ட 18

பிரமபுர மென்னும் பெயரும் படைத்துப்
பரவு கடம்பைப் பதியான் - சுரரை 19

ஒடுக்கும் புகைக்க ணொருவா ளரக்கன்
இடுக்கண் பொறாம லெதிர்த்தே - கடுத்துப் 20

பொருமையிடற் காய்ந்தடன் போர்க்குத் துனையாய்
வருதிறலி னோங்குசத்த மாதர் - பெருவலியாற் 21

சாடிப் பொரலுஞ் சலித்து மருண்டுபயந்
தோடிச்செலும்போ தொருவஞ்சம் - நாடியே 22

ஆதித் தனைப்பார்த் தருந்தவஞ்செய் மாமுனிபாற்
பேதித் தவன்மறைந்த பெற்றிதனைச் - சோதித் 23

திடாதே யவனிவனென் றெண்ணி முனியை
அடாது செயப்பிரம வத்தி - விடாது 24

தொடரப்பல் கோடிதலஞ் சூழ்ந்துந் தவிரா
திடர்தொலைக்கு நீபவனத்தென்றாய் - உடனிருக்கும் 25

தன்னை யருச்சிக்கத் தான்மகிழ்ந்து நின்றிடுமேழ்
அன்னையர் பாவ மகற்றினோன் - முன்னைவினை 26

மாசகலும் வேதசன்மா மாமறையோன் செய்தவமும்
பூசனையுங் கண்டவன்முன் போந்தருளிக் - கேசவனை 27

ஒப்பாய் நமதன் புடைமையினால் வேண்டுவதென்
செப்பா யெனவுரைக்கத் தென்மதுரை - மெய்ப்பதியில் 28

தோன்று மலயத் துவசன்மக ளாய்க்கயற்கண்
மூன்றுமுலை யுற்றவண்முற் றாமுலையாய் - ஏன்றிடப்பின் 29

எந்தை மணஞ்செய் தியனறதிருக் கல்யாண
சுந்தரனாந் தன்மையிங்குத் தோற்றிடென - அந்தப் 30

படியே தரிசனமும் பாலித்தாட் கொண்டோன்
அடியார்க் கெளியவ னாதி - முடியாச் 31

சுகத்தியன் மாமுனிவோர் சூழ்ந்து பாவும்
அகத்தியன் பூசனைசெ யையன் - சகத்தசுரச் 32

சோமகன் வேதத் துரகதத்தைப் பாதலத்தில்
ஏமமுறக் கொண்டொளித்தங் கெய்திடலும் - தரமோ 33

தான்வணங்கி நின்று தவம்புரியச் சைவாத்
திரங்கொடுக்க வாங்கித் திருக்கா - விரியிலவன் 34

மச்சவுரு வாயுததி மார்க்கத்திற் சென்றவன்றுஞ்
சச்செகுத்து மீண்டுதிருச் சந்நிதியில் - வச்சு 35

வணங்கமறை வாயிருந்த மாமறைவாய் தோறும்
இணங்குசதுர் வேதபுரி யீசன் - குணங்கடந்தோன் 36

கந்தவேண் முந்தக் கடிமலரா லர்ச்சித்துப்
புந்திமகிழ் கந்த புரநாதன் - பந்தமுற 37

வல்லார்க்கு முந்துதுற வல்லார்க்கு மில்லார்க்கும்
எல்லார்க்குந் தாயா யினிதளிப்போன் - தொல்லைப் 38

பலிக்குமுனந் தாருவனப் பாவையர்முன் சென்றோன்
எலிக்கு மரசளிக்கு மெந்தை - புலித்தோல் 39

உடையா னெனையா ளுடையான்சொல் பூதப்
படையான் கணிச்சிப் படையான் - விடையேறு 40

வானனத்தன் வானனத்தன் வந்து துதிக் குஞ்சாம
கானனத்த னீள்கதம்ப கானனத்தன் - மீனவிழிப் 41

பாணிகொண்ட சென்னிப் பசுபதிபஞ் சானனத்தன்
பாணிகொண்ட சென்னிப் பரமேட்டி - நாணிகொண்ட 42

மாகனக வில்லியிம வானுதவும் வல்லியிடப்
பாகனக வில்லிற் பதிகொண்டோன் - யோகனகன் 43

நாவி லிரதனொரு நால்வேதத் தந்தியான்
தூவெண் சரீரத் துரகத்தான் - மூவுருவன் 44

அம்பலத்து ணின்றுநட மாடும் பதாதியான்
நம்பலரைப் பார்த்து நகைசெய்தோன் - செம்பொனதிச் 45

சுத்தக் கடம்பந் துறையரசன் றெய்வதமாய்
வைத்தசத்த கோடி மகாமந்த்ரி - அத்துவிதன் 46

தற்பரன் பூத தளகர்த்தன் றாரணியிற்
பற்பலவாந் தானா பதியினான் - பொற்புற் 47

றொருமூவ ராயசத்த னோங்குகுலத் தோரைக்
கருமத் தடக்குமதி காரி - பொருகுதிறற் 48

கானு கரணிகன் பாடலிலே கற்பித்தோன்
மானசச் சீர்மை மகாசனன் - தீனபிர 49

வர்த்தகன் பண்ணை வகுத்துரைக்கும் பங்காளி
அத்த னமல னமரேசன் - கர்த்தன்முனந் 50

திருவிழா

தோடலருங் கஞ்சன் றொகுத்துப் பணிதிருநாள்
மேடமதிச் சித்திரையின் மேவுதலும் - நாடியே 51

பூணவங்கு ரார்ப்பணமும் பொற்பமைத்துக் காப்பணிந்து
காணுந் தூசாரோ கணஞ்செய்து - நாணிறைய 52

ஒன்றிரண்டு மூன்றோ டொருநாலைந் தாறேழும்
சென்றிடப்பி னெட்டாந் திருநாளில் - அன்றுதய 53

காலத் திருவிழாக் கண்டுவந்து வந்தருளி
மாலைவிழா வீதியுலா வந்ததற்பின் - ஞாலமெல்லாம் 54

போற்றுமணி மண்டபத்திற் பொன்னனையா ராடல்கண்டு
வீற்றிருந்து பொற்கோயின் மேவியே - தோற்றுருவின் 55

மன்மதனைக் கையெடுத்து மண்டலத்தோர் கொண்டாட
மென்மலர்ப்பூம் பள்ளியணை மீதணைந்து - தொன்மையகி 56

லாண்டமு மீகுறமுற்றி லாமுலையென் னம்மையொடு
காண்டகுசோ திக் கடவுள் கண்மலர்ந்து - நீண்டசடைக் 57

திருமஞ்சனம் கொண்டருளுதல்

கங்கைக்கு மேலாகக் காவிரிமேன் மேன்மேன்மை
தங்கத் திருமஞ் சனமாடி - மங்குலொத்த 58

அலங்காரம்

சுத்தக் கறுப்பென்றுஞ் சொன்னீலப் புள்ளியென்றும்
வத்திரங்கொள் வத்திரங்கள் வர்ச்சித்து - மெய்த்ததிக்காம் 59

எட்டாடை மின்னா ரிடைப்பட்ட வென்றொருவிப்
பட்டாடை பீதாம் பரஞ்சாத்தி - இட்டமுடன் 60

ஆதியந்த மில்லா வடிக டிருமுடிமேற்
சோதி மணிமகுடஞ் சூட்டியே - பூதித் 61

திரிபுண் டரமணிந்து சேணா ரிமய
கிரியுதவுங் கன்னிதனைக் கெங்கா - தரனுடனே 62

கூட்டிவைக்கு மாரனைமுன் கோபித்த வக்கினிதன்
வீட்டின் கதவடைத்து மேலிறுகப் - பூட்டி 63

ஒருமுத் திரிபொறித்த தொக்கவே மிக்க
திருநெற்றி யிற்றிலதந் தீட்டிப் - பெருகுதவத் 64

தின்னிசை வீணை யிருவோ ரிசைந்தாடப்
பொன்னூசல் போற்குழைகள் பூட்டியே - மின்னுமணி 65

மாமாலைமுத்து வடமாலை பொன்மாலை
பூமாலை மாலைப் புயத்தணிந்து - தோமறுசீர் 66

இத்தலத்து மான்மியங்க ளெத்தலத்து மின்றெனத்தன்
கைத்தலத்தினா லுரைக்குங் காட்சியென - வைத்த 67

வாத வபயமு மான்மழுவுங்கொண்ட
கரதலங்கள் சேர்கங் கணமும் - இரவியெனத் 68

தோளணிகண் மார்பந் துளங்குபவீ தம்பதக்கம்
வாளணிகண் முற்றும் வனைந்தருளி - நீளணிகொள் 69

பட்டிகையுஞ் சேர்த்தருண பாதார விந்தமிசைக்
கட்டிசையுஞ் செம்பொற் கழல்புனைந்து - சிட்டர் 70

செவியி னமுதாச் சிலம்புஞ் சிலம்பும்
கவினத் தரித்துக் கனிவாய்ப் - புவிபுகழும் 71

மகாபூசை

அவ்வியமி னெஞ்சத்தி னாதிசைவ ராகமத்தால்
திவ்வியமா பூசை செயமகிழ்ந்து - கவ்வை 72

திருவீதிக்கு எழுந்தருளல்

மறைமுழங்க வந்து தொழு வார்முழங்க மூவர்
முறைமுழங்கச் சங்கமுழங்கக் - குறைவிலைந்து 73

துந்துபிகல்லென்று தொனிப்பவகி லாண்டமெல்லாம்
தந்தமுற்றி லாமுலைச மேதனா - எந்தை 74

உலகமெலாங் கண்டுதொழு துய்யவே செம்பொன்
இலகு மணித்திருத்தண் டேறித் - திலகநுதல் 75

மின்னார்க ளாட விடையின் கொடியிலங்கப்
பொன்னால வட்டமண்டம் போர்த்தாட - முன்னெடுநாட் 76

பேரரவி னுட்கிடந்த பிள்ளைமதி வாடுமென
ஈர மதிநெஞ் சிரங்கியே - ஆரமுதம் 77

போதத் திரட்டிப் புகட்டுவபோல் வெள்ளியங்காற்
கோதிலா முத்தின் குடைநிழற்ற - ஆதியிலே 78

ஒன்றாய் விரிவா யொடுக்கமாய்ப் பின்விரிவாய்
நின்றா னிலைமையிது நீர்காணும் - என்றுசொல்லித் 79

தேவருக்கும் யாவருக்குஞ் செப்புவபோற் பஞ்சவண்ணப்
பாவாடை மீது பணிமாற - ஓவாது 80

பைத்த மணியும் பனிமதியு முள்ளடங்க
வைத்த கிரீட மறைத்ததனால் - மொய்த்தனங்கள் 81

கங்கை புகும்வழி காணா சுழல்வனபோல்
மங்கையர்கள் வெண்சாமரையிரட்டத் - துங்க 82

மணிக்கோ புரநிரையின் வாயில் பலசென்
றணிக்கோல் வீதி யணைந்து - கணிப்பரிய 83

திருத்தேரில் எழுந்தருளல்

செம்பொற் கிரியோ திருவா வடுதுறையில்
எம்பிரா னன்ப ரிதயமோ - கம்பைநதி 84

சேர்தொண்டைமண்டலத்தோர் செய்தபெரும் புண்ணியமோ
ஈதென்னும் பொற்றடந்தே ரேறியே - நீதிநிறை 85

பாகைச் சரவணைதன் பாக்கியமேன் மேல்வளர
ஓகையுடன் சிந்தை யுவந்தமைத்த - நாகரிகச் 86

சோதி நவமணியின் சுந்தரப்பொன் னாபரனச்
சாதிகள்க பாய்த்தகட்டிற் றாமிலங்கக் - கோதில்லாத் 87

திண்டொழுகு பஞ்சணையுஞ் சீர்பொருந்த வெத்திசையும்
கொண்ட பதாகை குடைவிளங்க - மண்டலத்திற் 88

பல்லா யிரகோடி பானு வுதித்ததென
வில்லார்சிங் காதனத்தில் வீற்றிருப்ப - மல்லாரும் 89

உடன் வருவோர்

தந்திமுகக்கடவுள் சண்முகத்து வேற்கடவுள்
நந்திமுதற் பூதகண நாதருமை - ஐந்துருவ 90

மிக்கசிவன் போற்கடவுள் வேறிலையுண் டென்பவர்க்குத்
தக்கன் மறுதலையே சாட்சியெனும் - உக்கிரனும் 91

பால நயனப் பதினோ ருருத்திரரும்
மாலதிருஞ் சூல வயிரவரும் - மேலிசைத்த 92

கற்றுணையா வுற்ற கடல் கடந்து கற்பனையிற்
சொற்றுணையி னாலமணர் சூழ்கடந்து - நற்றுனையாய்ச் 93

சாரத் திருப்பதிகஞ் சாத்தி மலர்க்கையுழ
வாரப் பணிவிடைகொள் வாக்கிறையும் - பேரறிவால் 94

தேறுஞ் சமயஞ் சிவசமய மொன்றெனவே
கூறும் பரசமய கோளரியும் - வீறொருத்தி 95

வாது நடத்தின் மகிழ்வோனை யாரூரில்
தூது நடத்திவைத்த சுந்தரரும் - மேதகுபேர் 96

ஆனந்த வெள்ளமகத் தாறாக மாறாமல்
ஊனந் தவிர்நயனத் தூற்றெடுக்கத் - தேனுந்து 97

பாவைதிருச் சிற்றம் பலமுடையார் கையெழுத்தாம்
கோவை யுரைத்தெமையாட் கொண்டவரும் - ஓவறுசீர்த் 98

தாதை யடியைத் தடிந்தரனைப் பூசித்துத்
தீதகற்றுந் தண்டித் திருத்தேவும் - மாதவனாம் 99

கார்கொண்ட மேனிக் கடவுளுமம் போருகனும்
சீர்கொண்ட விந்த்ராதி தேவருடன் - ஏர்கொண்ட 100

பான்மதியுஞ் சொர்க்கமத்ய பாதலத்து மேற்றுவிளக்
கான வொருபனிரெண் டாதவரும் - வானகஞ்சூழ் 101

பூதலத்திற் பேறுபெற்ற புண்ணியரு மெண்ணரிய
பாதலத்து மேலான பன்னகரும் - போதநிறை 102

மோனந் தவாத முனிவோரு மெய்ஞ்ஞான
ஆனந்த சித்த ரனைவோரும் - வானந்தம் 103

ஏலப் புவன மிருநூற் றிருபத்து
நாவிற் கடவுளரு ந்ண்னியே - கோலமணித் 104

தேர்திகழ்வி மானஞ் சிவிகைமுதற் றங்கடங்கள்
ஊர்தி களிலு முவந்தேறப் - பேரொலிசேர் 105

வாத்தியங்கள்

தக்கை யுடுக்கை தடாரிதவில் பேரியொரு
மிக்க முழங்க விருதார்ப்ப - மிக்கதொனி 106

மத்தளங்கைத் தாளவொலி மாரி முழங்கொலிபோல்
தத்தளங்கென் றேபாதஞ் சாதிப்ப - எத்திசையும் 107

துரும்பு வீணை சுரமண்டலம் பாடற்
றரும்பு நாதந் தனியிசைப்ப - உம்பரல்லாம் 108

ஆர்ப்ப மறைக ளருண்மூவர் பாடலண்டம்
போர்ப்பவிசைத் தன்பர் புறஞ்சூழப் - பார்ப்புறத்தில் 109

இன்று புதுத்தே ரிசைந்தழுத்திச் செல்வதனால்
துன்றுபழந் தேர்வயிறு சூலுளைந்து - நன்றுதவு 110

பைஙகுழவி யொன்றீன்ற பான்மையென மேன்மைதரும்
செங்கதிரோன் றேர்கீட் டிசைதோன்றப் - பஙகயப்பூந் 111

திருச்சின்னம்

தாட்டுணையா ளங்கயற்கண் சார்கூட லான்வந்தான்
ஆட்டை விடாப்புலியூ ரான்வந்தான் - நாட்டிவைத்த 112

சண்மதத்து மேலான தந்திவனத் தான்வந்தான்
மண்பரவு புற்றிடத் தான்வந்தான் - உண்மையன்பன் 113

ஆவணத்து முற்றும்விலை யாமென் றவன்வந்தான்
பூவணத்து வாசப் பொருள்வந்தான் - மேவினர்தம் 114

துன்பக் கடல்கடத்துந் தோணிபுரத் தான்வந்தான்
இன்பவெள்ளத் தையாற் றிறைவந்தான் - நம்பும் 115

அருங்குமுதச் செவ்வா யறம்வளர்த்த தேவி
மருங்கமருங் காஞ்சிபுரன் வந்தான் - நெருங்குசடா 116

தாரண மாமுனிவோர் தந்தந் துதிக்கைபெற்ற
வாரண வாசி யான்வந்தான் - பேரணியாய்ப் 117

பாணித் தணிந்தபணிப் பைக்குளடங் காதபெரு
மாணிக்க மாமலை யான்வந்தான் - தாணிறையத் 118

தேங்கோய்வில் லானந்தத் தேனையன்பர்க் கூட்டிவைக்கும்
ஈங்கோய் மலையெம் பிரான்வந்தான் - தீங்கை 119

அடும்பாமன் காளத்தி யந்தாதி கொண்ட
கடம்பைச் சிவசங் கரனாம் - நெடுங்கயிலைக் 120

குன்றுடையான் றொண்டர் குழாமுடையான் வந்தானென்
றென்றுதிருச் சின்ன மெடுத்திசைப்ப - மன்றல் 121

இசைந்ததிருத் தேர்வீதிக் கேகவுடன் கூடி
வசந்தன் றிருத்தேர் மருவப் - பசும்பொன்னிப் 122

குழாங்கள்

பூதலத்துப் பூவையரும் பொன்னாட்டின் மின்னாரும்
பாதலத்தி னாககன்னிப் பாவையரும் - சீதமலி 123

கொண்டன் முழக்கங் குறித்தமயிற் கூட்டம்போல்
எண்டிசையுங் கொள்ளா தெதிர்நின்றே - அண்டர் 124

பெருமானை மானைப் பிடித்திடுபெம் மானைப்
பெருமானைப் போர்வைப் பிரானை - ஒருமானை 125

ஆகத்து வைத்தவனை யந்தகனை யங்கணம்போல்
ஆகத்து வைத்தவனை யங்கணனை - ஏகத் 126

தொருவனையான் போற்ற வுவந்தானை யென்றும்
ஒருவனையான் றன்னையரு ளோனைக் - கருவிழியாம் 127

உற்பலத்தா லர்ச்சித்தா ருள்ளன் புடன்பணிந்தார்
பற்பலவாத் தோத்திரங்கள் பண்ணினார் - பொற்பமரும் 128

குழாங்களின் கூற்று

பாதாதி கேச பரியந்தம் பார்க்கவிழி
போதாதென் செய்வோமெனப் புகன்றார் - வேதாதி 129

நூலறியா யாரு நுவலறியா நாடியயன்
மாலறியாத் தேவர் வடிவழகைச் - சாலவே 130

கண்டுதவப் பேறுபெற்றோங் காதலுற்றோங் கொன்றையருள்
கொண்டுதவப் பேறெமக்குக் கூடாதோ - ஒண்டொடியார் 131

எல்லார்க்கு நல்லார்களென்ப துமக்கிலையோ
கல்லார்க்கு நெஞ்சு கனியாது - தொல்லுலகில் 132

தன்னுயிர்போன் மன்னுயிர்க்குத் தானிரங்க வேண்டுமென
முன்ன மனுநூன் முறையுரைத்தீர் - என்னசொல்வோம் 133

மிஞ்சு மதிப்பகைக்கும் வேனிரதத் தென்றலுக்கும்
அஞ்சா தரவி னணிகொண்டும் - குஞ்சரமாம் 134

கங்குலுக்கு மைந்து கணையரும்புக் கும்வேட்கும்
துங்கவிழி யாமுச் சுடர்கொண்டும் - புங்கவர்க்கா 135

ஆக்கங் கருதி யமர்க்குத் துணிந்தமதன்
போர்க்குனிவில் வாளி புறப்பட்டுத் - தாக்கமுன்பின் 136

பார்த்தீர் விழித்தீர் பயந்தலைக்கொண் டீருடலம்
வேர்த்தீ ரொருபாதி மெய்யானீர் - தோத்திரமாச் 137

சொல்லவோ வேளுமக்குத் தோற்றானோ தோற்றீர்நீர்
அல்லவோ மாலீ தறியானோ - வல்லமையால் 138

ஆண்பெண் ணிருவருமோ ராடைகட்டச் செய்ததுவும்
வீண்பேச்சோ வுங்கள் விளையாட்டோ - நாண்போக்கித் 139

தானையெல்லாம் போக்கித் தரணியிலெங் கொங்கைமத
யானையெல்லாம் வெட்டவெளி யாக்கியே - சேனையெல்லாம் 140

கும்பிட்டு நம்பகையைக் கும்பிட்ட தென்றுமதன்
தெம்பிட்டுச் சீறிச் சினந்திட்டான் - வம்பிட்டுத் 141

தையலருந் தூற்றினார் சற்றே கடைக்கணித்தால்
மையலரென் றையலர்க்கு வாடோமே - துய்யபுகழ் 142

ஈசரே யென்றென் றெடுத்துப் பலபலவாப்
பேசு மவரி லொருபேதை - பூசன்மதன் 143

பேதை

விற்குணத்தைக் கண்டறியா மெல்லரும்பு தானுரைக்கும்
சொற்குணத்தை யோராச் சுகப்பிள்ளை - பொற்கை 144

உழையார் கடம்பலர்மட் டுண்டறியா வண்டு
மழையார்ப் புணராத மஞ்ஞை - இழைபுகா 145

மாணிக்க மீசனுக்கு மாரன் பணிந்து வைக்கும்
காணிக்கை யானதங் கக்கட்டி - நீணிலத்து 146

மன்னுங் கலைபொருந்தா மான்கன்று பாற்படுநீர்
பின்னஞ் செயவறியாப் பிள்ளையன்னம் - புன்கவிஞர் 147

பாட்டி னெழுவாய் பயனிலைபோ லொன்றொன்று
கூட்டி முடியாக் குழலினாள் - வாட்டமுறும் 148

அண்டத் தமரரைமுன் னஞ்சலெனக் காத்தசிவன்
கண்டத் தமர்விடம்போற் கண்ணினாள் - மண்டுபுனற் 149

செல்லாருஞ் சோலைத் திருவால வாயதனில்
வில்லாரு மிந்த்ர விமானத்துட் - கல்லானை 150

சித்தரரு ளாற்கரும்பு தின்னுமந்நாட் டென்னனணி
முத்துவடம் போலுமிள மூரலாள் - நத்துலவு 151

பாணிக்குட் சிற்றரும்பாம் பங்கயம்போல் வெற்றிமதன்
தூணிக்கு ளக்கணையின் றோற்றம்போல் - வாணிதொழு 152

நாரிசெங்கை யான்மறைத்த நாத னிருவிழிபோல்
சூரியனிற் சந்த்ரகலை தோய்த்ததுபோல் - வாரிதியில் 153

பண்டமுத கும்பம் பதித்திருந்தாற் போலவெளிக்
கொண்டினிமேற் றோன்றுங் குவிமுலையாள் - தொண்டர் 154

அரகர சஙகரவென் றானந்த வின்பக்
குரைகடற்கு ளாகிக் குளித்துப் - பரவசமாய் 155

ஏறுடையான் முன்ன ரிசைநாத் தழுதழுத்துக்
கூறுந் துதிபோற் குதலையாள் - வீறுடைய 156

வள்ள றிருச்சடைமேல் வைத்தபிறை போற்களங்கம்
எள்ளளவு மெய்தா விதயத்தாள் - உள்ளமகிழ் 157

பூவையுடன் பேசியந்தப் பூவைசொன்ன சொல்லைமரப்
பாவைக்குத் தானே பயிற்றுவாள் - ஆவலுடன் 158

முத்து வயிர முழுநீலங் கோமேதம்
வித்துரும மாணிக்கம் வெள்ளிசெம்பொன் - இத்தனையும் 159

அட்டி லடுகலங்க ளம்மி யுரலுலக்கை
வட்டிலெனச் சோறு வகுத்தானாற் - கிட்டமுறும் 160

அன்ப ருலகத் தருந்தா தருந்திடுசிற்
றின்பமெனக் கையா லெடுத்துண்டு - நன்கமைந்த 161

வீதிக் கணித்தாக மேவுதலு நூபுரங்கள்
நாதிக்கக் கைத்தாயர் நற்றாயர் - பேதையுடன் 162

சென்று பரனைத் தெரிசித்தா ரவ்வளவில்
இன்று புதுத் தேர்மீதி லீங்கிவரார் - என்றலுமே 163

அண்டம் புவன மருஞ்சக்ர வாளகிரி
விண்டலமேழ் பாதலம்பொன் மேருவரை - மண்டலங்கள் 164

சிற்றிலா கச்சமைத்துச் செல்வவிளை யாட்டயரும்
பற்றாக் குதலைமொழி பாலனென - மற்றிவளும் 165

நாடரிய பாலனுட னானிருந்து கூடவிளை
யாடநம தில்லி லழையுமெனக் - கோடரத்தில் 166

மையேந்து சோலை மதுரை நகர்க்கவுரி
கையேந்து பாலனருட் காபாலன் - மெய்யடியான் 167

திஙகட் சுதையெனவே செய்யுமொரு முப்பாலும்
சங்கத்தி னூட்டுந் தமிழ்ப்பாலன் - அங்கசனுக் 168

காமளவு நாமத் தனங்கனெனப் பின்னுமொரு
நாமந் தரித்தநய னப்பாலன் - மாமறைக்கும் 169

அப்பாலுக் கப்பால னன்பாலுன் பாலணையும்
இப்பால் விளையாட்டி னெய்துமோ - செப்புகெனத் 170

தேர்திரும்ப மற்றோர் தெருவி லிவளைமட
வார்திரும்பக் கொண்டு மனைபுகுந்தார் - மீதொருத்தி 171

பெதும்பை

பேதைகுணம் பாதிமங்கைப் பெண்குணத்திற் பாதிகலந்
தோது பருவ முறுபெதும்பை - காதலெனும் 172

வித்தங் குரித்துவளர் மென்பூஞ் சிறுகொடிக்குச்
சித்தங் கொழுகொம்பாஞ் செய்கையினாள் - மெய்த்தவங்கள் 173

ஈட்டினு மீசனரு ளெய்தி முடிப்பதுபோல்
கூட்டி முடிக்குங் குழலினாள் - நாட்டநுதல் 174

ஏற்குமெம்மான் கைம்மா னினமோ வெனமருண்டு
பார்க்கும் புதியமருட் பார்வையாள் - சீர்க்கமலன் 175

இவ்வளவு செய்தோ மினிநிகரி லாதவெழில்
அவ்வளவு பூரித் தமைப்பதனுக் - கிவ்வாறென் 176

றேலத்தன் சிந்தையுள்ளே யெண்ணி முடிக்குநிகழ்
காலத் தமைந்தமுலைக் கன்னிகையாள் - சாலநிறை 177

விற்பளிங்கு மாளிகையின் மேனிலத்து மின்னனைய
பொற்பளிங்கு வாருமெனப் புந்திமகிழ் - அற்புடைய 178

தன்னனைய பெண்க டனித்தனியே சூழ்ந்திருக்க
வென்னனைமுற் றாமுலைபங் கீசனெழில் - மன்னுதிருக் 179

கந்தரம்போ னீலக் கழங்குங் களங்கமில்லாச்
சந்திரன்போன் முத்தின் றனிக்கழங்கும் - எந்தையுடற் 180

பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும் - தாதலரும் 181

கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும் - மன்றுடையான் 182

வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
பாணி யதனிற் பரிந்தெடுத்து - நீணிலத்துப் 183
பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
தேகாம் பரத்தினிசைபாடி - வாகாகக் 184

கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
தேடு மலையின் செயல்பாடி - நாடரிய 185

வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
பள்ளியெனுந்தலத் தைப்பாடி - உள்ளமகிழ் 186

வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடித் - தோடவிழும் 187

கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே - கஞ்சவிழி 188

அத்திறத்தா லாறெடுத்தன் றாறுமின்னா ரட்டமா
சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடிக் - கைத்தலத்தில் 189

ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள் - சூழுறும்பே 190

றெல்லாங் கடம்பநக ரெய்தினோர்க் குண்டெனவே
எல்லா மொருமித் தினிதெடுத்துச் - சல்லாப 191

மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
நோக்கிரண்டு மாட நுசுப்பாட - ஆக்கமகள் 192

கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே
வண்டாடுங் கூந்தலனை மாரதனைக் - கண்டிங் 193

கமையு மமையுமட வன்னமே யென்னும்
அமைய மதனிலெமை யாளும் - உமைபாகன் 194

அத்த னிருத்த னடிக்கண் மலர்க்கணை
வைத்திட மெச்சி மகிழ்ச்சிபெ - றத்திரி 195

விக்ரம னுக்கு மிகுத்த ப்ரபைக்கன
சக்ரம ளித்திடு தற்பரன் - உக்ரம 196

குக்குட முற்ற கொடிக்கர சைச்சொறு
திக்கை யனைத்தரு சிட்டன - னுக்ரக 197

சச்சிதா னந்தச் சதாசிவனம் பொற்றடந்தேர்
விச்சைமணி வீதிதனின் மேவுதலும் - பச்சைமயில் 198

ஆயமன்ன சாய லணியிழைமின் னாருடனே
தாயரும்போற் றிப்பணியத் தான்பணிந்தாள் - தூயனத்தண் 199

மாலளந்து காணா மலையை யிருவிழிக்கோ
லாலளந்தா ளந்த வளப்பறிந்தார் - பாலனைமார் 200

தன்னை யறியுந் தருணம்வந்த தாற்றலைவன்
தன்னை மனக்குறிப்பிற் றானறிந்தாள் - மின்னெனவே 201

எண்ணிய போதி லிவர்பாகம் பச்சையாய்
நண்ணியவா றேது நவிலுமெனக் - கண்மணியே 202

சூலிக்குப் பச்சுடம்புஞ் சொன்முலைப்பா லும்பெருகப்
பாலிக்கு மென்றுசொல்லாற் பாராட்டிச் - சேல்விழிப்பெண் 203

மாலையிட வந்தீரிம் மாதினுக்கு நீர்வலிய
மாலையிட வந்ததென்ன மார்க்கமோ - மேல்பசப்புக் 204

காட்டுமான் காட்டியிசைக் கானமறி யாதவெங்கள்
வீட்டுமான் கைக்கொளவோ வீதிவந்தீர் - கேட்டீரோ 205

நன்றாச்சு தையர் நடத்தைவிடர் புல்லருமே
நன்றாச் சரியமென நாடுவார் - என்றென்று 206

செப்பும் வினோதந் திறமெனக்கொண் டேயமுதம்
ஒப்புமிள் மூரலுட னோர்வீதிக் - கற்புதனும் 207

செல்லக் கனிவாய்ச் சிறுகுயிலு மின்னாரும்
இல்லத் திருந்தா ரினியொருத்தி - வல்லதிரு 208

மங்கை

மங்கைகலை மங்கைமலை மங்கையெனு மூவருமிந்
நங்கைதனைக் கண்டக்கா னம்பதிகள் - இங்குநமை 209

வஞ்சிப்ப ரென்று மனம்வாக்குக் காயத்தில்
அஞ்சா திருக்கவெழி லார்மங்கை - எஞ்சாது 210

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரு மயலென்றாற் - போலவே 211

பேதை யரும்பிப் பெதும்பையந்தப் போதாகி
மாது மலர்ந்த வனப்பினாள் - சோதிமணிப் 212

பன்னாகம் பூண்டோன் பரவையிடைத் தூதுசென்ற
அந்நா ளிருள்போ லளகத்தாள் - உன்னாமல் 213

அன்றுநமை வென்றகண்ணொன் றாமினிச்செய் கையிதென
நின்றுநின்று பார்த்து நினைத்துமதன் - இன்றுசிவன் 214

முக்கணையும் வெல்ல முழுநீல முக்கணையா
இக்கணையோ டெய்வே னெனுங்கண்ணாள் - தக்கதிறல் 215

நாண்மடமச் சம்பயிர்ப்பா நன்மந் திரர்சூழப்
பூண்முலையா மாமகுடம் பொற்பமைத்து - மாணிழைமார் 216

அங்கசன் மந்த்ரமெல்லா மாக்கம் பெறவுரைப்பத்
தங்குமனச் சிங்கா தனத்தேற்றி - அங்கணன்றன் 217

சீர்த்தி யபிடேகஞ் செய்து தலைமைபெறு
மூர்த்திகா முண்டாக்கி மோகமெனும் - பார்த்திபனுக் 218

கிட்ட மிகுந்தநல்லா ரெல்லாருங் கொண்டாடப்
பட்டந் தரித்த பருவத்தாள் - கட்டிசைந்த 219

செம்பதும ராகச் செழுமணிப்பொன் னாடரங்கில்
அம்பதுமை மின்னா ரருகிருக்க - விம்பவிதழ் 220

அன்னமுன்னந் தாருவனத் தங்கனைமா ரேந்தியபால்
அன்னமென முத்தினணி யம்மானை - தன்னிருகைக் 221

கொண்டா ளிசையாற் றாயினாணச் செங்குமுதம்
விண்டா ளெடுத்து விளையாடல் - கண்டோர்கள் 222

துன்றனமூன் றங்கையெனச் சொல்வனசப் பூவிரண்டில்
ஒன்றிருக்க வொன்றெழுவ தொக்குமென - வென்றிமழு 223

வல்லா னுருவெளியின் மாலை யெனத்திரண்டு
பல்லாரங் கன்றெழுந்து பார்ப்பதென - வல்லமைசொல் 224

அம்மானை யாடிவென்ற வம்மானைப் பாடியே
அம்மானை யாடு மளவிலே - எம்மானாம் 225

சீதள சோம திவாகர லோசன
லேத சொரூப வினோதப - ராதன 226

மாருத பாலக மாதவ சாயக
மேரு சராசன வீரச - ரோருகப்பொற் 227

பாதன் கயிலைப் பரமன் கடம்பவன
நாதன் றிருவீதி நண்ணுதலும் - மாதுகரத் 228

தம்மனையை வைத்தா ளனமனையார் தங்களுடன்
அம்மனைநின் றேகி யடிபணிந்தாள் - சென்மக் 229

கருவிலியைக் கண்ணாரக் கண்டாள்கண் காணா
உருவிலியைக் காணென் றுறுக்கி - மருமத் 230

தொருகோல் செவிமட் டுறவாங்கி விட்டாள்
குருகோ லிடுங்கரப்பூங் கோதை - வெருவியே 231

அம்புலி யென்ப தழற்க ணுறும்புலியோ
வம்புரைக்கப் பெண்கண்மட மானாரோ - கும்பமுனி 232

குன்றிற் பிறந்த குழவியிளங் காலுடலம்
கன்ற வுதைத்திடும்வன் காலாச்சோ - ஒன்றுகுயில் 233

ஓசையெல்லாம் காளகண்டத் துற்றதோ வுள்ளடங்கும்
ஆசையினி யாசைக் கடங்காதோ - பேசுமொழி 234

அஞ்சுகமன் னீரிரவின் யாமமொரு நாலுமினி
அஞ்சுகமோ வாறுகமோ வாரறிவார் - நெஞ்சுகந்து 235

கூட்டிவைக்க வல்லீரோ கூறுமெனத் தெள்ளமுதம்
ஊட்டிவைத்த சொல்லா ருரை செய்வார் - கேட்டீரோ 236

பாதி யுடம்பாய்ப் பசப்பையுற்ற பெண்பாலாற்
போதவன்னி யத்தமனப் போதுறலாற் - கோதிலா 237

மீனக் கொடியன் விரைவிற் பயந்ததால்
ஊனக் கொடியகரு வுள்ளடையா - மோனர் 238

இமய வரையளித்த வெந்தையனை யென்னும்
உமையு முமையுமே யொத்த - அமைவால் 239

இவளுக் கொருபா லிசையுமெனப் பாகத்
தவளுக் கறியா தமைக்கும் - உவமை 240

அபய கரத்திலங்க வைந்தருவின் மேலாம்
உபயன்மற்றோர் வீதிதனி லுற்ற - அபரி 241

மிதமான தாருவன மேவு முனிவோர்
இதமா யிவண்மருவு மின்பம் - உதவாத 242

சங்கைத் தவமே தவஞ்செய்தோ மென்னமன்னும்
மங்கைக்கு மேலான மாமடந்தை - பொங்குகதிர்ச் 243

மடந்தை

சந்திரனாற் சூரியனாற் றள்ளுண் டுடனடந்தோடி
வந்து புகுந்து மறைந்துமறைந் - துய்ந்திடவே 244

வானா ரிருட்கு மலரோன் வகுத்துணர்த்த
கானா ராண்போற் கருங்குழலாள் - தேனாரும் 245

சொல்லாண் மதனனுக்குஞ் சொல்லுவாள் புத்திகொங்கை
கல்லாள்கொக் கோகமுற்றுங் கற்றறிந்தாள் - எல்லாம் 246

கரும்புருவ வில்லாள் கமழ்கமல வில்லாள்
கரும்புருவ வில்லாள்லேற் கண்ணாள் - அரும்பு 247

நகையா டளிரன் னகையாள் பணிமே
னகையாள் புவிமே னகையாள் - சகமகிழும் 248

பூங்குமுதச் செங்கனிவாய்ப் பூவைதனித் தில்லிருந்தோர்
பாங்கிதனைக் கூவியுயிர்ப் பாங்கியே - ஈங்கெழுதும் 249

ஓவியங்கை வந்த வொருவனைமுற் றாதமுலைத்
தேவி மணாளன் றிருவுருவை - நீவகுப்பாய் 250

என்னப் படத்தி லிசைத்துவா வென்னலுமே
அன்னமன்ன தோழி யறிந்துசொல்வாள் - முன்னவன்றன் 251

வேணி யெழுதவல விஞ்சைகற்றா னேனுமதிற்
பாணிதனை யெவ்வாறு பாணிப்பான் - மாணமைந்த 252

நெற்றி யெழுதவல்ல நேர்மைகற்றா னேனுமதில்
உற்றகனற் கண்ணெழுத வொண்ணாதே - மற்றுமிரு 253

கண்ணெழுதக் கற்றானோ கற்றாலுந் தண்ணருள்கூர்
வண்ண மமைக்க வசமாமோ - உண்மகிழும் 254

தோடெழுத வல்லனென்று சொன்னாலும் வீணைவல்லோர்
பாடலிசைக்கப் படுவதோ - நாடி நின்று 255

செம்பவள வாய்வடுத்துச் செய்தாலு முன்னதர
விம்பவள தேனருந்த வேண்டாமோ - நம்பரமன் 256

சுந்தரம்போ லேயெழுதக் கற்றானே யானாலும்
முந்தச் சுருதி முழங்குமோ - வந்தவிஞ்சை 257

யாலிங்க னங்கரங்க ளாளெழுதி னாலுமுன்னை
லிங்க னஞ்செயலை யாரமைப்பர் - மாலறியா 258

நித்தன் திருமார்பு நின்றெழுதி னாலுமுன்மேற்
சித்த மகிழ்வதெனச் செய்யவல - வித்தகனோ 259

தாட்டுணைகள் போலெழுதித் தந்தாலுந் தான்மாறி
ட்டுவிக்கப் பாண்டியனா ரல்லவே வாடங்கண் 260

மின்னே மணியே விளக்கே விலைமதியாப்
பொன்னே நால்வேதப் பொருளாவான் - தன்னுருவைத் 261

தூரிகையி னாலெழுதச் சென்னதென்னே புத்தியத்த
நாரிதனைக் காணிலுள நாணாதோ பேறிஞர் 262

அப்படிய னவ்வுருவ னவ்வணத்த னென்றறிவார்
இப்படிய னிவ்வுருவ னிவ்வணத்தன் - ஒப்புடையன் 263

ஆமென் றெழுதவல்லா ரியாரே மலரிதழித்
தாமந் தரித்தவிண்ணோர் தம்பிரான் - மான்மியஞ்சேர் 264

உள்ளத்தி னுள்ளன் புடையார் கருத்தறியும்
வள்ளல் வலிய வருமென்னத் - தெள்ளமுத 265

வாரி பவள மலைபோன் மலையனைய
தேரின் வரமகிழ்ந்து சென்றணைந்து - பாரினின்று 266

கண்டா டுதித்தாள் கனிந்தாள்பே ராசைமேன்மேற்
கொண்டாள் பணிந்தெழுந்து கும்பிட்டாள் - எண்டிசையும் 267

கட்டிய தானைக் கருணா காநிதியே
பட்டிமையில் லாருளத்தின் பாக்கியமே - புட்டிலிலே 268

ஐயம் படைத்தவனா லையா பரிகலத்தில்
ஐயம் படைத்தவர்போ லாயினேன் - மெய்யணியோ 269

டென்பணியுங் கொண்டீ ரிமய மடந்தையைப்போல்
என்பணியுங் கொண்டாலா ரேசுவார் - முன்புபச்சை 270

மாலையளித் தீரெனக்கு மாலையளித் தீரதற்கு
மாலையளித் தீரென்றால் வாழ்த்தேனோ - சூல 271

தாரே யெனவா தரத்தா லுரைக்க
வரதன் மனமகிழ்ந்து மற்றோர் - திருவீதி 272

சென்றா னிவளுந் திருமனையிற் புக்கிருந்தாள்
நின்றாரிற் பின்னுமொரு நேரிழையாள் - நன்றிசைந்த 273

அரிவை

மானை மருட்டிவரி வண்டைச் சிறைப்படுத்தி
மீனைப் பயமுறுத்தி விண்டலர்ந்து - தேனார் 274

வனசத்தைப் பங்கமுற வாட்டிக் குவளை
இனசத் துருவைவன மேற்றிச் - சினமா 275

வடுவை வடுச்செய்து வாருதியோ மேன்மைப்
படுமென் றதோகதியாய்ப் பண்ணிக் - கடுவினுக்கு 276

நித்யகண்ட மேவு நிலைகொடுத்து வேன்முனைக்குச்
சத்தியிலை யென்னவெற்றி தான்கொண்டு - கத்தி 277

உறையிடக் காணாதென் றுயிரின் கொலைக்கு
மறலிதன்ம னாமெனப்பேர் வைத்து - விறலார் 278

உருவை யுடையா னுடைய கணைபோன்
றரிவை யுறுகண் ணரிவை - பருவமுற்றும் 279

நாளிகே ரத்தினைத்தன் னல்லடிவீழ்த் திச்சக்ர
வாளத்தை யோட்டிகெடு வான்புகுத்தித் - தானத்தை 280

ஒன்றொன்று தாக்கவிடுத் தோர்தாளிற் றாமரையை
நின்றிடெனத் தண்ட நியமித்துத் - துன்று 281

கரியைக் கிரிவைத்துக் கன்னிகா ரத்தைத்
தெரியலர்தூற் றச்சிறுமை செய்து - பரிய 282

மணிச்செப்பை வாயடைத்து வைத்த பணியுள்
தணிச்சொப்பில் கூவிளத்தைச் சாலக் - கணிப்பரிய 283

வித்தையுள்ள வெல்லாம் வெளிப்படுத்தக் கண்டுசிவ
பத்த ரிடத்திருக்கப் பாலித்து - மொய்த்தமலர்ச் 284

செண்டைப் புலர்த்தித் தினகரர் சூழ்ந்திடும்வே
தண்டத்தைப் போரிற் றலைமடக்கிக் - கண்டித் 285

திணைத்திறுகி விம்மி யிறுமாந் திளகிப்
பணைத்துத் திதலை பாந்து - துணைக்கண் 286

கறுத்து வெளியிடையிற் காணாதிடையை
ஒறுத்துப் புனைகச் சுவந்து - மறுப்படரச் 287

சந்தந் திமிர்ந்து தரள வடம்புனைந்து
கந்தங் கமழுங் கனதனத்தாள் - அந்தரத்தின் 288

என்றடுத்து வந்தாலு மென்றுவந்தீ ரென்றெதிர்த்து
நின்றடுத்துக் கேட்குமிரு ணேர்குழலாள் - வன்றிறல்சேர் 289

அங்கோல மாரவே ளாக்கினையுஞ் சக்கரமும்
செங்கோலும் போன்ற திறலினாள் - பொங்குகதிர்ச் 290

சித்ரமணி மேடைதனிற் சிங்கா தனத்திலிருந்து
வித்தாரப் பாடல் விறலிக்கு - முத்தாரம் 291

பூந்துகில் சந்தம் புனைய வளித்துமகிழ்ந்
தேந்திழையே முன்னா ளிசைவாது - சாய்ந்திடவே 292

எம்பிரான் கூட லிறைவனரு ளாற்செயித்த
கும்பமுலை மாமயிலே கூறக்கேள் - உம்பரிலே 293

வீரங் கருணை மிகுந்த சவுந்தரமும்
சேருங் கடவுளர்யார் செப்பென்ன - ஆர்வமுடன் 294

வீணை யிடந்தழீஇ மென்மா டகந்திருத்திப்
பாணினியு மின்னிசையாற் பாடுவாள் - ஆண்மைமிகு 295

காமன் புரத்தைக் கருதார் திரிபுரத்தை
மாமன் சிரத்தைமல ரோன்சிரத்தை - ஏமமுறா 296

அந்தகனை யந்தகனை யாதி யடையலரை
முந்தத் தடிந்த முறைகேட்கின் - விந்தையாம் 297

பார்த்து நகைத்துப் பரிகரித்துக் கிள்ளியுதைத்
தார்த்து வெகு ளாதவிளை யாட்டமரை - நேர்த்திடவே 298

எத்தேவர் செய்வா ரிஃதேவ ரான்முடியும்
அத்தேவ ரெல்லா மடலுற்றால் - மெய்த்துணைகள் 299

கூடுவா ராயுதங்கள் கொள்வார் சமரிலுடைந்
தோடுவார் மீள்வா ருடற்றுவார் - நாடரிய 300

வஞ்சனையால் வெல்வார் மறுத்தக்காற் செய்வதென்னென்
றஞ்சுவார் வீர மறியோமோ - மிஞ்சும் 301

அரிபிரம ரேனுமுன மாணவமுற் றாரேல்
அரிய னரியதவத் தன்பர்க் - குரியனென்று 302

சொல்லுவது நிற்கமுனந் தும்பி சிலந்தியரா
வல்லமையில் லாதகய வாய்தமக்கும் - வெல்லமரில் 303

அன்னை யிழந்த வடலேனக் குட்டிகட்கும்
என்னேயோ ரிக்கு மெறும்புக்கும் - தன்னிடத்தில் 304

அன்புதவி யென்று மழியாப் பெரும்பதவி
பின்புதவி யாள்கருணைப் பெம்மானும் - நம்பான்காண் 305

பெண்கண்மயக் கற்றதவப் பேரறிவு தானிழந்து
பெண்கள் வடிவெடுத்துப் பேரெழில்கண் - டெண்களிப்பி 306

னாலே யொருபதினா றாயிர மாமுனிவோர்
மாலாய்ப் புணர்ந்ததிரு மாலேபெண் - பாலாய் 307

மருவி னிமவான் மருக னழகுக்
கொருவரிணை யாவாரு முண்டோ - பொரும்விசய 308

வீரப் பெருக்கழகன் மென்கருணைச் சீரழகன்
ஆரத் திருமேனி யாரழகன் - ஓரழகுக் 309

கெவ்வளவு மீச னிணையிலியென் றேயுரைக்கும்
அவ்வளவிற் பல்லியத்தி னார்ப்பரவம் - கொவ்வையிதழ் 310

மாது செவியுறலும் வந்ததுதே ரென்றெழுந்தாள்
நாத னடிபணிந்து நாடியே - சீதமலி 311

காவெல்லா மாரன் கணையே கணைமுதிரும்
பூவெல்லா நாணின் பொருத்தமே - மேவுவயல் 312

மேடெல்லா மன்மதன்கை வில்லே குடியிருக்கும்
வீடெல்லாஞ் சேனை விளக்கமே - கூடும் 313

இரவெல்லாம் வேள்களிற்றி னீட்டமேகொல்லைப்
பரவெல்லாம் சொல்வாம் பரியே - தரணியிலே 314

எங்கெங்கே பார்த்தாலு மென்னவெளி கண்டவிடத்
தங்கங்கே தேரு மவனுமே - சங்கரரே 315

தேவரீர் சித்தந் திரும்பினா லிக்கணமே
யாவு முறவா யிணங்குமென்று - பாவை 316

புகலக் கடைக்கணித்துப் போந்துபின்னோர் வீதி
திகழ வதிலோர் தெரிவை - மகிழும் 317

தெரிவை

அயிலு மயிலு மனமுங் கனமும்
குயிலும் வடமுங் குடமும் - இயலும் 318

கொடியுந் துடியுங் குளிருந் தளிரும்
படியுமிசைக் காந்தளொடு பாந்தள் - அடிமையெனும் 319

மேன்மைபெறு கண்சாயல் வீதிநடை கூந்தலிசைப்
பான்மை யுதரம் பயோதரங்கள் - வான்மருங்குல் 320

மெல்லடிசெங் கைநிதம்ப மிஞ்சு சவுந்தரஞ்சேர்
வல்லி மதனகலா வல்லியாள் - தொல்லுலகில் 321

வீரப்ர தாப விசயமன்னர் கப்பமிடப்
பாரப்ர தாபம் படைத்தமன்னர் - நேரொக்க 322

வச்ரமணி மேடைதனில் வாளரிச்சிங் காதனத்தில்
இச்சையுடன் வீற்றிருக்கு மேல்வைதனில் - உச்சிதஞ்சேர் 323

அங்குறப்பெண் ணாமொருத்தி யானகுறி சொல்வனென்றே
அங்குறப்பெண் ணாரமுத மாயினாள் - பங்கமுறா 324

தோர்ந்தென் மனக்குறிப்பி லொன்றுளது சொல்லெனவே
தேர்ந்து மலைக்குறப்பெண் சிந்தைமகிழ்ந் - தாய்ந்துநன்றாய் 325

ஓர்வருட மோர்மாத மோர்நா ளொருவாரம்
ஆர்வமுடன் சொல்லென் றவளிசைப்பச் - சீர்பொருந்த 326

உன்னும் வருட முரைக்கும் பதினொன்றாம்
என்னுமுன்னே யீச்சுரன்மே லிச்சையென்றாள் - பின்னுமவள் 327

மாதமொரு நாலென்றாண் மன்றாடி தன்மீதிற்
காதலுற்றாற் போலுங் கருத்தென்றாள் - பேதமில்லா 328

நாளினுமோ ராறென்றா ணன்றுதிரு வாதிரையான்
தோளின்மேன் மையாலென்று சொல்லினாள் - கோளிலகு 329

வார மிரண்டென்றாள் வாழ்சோம சேகரனைச்
சேர மனதிற் சிறந்ததென்றாள் - ஆரணங்கும் 330

ஆமெனது யோகத்தா லந்தக் கரணமுடன்
தாம மளிப்பரோ சாற்றென்ன - மாமயிலே 331

வந்தோர் கணப்பொழுதின் மாலை யுதவுமதிற்
சந்தேக மில்லையெனத் தானுவந்து - விந்தைமிகு 332

பொன்னாடை மின்னுமணிப் பூணுதவு மவ்வளவில்
பன்னாகப் பூணா பரணத்தான் - தன்னெடுந்தேர் 333

மங்கலங்கள் சேர்வீதி மன்னுதலு நன்னுதலும்
அங்கலங்கண் மின்னவெழுந் தாங்கணைந்தாள் - செங்கை 334

மலரைக் குவித்து வதனமலர்ந் தாண்மேல்
மலரைக் குவித்துவிட்டான் மாரன் - அலரெடுத்து 335

நல்லாருந் தூற்றினார் நாண்மடமச் சம்பயிர்ப்பாம்
எல்லாமோர் பக்கத் திருத்திவைத்துச் - சொல்லலுற்றாள் 336

வில்லிலே வண்டன் விடுங்கணையிற் றப்பிலிபூ
வில்லிலனே யென்றாலு மெய்திடுவான் - சொல்லிலே 337

கூவென்னுஞ் சின்னமுற்றோன் கூறுமெய்யே யில்லாதோன்
காவென்றால் வந்தடிக்கக் காத்திருப்பான் - தேவரீர் 338

இவ்வே டனைவிட் டெனைவருத்தி னாலெவர்க்கும்
ஒவ்வாது நீதி ய்டையாரே - எவ்வுலகும் 339

போற்ற வரசுரிமை பூண்ட சவுந்தரரே
ஆற்று மயலேனை யாளுமெனக் - கோற்றொடிதான் 340

பேசிய போது பெருமான் றிருவுளத்தில்
நேசம்வைத்தாற் போலமற்றோர் நீள்வீதிக் - கோசைமிகு 341

தூரியம் பேரி தொனிப்பவுற்றான் பெண்மைதனிற்
பேரிளம்பெண் ணானவொரு பேரிளம்பெண் - சேரும் 342

பேரிளம்பெண்

இருட்டறையுட் பல்கணியி னெய்துநிலாக் கூடும்
இருட்டனைநே ரூடுநரை யெய்தும் - திருக்குழளாள் 343

பூணுற் றிறுகும் புணர்முலைக்குப் பூணிலதாற்
காணூறவே சாய்ந்தசையுங் காட்சியென - நாண்முதலா 344

முற்றாப் பெதும்பை முதற்பருவந் தோறும்விஞ்சை
கற்றாய்ந் தமையாக் கவினமைத்துச் - சொற்ற 345

தெரிவை வரைக்குந் திரட்டிவைத்துப் பார்த்துச்
சரியென்றாற் போலுந் தனத்தாள் - அரிய 346

பதுமை யனையாள் பான்சேவை யன்றிப்
புதுமை விழிக்குப் பொருந்தாள் - மதுகரங்கள் 347

ஓலமிடும் பூங்காவி லுற்றெவ் வொருதருவாய்ச்
சாலவெதிர் கண்டுகண்டு தான்மகிழ்ந்தாள் - கோலமிகு 348

மஞ்ஞை யனையமின்னாள் வாழைதனைக் கண்டுதிருப்
பைஞ்ஞீலி யானைப் பாவினாள் - இஞ்ஞாலத் 349

துற்றார்க் குதவி யுறுபலாக் கண்டுதிருக்
குற்றால நாதனென்று கும்பிட்டாள் - சுற்றியதன் 350

வல்வேலி யாக வளர்வேணுக் கண்டுதிரு
நெல்வேலி யீசனையே நேசித்தாள் - பல்லின் 351

மருமுல்லை வாயாள் வளர்முல்லை கண்டு
திருமுல்லை வாயில்சிந் தித்தாள் - ஒருமாச் 352

செறிவுற் றிடலுஞ் சிவனை முலையாற்
குறியிட் டவனைக் குறித்தாள் - முறியாரும் 353

நிம்பமெதிர் கண்டா ணிமல னிராசலிங்கச்
சம்புவைமுன் கண்டதென்னத் தான்மகிழ்ந்தாள் - உம்பரிசை 354

திந்திருணி கண்டா டிருவீங்கோய் மாமலையில்
எந்தைதனைச் சிந்தைதனி லேத்தினாள் - கந்தநிறை 355

வில்வமெதிர் கண்டாள் விசைந்துசொக்க நாயகிசேர்
சொல்வாலி நாதனெனச் சூழ்ந்திறைஞ்சிப் - பல்லுயிர்க்கும் 356

தன்னடியி னீழ றருவாற்குத் தான்மேலாய்த்
தன்னடியி னீழ றருங்கடம்பை - முன்னுறக்கண் 357

டன்பிற் குழைந்தாங் கடிபணிந்து கைகூப்பி
இன்பமுட னெண்ணுவா ளிக்கடம்பின் - நம்பரமர் 358

கூடலாய் வந்திருந்து கொண்டக்கா லிவ்விடையே
கூடலா மென்று குறித்திடுமுன் - நீடும் 359

கலையா னிடைபிங் கலையான் மலைய
மலையான் கயிலை மலையான் - இலகியவெள் 360

ளேற்றினா னின்பமன்பர்க் கேற்றினா னென்றுயரை
ஆற்றினான் காவிரிப்பே ராற்றினான் - சாற்றுமறைக் 361

காட்டினான் போற்றுநெறி காட்டினான் றன்னுரையை
நாட்டினான் சோழவள நாட்டினான் - ஈட்டும் 362

துதியா னுதரத் துதியா னிடத்தம்
பதியான் கடம்பைப் பதியான் - சதுர்வேதன் 363

ஆரணியன் மெய்யனடி யாரணியன் மாவிரதம்
தாரணியன் பொன்னிதழித் தாரணியன் - ஓர்கை 364

உரியான் பணிவோர்க் குரியானெண் ணாரைப்
பரியானால் வேதப் பரியான் - மருவுசெங்கை 365

வாரணத்தன் கோட்டுவெள்ளை வாரணத்தன் வாணிமரு
வாரணத்தன் போற்றுமயி ராவணத்தன் - பாரப் 366

படியேர் பொருந்தும் படியே செயும்பூங்
கொடியே புணருங் கொடியான் - நெடிது 367

வழங்கும் புவனத்து மன்னுயிர்க்குந் தானாய்
முழங்குமோங் கார முரசான் - எழுங்கதிசேர் 368

சந்திரனுஞ் சூரியருந் தானவரும் வானவரும்
இந்த்ராதி திக்குக் கிறையவரும் - ஐந்துபெரும் 369

பூதமும் பூதப் புணர்ப்பும் புகன்றசதுர்
வேதமும் வேத விதிவிலக்கும் - போதனால் 370

தானே யமைத்த சராசரமு முற்பவத்தில்
ஆன நிலைபெயரா வாணையான் - மோன 371

முனிக்கணங்கள் சூழ்கருணை மூர்த்திநால் வேதத்
தனிப்பொருளெல் லார்க்குந் தலைவன் - குனிப்புடையோன் 372

வந்தா னெனவே மணிச்சின்னந் தானிசைப்பத்
தந்தா ரிடையாளுந் தான்சென்று - முந்திப் 373

பணிந்தா ளெழுந்து பகருமதன் போர்க்குத்
துணிந்தா ளடுத்துநின்று சொல்வாள் - அணியாரும் 374

மெய்யா நிலத்தினிற்கா வேரியம்பு பாய்ச்சியுழு
தையமுறா தேபுளக மங்குரிப்பத் - துய்யதாம் 375

காமப் பயிரிலையாக் காட்சிக் கதிர்தோன்ற
ஏமமுற நெல்வேலி யீசரே - சேமித்து 376

மோக விளைவு முதிரவே ளாண்மைசெய்தால்
போக முமக்கே பொருந்துமே - மாகருணைச் 377

சுந்தரரே யென்னமற்றத் தோகையர்பல் லாண்டிசைப்ப
அந்தரத்தோர் பாதலத்தோ ரம்புவியோர் - செந்தமிழோர் 378

தேனே கனியே செழும்பாகே தெள்ளமுதே
ஊனே யுடலி னுயிர்க்குயிரே - கோனெயெம் 379

உள்ளமே யுள்ளத்தி னுள்ளுணர்வே பேரின்ப
வெள்ளமே வெள்ளை விடைப்பாகா - தெள்ளுதமிழ்ச் 380

சொல்லே பொருளே துதிசே ரிருநிதியே
எல்லே யஞ்ஞான விருளகற்றும் - வல்லானே 381

என்றென்று பன்முறைநின் றேத்த வருளிமதி
ஒன்றொன்று செஞ்சடையா னோர்காலும் - குன்றாத 382

சீருடையான் செல்வச் சிறப்புடையான் றென்கடம்பை
ஊருடையான் போந்தா னுலா. 383

கடம்பர்கோயில் உலா முற்றிற்று

விருத்தம்

விருப்பிருக்கு நினதடியார் செய்பணிக்கிங் கிடையூறு விளைக்கும் பாவ
இருப்பிருக்கு மூடர்தம திருப்புமன முருக்கிவிடற் கியல்பாய்ச் செங்கை
நெருப்பிருக்கப் படவரவத் துருத்தியுமங் கிருப்பதென்ன நினையா தென்னோ
திருப்பிருக்கு மூவிலைவேற் படையுடைய கடம்பவனத் தேவர் தேவே.